தாமரையும் தைரியம் சொன்னதும் அரை மனதாக யுவனுடன் கிளம்பிச் சென்றாள் யுக்தா. அவள் சென்றதும் செல்வம் தாமரையை மிரட்ட ஆரம்பிக்க “நீங்க பண்ணுறது எல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா? இனி ஒழுங்கு மரியாதையா இருக்கலைன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. இப்ப ரிசப்ஷன் கிளம்பனும் வாங்க. நீங்க வந்தா தான் என் பொண்ணுக்கு மரியாதை. அதுக்கு தான் கூப்பிடுறேன். இல்லைன்னா உங்களை எக்கெடோ கெட்டுப் போங்கன்னு விட்டுருப்பேன்”, என்றாள் தாமரை.
“நான் போகத் தான் போறேன். நீங்களும் வந்தா உங்களுக்கு மரியாதை. இல்லைன்னா யுக்தாவோட அப்பா எங்கன்னு யாராவது கேட்டா நாங்க பிரிஞ்சிட்டோம்னு சொல்லிருவேன். அந்த நியூஸ் பத்திரிக்கைலயும் வந்துரும். அதுக்கப்புறம் நீங்க இந்த வீட்ல இருந்தும் கிளம்பனும். எங்க வாழ்க்கைல இருந்தும் கிளம்பணும். போறதுக்கு உங்களுக்கு என்ன வீடா இல்லை?”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று கிளம்ப ஆரம்பித்தாள்.
சொத்தை எழுதி வாங்காமல் அவர் எப்படி இங்கிருந்து செல்ல முடியும்? அதனால் தாமரையுடன் பங்சனுக்கு கிளம்பினார்.
இருவரும் காரில் ஏறியதும் டிரைவர் தான் காரை எடுத்தான். அவன் முன்னிலையில் மனைவியிடம் கோபத்தைக் காட்ட முடியாமல் அமைதியாக வந்தார் செல்வம். மண்டபத்துக்கு வந்து இறங்கியதும் செல்வம் வேண்டாவெறுப்பாக அமர்ந்திருந்தார்.
பெரிய அளவில் வரவேற்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் ஈஸ்வரன். வரவேற்பு நிகழ்ச்சியில் சொந்த பந்தங்கள் திரண்டிருந்தனர். திரையுலக பிரபலங்கள் கூட சிலர் வந்திருந்தனர். யுவன் யுக்தா அலங்கார பொம்மைகளாக மேடையில் நின்றிருந்தனர். அவர்களின் ஜோடிப் பொருத்ததைக் காந்தி சிலர் பொறாமையுடன் பேசினார்கள், சிலர் பாராட்டி பேசினார்கள்.
செல்வம் அங்கே வந்தது அனைவருக்கும் அதிர்ச்சி தான். அதன் பின் யாரும் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. தாமரையோ மகள் மருமகனைக் கண்டு அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்.
யுக்தா மற்றும் யுவன் முகத்தில் இருந்த சந்தோசத்தைக் காண முடியாத செல்வம் மண்டபத்தின் வெளிப்பக்கம் பார்த்து நடந்தார். அங்கே சுந்தரியும் யுவனின் அக்காவும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது அவர் காதில் விழுந்தது.
“இவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை மா. என் மாமியார், என்ன உன் தம்பி படம் நடிக்கிறவளை கட்டிக்கிட்டான்னு ஒரு மாதிரி கிண்டலா பேசுறாங்க. எனக்கு அவமானமா இருக்கு தெரியுமா?”, என்று கேட்டாள் மீனாட்சி.
