நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வலி தாங்காமல் ‘ஆ’ என்று கத்தியபடி கீழே விழப்போன அவளின் கையை ஒரு வலிய கரம் பிடித்து அவளை விழாமல் நிறுத்தியது.
அது அவன் கை தான். அவளுக்கு இன்னமும் ஒன்றும் புரியவில்லை. எனினும் சமாளித்து நின்றாள்.
இப்பொழுது இவள் அவனை இமை தட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இவன் இங்கு நிஜமா தான் இருக்கானா? இல்லை நான் ஏதாவது கனவு காண்கிறேனா?’ என்று திகைத்து விழித்துக் கொண்டிருந்தாள்.
வேகமாக பின்னங்கால் டேபிளில் பட்டதில் கால் வலிக்க குனிந்து தன்னிச்சையாக கை காலை தடவியது.
“என்ன கால் வலிக்குதா?” என்று கேட்டான் அவன்.
‘ஆமாம் வலிக்குது. அப்போ எல்லாமே உண்மைதானா?’ என்று நினைத்தவளுக்கு அதற்குமேல் நிற்க முடியாமல் அந்த டீபாயில் உட்கார்ந்தாள். அவன் குனிந்து அவள் காலை பார்த்தால்d. அது சிவந்து வீங்கியிருந்தது.
அவள் பாதத்தை எடுத்து அதில் அணிந்திருந்த குளிருக்கு இதமாக வீட்டில் அணியும் மென்மையான பஞ்சு போன்ற செருப்பை கழட்டினான். அந்த இடத்தை தடவினான். அவளுக்கு புல்லரித்தது.
“ஏதாவது ஆயின்மென்ட் இருக்கா?” என்று கேட்டபடி அவள் முகத்தை பார்த்தான்.
அப்போதுதான் அவள் சுய நினைவுக்கு வந்தாள். வந்தவள் அவன் கையில் இருந்து தன் காலை விடுவித்து கொண்டு எழுந்து நின்றாள்.
“நீ நீ நீ… எப்படி… இங்கே வ வ வந்த…?” என்று திக்கி திணறி கேட்டு முடித்தாள்.
அவன் லேசாக புன்னகைத்தான்.
“என்ன இப்பதான் உனக்கு இது கனவு இல்லைன்னு புரிஞ்சுதா?” என்று கேட்டபடி வெண் பற்களை காண்பித்து சிரித்தான்.
இன்னும்கூட அவளால் நம்ப முடியவில்லை. எனினும்
“நீ… நீ நீ …எப்படி இந்த வீட்டில….நீ நீ இந்தியா, சென்னை… சென்னையில் இருந்து எப்படி எப்போ?” என்று தடுமாறினாள்.
“ஏன் நீ கூட அங்க தானே இருந்த. எப்படி இங்க வந்த? அதே மாதிரி தான் நானும் இங்கு வந்திருக்கிறேன். ஏன் உனக்கு மட்டும் தான் அமெரிக்கா விசா கொடுத்து அமெரிக்கா உள்ள விடுவாங்களா? இல்லை என்னை உள்ளே விட கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?” என்று கேட்டான்.
அவள் ‘இவன் இங்க வந்து இருக்கிறானா? எப்போ வந்தான்? எதற்காக வந்தான்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவள்
‘ஒருவேளை என்னை….’ என்று நினைக்க ஆரம்பித்த அவளின் உள்ளம் தடுமாற அதைத் தொடர்ந்து உடல் லேசாக ஆடியது.
இதனை கவனித்த அவன் அவள் தோளை தொட்டு
“என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
அவன் கையை வலது கையால் உதறிவிட்டு
“என்னை விடு.” என்றாள்.
“முடியாது. இனிமேல் அது மட்டும் எப்பவும் முடியாது.” என்றான் தலையை பலமாக ஆட்டியபடி.
அவள் அவன் கண்களை உற்றுப் பார்த்தாள். அந்தக் கண்கள் அவளிடம் ஏதோ சொன்னது போல தெரிந்தது. ஆனால் என்னவென்று அவளால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
“நீ எப்படி உள்ள வந்த?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.
“நல்ல கேள்வி தான்.” என்றவன் சோபாவில் சாவகாசமாக அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தான்.
“நான் வெளிய வந்து கதவை தட்டினேன். கதவு திறந்திடுச்சு. அதான் உள்ள வந்தேன்.” என்றான்.
