அவர்களுக்கு என்று வாங்கி வந்ததைக் கொடுத்தான். ஈஸ்வரனும் சுஜியும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்கள். சுந்தரியோ “இந்த கலர்க்கு பதிலா வேற வாங்கிட்டு வந்துருக்கலாம். அப்புறம் வெண்மதிக்கு வாங்கிட்டு வரலையா யுவன்?”-, என்று கேட்டு அவன் இல்லை என்றதும் ஒரு மூச்சு கத்தி தீர்த்தாள்.
அன்னையின் பேச்சை அவன் கருத்தில் கொள்ளவே இல்லை. அடுத்த நாள் அவன் மீண்டும் காலேஜ் சென்ற போது அங்கே அவனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அவனைக் கண்டு யுக்தா முகம் மலர்ந்தது தான் அவனுக்கு பெரியதாக இருந்தது. அருகில் யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் ஓடி வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள். அவளுடைய தேடல் அவனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் மன அமைதியைக் கொடுத்தது.
கூடவே அவளது மெலிவும் அவனை வருத்தியது. அது அவனால் தான் என்று அவனுக்கே தெரியும். அவள் சரியாக உண்பதில்லை என்று தாமரை தான் அடிக்கடி போனில் சொல்லிக் கொண்டிருந்தாளே.
“நாம இல்லாம போனா இவ என்ன ஆவா?”, என்ற மிகப் பெரிய கேள்வி அந்த நொடி அவனிடம் எழுந்தது. ஆனால் அதற்கு விடை தான் இல்லை. அவனுக்கே தெரியும், காலம் முழுக்க அவனால் அவளுடன் இருக்க முடியாது என்று. அதற்கான விடையை மட்டும் யோசிக்க பயந்தான். அதற்கு பின் வந்த நேரம் முழுவதும் பிரின்சிபால், ஸ்டாப் அவனிடம் வந்து பேசுவதிலே கழிந்தது.
அன்று மாலை தான் அவளுக்கு என்று வாங்கி வந்ததை பொருள்களைக் கொடுத்தான். அவன் வாங்கி வந்தது சாதாரணப் பொருள்கள் தான். ஆனால் குழந்தையின் குதூகலத்தோடு அதைப் பெற்றுக் கொண்டாள் யுக்தா. அவள் சந்தோஷம் அவனையும் தொற்றிக் கொண்டது.
அடுத்து வந்த நாட்களில் அவன் செய்த சாதனை எல்லா இடத்திலும் பேசப் பட்டது. இளம் அறிவியளாளர் என்ற தலைப்பில் அவனைப் பற்றிய செய்தி இடம் பெற்றிருந்தது.
அவன் செய்த புராஜெக்ட் உலக அளவில் பேசப் பட்டு வெற்றி அடைந்தது. பல விருதுகள் அவனுக்கு கிடைத்தது. விருதை வாங்கி வந்து யுக்தாவிடம் காட்டினால் சந்தோஷமாக அதை வாங்கிப் பார்ப்பவள் “ரொம்ப சந்தோஸமா இருக்கு யுவன். இந்த மெடல் ரொம்ப அழகா இருக்குல்ல? அதுவும் உன் கழுத்துல ரொம்ப அழகா இருக்கு”, என்று சொல்லி விட்டு அடுத்த வார்த்தையாக “நாளைக்காவது என் கூட இருப்பியா? எனக்கே உன் கூட லேப்ல வச்சு தான் பேச முடியுது? ஆனா நீ லேப்க்கே வர மாட்டிக்க? அங்க இங்கன்னு போய்ற”, என்று முகத்தை சுளித்தாள். அவளுக்கு அவன் வாங்கிக் குவிக்கும் விருதுகளை விட அவன் அவளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பெரியதாக இருந்தது. அதை அவன் புரிந்து கொண்டானா என்பது அவனுக்கே வெளிச்சம்.
ஒரு வழியாக அவர்கள் கல்லூரிப் படிப்பும் முடிந்தது. சரவணனும் வெண்மதியை அவனுடனே அழைத்துச் சென்று விட்டான். சுஜியும் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்தாள்.