“உனக்கு மட்டுமா அப்படி இருக்கு? எனக்கும் அப்படி தான் டி இருக்கு”
“முன்னாடியே யுவன் இவளை லவ் பண்ணிருக்கான் அப்படி தானே? அதான் நம்ம சரவணன் கல்யாணத்துல அவளுக்காக பரிஞ்சு பேசி அப்படி சண்டை போட்டுருக்கான்”
“லவ்வா ஒரு மண்ணும் இல்லை டி. யுவனுக்கு இவ மேல எந்த பீலிங்கும் இல்லை. பாவம்னு தான் எப்பவும் சொல்லுவான். ஆத்தாவும் மகளும் சேந்து தான் அவனை பிரைன் வாஸ் பண்ணி இப்படி கல்யாணம் செஞ்சு வச்சிருக்காங்க. உன் தம்பி எப்பவும் அவ ஒரு குழந்தை மாதிரின்னு தான் சொல்லுவான். சில நேரம் பிரண்டுன்னு சொல்வான்”
“பிரண்டுன்னு சொல்லிட்டு அவ கூட எப்படி மா வாழ்வான்?”
“இவன் எங்க அவ கூட வாழப் போறான்? ரெண்டும் தனியா தான் நிக்கும்”
“என்ன மா சொல்ற?”
“ஆமா டி, இத்தனை வருஷம் அவ கூட பழகிருக்கான். ஆனா இவனுக்கு அவ மேல காதலோ ஆசையோ வரவே இல்லை. இருக்குறது வெறும் பரிதாபம் தான். அப்ப எப்படி ஒண்ணா வாழ்வாங்க? பேசாம இவளை பத்தி விட்டுட்டு வேற பொண்ணை என் மகனுக்கு கட்டி வைக்கணும். அதான் என் முதல் வேலை”
“யுவன் ஒண்ணும் சொல்ல மாட்டானா”
“ஒட்டி வாழ்ந்தா தான் ரெண்டு பேரையும் பிரிக்கிறது கஷ்டம். ரெண்டும் தனி தனியா தான் இருக்க போகுது. அப்புறம் என்ன? இந்த யுக்தாவும் மத்த பொண்ணுங்க மாதிரி எல்லாம் கிடையாது. சும்மா மிரட்டினாலே ஓடிருவா”, என்று சுந்தரி சொல்ல அனைத்தையும் நன்கு காதில் வாங்கிக் கொண்ட செல்வம் மெதுவாக உள்ளே சென்றார்.
அப்போது அங்கே வந்த தாமரை “நீங்க இவ்வளவு நேரம் இங்க இருந்ததே பெருசு. வேணும்னா கிளம்புங்க”, என்று சொன்னாள்.
“இரு மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டு வரேன்”, என்று சொன்ன செல்வம் மேடையில் ஏறினார். அவரை அதிசயமாக பார்த்த தாமரையும் அவர் பின்னேயே சென்றாள்.
யுக்தா தாமரையின் கையைப் பற்றிக் கொண்டு நிற்க செல்வம் யுவனை நெருங்கினார். அவன் அவரை ஏளனமாக பார்க்க “ரொம்ப சந்தோஷப் படாதே. கண்டிப்பா என் மகளை உன் கிட்ட இருந்து பிரிப்பேன் டா. கூடிய சீக்கிரம் உங்களை எப்படி பிரிக்கிறேன்னு பாரு”, என்றார் செல்வம்.
“முடிஞ்சா செஞ்சு பாருங்க”, என்று யுவனும் தெனாவெட்டாக சொன்னான்.
“செஞ்சிட்டா உன் முகத்தை எங்க போய் வச்சிக்குவ?”
“என்னையும் யுக்தாவையும் நீங்க பிரிச்சிட்டா நீங்க என்ன செய்ய சொன்னாலும் செய்றேன் போதுமா? ஆனா அது கண்டிப்பா நடக்காது. இப்ப நல்லா புல் கட்டிட்டு கிளம்புங்க மாமனாரே”, என்று அவரிடம் சவால் விட்டாலும் உள்ளுக்குள் யுக்தாவை நினைத்து கொஞ்சம் பயம் இருக்க தான் செய்தது. அவரும் அவனை நக்கலாக பார்த்து விட்டு அங்கிருந்து சென்றார்.
அதன் பின் பங்ஷன் முடிந்ததும் அனைவரும் வீட்டுக்குச் சென்றார்கள். தாமரையும் மகளுடன் வந்திருந்தாள். இனி தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற குழப்பத்தில் அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள் யுக்தா.
