அத்தியாயம் 3
அழகு பதுமை என அழைத்து வர பட்டாள் பஞ்ச வர்ணம். ஒரு நிமிடம் ஆதியே விழி விரித்தான். “அப்பாடி பவுடரை முகத்தில் வெள்ளை அடிச்சு வைக்காம வந்திருக்கா”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
அவன் அருகில் அமர்ந்தவள், “பாருங்க மச்சான் பவுடரை கம்மியா போட்டு வச்சிட்டாங்க. நீங்க வெள்ளையா இருக்கீங்க. நான் கருப்பா இருக்கேனா?”, என்று கேட்டாள்.
அவள் தைரியத்தை வியந்த ஆதி, “அப்படி மட்டும் அள்ளி தட்டிட்டு வந்துருந்த, ஒரே ஓட்டமா ஓடிருப்பேன்”, என்று மெது குரலில் சொன்னான்.
பின் அனைவரின் ஆசீர்வாதத்தோடு மாங்கல்யத்தை அவளுக்கு அணிவித்தான்.
அன்று இரவு முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அந்த அறைக்குள் நுழைந்த ஆதிக்கு கடுப்பாக இருந்தது. அறை முழுவதும் பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்தது. “இந்த மன நிலைல இது வேற? இருக்குற கடுப்புல பீல் எங்க டா வரும்?”, என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தான்.
அலங்காரத்துடனும், கையில் சொம்புடனும் உள்ளே வந்தாள் பஞ்சவர்ணம்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன், அந்த புறம் திரும்பி கொண்டான்.
“இந்தாங்க மச்சான் பால் சாப்பிடுங்க”, என்று கொடுத்தாள்.
“எனக்கு வேண்டாம்”, என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டான்.
அவள் மறுபடியும் கொஞ்சமாவது குடிங்க என்று சமாதான படுத்துவா என்று நினைத்தால், “சரி மச்சான் நானே குடிச்சிறேன்”, என்று சொல்லி விட்டு குடித்தே விட்டாள்.
அவன் காலில் விழுந்தாள் பஞ்சவர்ணம். “ஏய் எதுக்கு இதெல்லாம்? எந்திரி”, என்றான் ஆதி.
“எல்லாரும் இப்படி தான, மச்சான் செய்றாங்க அதான்”
அதற்கு பிறகு, என்ன செய்ய என்று தெரியாமல் ஒரு ஓரத்தில் படுத்தான். மற்றொரு ஓரத்தில் அமர்ந்தாள் பஞ்ச வர்ணம்.
“ஏய் எங்க உக்காருற? எந்திரி”
“என்ன மச்சான்? படுக்க வேண்டாமா? “
“உன்கூட எல்லாம் நான் படுக்க மாட்டேன். போ கீழ போய் படு. எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை”, என்றான் ஆதி.
சொல்லி விட்டு அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான். “என்ன செய்வா? எல்லாருக்கும் கேக்குற மாதிரி ஒப்பாரி வைப்பாளா?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
ஆனால், “சும்மா சொல்லாதீங்க மச்சான். உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம். என்னை பார்க்க ஒத்தை காலில் தவம் இருந்தீங்களாம். அது நடக்கலைன்னு உங்களுக்கு அவ்வளவு கோபமாம். என் மேல உங்களுக்கு ஆசைன்னு எனக்கு தெரியும்”, என்று சொன்னாள் அவள்.
“இதையெல்லாம் உனக்கு எந்த அறிவாளி சொன்னது?”
“உங்க உயிர் நண்பன் தான், என் தங்கச்சி கிட்ட சொன்னாராம்”
“அவன் உயிர் நண்பன் இல்லை. என் உயிரை எடுக்க வந்த நண்பன்”, என்று நினைத்தவன் “சீனி”, என்று கத்தினான்.
“எருமை மாடு, எப்படி போட்டு கொடுத்துருக்கான் பாரு?”, என்று மனதுக்குள் சீனியை தாளித்து விட்டு அவளிடம் திரும்பி, “இதெல்லாம் பொய்”, என்று சொல்ல திரும்பினான்.
அங்கு பார்த்தால், அவளை காணவில்லை. “எங்க போய்ட்டா?”, என்று யோசிக்கும் போதே அறைக்கதவு திறந்து கிடந்தது கண்ணில் பட்டது. சகுந்தலா உள்ளே வந்தாள். அவளுடன் சீனியும் வந்தான். “இவங்க எதுக்கு இங்க வராங்க?”, என்று நினைக்கும் போதே, கையில் சீனி டப்பாவுடன் வந்தாள் பஞ்சவர்ணம்.
“எதுக்கு டா சீனி கேட்ட? பஞ்சு வந்து மச்சான் சீனி கேக்குறாங்கன்னு
கத்துறா”, என்று கேட்டாள் சகுந்தலா.
“நான் எங்க கேட்டேன்? நான் இந்த பரதேசியை திட்டினேன்”, என்றான் ஆதி.
