“இது எந்த ஊர் மா? வீடு எல்லாம் அந்த பக்கம் இருக்கு. நீ காட்டுல வந்து நிப்பாட்ட சொல்லிருக்க?”
“இது காடு இல்லை பாப்பா. நம்ம இடம் தான். விவசாயம் செய்ய ஆள் இல்லாம தரிசா கிடக்கு”
“சரி இங்க எதுக்கு வந்துருக்கோம்?”
“இங்க நம்ம குல தெய்வம் கோவில் இருக்கு”
“இங்கயா?”
“ஆமா, கொஞ்சம் உள்ள போகணும். வா”, என்று சொல்லி அழைத்துச் சென்றாள்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் வீற்றிருந்தது அந்த கோவில்.
“இந்த காட்டுக்குள்ள இவ்வளவு பெரிய கோவிலா?”, என்று வியந்த படி சென்றாள் யுக்தா.
இவர்கள் கோவிலுக்குள் நுழைந்த போது அங்கே கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்தார் முன்பு தாமரை வீட்டில் வேலை செய்த துரை முருகன் என்பவர். இவர்களைக் கண்டவர் “வா தாயி நல்லா இருக்கியா? இது தான் நம்ம பாப்பாவா? அப்படியே ஐயா மாதிரியே இருக்கா”, என்றார்.
“நல்லா இருக்கேன் மருதண்ணா. இது தான் என் மக”
“சந்தோஷம் தாயி. திடீர்னு நேத்து நீ போன் போட்டதும் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. அதான் காலைல வந்துட்டேன்”
“என்ன மா இப்படிச் சொல்லிட்டீங்க? கோவில் கட்ட பணம், அதை பராமரிக்க மாசம் மாசம் எனக்கு சம்பளம்னு ஐயா எனக்கு நிறைய செஞ்சிட்டு தான் போனார். இதெல்லாம் எனக்கு கொடுத்த இந்த கடவுளை நான் கண்டுக்காம இருப்பேனா? நீ நேத்து சொன்னதெல்லாம் உண்மையா தாமரை?”, என்று அவர் கேட்டதும்
“ஆமாண்ணா, சரி நீங்க எல்லா ஏற்பாடும் செய்ங்க. அப்புறம் எல்லாம் விவரமா சொல்றேன்”, என்று தாமரை ஒரு பையை அவரிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு அவர் மற்ற வேலையைப் பார்க்கச் சென்றார்.
அவர் சென்றதும் மகளைப் பார்த்தாள் தாமரை. யுக்தா தாமரையைத் தான் குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இங்க வந்தா என்னோட வாழ்க்கை மாறும்னு நினைச்சு என்னை இங்க கூட்டிட்டு வந்தியா மா?”, என்று கேட்டாள் யுக்தா.
“ஆமா”
“எதுவும் மாறாது மா. என் தலையெழுத்தை அப்பா எழுதிட்டார்”
“அது உன் கைல தான் இருக்கு. நீ நினைச்சா மாறும்”
“எனக்கு நீ முக்கியம் மா. உனக்காக நான் அப்பா சொன்னதை செஞ்சு தான் ஆகணும்”
“அந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம் யுக்தா. பேசாம அம்மா சொல்றதைக் கேளு”
“இல்லை மா… அம்மா.. அங்க பாரேன்… யுவன் தானே அது? அவன் எப்படி இங்க? நீ தான் வரச் சொன்னியா?”, என்று யுக்தா கேட்டதும் தாமரையும் திரும்பிப் பார்த்தாள்.
சற்று தொலைவில் குழப்பமான முகதுடன் வந்து கொண்டிருந்தான் யுவன். “நான் தான் பாப்பா வரச் சொன்னேன்”
“அவனை எதுக்கு மா நம்ம பிரச்சனைக் குள்ள இழுக்குற? அப்பாவுக்கு தெரிஞ்சா அவனுக்கு ஏதாவது ஆகும்”, என்று யுக்தா சொல்லும் போதே அவர்கள் அருகில் வந்தான்.
