யுவன் போனை ஸ்பீக்கரில் போட்டதும் “யுவன் தம்பி”, என்று அழைத்தார் சிவசுந்தரம்.
“சொல்லுங்க சார்”
“பாப்பா ஏதாவது சொல்லுச்சா?”
சுந்தரியைப் பார்த்துக் கொண்டே “இல்லையே சார்”, என்றான்.
“நாளைக்கு போர்டு மீட்டிங் இருக்கு. எல்லா போர்டாஃப் டிரேக்டர்ஸுக்கும் சொல்லியாச்சு. நீங்களும் நாளைக்கு ஆஃபிஸ்க்கு வரணும்”
“அவங்க எல்லாம் வரும் போது நான் எதுக்கு சார்? அது மட்டும் இல்லாம யுக்தா என் மேல கோபமா இருக்கா”
“தம்பி, அந்த தப்பான நியூஸ் பத்தி சொல்றீங்களா? யுக்தா பாப்பா நேத்தே என் கிட்ட யுவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்கன்னு நம்பிக்கையா சொல்லுச்சு. அப்புறம் கோபம் இருந்தா எல்லா சொத்தையும் உங்க பேர்ல எப்படி எழுதி வைப்பாங்க”
“கேட்டுக்கிட்டீங்களா?”, என்ற பார்வையை அன்னையை நோக்கி வீசியவன் இப்போது தான் அந்த விஷயம் தெரிந்தது போல “என்ன சார் சொல்றீங்க? என் பேர்ல எழுதி வச்சிருக்காளா?”, என்று கேட்டான்.
“ஆமா தம்பி, பாப்பா உங்க பேர்ல எல்லா சொத்தையும் மாத்த சொல்லிட்டு. இனி உங்களுக்கும் உங்க வாரிசுகளுக்கும் தான் இந்த சொத்து சேரும். நாளைக்கு அதை அனோன்ஸ் பண்ண தான் பாப்பா மீட்டிங் ஏற்பாடு பண்ணச் சொல்லுச்சு. சரியா பத்து மணிக்கு நம்ம கம்பெனிக்கு வந்துருங்க. நீங்களும் லீகலா சைன் பண்ண வேண்டியது இருக்கு”
“இதெல்லாம் அவசியம் தானா சார்? யுக்தாவோட அப்பா ஒரு மாதிரி”
“கண்டிப்பா அவசியம் தான் யுவன். எனக்கு உங்க மனசு புரியுது. பாப்பா உங்க மேல உள்ள அன்புல தான் இதை செஞ்சாங்க. ஆனா என் மனசுல இருக்குற இன்னொரு காரணம் என்னனா உங்க பேர்ல இருந்தா தான் இந்த சொத்து காப்பாத்த படும். அதுக்காவது நீங்க இதுக்கு சம்மதிக்கணும். நாளைக்கு நேர்ல வாங்க. மத்தது எல்லாம் பேசிக்கலாம்”
“சரி சார்”, என்று சொல்லி போனை வைத்தவன் “என்ன மா, அவர் சொன்னது எல்லாம் கேட்டீங்களா? இப்ப நம்புறீங்களா?”, என்று கேட்டான்.
“நம்புறேன். ஆனா உன் மேல உள்ள அன்புல அவ இதை செஞ்சாங்குறதை தான் என்னால நம்ப முடியலை. அவ சொத்தை எல்லாம் காப்பாத்த தான் அவ உன் பேர்ல எழுதி வச்சிருக்கணும். முதல்ல மேனேஜர் வேலை, இப்ப பாடிகார்ட் வேலை”, என்று நக்கலாக சொன்னாள் சுந்தரி.
“அவ மாற மாட்டா யுவன். நீ நாளைக்கு கிளம்பி ஆஃபிஸ்க்கு போ. கூடவே உன் கனவையும் அவ கிட்ட சொல்லு”, என்றார் ஈஸ்வரன்.
“சரிப்பா. அப்புறம் நான் என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு கிளம்புறேன்”, என்று யுவன் சொன்னதும் ஈஸ்வரன் அவனை குழப்பமாக பார்த்தார்.
“கிளம்புறியா? எங்க கிளம்புற?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் சுந்தரி.
“வேற எங்க போவேன்? எங்க வீட்டுக்கு தான்”
“அங்க எதுக்கு டா?”
“அங்க தானே என் மனைவி இருக்குறா? அப்படின்னா நான் அங்க தான் இருக்கணும்”
“யுவன்”
“அம்மா, இப்ப உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? அவளையும் இங்க வரக் கூடாதுன்னு சொல்றீங்க? நானும் போக கூடாதுன்னு சொல்றீங்க? அப்படின்னா என்ன தான் பண்ணுறது?”
“நீ என் மகன். அப்படின்னா நீ நம்ம வீட்ல தான் இருக்கணும்”
“அப்ப என் பொண்டாட்டி?”
“அவ இங்க வரக் கூடாது. நான் உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”
“அம்மா, வார்த்தையை அளந்து பேசுங்க. நீங்க எனக்கு மட்டும் இப்படி கெட்டது நினைப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. நீங்களா இப்படி?”
“நான் உனக்கு கெட்டது நினைப்பேனா யுவன்?”
“கெட்டது தான் நினைக்கிறீங்க? உங்க மத்த பிள்ளைங்க எல்லாம் குடும்பத்தோட வாழனும். நான் மட்டும் அநாதையா தெருவுல நிக்கணும். இது தானே உங்க எண்ணம்? நான் உங்க பிள்ளை தானா?”
“என்ன வார்த்தை பேசுற யுவன்?”