“என்னை எதுக்கு டா ஆதி திட்டுன? எனக்குன்னு வச்சிருக்காங்கனு பேரு? சீனி சீனின்னு ஆள் ஆளுக்கு ஏலம் விடுறீங்க”, என்றான் சீனி.
“ஆமா டா ஆதி, எதுக்கு நீ சீனியை திட்டுன?”, என்று கேட்டாள் சகுந்தலா.
“இவன் இந்த லூசோட தங்கச்சி கிட்ட, இவ மேல நான் உயிரையே வச்சிருக்கேன். ஆசையா இருக்கேன்னு கதை கட்டி விட்டுருக்கான் மா”, என்றான் ஆதி.
“வாழ்க்கையிலே, இன்னைக்கு தான் சீனி உருப்படியான வேலை செஞ்சிருக்க”, என்று சொன்ன சகுந்தலா, பஞ்சவர்ணத்திடம் திருப்பி “அம்மாடி பஞ்சு, உன் புருஷன் சும்மா சொல்றான். நைட் எல்லாம் பஞ்சு பஞ்சுன்னு புலம்புவான் தெரியுமா? அவனை நல்ல கவனிச்சிக்கோ. அப்ப அவனுக்கு இன்னும் உன்னை ரொம்ப பிடிக்கும் என்ன?”, என்று சொல்லி விட்டு “வா டா சீனி போலாம்”, என்று அவனை கூட்டிக்கொண்டு போய் விட்டாள்.
எதுவும் புரியாமல், சீனியை கையில் வைத்து கொண்டு பாவமாக பார்த்தாள் பஞ்சு. அவளை பார்த்து தலையில் அடித்து விட்டு போய் படுத்து கொண்டான்.
அவளும், அவனுக்கு அந்த புறம் படுத்தாள்.
நடு ராத்திரியில் தன் மேல் விழுந்த பாரத்தில் கண் விழித்தான் ஆதி. அவன் மேல் காலை தூக்கி போட்டு படுத்தாள் பஞ்ச வர்ணம்.
“ஐயோ, யானை மிதிச்ச மாதிரியே இருக்கு”, என்று நினைத்து கொண்டு, அவள் காலை நகர்த்தி விட்டான்.
அடுத்து கொஞ்ச நேரத்தில், காலோடு சேர்த்து கையையும் தூக்கி போட்டாள்.
“இவ தூங்க விட மாட்டா”, என்று நினைத்து கொண்டவன், கீழே தலையணையை போட்டு படுத்து விட்டான்.
காலையில் கண் விழித்தாள் பஞ்சு. பக்கத்தில் படுத்திருந்த அவனை காணவில்லை. “சீக்கிரம் எந்திச்சிட்டான் போல?”, என்று நினைத்து கொண்டு, கீழே இறங்க போனவள், அவன் தொடையில் மிதித்தாள். “ஆ அம்மா”, என்று அலறி கொண்டு எழுந்து அமர்ந்தான் ஆதி.
“நீங்க கீழே தான் படுத்துருக்கீங்களா மச்சான்? எதுக்கு கீழே படுத்தீங்க?”
“ஹ்ம்ம் வேண்டுதல்”, என்று சொல்லிக் கொண்டே காலை தடவி விட்டான். “ஜஸ்ட் மிஸ், கொஞ்சம் தள்ளி மிதிச்சிருந்தா அவ்வளவு தான்”, என்று நினைத்து கொண்டான்.
அவனை பார்க்காமல் கண்ணாடி முன் போய் நின்றாள் பஞ்சு. “எதுக்கு இவ காலைல போய் கண்ணாடி பாக்குறா?”, என்று நினைத்து கொண்டு அவளை திரும்பி பார்த்தவன் திகைத்தான்.
அங்கே சேலையை மார்பில் இருந்து எடுத்து கசக்கி கொண்டிருந்தாள். கொஞ்சம் கலைந்திருந்த தலையை, இன்னும் களைத்து விட்டாள். நெத்தியில் இருந்த பொட்டை எடுத்து கண்ணாடியில் ஓட்டினாள்.
“எதுக்கு இவ இப்படி செஞ்சிட்டு இருக்கா?”, என்று நினைத்து கொண்டு “ஏய் என்ன டி செய்ற?”, என்று கேட்டான்.
“அதுவா மச்சான், முதலிரவு முடிஞ்சு வெளிய போனா, இப்படி தான் போகணுமாம்”
“உனக்கு யார் சொன்னா?”
“எத்தனை படத்தில் பாத்திருக்கேன்? அதான் இப்படி செய்றேன்”, என்றவள் சிறிது குங்குமம் எடுத்து அவன் கன்னத்திலும், சட்டையிலும் சிறிது தடவினாள்.
அவளுடைய பதிலில் சிறு குறு குறுப்புடன், “உனக்கு முதல் ராத்திரில என்ன நடக்கும்னு தெரியுமா?”, என்று கேட்டான்.