வெண்மதி வீட்டில் இருந்து சென்றதால் இப்போது யுவன் தன்னுடைய அறையை கீழே மாற்றிக் கொண்டான். கல்லூரி முடிந்ததால் யுக்தாவைப் பார்க்க முடியாமல் போனாலும் அவளிடம் பேசுவான். யுக்தாவும் தினமும் தாமரையின் போனில் அவனுடன் பேசுவாள். அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
அப்படி இருக்க ஒரு நாள் “யுக்தா இங்க வா”, என்று அழைத்தார் செல்வம். யுக்தாவுக்கு அவர் மேல் முன்பிருந்தது போல பயம் இல்லாமல் போனாலும் பயத்தின் எச்சம் கொஞ்சம் இருக்க தான் செய்தது. அதனால் தாமரையின் கையைப் பற்றிய படி அவர் எதிரில் வந்து நின்றாள். தாமரைக்கும் அவர் திடீரென இப்படி அழைத்தது குழப்பமே. “கடவுளே மனுஷன் இத்தனை நாள் அமைதியா தானே இருந்தார்? இப்ப என்ன பிரச்சனையை இழுக்கப் போறாரோ?”, என்று பதறினாள்.
“நாளைல இருந்து நீ ஆபீஸ் வரணும். எல்லாப் பொறுப்பையும் நீ தான் எடுத்துக்கணும்”, என்று செல்வம் சொன்னதும் அவர் ஏதோ புரியாத பாஷை பேசுவது போல குழப்பமாக தாமரையைப் பார்த்தாள் யுக்தா,
தாமரையோ புருவம் நெரிய செல்வத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். கணவன் ஏதோ திட்டம் போட்டு விட்டார் என்றும் அது யுக்தாவுக்கு நல்லதில்லை என்றும் அவள் உள்மனது சொல்லியது.
யுக்தா கொஞ்சம் குழந்தை மாதிரி. ஏதாவது கற்றுக் கொடுத்தால் கற்றுக் கொள்வாள் என்றாலும் இப்போது அவள் தலையில் அலுவலகப் பொறுப்பை வைப்பது குருவி மேல் பனம்பழத்தை வைப்பது போன்றது தான். யுக்தா பொறுப்பை எடுத்தால் அவளை ஏமாற்றி செல்வம் என்ன எல்லாம் செய்யக் கூடும் என்று தாமரையின் மூளை வேகமாக கணக்கிட்டது.
பின் தீர்க்கமாக கணவரைப் பார்த்த தாமரை “என்ன சொல்றீங்க நீங்க? அவ ஒரு குழந்தை. அவளால எப்படி பிஸ்னஸ் பாத்துக்க முடியும்? உங்களுக்கு பாத்துக்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க. நான் ஆபீஸ் வரேன்”, என்றாள்.
“என்ன படிச்ச திமிரா? உன் வேலை எதுவோ அதை மட்டும் பாத்தாப் போதும். இந்த சொத்தெல்லாம் யுக்தா பேர்ல தான் இருக்கு. நாளைக்கு அவ தான் பொறுப்பை பாத்துக்கணும். அது இப்ப இருந்தே ஆரம்பிக்கட்டும். டிகிரி முடிச்சிட்டாள்ல? அப்புறம் என்ன?”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டார் செல்வம்.
“நம்ம ஆபீஸ் எங்க மா இருக்கு? அங்க போய் என்ன செய்யணும்? அங்க யுவன் வருவானா?”, என்று கேட்டாள் யுக்தா.
‘”கடவுளே இந்த வெகுளிப் பொண்ணு, இதுல கையெழுத்து போடுன்னு அழுத்திச் சொன்னாலே கையெழுத்தைப் போட்டுருவாளே? அங்கே இவளுக்கு காவலா யாரு போக முடியும்?”, என்று யோசனையாக இருந்தது தாமரைக்கு.
அதே நேரம் “டேய் யுவன் உனக்கு போன். யாரோ இங்க்லிஷ்ல பேசுறாங்க டா”, என்று அழைத்தாள் சுந்தரி.