உள்ளே வந்ததும் சிறிது நேரம் கழித்து “இங்க பாரு பாப்பா, இது தான் இனி உன் வீடு. நீ இன்னும் சின்ன பொண்ணு கிடையாது. பாத்து நடந்துக்கோ. மாப்பிள்ளையை இனி அவன் இவன் பேர் சொல்லி கூப்பிடுற வேலை எல்லாம் வச்சிக்காத. முதல்ல கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் பழகிரும். மாப்பிள்ளை மனசு கோணாம நடந்துக்கோ. அம்மா வீட்டுக்கு போயிட்டு உனக்கு கால் பண்ணுறேன். உன்னோட டிரஸ் எல்லாம் மாப்பிள்ளை ரூம்ல வச்சிருக்கார். என்னைப் பத்திக் கவலைப் படாதே. இனி உன் அப்பாவால எதுவும் செய்ய முடியாது”, என்று மகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு கிளம்பினாள்.
அங்கே வந்த யுவனிடமும் மகளை நன்கு பார்த்துக் கொள்ளச் சொன்னாள்.
ஈஸ்வரன் மற்றும் சுந்தரியின் அருகில் வந்த தாமரை “கல்யாணம் முடிஞ்ச உடனே என் மகளுக்கு சீர் செஞ்சிருக்கணும். ஆனா நிலைமை வேற மாதிரி ஆகிருச்சு. அதனால மாப்பிள்ளை அக்கவுண்ட்ல பணமா போட்டு விட்டுருக்கேன். அவங்களுக்கு தேவையானதை வாங்கிக்கட்டும். அப்புறம் யுக்தாவோட நகை எல்லாம் இன்னொரு நாள் எடுத்துட்டு வந்து கொடுக்குறேன். அவ ஒரு குழந்தை மாதிரி. சூதுவாது எல்லாம் தெரியாது. என் மேல ஏதாவது கோபம் இருந்தா அதை அவ கிட்ட காட்டிறாதீங்க”, என்றாள்.
“நீ கவலைப்படாம போ மா. யுக்தா இனி எங்க வீட்டுப் பொண்ணு”, என்று சொன்னார் ஈஸ்வரன். சுந்தரியோ வாயை மூடிக் கொண்டு நின்றாள்.
தாமரை அங்கிருந்து கிளம்பியதும் மொட்டை மாடியில் வந்து நின்று விட்டான் யுவன். மற்ற பிள்ளைகள் அனைவரும் நாளைக்கு எங்களுக்கு வேலை இருக்கு. நாங்க கிளம்புறோம் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்கள். சரவணன் கூட மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். அவர்கள் அனைவரும் அழைத்ததும் வந்ததே பெரியது என்பதால் ஈஸ்வரன் அவர்கள் யாரையும் தடுக்க வில்லை. போகும் பொழுது யாருமே யுக்தாவிடம் சொல்லி விட்டு கூட செல்ல வில்லை. சுஜி மட்டுமே “போய்ட்டு வறேன் அண்ணி”, என்று சொல்லிச் சென்றாள். அனைவரும் சென்றதும் வீடே வெறிச்சென்று ஆனது. சுந்தரியோ அறைக்குள் முடங்கி விட்டாள். யுவன் மாடிக்கு சென்று விட்டான். மண்டபம் கணக்கு முடிக்க ஈஸ்வரன் சென்று விட்டார்.
யுக்தாவோ தனித்து விடப்பட்ட குழந்தை போல ஹாலில் அமர்ந்திருந்தாள். அப்போது அவளுக்கு அன்னையை வெகுவாக தேடியது. தன்னிடம் முகம் கொடுத்து கூட பேச மறுக்கும் யுவனை நினைத்து கவலையாக இருந்தது.
இரவு பதினொரு மணி போல் ஈஸ்வரன் வீட்டுக்குவந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நின்றாள் யுக்தா.