யுக்தா அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலையைத் திருப்ப “என்ன ஆச்சு ஆண்ட்டி?”, என்று கேட்டான் யுவன்.
தாமரை நடந்த அனைத்தையும் சொல்ல அவன் யுக்தாவை முறைத்தான். “பைத்தியமா டி நீ? உன் அப்பா என்ன சொன்னாலும் செஞ்சிருவியா? இப்படி பயந்து பயந்து தான் படம் நடிக்க வந்த. அப்பவும் என் பேச்சைக் கேக்கலை. இப்ப என்ன டான்னா ஏதோ ஊர்ப் பேர்த் தெரியாதவனை கட்டிக்கிறேன்னு சொல்லிருக்க?”, என்று கேட்டான்.
“அம்மா உயிரைக் காப்பாத்த நான் அந்த கல்யாணம் பண்ணித் தான் ஆகணும். நான் முடிவு பண்ணிட்டேன் யுவன். நீ வேற புதுசா ஏதாவது சொல்லிக் குழப்பாத”, என்று சொன்ன யுக்தா அதற்கு மேல் அவன் முன் நின்றால் அவனைக் கட்டிக் கொண்டு அழுது விடுவோம் என்பதால் “நான் கோவிலை சுத்தி பாக்குறேன் மா. நீயே அவனுக்கு புரிய வை”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
போகும் அவளையே இயலாமையுடன் பார்த்தவன் “இப்ப என்ன ஆண்ட்டி பண்ணுறது? இவ பயத்தை தான் அவர் பயன்படுத்துறார்”, என்றான்.
“எனக்கும் வேற வழி தெரியலை. அதான் உன்னை வரச் சொன்னேன்”
“பேசாம போலீஷ்ல கம்ப்லைண்ட் பண்ணலாமா? யுக்தா கொடுக்கலைனா என்ன நீங்க கொடுக்கலாமே?”
“கம்ப்லைண்ட் கொடுத்தா தீர்வு கிடைச்சிருமா பா? முன்னாடியாவது பரவால்ல. ஆனா இப்ப யுக்தாவுக்கு பேரும் புகழும் இருக்கு. இந்த நேரத்துல அவ அப்பாவைப்[ பத்தி தப்பா நியூஸ் வந்தா அது அவளையும் பாதிக்கும். அவ சினிமா வாழ்க்கையும் பாதிக்கும். அவ சினிமா வாழ்க்கை பாதிக்கும்னு நான் கவலைப் படலை. ஏற்கனவே அவளுக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு கவலைல இருக்கேன். இதுல போலீஸ் பிரச்சனை அது இதுன்னு ஆச்சுன்னா என் மக கல்யாண வாழ்க்கை அஸ்தமிச்சிரும்”
“அப்படின்னா அவ அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கணுமா? அவன் யார் என்னன்னு விவரமாவது தெரியுமா? யுக்தா அப்பாவை விட அவன் கெட்டவனா இருந்தா யுக்தா நிலைமை என்ன ஆகும்?”
“இதுக்கு ஒரு வழி இருக்குப்பா. அது நீ மனசு வச்சா தான் நடக்கும்”
“நானா? நான் என்ன செய்ய? நான் போய் போலீஸ் கம்ப்லைன்ட் கொடுக்க கூட முடியாது அதுக்கு யுக்தா சம்மதிக்கணும். ஆனா அவ பயந்து சாகுறா. வேற ஏதாவது கேஸ் போடலாமா அவர் மேல?”