அதை வாங்கிப் பேசினான் யுவன். அவன் ஏற்கனவே செய்த புராஜெக்ட் வெற்றி அடைந்ததால் அவனுக்கு வேலை வாய்ப்பு தேடி வந்திருந்தது. அதுவும் ரிசெர்ச் துறையில் பணியில் சேர வேண்டும் என்றும் மேற்படிப்புக்கும் அவர்களே வழி செய்வார்கள் என்றும் அவனுடைய மூளை அவர்களின் கம்பெனிக்கு தேவை எனவும் முடிவை ஒரு மாத காலத்துக்குள் அவன் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்கள்.
பாரினில் வேலை என்பது அவனது கனவு. அப்படி இருக்கையில் இந்த வாய்ப்பு வரவும் அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
வீட்டில் உள்ள அனைவரிடமும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப் படுத்தினான். சுந்தரியோ மகன் வெளி நாடு செல்கிறான் என்று வாயெல்லாம் பல்லாகிப் போனாள்.
யுவன் வெளிநாடு செல்வது என்று தீர்மானம் செய்து விட்டான். அது வரை அவனுக்கு யுக்தா நினைவு வரவில்லை. ஆனால் யுக்தா நினைவு வந்ததும் இது வரை அவனுக்கு இருந்த சந்தோஷம் அனைத்தும் அவனிடம் இருந்து சென்று விட்டது.
இந்த விஷயத்தை யுக்தாவுக்கு சொல்லலாம் என்று எண்ணிய யுவன் அவளுக்கு அழைக்க எண்ணினான். பின் செல்வம் வீட்டில் இருந்தால் பிரச்சனை என்பதால் அவளே அழைப்பாள் என்று எண்ணி பொறுமை காத்தான்.
ஆனால் யுக்தாவோ மனக் குழப்பத்தில் இருந்தாள். எப்படி இருந்தாலும் அலுவலகத்தை அவள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவளுக்கே புரிந்து தான் இருந்தது. அதனால் செல்வம் சொன்னது அவளைப் பொறுத்த வரைக்கும் சரியே.
ஆனால் அவள் மனக் குழப்பம் ஆபீஸ் சென்று தன்னால் என்ன செய்ய முடியும் என்பதே. ஆனால் தாமரையோ நிம்மதி இல்லாமல் உலாவினாள். யுக்தா அலுவலகம் சென்றால் அவள் சொத்தை எல்லாம் செல்வம் அவர் பெயருக்கு மாற்றிக் கொள்வார் என்பது நிச்சயம். அதன் பின் தனக்கும் மகளுக்கும் என்ன நிலை வரும் என்று எண்ணி தாமரைக்கு கலக்கமாக இருந்தது.
எல்லாம் கை விட்டு போன பிறகு கோர்ட் கேஸ் என்று அலைவதும் பிரச்சனை தான். அதற்கு முன்னரே அதை தடுத்து நிறுத்த முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்ததால் தாமரையின் நினைவு யுவனைப் பற்றி செல்ல வில்லை.
சரியாக செல்வம் வெளியே கிளம்பியதும் “அம்மா யுவனுக்கு பேசுவோமா?”, என்று வந்து நின்றாள் மகள்.
“சரி டா பேசு. நீ பேசிட்டு அம்மா கிட்ட கொடு. நானும் யுவன் கிட்ட பேசணும்”, என்று சொல்லி அங்கிருந்து எழுந்து சென்றாள் தாமரை.
யுக்தா அழைக்கும் போது யுவன் மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அடுத்த இட்லியை எடுக்கப் போனவன் அழைப்பது யுக்தா என்றதும் “எனக்கு போதும் மா”, என்று சொல்லி விட்டு போனுடன் அங்கிருந்து சென்று விட்டான்.
“பண்ணிட்டாளா அந்த பைத்தியக்காரி. அவ போன் வந்ததும் ஒழுங்கா சாப்பிடாம போறான் பாருங்க. எனக்கு இவனை நினைச்சா தான் எரிச்சலா வருது”, என்றாள் சுந்தரி.
“அது என்ன பைத்தியக்காரி அது இதுன்னு பேசிட்டு இருக்க? நம்ம அவளைப் பாக்குறோம் தானே? அவ ரொம்ப பாவம். இன்னொரு தடவை அந்த பொண்ணை இப்படி சொல்லாத சுந்தரி. அதுவும் உன் மகன் முன்னாடி சொல்லிறாத”, என்றார் ஈஸ்வரன்.