“மணி பதினொன்னு ஆகுது. இன்னும் தூங்கலையா மா? எதுக்கு எழுந்துட்ட? உக்காரு டா, இது உன் வீடு. நீயும் எனக்கு பொண்ணு தான். எந்த தயக்கமும் பயமும் இல்லாம இரு”, என்றார்.
அவள் சரி என்னும் விதமாய் தலையசைக்க தன்னுடைய அறைக்குள் சென்றார். அங்கே சுந்தரி தூங்காமல் படுத்திருக்க “அந்த பொண்ணு கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்ல சுந்தரி”, என்று கேட்டார்.
“அவ கிட்ட பேசினா கண்டிப்பா கரிச்சு தான் கொட்டுவேன். எனக்கு கொலை வெறியே வருது, அவளைப் பாத்து”
“அவங்க என்ன கம்மியா செஞ்சிருக்காங்க? உன் மூத்த மருமகளை கவிட கிட்ட தட்ட ஏழு மடங்கு பணம் போட்டு விட்டுருக்காங்க. இன்னும் செய்வாங்க. அப்புறம் என்ன?”
“யாருக்கு தெரியும்? இவ கூட எப்படி குடும்பம் நடத்தன்னு தெரியாம வானத்தை பாத்துட்டு உக்காந்துருக்கானோ என்னவோ?”
“என்ன டி சொல்ற?”
“பின்ன அவன் எப்படிங்க இவ கூட வாழ்வான்? குழந்தை மாதிரின்னு சொல்லிட்டு திரிஞ்சவன் எப்படி இவளை பொண்டாட்டியா பாப்பான்? கண்டிப்பா ரெண்டும் தனித் தனி தீவாத் தான் நிக்குங்க. என் மகன் வாழ்க்கை போயே போச்சு. இதுல அதுக்கு காரணமானவ கூட நான் கதை பேசனுமா?”
“பிள்ளைங்க வாழலைன்னா நாம தான் டி சொல்லிக் கொடுக்கணும். உன் மகளா இருந்தா சொல்லிக் கொடுக்க மாட்டியா?”
“என் மக இவளை மாதிரி கூமுட்டை கிடையாது”
“அவ பயந்த சுபாவம் தான். அதுக்குன்னு அறிவு இல்லாதவ கிடையாது. சொன்னா புரிஞ்சிக்கிற பக்குவம் யுக்தாவுக்கு இருக்கு. கூமுட்டையா இருக்குறவளுக்கு தான் அத்தனை அவார்ட் கொடுக்குறாங்களா சுந்தரி?”
“என்னால அவ கூட பேச முடியாதுன்னா முடியாது போதுமா? கூடிய சீக்கிரம் உங்க மகனே அவளை பத்தி விடுவான். இல்லை அவளே ஓடிருவா. அப்புறம் எனக்கு பிடிச்ச பொண்ணா பாத்து கட்டி வைப்பேன். அப்ப வரப் போற என் புது மருமகளைத் தாங்குறேன் போதுமா?”,
இதற்கு மேல் அவளிடம் பேசி வீண் என எண்ணியவர் உடனே யுவனைக் காணச் சென்றார். வானத்தில் தெரியும் நட்சத்திரத்தைப் பார்த்த படி படுத்திருந்தான். தந்தையைக் கண்டதும் எழுந்து அமர்ந்தான். அவன் அருகில் அமர்ந்தவர் “மணி என்ன தெரியுமா? கீழ யுக்தா தனியா இருக்கா டா. கீழே போ. அவ கிட்ட பேசிட்டு இரு. இத்தனை நாள் அவ கூட நல்லா தானே பேசின? இப்ப மட்டும் ஏன் அவளை தனியா விட்டுட்டு வந்துருக்க?”, என்று கேட்டார்.