“நீ இப்போதைக்கு அவரை சமாளிக்க வழி சொல்ற? நான் எப்பவுமே அவர் யுக்தாவை நெருங்காத அளவுக்கு பிரச்சனையை முடிக்க நினைக்கிறேன்”
“உங்களுக்கு ஏதாவது யோசனை வருதா? என்ன வேணும்னாலும் சொல்லுங்க. நான் உங்க கூட இருப்பேன்”
“நீ சொல்றது உண்மைன்னா அவளை நீ கல்யாணம் பண்ணிக்கோ யுவன்”, என்று தாமரை சொன்னதும் “ஆண்ட்டி”, என்று அதிர்ச்சியாக அழைத்தான் யுவன்.
“இதை தவிர வேற வழி இல்லைப்பா. உங்க கல்யாணம் தான் இதுக்கு தீர்வு. அவ உனக்கு மனைவி ஆய்ட்டான்னா யுக்தாவோட அப்பா அவளை தொல்லை செய்ய மாட்டார்”
“ஐயோ ஆண்ட்டி கல்யாணம் அதுன்னு பேசி விளையாடாதீங்க”
“என்னோட மகளை நினைச்சு பரிதவிச்சு போய் இருக்கேன். உனக்கு விளையாடுற மாதிரி இருக்கா?”
“அப்படி சொல்லலை ஆண்ட்டி. நான் அவளை அப்படி எல்லாம் நினைச்சது இல்லை. நான் எப்படி அவளை”
“வேற எப்படிப்பா நினைக்கிற? என் மக ஒரு அரை லூசுன்னா?”
“ஆண்ட்டி”
“உன்னால இப்ப இந்த நிமிஷம் அவளைக் கல்யாணம் பண்ண முடியுமா முடியாதா யுவன்?”
“முடியாது ஆண்ட்டி. நான் அப்படி எல்லாம்… நினைச்சது இல்லை. யுக்தாவைப் போய் கல்யாணம்….”
“சரிப்பா உன் முடிவை சொல்லிட்டல்ல? இனி எங்க வாழ்க்கைல வராத. நானே என்ன செய்யணும்னு யோசிச்சிருக்கேன். நான் கூப்பிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ். நீ போ”
“ஆண்ட்டி கோபப் படாதீங்க”
“மத்தவங்க மேல கோப படுற நிலைமைல நாங்க இல்லை யுவன். நாங்க அந்த கடவுளால சபிக்க பட்டவங்க. நாங்க அந்த கடவுள் கிட்டயே போறோம். இனி எங்களை நினைச்சு நீ கவலைப் படாதே. என்னால என் புருஷன் கிட்ட இருந்து சொத்தையும் காப்பாத்த முடியலை. என் மகளையும் காப்பாத்த முடியலை. ஆனா என் மகளை இந்த பாவப்பட்ட உலகத்துல இருந்து காப்பாத்த முடியும். யாரோ ஒருத்தனை கல்யாணம் பண்ணி என் மக கஷ்டப் படுறதுக்கு என் கூட சேந்து செத்து போனா அவளுக்கு நிம்மதி கிடைக்கும்”
“என்ன வார்த்தை பேசுறீங்க ஆண்ட்டி?”
“என் வயித்துல பிறந்தது தான் அவ செஞ்ச பாவம். இதுக்கு அப்புறம் அவளுக்கு இந்த கஷ்டம் வேண்டாம். நான் விஷத்தை கொடுத்தா கண்டிப்பா என் மக குடிப்பா. நாங்க இனி இந்த உலகத்துல இருக்க விரும்பலை. நீ வீட்டுக்கு கிளம்புப்பா. நாங்க சாமி கும்பிட்டுட்டு கிளம்புறோம்”, என்று தாமரை சொன்னதும் அடுத்த இரண்டு நிமிடத்துக்கு யுவன் எதுவுமே பேச வில்லை. அவன் அமைதி தாமரையை அதிகம் பாதித்தது.
யுவனோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான். யுக்தாவை திருமணம் செய்வது பற்றி அவன் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. அப்படி இருக்க இந்த முடிவு அவனுக்கு மிகப் பெரிய சோதனையாக இருந்தது.