“கதவு திறந்து இருந்தா உள்ள வந்து விடுவயா? ஏதோ திறந்த வீட்டுக்குள்ள வந்த மாதிரி.” என்று கோபமாக கேட்டாள் அவள்.
“ஏதோன்னு ஏன் சுத்தி வளைத்து பேசுற? நேராகவே கேட்கலாமே. நீ எப்போதும் பண்றது தானே.” என்று சிரித்த முகத்துடன் கேட்டான்.
“அப்போ எனக்கு அந்த உரிமை இருந்தது. இப்போ அது இல்லை.” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.
“அப்படி நீதான் நினைச்சுகிட்டு இருக்க. நான் அப்படி நினைக்கல.” என்றான் அவன்.
“சரி நீ நினைக்கறது எல்லாத்தையும் நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. முதல்ல வெளியே போ.” என்று வாசலை கைநீட்டி காண்பித்தாள்.
“கண்டிப்பா போயிடுவேன். நான் ராஜேஷ் வீடுன்னு நினைத்து இங்க வந்துட்டேன். வேற எதுவும் தப்பா எடுத்துக்காதே.” என்றபடி எழுந்து வெளியில் நடந்து சென்றான்.
“தப்பா எடுத்துக்காதே” என்று அவன் சொன்னது அவள் கோபத்தை தூண்டியது.
‘நான் இவனை தப்பா எடுத்துக்க கூடாதா? என்ன திமிர்? ரொம்ப கொழுப்புதான். சரி இவன் எப்போ இங்கே வந்திருப்பான்?’ என்று யோசித்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சரி இவன் எப்போ எங்க வந்தால் நமக்கு என்ன? நாம் இவனை பத்தி நினைக்க வேண்டாம்.’ என்று முடிவெடுத்தாள் ஆனால் அந்த முடிவில் அவளால் இருக்க முடியவில்லை. அதே நேரம் வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பவும் அவன் நினைப்பை வலுக்கட்டாயமாக ஒதுக்கி அவர்களிடம் கவனத்தை செலுத்தினாள்.
வெளியில் வந்த அவன் தன் காரை எடுத்துக்கொண்டு பக்கத்து தெருவிலிருந்த அந்த வீட்டுக்கு வந்தான்.
வீட்டுக்குள் நுழைந்த sகந்தனை பார்த்து கார்த்திக்
“என்னடா சாதனாவை பார்த்தியா? பேசுனியா?” என்று கேட்டான்.
“பார்த்தேன் பேசினேன்.”
“வீட்டுக்குள்ள விட்டாளா?”
“வீட்டுக்குள்ள அவள் விடமாட்டா. அதனாலதான் அவள் பக்கத்து வீட்டுக்கு குழந்தை கூட போனதை பார்த்துட்டு கதவை திறந்து நானே உள்ளே போய் சோபாவில் உட்கார்ந்துகொண்டேன்.”
“என்னடா சொல்ற?”
“ஆமாண்டா. அவளுக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருந்திருக்குமே!”
“ஆமாண்டா அவள் முகத்துல ஷாக் நல்லாவே தெரிஞ்சது.”
“பின்ன திடீர்னு கடல்கடந்த இந்த நாட்டில் அவள் முன்னாடி போய் அதுவும் அவளுக்கு தெரியாமல் வீட்டுக்குள்ள போய் உட்கார்ந்திருந்தால் அவளுக்கு ஷாக்கா தானே இருக்கும்.”
“ஆமாம் டா கொஞ்சம் எனக்கு பாவமாக கூட இருந்தது. ரொம்ப தடுமாறினாள்.”
“மயக்கம் போட்டு விழுந்தா கூட தப்பு கிடையாது.” என்றான் கார்த்திக்.
“அவள் ரொம்ப போல்ட். அதனால சமாளித்து விட்டாள் கார்த்தி .”
“எப்படியோ கஷ்டப்பட்டு அவள் இருக்கிற இந்த ஊருக்கு வந்துட்ட. இதே ஊர்ல வேலை செய்ற என் மூலம் அவள் தங்கை வீடு இருக்கும் இந்த கம்யூனிட்டியில் நாம ரெண்டு பேரும் சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்து வந்து விட்டோம்.”