“எனக்கும் பாவமா தாங்க இருந்துச்சு. அதுவும் அந்த பொண்ணுக்கு அடி பட்டிருக்கும் போது என் கூட வச்சி பாத்துக்கணும்னு கூட ஆசைப் பட்டேன். என்ன பண்டம் செஞ்சாலும் என் பொண்ணு மாதிரி அவளுக்கும் கொடுத்து தானே விட்டேன்?”
“அப்புறம் ஏன் இப்படி மாறின?”
“எல்லாம் இவனால தான். பிரண்டுன்னா ஒரு அளவு இருக்கணும்ல? ஏதோ கட்டின பொண்டாட்டி மாதிரி அவளைத் தாங்குறான். அதான் எனக்கு பிடிக்கலை. நல்லதா போச்சு லவ் பண்ணலைன்னு சொல்லிட்டான். இல்லைன்னா எனக்கு பி.பி ஏறிருக்கும்”
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இயல்போட இருப்பாங்க சுந்தரி. அவளுக்கும் திறமை இருக்கும். அவ ஏதாவது ஒரு ஃபீல்ட்ல பெரிய ஆளா வருவா பாரு. அப்ப பைத்தியக்காரின்னு சொன்ன நீ, உன் மத்த பிள்ளைங்க எல்லாம் வாயைப் பிளந்துட்டு பாப்பீங்க”
“போதும் அவ புராணம். பேசாம சாப்பிடுங்க”, என்று சுந்தரி சொன்னதும் அவர் வாயை மூடிக் கொண்டார்.
இங்கே தங்களைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் போனில் பேச ஆரம்பித்தார்கள் யுக்தாவும் யுவனும்.
“அம்மு உங்க அப்பா கிளம்பிட்டாரா, என்ன டா இன்னும் போனே வரலையேன்னு நினைச்சேன்”, என்றான் யுவன்.
“இப்ப தான் போனார். சரி நீ சாப்பிட்டியா யுவன்? என்ன சாப்பிட்ட? எவ்வளவு சாப்பிட்ட?”
“எப்படி டி கேள்வி கேட்டா கேட்டுட்டே இருக்க? நாலு இட்லி சாப்பிட்டேன் போதுமா? சரி நீ என்ன சாப்பிட்ட?”
“அம்மா இப்ப தான் தோசை சுடுறாங்க. அப்புறம் நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“நாளைக்கே முடியாது யுக்தா. நான் போகவே கொஞ்ச நாள் ஆகும். அப்புறம் அங்க போயிட்டு நீயும் ஆண்ட்டியும் தங்க இடம் எல்லாம் பாத்துட்டு உங்களை அழைச்சிட்டு போறேன்”
“எல்லாரும் சொல்ற மாதிரி நீயும் என்னை லூசுன்னு நினைச்சு ஏமாத்துறியா யுவன்? போ, அங்க போயிட்டா நீ என்னை மறந்துருவ. நான் உன் கூட பேச மாட்டேன். அம்மா உன் கிட்ட பேசணும்னு சொன்னாங்க”, என்று கோபமாக சொல்லி விட்டு தாமரையிடம் போனை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றாள் யுக்தா. மகளின் கோபத்தை வியப்பாக பார்த்த தாமரை பின் “எப்படி இருக்க யுவன்?”, என்று கேட்டாள்.
“அவ உன் கிட்ட தான் இந்த உணர்வுகளை எல்லாம் வெளிப் படுத்துறா? அதனால அவ கோபம் கூட சந்தோசமாவும் அழகாவும் இருக்கு யுவன். சரி எதுக்கு அவளுக்கு கோபம்?”
“அது ஒரு விசயம் சொன்னேன் ஆண்ட்டி. அதான் கோப பட்டுட்டா. நீங்களும் ஏதோ பேசணும்னு சொன்னீங்களாம்”
“ஆமா பா. இவ்வளவு நாள் அமைதியா இருந்த யுக்தாவோட அப்பா இப்ப புது பிரச்சனையை ஆரம்பிக்கிறார்”
“என்ன ஆச்சு ஆண்ட்டி?”
