“அம்மா எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படி பேசினா எப்படி மா? நான் தான் வந்த உடனே எல்லாம் சொன்னேனே? அதுக்கப்புறமும் நீ இப்படி பேசுற?”
“எப்படி பேசுறேன்?”
“நீ பேசுறதைப் பாத்தா அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற மாதிரி இருக்கு”
“முதல்ல அவன் இவன்னு பேசுறதை நிறுத்து யுக்தா. எனக்கு எரிச்சலா வருது”
“சரி சரி அவருக்கு போதுமா?”
“ஆமா நீ யாரைச் சொல்ற?”
“விளையாடாத மா. நான் யாரைச் சொல்றேன்னு தெரியாம தான் அவன் இவன்னு பேசக் கூடாதுன்னு சொன்னியா?”
“ஓஹோ நீ உன் புருசனைச் சொல்றியா யுக்தா? … சே சே … இனி அப்படி சொல்லக் கூடாதுள்ள? இனி உனக்கும் அவருக்கும் என்ன உறவு இருக்கு?”
“அம்மா”
“பச்சை பிள்ளை மாதிரி ரியாக்சன் கொடுக்காத பாப்பா. அவரை வேண்டாம்னு சொல்லி தானே இங்க வந்து உக்காந்துருக்க? அது தானே உண்மை? இனி அதைப் பத்தி பேச என்ன இருக்கு? எந்திச்சு சாப்பிட வா. உன்னைச் சாப்பிட கூப்பிட தான் வந்தேன். மத்த படி நான் வேற யாருக்கும் சப்போர்ட் பண்ணி பேச இங்க வரலை”
“கரெக்ட் தான். நீ யாருக்கும் சப்போர்ட் பண்ணி பேசலை தான். ஆனா நீ என் பக்கமும் பேசலையே? என் நியாயத்தை பத்தி யோசிக்க கூட மாட்டிக்கியே?”
“நியாயமா? உன் பக்கமா? உன் பக்கம் என்ன நியாயம் இருக்கு யுக்தா”
“அம்மா, நான் அவனை ரொம்ப நம்பினேன் மா. அவன் என்னை… இப்படி ஏமாத்துவான்னு நான் நினைக்கவே இல்லை”
“எத்தனை தடவை உனக்குச் சொல்லிருக்கேன். அவரை அவன் இவன்னு பேசதேன்னு… நீ திருந்தவே மாட்டியா?”
“போ மா. அதுக்கெல்லாம் அவங்க கோபமே பட மாட்டாங்க தெரியுமா? அவங்க தான் எனக்கு எப்படி விருப்பமோ அப்படிக் கூப்பிடச் சொன்னாங்க”, என்று மகள் பூரிப்புடன் கணவனைப் பற்றி பேசியதும் தாமரை முகம் கணிந்தது.
“உன் இஷ்டப் படி அவரைக் கூப்பிட இனி உனக்கு உரிமை இல்லை யுக்தா. இனி நீ வேற அவர் வேற”
“அம்மா”
“என்ன அம்மா? அவரை வேண்டாம்னு சொல்லிட்டு தானே கிளம்பி இங்க வந்த? இனி உனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனி நீ நிம்மதியா இருக்கலாம். உனக்கான நிம்மதியை தேடி தான் உன் அப்பா போயிருக்கார்”
“என்னம்மா சொல்ற? அப்பா எங்க?”
“உங்க அப்பா எங்கயோ அவசரமா கிளம்பி போனார். எனக்கு தெரிஞ்சு அவர் ரெண்டு விசயத்துக்கு தான் போயிருக்கணும். ஒண்ணு உன்னையும் உன் புருசனையும் நிரந்தரமா பிரிக்க. இன்னொன்னு உன்னை மறுபடியும் அந்த சாக்கடைல தள்ளுவதுக்காக பிள்ளையார் சுழி போட. ஏன்னா உன் தலையெழுத்தை எழுதுற பொறுப்பை நீ அவர் கிட்ட கொடுத்துட்டியே?”
“அம்மா’
“சும்மா அம்மா அம்மான்னு கூப்பிடாத. எனக்கு உன்னைப் பாத்தாலே எரிச்சலா இருக்கு. எப்படி யானை தன்னோட தலைலே மண்ணை அள்ளிப் போடுமோ அது மாதிரி தான் நீயும். நீயாவது நல்லா இருப்பேன்னு நினைச்சேனே டி? இப்படி எல்லாத்தையும் குட்டிச் சுவராக்கிட்டு வந்து நிக்குறியே? முன்னாடி இருந்த யுக்தா எங்க?”