“ஆமாண்டா நல்ல வேளை நான் அப்ளை பண்ண வேலை, விசா ரெண்டும் கிடைச்சது. இல்லைன்னா டூரிஸ்ட் விசாலதான் வந்திருக்கணும். அதற்கு நிறைய செலவு ஆகுமே .ஏதோ கடவுள் காப்பாற்றிவிட்டார்.
அவள் என்னை பார்த்ததும் கனவன்னு நினைச்சிட்டா போல இருக்கு. கிட்ட வந்து என்னை தொட்டு பார்த்தா.”
“அப்போ அவங்க கண்ணுக்கு நீ அடிக்கடி தெரிஞ்சிக்கிட்டு தான் இருந்திருக்க சுகந்தா.”
“ஆமாம்டா. அவள் அப்படி பண்ணதும் எனக்கும் அது புரிஞ்சுது. அவள் மனசுல நான் இப்பவும் அப்படியே தான் இருக்கேன். ஆனால் அவள் அதை ஒத்துக்க மாட்டா. ஒத்துக்க கொஞ்சம் டைம் ஆகும். அதுவரைக்கும் நான் வெயிட் பண்ணி தான் ஆகணும்.” என்று விட்டு தன் அறைக்கு வந்தான் சுகந்தன்.
வந்தவன் அவனது லேப்டாப்பில் இருந்த சாதனாவுடன் அவன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை பார்த்தான். திருமணக்கோலத்தில் சாதனா, சுகந்தன் இருந்த அந்த புகைப்படத்தை பார்த்தவனுக்கு அன்று நடந்த காட்சிகள் கண்முன் தோன்றியது.
சுகந்தன் தாய் தந்தையுடன் சாதனாவின் தந்தை முன்பு அவள் வீட்டில் உயர்ரக சோபாவில் தேனீர் அருந்திக்கொண்டு அமர்ந்து இருந்தான்.
சுகந்தனின் தாய்
“என் பையன் சின்ன பையன். இந்த வயசுல கல்யாணமா?” என்று ஆரம்பிக்க சுகந்தன் தன் தாய் கை மீது கை வைத்து
“அம்மா ப்ளீஸ்.” என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல அவர் அந்த பேச்சை விட்டார் .
அப்போது சுகந்தன் எழுந்து வாஷ்ரூம் சென்றான்.
அவன் சென்றதும்
“சரி இவனுக்கு இந்த வயசுலயே கல்யாண யோகம் வந்துவிட்டதுnu நினைத்துக் கொள்கிறோம். மத்த விஷயத்தை பேசுவோம். நாங்க எங்க பொண்ணுக்கு 50 பவுன் போட்டு நாங்களே கல்யாணம் பண்ணி வைத்தோம். அதையே நீங்களும் செய்தால் போதும் அப்புறம் பணம் ஏதாவது நீங்கள் கொடுக்கணும்னு நினைத்தால் அது உங்க இஷ்டம்.” என்றார் தாமரை .
.
கார்த்திகேயன் கலைவாணியை பார்த்தார். “பாத்தியா?” என்று கண்களால் கேட்டார்.
கலைவாணி எதுவும் சொல்லவில்லை.
தாமரை அந்த வீட்டை பார்த்து “வீடு நல்லா பெருசா இருக்கும் போல இருக்கு. நல்லா அழகா மெயின்டைன் பண்றீங்க. சுத்தி பார்க்கலாமா?” என்று கேட்க கலைவாணி
“வாங்க” என்று அவரை அழைத்து சென்றார்.
அதே நேரம் சுகந்தன் வீட்டை பார்த்தபடி அங்கு வந்தான்.
“என்ன வீட்டை பார்த்தீங்களா?” என்று கேட்டார் கார்த்திகேயன்.
“ஆம் பார்த்தேன். நல்லா இருக்கு. அழகான பெரிய வீடு.” என்றால்d சாதாரணமாக.
“ஒரு சின்ன வாடகை வீட்டில் இருக்கிறவங்களுக்கு இந்த வீடு அப்படித்தான் தெரியும். அதைக் கட்டின எனக்கு தான் இதுல எவ்வளவு உழைப்பு இருக்குன்னு தெரியும்.” என்றார் குத்தலாக.
அவர் பேச்சைக் கேட்டு வந்த கோபத்தை அடக்கி அமைதி காத்தான் சுகந்தன்.