ஆனால் தாமரை சொல்வதில் இருக்கும் நியாயமும் பட்டது. மிகப் பெரிய நடிகையாக இருக்கும் யுக்தாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பது ஒன்றும் எளிதல்ல. அதுவும் அந்த விஷயம் செல்வம் காதுக்கு போனால் விளைவு வேறு மாதிரி இருக்கும்.
அதனால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு முடிவை எடுத்தவன் “சரி ஆண்ட்டி. நான் இப்ப என்ன செய்யனும்”, என்று கேட்டான்.
“முடிஞ்சா என் மகளுக்கு வாழ்க்கை கொடுப்பா”, என்று தயங்காமல் அவனிடம் மடிப்பிச்சை கேட்டாள் அந்த தாய்.
அப்போதும் “வேற மாப்பிளை….”, என்று தயங்க தான் செய்தான் யுவன்.
“அது இப்போதைக்கு சாத்தியம் இல்லைப்பா. இவளுக்கு ஈஸியா வரன் கிடைக்க கூடாதுன்னு தான் இவ அப்பா இவளை படம் நடிக்க வச்சது. இப்ப எவனோ ஒரு ஹிந்திக்காரனை கூட்டிட்டு வந்துருக்கார். அப்படி இருக்க நாம எப்படி இவளுக்கு மாப்பிள்ளை பாக்க முடியும்? நாம பாக்குற மாப்பிளை அவர் பாத்திருக்குறவனை விட மோசமானவனா இருந்தா என்ன செய்ய முடியும்? என்னோட நம்பிக்கை நீ மட்டும் தான் பா. இது இப்ப நேத்து வந்தது இல்லை. உன்னைப் பாத்ததுல இருந்து வந்தது. உன்னால மட்டும் தான் அவளை நல்லா பாத்துக்க முடியும். அதை நான் நம்புறேன்”
“யுக்தா என்ன சொல்லுவான்னு ….”
“அவளுக்கு முதல்ல கல்யணம்னா என்ன? வாழ்க்கைன்னா என்னன்னு புரியுதா இல்லையான்னே எனக்கு தெரியாது யுவன். ஒரு அம்மாவா என்னால அவ கிட்ட ஒரு அளவுக்கு மேல பேச முடியலை. சாதாரணமா வர பொறாமை உணர்வே அவளுக்கு வர மாட்டிக்கு. இதுல நான் எப்படி கல்யாணத்தை பத்தி விளக்க. ஆனா அவ புரிஞ்சிப்பா. உனக்கு தான் அவளைப் பத்தி தெரியுமே. உன் கிட்ட அவ ஈஸியா ஒட்டிக்குவா. நான் அவசரப் பட்டு இந்த முடிவு எடுக்கலை. நிதானமா யோசிச்சு தான் சொல்றேன். பிளீஸ் இப்பவே இந்த சாமி முன்னாடி வச்சு அவ கழுத்துல தாலி கட்டு யுவன்”
“இப்பவே வா?”
“ஆமா இப்பவே தான். அதுக்கு தான் உன்னை இங்க வர வச்சேன். நீ அவ கழுத்துல தாலி கட்டு. அவளுக்கு கூட தெரிய வேண்டாம். அவ சாமி கும்பிடும் போது கட்டிரு”
“எங்க கல்யாணத்தை யாராவது பாத்தா.. யுக்தா இப்ப சாதாரண ஆள் இல்லை”
“இது எங்க குல தெய்வம் கோவில். இங்க மருது அண்ணனைத் தவிர யாரும் இல்லை. அவர் கூட படம் எல்லாம் பாக்க மாட்டார். அதனால அவருக்கு யுக்தா உயரம் எல்லாம் தெரியாது. அதனால தான் நான் உன்னை இங்க வரச் சொன்னேன். வா பா. இன்னைக்கு நல்ல நேரம் தான்”