“அம்மா அவன் என்னை ஏமாத்தி….”
“ஏமாத்தி என்ன பண்ணிட்டார்? இல்லை என்ன பண்ணிட்டார்னு கேக்குறேன்? உன் சொத்தை எல்லாம் எழுதி வாங்கிட்டாரா? இல்லை உன் நிம்மதியை குழி தோண்டி புதைச்சாரா?”, என்று தாமரை கேட்டதும் அவள் தலை மறுப்பாக ஆடியது.
“இங்க பாரு பாப்பா, நீ என் பொண்ணு. உன்னை எனக்கு நல்லா தெரியும். எனக்கு தெரிஞ்சு நீ சந்தோஷமா இருந்தது மாப்பிள்ளை உன் வாழ்க்கைல வந்த பிறகு தான். அந்த சந்தோஷத்தை உனக்கு கொடுத்த மாப்பிள்ளை உன்னை எதுக்கு ஏமாத்தணும்? அப்படியே அவர் ஏமாத்தினது உண்மையா இருந்தாலும் அவர் சட்டையை பிடிச்சு எதுக்கு இப்படிப் பண்ணினீங்கன்னு கேக்க உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. அதை விட்டுட்டு அவரை பேசக் கூட விடாம நீ இங்க வந்திருக்க. ஒரு தடவை உன் விதியை மாப்பிள்ளை மாத்தி எழுதினார். ஆனா இப்ப உன் விதியை எழுதப் போறது உன் அப்பா. இனி நீ தான் முடிவு எடுக்கணும். இப்ப நான் உன் கிட்ட இப்படி எல்லாம் பேசுறது தெரிஞ்சா உன் அப்பா கிட்ட எனக்கு அடி தான் விழும். ஆனாலும் மனசு கேக்காம தான் வந்து பேசுறேன். எனக்கு எந்த உரிமையையும் உன் அப்பா கொடுக்கலை. அப்படி இருந்தும் நான் இந்த வீட்டை விட்டு போகாம தான் இத்தனை வருஷம் இருக்கேன். ஆனா உன் வாழ்க்கை அப்படி இல்லை. யோசிச்சு முடிவு எடு. சரி சாப்பாடு வேணும்னா கீழ வந்து என்னை எழுப்பி. இல்லை பட்னியா கிடந்து சாகுறதுன்னா சாவு, இதுக்கு மேல உன் இஷ்டம்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் தாமரை. அம்மாவே அப்படிச் சொன்னதும் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள் யுக்தா.
அவள் நினைவுகள் எல்லாம் கடந்த காலத்தை நோக்கிப் பயணித்தது. அதே நேரம் அதே சென்னையில் வேறு ஒரு இடத்தில் இருந்த தன்னுடைய வீட்டில் தலையை பிடித்த படி அமர்ந்திருந்தான் யுவன். யுக்தா வீடு போல இவனுடைய வீடு பங்களா எல்லாம் இல்லை. நடுத்தர மக்கள் வசிப்பது போன்ற வீடு தான் இவனுடையது.
யுக்தா அவளது வீட்டுக்கு ஒரே வாரிசு என்றால் யுவனுடன் பிறந்தது ஒரு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கை. சிறு வயதில் இருந்து யுவனின் குடும்பம் ஆடம்பரத்தை எல்லாம் அனுபவித்தது இல்லை. அவர்கள் அதை தேடியதும் இல்லை. யுவன் வீட்டினர் கடவுளிடம் வேண்டுவது எல்லாம் நிம்மதி மட்டுமே. யுக்தா எப்போது யுவன் வாழ்க்கையில் வந்தாளோ அப்போதிருந்தே அவர்களின் நிம்மதி காணாமல் தான் போய் விட்டது.
ஆனால் யுவனுக்கு அப்படி இல்லை. அவனைப் பொறுத்தவரை அவள் ஒரு தேவதை, அவனுக்கு சந்தோஷத்தை அள்ளித் தரும் தேவதை.
அப்படிப் பட்ட யுக்தா வீட்டை விட்டுச் செல்வாள் என்று அவன் கனவிலும் நினைக்க வில்லை. கடைசியில் தோற்றுவிட்டேனா என்று அவன் மனம் ஊமையாக கண்ணீர் வடித்தது.
அவள் உடன் இருந்தால் அவன் எந்த கஷ்டத்தில் இருந்தாலும் மீண்டு வருவான். ஆனால் அவளே சென்று விட்டால்….?