“அண்ணனுக்கு வெளியூர்ல வேலை கிடைச்சப்ப அண்ணி கொஞ்ச நாள் நம்ம வீட்ல தனியா தான் இருந்தாங்க. நீங்க உடனே அண்ணன் கிட்ட சொல்லி வீடு பாக்கச் சொல்லி அண்ணியை அண்ணன் கூட அனுப்பி வச்சீங்க? ஆனா நான் மட்டும் என் யுக்தாவை பிரிஞ்சு இருக்கணுமா?”
“நான் அப்படி நினைப்பேனா யுவன்? எனக்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணு தான் யுவன்”
“உங்களுக்கும் உங்க மத்த பிள்ளைங்க தான் முக்கியம். என்னை விட்டுடுங்க. உங்க மத்த பிள்ளைங்க என்னமோ என்னாலயும் யுக்தாவாலயும் தான் அவங்க புகுந்த வீட்ல அவங்களுக்கு கெட்ட பேர் வந்துருக்குறதா சொல்றாங்க? இனி அந்த கெட்ட பேர் வராது. நான் இந்த குடும்பத்துல இருந்தும் உங்க எல்லாரையும் விட்டும் விலகிக்கிறேன்”
“இதெல்லாம் அவ சொல்லிக் கொடுத்து தானே பேசுற? கடைசில நான் நினைச்ச மாதிரியே என் பிள்ளையை என் கிட்ட இருந்து பிரிச்சிட்டாளே படுபாவி”
“பாத்தீங்களாப்பா, நான் இப்படி தான் இவங்க சொல்வாங்கன்னு சொன்னேன் தானே? இவங்க மாற மாட்டாங்க பா. நான் போறேன். உங்களுக்கு என்னை பாக்கணும்னு தோணுச்சுன்னா பாக்க வாங்க”
“சரிப்பா”, என்று ஈஸ்வரன் சொல்ல “யுவன் நீ போகக் கூடாது. நீ என்னை விட்டு பிரிஞ்சா அதுக்கு காரணமான அந்த யுக்தாவை நான் மன்னிக்கவே மாட்டேன்”, என்றாள் சுந்தரி.
“நான் அங்க நிரந்தரமா போகப் போறது அவளுக்கே தெரியாது. அவளே என்னை அங்க இருக்க கூடாதுன்னு தான் சொன்னா தெரியுமா?”
“எனக்கு எந்த வெக்கமும் இல்லைன்னே வச்சிக்கோங்க. ஆனா எனக்கு என் பொண்டாட்டி பிள்ளை முக்கியம்”, என்று யுவன் சொன்னதும் “என்னப்பா சொல்ற?”, என்று கேட்டார் ஈஸ்வரன்.
“ஆமாப்பா, என் குழந்தை யுக்தா வயித்துல வளருது. நான் இல்லைன்னா அவ சந்தோஷமா இருக்க மாட்டா. என் குழந்தை நல்ல படியா வளரணும்னா நான் அவ கூட இருக்கணும். பிடிவாதம் பிடிச்சு அவளை இங்க கூட்டிட்டு வந்தா உங்க மனைவியே எங்க குழந்தையை கொன்னுருவாங்க. நான் கிளம்புறேன் பா”, என்று சொல்லி விட்டு அவன் அறைக்குச் செல்ல அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் சுந்தரி.
“நான் அவன் குழந்தையை கொன்னுருவேனா? என்ன வார்த்தை சொல்லிட்டான்?”, என்று அவள் துடித்துக் கொண்டிருக்க “பெத்த பிள்ளை கிட்ட இருந்து ரொம்ப நல்ல பேர் வாங்கிட்ட சுந்தரி. இப்ப உனக்கு நிம்மதியா இருக்கா? எல்லாரும் நல்லவங்க, எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற மகன் வாயால அவன் குழந்தையை கொல்லப் போற கொலைக்காரின்னு பேர் வாங்கிருக்க? சூப்பர். இப்ப அவன் வீட்டை விட்டு கிளம்பிட்டான். பேசி பேசிய மருமகளை விரட்டின. இப்ப மகன். அடுத்து என்னையும் அனுப்பிரு. அதுக்கப்புறம் நீயும் உன் மத்த பிள்ளைங்களும் சந்தோஷமா இருங்க”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குச் சென்று விட்டார் ஈஸ்வரன்.
அம்மாவிடம் அப்படி பேசி விட்டு அறைக்குள் வந்த யுவனுக்கு மனதுக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனாலும் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு தானே?
“என் கூட பிறந்தவங்களை விட நான் எந்த விதத்தில் குறைஞ்சு போயிட்டேன்? சும்மா எப்ப பாத்தாலும் எல்லாருக்கும் நானும் என் மனைவியும் தான் இளக்காராம்? இதுக்கெல்லாம் காரணம் அம்மா தான். அவங்க மத்த பிள்ளைங்க எல்லாம் எங்களைத் திட்டும் போது அம்மா ஏதாவது அவங்களைத் திட்டிருந்தா இந்த நிலைமை வந்துருக்குமா? ஆனா அவங்க கூட சேந்து அம்மாவும் தானே எங்களைத் திட்டினாங்க? அப்ப அம்மாவுக்கும் எங்களைப் பிடிக்கலைல? கொஞ்ச நாள் விலகி இருந்தா தான் எங்க அருமை புரியும்”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய பொருள்களை எடுத்து வைத்தான்.
அவன் பையை தூக்கிக் கொண்டு கீழே வரும் போது சுந்தரியும் ஈஸ்வரனும் அமர்ந்திருந்தார்கள்.
“சரிப்பா, நான் கிளம்புறேன்”, என்று ஈஸ்வரனிடம் சொன்ன யுவன் சுந்தரியின் முகத்தைக் கூட பார்க்காமல் சென்று விட்டான்.