விக்கித்துப் போய் அமர்ந்திருந்த சுந்தரி சிறிது நேரத்தில் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். தெரிந்தே தவறு செய்து விட்டு இப்படி அழும் அவளை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து சென்றார் ஈஸ்வரன்.
யுவன் புது வீட்டுக்குச் சென்றதும் சமையல் பொருள்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள் தாமரை. பேகுடன் வந்த யுவனைக் கண்டதும் தான் தாமரைக்கு நிம்மதியாக இருந்தது.
“வாங்க மாப்பிள்ளை, இப்ப தான் நிம்மதியா இருக்கு”
“ரெண்டு பேரும் தனித் தனியா இருந்தா ரெண்டு பேருமே நல்லா இருக்க மாட்டோம் அத்தை. அதான் வந்துட்டேன். சரி அவ எங்க?”
“ஜூஸ் குடிச்சீட்டு இப்ப தான் மாடி ரூமுக்கு போனா”
“சரி நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு மாடிக்குச் சென்றவன் முதலில் அவள் அறைக்கு தான் சென்றான்.
அவனைக் கண்டதும் அவள் கண்கள் அவனையே வெறிக்க “உனக்காக ஒண்ணும் நான் இங்க வரலை. ரெண்டு பேரும் தனித் தனியா இருந்தா ஊர் உலகம் தப்பா பேசும். அதனால தான் இங்க வந்தேன். இனி இங்க தான் இருப்பேன். எதிர் ரூம் தான் இனி என்னோட ரூம்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். யுக்தா உதடுகளில் அழகான புன்னகை ஒன்று உதயமானது.
பழைய நினைவுகளை எண்ணிப் பார்த்தாள். அறைக்குள் சென்ற யுவனும் வெறும் தரையில் துண்டை விரித்துப் படுத்தான். அவனுக்கும் பழைய நினைவுகள் மனதில் அணிவகுத்தது.
பத்து வருடங்களுக்கு முன்பு “பாப்பா, இன்னைக்கு தானே முதல் நாள் காலேஜ் போற? எழுந்திரு”, என்று சொன்னாள் தாமரை.
“அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே?”, என்று சிணுங்கினாள் யுக்தா.
சிறு குழந்தை போல் நடந்து கொள்ளும் மகளை நினைக்கையில் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.
தாமரை வாழ்க்கை மட்டும் பாழாகவில்லை. அவளுடைய ஒரு செல்ல மகளின் வாழ்க்கையும் அல்லவா பாழாகி விட்டது. தாமரை வசதியான குடும்பத்தில் பிறந்தவள். அவள் போறாத காலம் அவளுடைய வீட்டில் டிரைவர் வேலை பார்த்த செல்வத்தின் மீது காதல் கொண்டாள்.
ஆனால் அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்ளாததால் இவர்களே திருமணம் செய்து கொண்டனர்.
தாலி காட்டிய அடுத்த நொடி தாமரையின் வாழ்வு தலைகீழாக ஆனது. செல்வ சீமாட்டியாக வாழ்ந்த தாமரை முதல் முறையாக செல்வத்தின் குடிசை வீட்டுக்கு போனாள். அவன் குடும்பம் ரொம்ப ஏழ்மையானது. ஏழ்மையானது என்று சொல்வதை விட தவறான குடும்பம் என்றும் சொல்லலாம்.
செல்வத்தின் அம்மா அப்பா இருவரும் கஞ்சா விற்று ஜெயிலில் இருக்கிறார்கள் என்றும் அவனது தங்கை எவனுடனோ தவறு செய்து அவன் குழந்தைக்கு தாயாகி குழந்தையை ஏதோ ஒரு அநாதை ஆஸ்ரமத்தின் விட்டுவிட்டு எங்கேயோ ஓடி விட்டாள் என்றும் அவனது தம்பி பெண் பிள்ளைகளை கடத்தி விற்ற குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறான் என்றும் கேள்விப் பட்டு நொந்து போனாள்.
ஆனாலும் செல்வம் அப்படி இல்லை என்று மனதை ஆறுதல் படுத்தியவளின் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது அவன் செய்கை.
அன்றைய முதல் இரவில் அவன் காதலையையும் காட்ட வில்லை, மென்மையையும் காட்ட வில்லை. மிருகம் போல நடந்து கொண்டவனின் மீதான காதல் அன்றே அவளுக்குள் மடிந்தது.
அடுத்து வந்த நாட்களில் அவனுடைய உண்மையான சுயரூபம் தெரிய வந்தது. அதில் முக்கியமான ஒன்று அவனது குடிப்பழக்கம். தினமும் வீட்டுக்கு குடித்து விட்டு வந்து தாமரைக்கு ஒரே அடி உதை தான்.
“என் குடும்பம் பணம் இல்லாம சீரழிஞ்சு போச்சு. அதான் உன்னைக் கரெக்ட் பண்ணி பணக்கார குடும்பத்துல செட்டில் ஆகிறலாம்னு பாத்தா உன் அப்பன் ஒண்ணும் தராம துரத்தி விட்டுட்டான்”, என்று சொல்லி சொல்லி அவளை அடித்தான்.
இதுவே அவளுக்கு தொடர்கதையானது. சரியாக முதல் வருட திருமண நாள் வரும் போது அவளுக்கு யுக்தா பிறந்தாள்.