சோபாவில் தலையை தாங்கி அமர்ந்திருந்த மகனைக் கண்டு வருந்தினாள் அவனது அன்னை சுந்தரி. கூடவே இவனுக்கு இது தேவையா என்ற எண்ணமும் வந்தது.
நேரே அவனிடம் சென்று “இது உனக்கு தேவையா டா? இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன்? என் பேச்சைக் கேட்டியா?”, என்று அவன் மனதைக் குத்திக் காட்ட அவள் மூளை துடித்தது தான். ஆனால் மகனின் மனதை அறிந்த தாயுள்ளமோ அவனை மேலும் காயப் படுத்த சம்மதிக்க வில்லை.
ஆனால் இதற்கெல்லாம் காரணமான யுக்தா மேல் கொலைவெறியே வந்தது அவளுக்கு. எல்லாம் அவளால் தான் என்று அவள் உள்ளம் குமுறியது. மகனை தொந்தரவு செய்யாமல் தன்னுடைய அறைக்கு வந்தாள். அங்கே அவளுடைய கணவர் ஈஸ்வரன் கட்டிலில் படுத்திருந்தார்.
அவரிடம் இருந்து சீராக மூச்சு வந்ததும் “மாத்திரை போடுறதுனால சீக்கிரம் தூங்கிட்டார் போல? இதுவும் நல்லதுக்கு தான். இவர் முழிச்சிட்டு இருந்தா ரூல்ஸ் பேசுவார்”, என்று எண்ணிக் கொண்ட சுந்தரி தன்னுடைய போனை எடுத்து யுக்தாவின் எண்ணை அழுத்தினார்.
அந்த பக்கம் யுக்தா போன் அடிக்கவும் அது யுவனா இருக்குமோ என்று எண்ணி அவசரமாக எடுத்தாள். அழைப்பது சுந்தரி என்று தெரிந்ததும் அவளுள் எரிச்சல் மண்டியது. “இந்தம்மா எதுக்கு என்னைக் கூப்பிடுது? கண்டிப்பா கரிச்சுக் கொட்டத் தான் இருக்கும்”, என்று எண்ணியவள் எரிச்சலுடனே போனை எடுத்து “ஹலோ சொல்லுங்க”, என்றாள்.
எடுத்தது தான் தாமதம், “நீயெல்லாம் ஒரு பொண்ணா டி? சீ”, என்று ஆங்காரமாக கத்தினாள் சுந்தரி.
அவளுடைய கோபத்தில் எப்போதும் போல் யுக்தா பயந்து போனாள் என்றால் ஈஸ்வரனோ மனைவியின் கொடூரக் குரலில் கண் விழித்து விட்டார். மகனின் வாழ்க்கையை எண்ணிக் கொண்டு அவர் மாத்திரை போடுவதை மறந்து விட்டதால் அவருடைய சாதாரண தூக்கம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அசையாமல் படுத்திருந்தார். ஏனென்றால் சுந்தரி பேசுவது யுக்தாவிடம் என்று அவருக்கு புரிந்து போனது. அதனால் அதை மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
“அத்தை”, என்று யுக்தா பயத்துடன் அழைத்தாள்.
“சீ என்னை அப்படிக் கூப்பிடாதே. என் பையன் வாழ்க்கையையே சீரழிச்சிட்டியே? நல்லா இருப்பியா டி நீ? அவன் எங்க எப்படி இருக்க வேண்டியவன்? போச்சு, எல்லாம் போச்சு. உன்னால அவன் வாழ்க்கை மட்டுமா போச்சு. உன்னால என் மத்த மூணு பிள்ளைங்க வாழ்க்கையும் சேத்து போச்சு. இப்படி எல்லாரோட நிம்மதியை கெடுத்த உன்னை எல்லாம் என்ன செஞ்சா தகும்? இப்ப உனக்கு சந்தோஸமா இருக்குமே? இதுக்கு தானே ஆசைப் பட்டு யுவன் வாழ்க்கைல வந்த? உன்னை நினைக்கும் போது எனக்கு பாம்புக்கு பால் வார்த்த கதை தான் டி நினைவுக்கு வருது”
“நான் ஒண்ணும் பண்ணலை. எல்லாம் அவன் தான்….”
“முதல்ல புருசனுக்கு மரியாதை கொடுத்து பழகு. மரியாதை எல்லாம் உனக்கு எங்க வரும்? உன் வளர்ப்பு அப்படி”