ஒரு வருடம் நான்கு மாதங்களுக்குப் பிறகு, சென்னை மருத்துவக் கல்லூரி பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தது. எங்கும் மனித தலைகள். வைத்தியம் பார்த்துக்கொள்ள வந்தவர்கள் ஒருபுறம் என்றால் அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க வந்தவர்கள் ஒருபுறம். மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் ஒருபுறம் என்றால் வெள்ளை கோட்டும், கழுத்தில் ஸ்டெதோஸ்கோப் அணிந்து கண்களில் கனவுகளுடன் திரியும் மாணவர்கள் ஒருபுறம் என்று அந்த இடமே ஜே ஜேவென்று இருந்தது.
பாலையம்பட்டியில் வெறும் என்னுற்றி அறுபது பேர் கொண்ட பள்ளியில் படித்து, இன்று சென்னையில் இருக்கும் பிரபல மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த சந்தியா, பரபரப்பாக இருந்த கல்லூரியை சுற்றி வேடிக்கை பார்த்தபடியே நடந்தாள்.
சந்தியா கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பயனால் அவளுக்கும் நகரத்து வாழ்கை எப்படி இருக்கும் என்று ஓரளவுக்குத் தெரியும். அதனால் நகரத்துக்கு ஏற்ற வகையில் அதே சமயம் மற்றவர்களின் கண்களை உறுத்தாதவாறு, எளிமையாக அதே சமயம் அவளுக்குப் பொருந்துமாறு சுடிதார் அணிந்து வந்திருந்தாள்.
முதல் வருட மாணவர்களுக்கு நேற்றே கல்லூரி திறந்துவிட்டது. நேற்று சந்தியாவின் அப்பா வந்து அவளை கல்லூரியில் விட்டுவிட்டு சென்றிருந்தார். சந்தியா கல்லூரி ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். ஹாஸ்டல் வாசலில் பஸ் ஏறினால், கல்லூரி வாசலில் வந்து இறங்கி, முதல் வருட வகுப்பிற்குள் நுழைந்தவள், எங்கு உட்கார இடம் இருக்கிறது என்று கண்களால் தேடினாள்.
ஆண் பெண் பாகுபாடின்றி எல்லோரும் கலந்து அமர்ந்திருந்தனர். பெண்கள் பள்ளியில் படித்த சந்தியாவுக்கு அது சற்று வித்தியாசமாகப் பட, அவள் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகே சென்று அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அவர்கள் வகுப்பு பேராசிரியர் உள்ளே நுழைந்தார். தன்னை ஸ்ரீராம் என்றும், தான் அவர்களுக்கு உயிர் வேதியியல் (Bio chemistry) எடுக்கப் போவதாகவும், தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டவர். மாணவர்களைப் பார்த்து “நீங்களும் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், தெரிந்துகொள்வோம்…” என்றார்.
அப்போது ஒரு மாணவன் உள்ளே வர அனுமதி கேட்க, “இன்னைக்கு முதல் நாள் அதனால பரவாயில்லை, இனி லேட்டா வரக்கூடாது.” என்று எச்சரித்தே உள்ளே அனுமதித்தார்.
உள்ளே வந்த அந்த மாணவன் ஏற்கனவே லேட்டாக வந்துவிட்டோம் என்ற பரபரப்பில் இருந்ததால், நேராகச் சென்று முதல் இருக்கையில் அமர்ந்திருந்த சந்தியாவின் அருகே சென்று உட்கார, சந்தியா திகைத்தவள் அவனைக் கலவரமாகப் பார்த்தாள்.
அவள் பார்வையில் குழம்பியவன், அப்போதைக்கு எதுவும் பேசாமல் வகுப்பில் என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தான். ஒவ்வொருவராக எழுந்து தங்கள் பெயர் மற்றும் தங்களைப் பற்றிச் சிறு குறிப்பை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு அமர, சந்தியாவிற்கு சற்று படபடப்பாக இருந்தது.
ஆங்கில வழி கல்வி தான் அவளும் படித்தாள். ஆனால், அவளுக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது. அங்கே பாலையம்பட்டியில் யார் ஆங்கிலத்தில் பேசுவார்கள்? சந்தியா எல்லாப் பாடத்திலும் முதல் மதிப்பெண் வாங்கிவிட்டு ஆங்கிலத்தில் தான் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாள். அவளுக்கு ஆங்கிலம் பேச வராது என்பதை விட, எங்கே தப்பாகப் பேசிவிடுவோமோ என்று பயம்.
என்ன செய்வது என்பது போல் பயந்து போய் உட்கார்ந்து, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனித்தாள். சந்தியாவின் அருகே அமர்ந்திருந்த மாணவன் எழுந்து “First of all thank you for giving me an opportunity to introduce myself. I am Sidharth. Born and brought up in Chennai. I have completed my 12th with 96% in Chettinad Vidhyasaramam. Coming to my family, We have three members in my family, My father and my mother both are doctors. My hobbies are Playing games on PC, playing cricket and listening music…” என்று படபடவென்று ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினான்.
‘இவன் எதுக்கு இவ்வளவு சொல்றான், நாமளும் இவ்வளவு பேசணுமா..’ என்று பயந்தபடியே சந்தியா எழுந்தாள்.
“Good Morning Sir…” என்று பள்ளி மாணவி போல் ஆரம்பித்தவள். “I’m Sandhiya. I belong to a small village called palayampatti. My father is a farmer and my mother is a housewife…” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் உட்கார,
“Tell something about your hobbies and interests?” என்று பேராசிரியர் கேட்க,
சந்தியாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் திணறுவதைப் பார்த்த சித்தார்த் “ஃபரீ டைம்ல என்ன செய்யப் பிடிக்கும்னு கேட்கிறாரு, இதைச் சொல்ல இவ்வளவு நேரமா, சரியான பட்டிக்காடு…” என்று முனங்க,
சந்தியா அவனைப் பார்த்து முறைத்துவிட்டு “studying books சார்…” என்று சொல்ல, அவள் சொன்னதைக் கேட்ட பேராசிரியர் புன்னகைக்க, மற்ற மாணவர்கள் சிரித்தனர். சித்தார்த் தலையிலேயே அடித்துக் கொண்டான்.