“நிறைய குழப்பம் பா மனசுல. அவ கிட்ட பேசவே எனக்கு மனசு வர மாட்டிக்குது”
“அவளுக்கும் குழப்பம் எல்லாம் இருக்கும்ல? உன்னை விட அவளுக்கு அதிகம் இருக்கும்.உங்க உறவு நூல்ல விழுந்த சிக்கல் போல. உடனே சிக்கல் எடுக்க நினைக்காத, நூல் அறுந்து போற மாதிரி அருந்துரும். கொஞ்சம் பொறுமையா இரு”
“சரிப்பா, அம்மா….”
“உன் அம்மா பத்தி தான் உனக்கு தெரியுமே. அவ மனசு மாற கொஞ்சம் லேட் ஆகும். கீழ போ. பாவம் போல உக்காந்துருக்கா. உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ”
“என் ரூமுக்கா?”
“உன் அம்மா ஏற்கனவே வேற கனவுல இருக்கா டா. அதை நிஜமாக்கிறாத. உன் பொண்டாட்டி உன் கூட உன் ரூம்ல தான் இருக்கணும். உங்களோட விஷயம் உங்களுக்குள்ள மட்டும் தான் இருக்கணும். போ”
“சரிப்பா”, என்று சொல்லி கீழே வந்தான். அவனைக் கண்டு அவள் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்க்க “சாரி தனியா விட்டுட்டு போய்ட்டேனா? வா”, என்று சொல்லி விட்டு அவனுடைய அறைக்குள் நுழைந்தான். அவளும் தயக்கத்துடன் அவன் பின்னே அந்த அறைக்குள் வந்தாள்.
அந்த அறைஎந்த விட அலங்காரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. அது நிம்மதியாக கூட இருந்தது யுவனுக்கு. சற்று நேரம் இருவருக்குமே என்ன பேச என்று தெரிய வில்லை. கட்டிலில் அமர்ந்த யுவன் “இங்க வந்து உக்காறு யுக்தா”, என்று அழைத்தான்.
வந்து ஒரு ஓரத்தில் அமர்ந்தாள் யுக்தா. சிறிது நேரம் கழித்து “யுக்தா”, என்று அவன் அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் எதுவோ சொல்ல போராடுவது அவளுக்கு புரிந்தது. அந்த பேச்சில் இருந்து தப்பிக்க “எனக்கு தூக்கம் வருது யுவன். நாளைக்கு பேசுவோமா?”, என்று சொன்ன யுக்தா கட்டிலின் மறு ஓரம் சென்று படுத்து விட்டாள்.
நிம்மதியா ஏமாற்றமா என்று புரியாத மனநிலையில் மற்றொரு ஓரம் படுத்தான் யுவன். அதை உணர்ந்தாலும் கண்களை இறுக மூடிப் படுத்திருந்த அவளுக்குள் பல போராட்டங்கள். வெகு நேரம் யோசித்த படியே தான் தூங்கினார்கள் இருவரும்.
அடுத்த நாள் எப்போதும் போல் அழகாக விடிந்தது. கண் விழித்த யுவனுக்கு சிறிது நேரத்துக்கு பிறகு தான் தனக்கு திருமணம் ஆனதே புரிந்தது. அவளைத் தேடினான். அவள் அப்போது தான் குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள்.
ஒரு நொடி இருவரும் திகைத்துப் போனார்கள். பின் நிலைமையை சமாளிக்க “குட் மார்னிங் யுக்தா. சீக்கிரம் எழுந்துட்டியா? உங்க வீட்ல லேட்டா தானே எந்திப்ப?”, என்று கேட்டான்.
“உங்க அத்தை திட்டாம இருந்தா தான் அதிசயம். என்ன சொன்னாலும் கண்டுக்காத ஓகே வா? சரி லேட்டா எழுந்தா அம்மா திட்டுவாங்கன்னு யார் சொல்லிக் கொடுத்தா?”
“நான் நடிச்ச படத்துல அப்படி ஒரு சீன் வரும்”, என்று சொன்னவள் பால்கனிக்குச் சென்று தலையை உலர்த்த ஆரம்பித்தாள். அன்று பூத்த மலர் போல் இருந்தவளைப் பார்த்த படி இருந்த யுவன் பின் தலையைக் குலுக்கிக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்றான்.