குழந்தை பிறந்த பிறகு கூட செல்வம் மாறவே இல்லை. பெண் குழந்தையை அவன் ஏறெடுத்தும் பார்க்க வில்லை. மற்றவர்கள் மூலம் மகள் படும் கஷ்டத்தைக் கேட்ட அவளது தந்தை தாமரையின் குழந்தை யுக்தா பெயரில் சொத்துக்களை எல்லாம் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார்.
அதன் பின் அனைத்தும் மாறியது. சின்ன வீட்டில் இருந்து தாமரையின் பெரிய பங்களாவுக்கு வந்தார்கள். செல்வம் சந்தோசத்தில் மிதந்தான். அளவுக்கு அதிகமான பணம் அவன் போக்கை மாற்றியது. ஆனாலும் அவனால் எந்த சொத்தையும் விற்க முடியவில்லை.
அதனால் கம்பெனிகளை பொறுப்பாக பார்த்துக் கொண்டான். சொத்தை தானே விற்க முடியாது. அதில் வரும் லாபத்தை அனுபவிக்கலாம் என்று எண்ணி முழு மூச்சாக உழைத்தான். அதே நேரம் உல்லாசமாகவும் இருந்தான்.
தாமரையோ தான் உண்டு தன்னுடைய குழந்தை உண்டு என்று இருந்தாள். கணவனின் போக்கும் புரிந்தது. அவன் வேறு பெண்களிடம் போய் விட்டு வருகிறான் என்று அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அடுத்து வந்த நாட்களில் ஒரே பெண்ணிடம் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு வரவும் அவள் தான் செல்வத்தின் இரண்டாவது மனைவி என்று புரிந்து கொண்டாள். தெரிந்த மற்றவர்களும் அவள் காதில் போட்டார்கள். ஆனால் தாமரை எதற்கு இப்படி செய்கிறாய் என்று ஒரு வார்த்தை கூட இது நாள் வரை கேட்டதில்லை.
கேட்டாலும் நான் அப்படித் தான் இருப்பேன் என்ற பதில் தான் வரும் என்று எண்ணி ஊமையாகிப் போனாள். சில நாள் கணவனாக தன்னைத் தொடும் போது அவள் முகம் அருவருப்பில் சுழிக்கும். இதுவே தொடர்கதையாக செல்வம் ஒரெடியாக தாமரையை விட்டு விலகினார். அது தாமரைக்கு சுதந்திரமாக தான் இருந்தது.
கணவனைப் பற்றி மகளிடம் மூச்சு கூட விட வில்லை. ஆனால் வளர வளர யுக்தாவுக்கு தந்தையின் கொடூர குணம் புரிய ஆரம்பித்தது. தாயை அடித்து உதைக்கும் செல்வத்தின் மீது அதிகமான பயம் வந்தது. அவருக்கு வேறு தொடர்பு இருக்கிறது என்று யுக்தாவுக்கு தெரியாது. ஆனால் அவர் தண்ணி அடித்து விட்டு அன்னையை அடிக்கிறார் என்று மட்டும் புரிந்தது. குழந்தையான அவளால் தட்டிக் கேட்கவும் முடிய வில்லை.
வளர வளர யுக்தா என்ன தப்பு செய்தாலும் தாமரைக்கு தான் அடி விழும் என்பதால் யுக்தா பள்ளியில் கூட யாரிடமும் பேச மாட்டாள்.
அவளுடைய பிள்ளை குணம் எல்லாம் காணாமல் போய் ஒரு வித இறுக்கத்திலே வளர ஆரம்பித்தாள்.
செல்வம் வந்தாலே எங்காவது சென்று ஒழிந்து கொள்ளும் அளவுக்கு ராட்சசனாக இருந்தார். பள்ளியில் படிக்கும் போது யாராவது வந்து அவளிடம் விரும்புகிறேன் என்று சொன்னால் போதும், எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கூட எண்ணாது அழ ஆரம்பித்து விடுவாள். அதற்கு பயந்தே யாரும் அவளிடம் நெருங்க வில்லை.
அவளுக்கோ தன்னிடம் யாராவது வந்து பேசினால் அப்பாவுக்கு தெரிந்து அம்மாவை அடிப்பாரோ என்ற பயம்.
அன்று முதல் நாள் காலேஜ் என்பதால் பயத்துடன் அந்த கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்தாள் யுக்தா. தன்னுடைய அகன்ற விழிகளை அங்கே இங்கே சுழற்றி ஒரு பார்வை பார்த்தாள்.
“பயமா இருக்கா டா?”, என்று கேட்டாள் அவளை கல்லூரியில் விட வந்த தாமரை.
“ஆமா மா”, என்று மறைக்காமல் உண்மையைச் சொல்லும் மகளை கனிவுடன் பார்த்தாள் தாமரை.
“உனக்கு தைரியம் வரணும்னு தான் உங்க அப்பா பேச்சையும் மீறி ஆண்கள் பெண்கள் படிக்கும் காலேஜில் சேத்துருக்கேன். உன்னோட பயத்தை விட்டுட்டு சகஜமா இருக்கணும் பாப்பா”
“சரி மா, நான் என்னை மாத்திக்கிறேன். நீ வீட்டுக்கு போ மா”