“ஓ தெரியுமே! அதான் நமக்கு நடந்துச்சே. ஒரே கட்டிலில் படுத்து தூங்கணும். இது தான? “, என்று கேட்டாள் பஞ்சு.
“போச்சு! இது வேறயா?”, என்று நினைத்து கொண்டு “ஆமா, தாயே. அதுவே தான் போ”, என்றான்
“சரி மச்சான்”, என்று சிரித்து கொண்டே வெளியே போனாள்.
அங்கே பாரிஜாதம் சூடாக வைத்திருந்த தண்ணீரில் குளித்தாள். அடுத்து பூவிடம் போய், “பால் குடிச்சிட்டு படுத்து தூங்கிறணுமாம் டி, அது தான் நடந்தது”, என்றாள்.
அனைவரும் ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. “நீங்க மூணு பேரும் முன்னால போங்க, நான் பத்து நாள் கழிச்சு தான் வருவேன்”, என்றாள் சகுந்தலா.
பல்லை கடித்து கொண்டு “நீ வரவே செய்யாத இங்கயே இருந்துக்கோ”, என்றான் ஆதி.
“பாத்தியா டா சீனி, கல்யாணம் முடிஞ்ச, ஒரு நாளில் என்னை வேண்டாம்னு சொல்லிட்டான். எப்படி பொண்டாட்டி தாசனா மாறிட்டான் பாத்தியா? என்ன மந்திரம் போட்டாளோ, என் பையன் இப்படி மாறிட்டானே”, என்று சராசரி மாமியார் போலவே நடித்து காட்டினாள் சகுந்தலா.
அந்த நடிப்பை உண்மை என்று நம்பி “எதுக்கு டா, அம்மாவை எப்ப பாத்தாலும் கஷ்ட படுத்துற?”, என்று சண்டைக்கு வந்தான் சீனி.
“லூசு பயலே, அவ நடிச்சிகிட்டு இருக்கா. உனக்கு தெரியலையா? நீ எனக்கு பிரண்ட் இல்லை டா. கூடவே இருக்கும் எதிரி. கிளம்பி தொலை. போவோம்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.
கிளம்பும் முன் மகாராஜன், பாரிஜாதத்தை கட்டி கொண்டு ஊருக்கே கேட்பது போல அழுது தீர்த்தாள் பஞ்ச வர்ணம்.
அடுத்து இரண்டு அக்கா மற்றும் பூங்கோதையையும் கட்டி கொண்டு அழுதாள்.
“ஐயோ, இப்பவே கண்ணை கட்டுதே”, என்று நினைத்து கொண்டான் ஆதி.
ஒரு வழியாக அனைவரிடமும் சொல்லி விட்டு, ரயில்வே ஸ்டேஷன் வந்து விட்டார்கள். பிளைட் டிக்கட் கிடைக்காததால் ரயில் பயணம். மூணு நாள் பயணத்தில், ஆதியும், சீனியும் அவளால் ஒரு வழி ஆகி விட்டார்கள். அந்த அளவுக்கு இருந்தது அவளுடைய தொல்லை.
ஒரு வழியாக டெல்லி வந்து சேர்ந்தார்கள். சீனியும், ஆதியும் முன்னால் நடந்தார்கள். ஒரு கனமான பையை வைத்து கொண்டு பின்னால் வந்தாள் பஞ்சு.
ஒருவர் பின் ஒருவராக மெட்டல் டிடெக்டரில் செக் செய்து விட்டு அனுப்பினார்கள்.
சீனியும், ஆதியும் முன்னே செக் செய்து விட்டு வெளியே சென்றார்கள்.
பஞ்சு போகும் போது ‘கீ கீ‘ என்று சத்தம் கொடுத்தது. அவளை ஏதோ தீவீரவாதி போல சுற்றி வளைத்தார்கள். ஏற்கனவே புது இடம் என்பதில், மிரண்டு போய் இருந்தவள் சுற்றி துப்பாக்கி வைத்து கொண்டிருப்பதை பார்த்து அலறியே விட்டாள்.
“என்ன டா அங்க சத்தம்? இவளை எங்க? வா சீனி பாப்போம்”, என்ற படியே மறுபடியும் வந்தான் ஆதி. இங்கே தரையில் அமர்ந்து, தலையில் கை வைத்து கத்தி புலம்பி கொண்டிருந்தாள் பஞ்ச வர்ணம்.
அவளை சுற்றி கூட்டம் கூடி விட்டது. உடனே ஓடி சென்று அவள் அருகில் அமர்ந்து அவளை எழுப்பினான். “மச்சான்”, என்று கத்தியவள், “இந்த எடுபட்ட பய, என்னை விட மாட்டுக்கான் மச்சான்”, என்று புகார் வாசித்தாள்.
“என்ன ஆச்சு?”, என்று விசாரித்தான் ஆதி.