“நாளைல இருந்து அவளை ஆஃபிஸ்க்கு கூட்டிட்டு போறாராம். எல்லா பொறுப்பையும் அவ தான் ஏத்துக்கணுமாம்”
“இது நல்ல விஷயம் தான். ஆனா மனதளவில யுக்தா அதுக்கு தயாரா ஆகலை ஆண்ட்டி. ஒரு கம்பெனி பொறுப்பை ஏத்துக்குற அளவுக்கு அவ பக்குவத்துல இல்லை”
“அவ கம்பெனி பொறுப்பை ஏத்துக்கணும்னு அவரோட நோக்கமா இருக்காது யுவன். இங்க வச்சு அவரால யுக்தா கிட்ட கையெழுத்து வாங்க முடியலை. ஆனா கம்பெனில அவ நிறைய கையெழுத்து போட வேண்டியது இருக்கும். அப்ப அவளை ஏமாத்தி சைன் வாங்கிருவார்”
“ஆமா ஆண்ட்டி. அதுக்கு தான் இப்படி பண்ணுறார். இப்ப என்ன பண்ணுறது?”
“நம்பிக்கையா ஒரு ஆளை அவ கூட இருக்க வைக்கணும். அவளுக்குன்னு இருக்குறது நீயும் நானும் மட்டும் தான். என்னை ஆபீஸ் பக்கமே வரக் கூடாதுன்னு முன்னாயே சொல்லிட்டார். அதான் என்ன பண்ண தெரியலை”, என்று தாமரை சொன்னதும் ஒரு நொடி யோசித்தவன் “கவலைப்படாதீங்க ஆண்ட்டி. நான் யுக்தா கூட இருப்பேன்”, என்றான் .
“யுவன்”, என்று அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் வெளியே வந்தது தாமரையின் குரல்.
“ஆமா ஆண்ட்டி. நான் அவ கூட ஆபீஸ் போறேன். நான் முன்னாடி சொன்ன மாதிரி கடைசி வரை அவளுக்கு துணையா இருப்பேன்”
“ரொம்ப நன்றி பா. ஆமா நீ என்னமோ சொல்ல வந்தியே? இவ எதுக்கு கோப பட்டா?’
“அது… அது ஒண்ணும் இல்லை . அவ கிட்ட போய் யுவன் பாரின் போகலையாம். உன் கூட தான் இருப்பானாம்னு சொல்லுங்க. அவ கோபம் ஓடிரும்”
“யுவன், நீ பாரின் போக முடிவு செஞ்சிருந்தியா?”
“படிப்பு கூட வேலையும் சேந்து ஆபர் வந்துருக்கு. ஆண்ட்டி. ஆனா யுக்தா எதிர்காலம் எனக்கு முக்கியம். நான் அதனால அங்க போகலை”
“ஆனா உன்னை நினைச்சு உங்க வீட்ல ரொம்ப கனவு கண்டிருப்பாங்க”
“வீட்ல நான் பேசிக்கிறேன். அவங்க புரிஞ்சிப்பாங்க ஆண்ட்டி. சரி நான் அப்புறம் பேசுறேன். நாளைக்கு யுக்தாவுக்கு முன்னாடி உங்க ஆஃபிஸ்ல நான் நிப்பேன். யுக்தா கிட்ட மட்டும் நாளைக்கு ஆபீஸ் வந்ததும் யுவனை வேலைக்குச் சேத்தா தான் நானும் பொறுப்பை எடுத்துக்குவேன்னு அவ அப்பா கிட்ட நாளைக்கு சொல்லணும்னு சொல்லிக் கொடுங்க”
“சரிப்பா”, என்று சொல்லி போனை வைத்தாள் தாமரை.
அன்று முழுவதும் நிம்மதியில்லாமல் அலைந்தான் யுவன். அடுத்த நாள் என்ன நடக்கும் என்று பயம், யுக்தா அப்பா தன்னை அவள் அருகே இருக்க விடுவாரா என்ற பயம், பாரின் போக வில்லை என்றால் தன்னுடைய வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற பயம் என அனைத்து யோசனைகளும் அவனை பாதித்தது.