சந்தியா எதற்குச் சிரிக்கிறார்கள் என்று புரியாமல் சித்தார்த்தை பார்க்க “studying books இல்ல, reading books.” என்றான்
“அது எனக்கும் தெரியும். எங்க அம்மா பள்ளிக் கூடத்துப் புத்தகத்தைத் தவிர, வேற புத்தகத்தை எடுத்தா, முதுகு தோளை உரிச்சிடும். அதனால தான் அப்படிச் சொன்னேன்…” என்றாள் சந்தியா கெத்தாக.
அவள் சொன்ன விளக்கத்தில் எரிச்சலான சித்தார்த், இதெல்லாம் எங்க படிச்சுச் சீட் வாங்கியிருக்கும், காசு கொடுத்து தான் வாங்கியிருக்கும் என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியே “ரொம்ப புத்திசாலி….” என்றான் கிண்டலாக.
அவன் கிண்டல் செய்தது சந்தியாவின் கோபத்தைக் கிளற அவள் எதோ சொல்ல வர, அப்போது “சந்தியா உன்னைப் பத்தி முக்கியமா ஒன்னு சொல்ல மறந்திட்ட, நான் சொல்றேன் இங்க வா….” என்று பேராசிரியர் அழைக்க, சந்தியா தயங்கியபடி பேராசிரியரின் அருகே சென்றாள். “நிறை குடம் தளும்பாதுன்னு ஒரு பழமொழி இருக்கு, அது உங்களுக்குத் தெரியுமா, அதுக்கு உதாரணம் சந்தியா. போர்ட் எக்ஸாம்ல ஸ்டேட்ல மூணாவதா வந்த ரெண்டு பேர்ல சந்தியாவும் ஒருத்தி…”
“எல்லா மெயின் சப்ஜெக்ட்லையும் முதல் மார்க் வாங்கிட்டு, ஆங்கிலத்தில மட்டும் மார்க் கொஞ்சம் கம்மியா வாங்கினதுனால தான் மூணாவது இடத்துக்குப் போய்டா, இல்லைன்னா சந்தியா தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட்…” பேராசிரியர் பெருமையாகச் சொல்ல, மாணவர்கள் எழுந்து உற்சாகமாக கைதட்டினர்.
‘ஒரு நிமிஷம் அவளைப் பற்றி எப்படிக் குறைவா நினைச்சோம்…’ என்று தன்னை நினைத்தே சித்தார்த் வெட்கப்பட்டான். சந்தியா நன்றி சொல்லிவிட்டு சித்தார்த்தின் அருகில் சென்று அமர, அவன் அவளிடம் “சாரி…” என்றான் உண்மையாகத் தன் தவறை உணர்ந்து.
சந்தியா பதிலுக்குப் பளிச்சென்று புன்னகைத்தாள். சித்தார்த்தும் முகம் மலர்ந்து புன்னகைக்க, இருவருக்கும் இடையே இருக்கும் ஆண், பெண் என்கிற பேதமெல்லாம் மறைந்து, அங்கே அழகான நட்பு உருவானது.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் சந்தியா கல்லூரிக்குள் நுழையும் போது தான் சித்தார்த்தும் அவன் பைக்கை நிறுத்திவிட்டு வந்தான். அதனால் இருவரும் சேர்ந்து பேசியபடி சென்றனர். “அப்புறம் சந்தியா காலேஜ் லைப் பிடிச்சிருக்கா? ஹாஸ்டல் எப்படி வசதியா இருக்கா….”
“ம்ம்… காலேஜ் நல்லா இருக்கு. ஆனா, ஹாஸ்டல்ல இருக்கிறது தான் பிடிக்கவே இல்லை. எங்க அம்மா, அப்பாவை விட்டுட்டு இருக்க ரொம்பக் கஷ்டமா இருக்கு. என் ஃபரண்ட் சித்ரா இல்லாம போர் அடிக்குது. நான் எங்க வீட்ல எந்த வேலையும் செஞ்சது இல்ல. பாரு எனக்குத் தலை பின்னிக்கக் கூடத் தெரியலை.
ஊர்ல எங்க அப்பத்தா தான் தினமும் பின்னிவிடும். பின்னல் போட வராம தான் வெறும் பேண்ட் மட்டும் போட்டுட்டு வரேன்..” என்றவள் தொடர்ந்து,
“அதோட சாப்பாடு ரொம்ப மோசம். நான் மூணு வேலையும் சுட சுட தான் சாப்பிடுவேன். இந்த ஊர் நல்லாவே இல்லை. ஒரே கூட்டமா கசகசன்னு இருக்கு. எனக்கு எங்க ஊர் தான் பிடிச்சிருக்கு.” என்றாள் கண்கள் கலங்க,
“நீ நல்லா படிச்சு டாக்டர் ஆகனும்னு தான இங்க வந்திருக்க. இதெல்லாம் சின்ன விஷயம் இதுக்கெல்லாம் போய்க் கவலைப்படலாமா….” சித்தார்த் சமாதனம் செய்ய,
பதிலுக்குச் சந்தியா “நான் டாக்டர் ஆகனும்ன்னு இருக்க…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மரத்தடியில் கும்பலாக அமர்ந்திருந்த மாணவர்கள் இவர்கள் இருவரையும் அழைத்தனர்