தூத்துக்குடி மாவட்டத்தில். கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு ஊர் தான் புதூர். அந்த ஊரில் அழகாக வீற்றிருந்தது ஒரு பெரிய ஆலமரம். அந்த மாலை வேளையில் அனைவருக்கும் தேவைக்கு அதிகமான தென்றலையும் குளுமையையும் தந்து கொண்டிருந்ததால் ஊர் மக்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தார்கள். அதை ஒட்டி இருந்த குளத்தில் இருந்த ஈரப் பதம் அனைவர் மனதையும் அமைதி படுத்திக் கொண்டிருந்தது.
அங்கே இருந்த அனைவருக்கும் நடு நாயகமாக வீற்றிருந்தார் சிதம்பரம். அவர் தான் அந்த ஊரின் தலைவர். அவர் தலைமையில் தான் இந்த கூட்டம் கூடியிருந்தது. சிதம்பரம் அந்த ஊரில் செல்வாக்கானவர். ஒரு வருடம் முன்பு ஏற்கனவே இருந்த ஊர்த் தலைவர் நோயின் காரணமாக இறந்து விட ஊர் மக்களால் ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
சிதம்பரத்தின் மனைவி பெயர் பாமா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் இன்பா என்கின்ற இன்பநாதன். அவனுக்கு அடுத்து பிறந்தவள் இளவரசி. பெயர் மட்டுமல்ல. அந்த வீட்டுக்கும் அவள் இளவரசி தான்.
இன்பா, இப்போது அந்த ஊரின் கிராம அலுவலராக இருக்கிறான். அவனுக்கு வயது இருபத்தி எட்டு. கிராமத்துக்கே உரிய தோரணையும் கம்பீரமும் ஒருங்கே கொண்டவன். கோதுமை நிறத்தில் அலையலையான சிகையும் அடர்த்தியான மீசையும் என அழகாக இருந்தான்.
சிதம்பரத்தின் தாய் தந்தையான பார்வதியும் சண்முகநாதனும் அவர்களுடன் தான் வசிக்கிறார்கள். அந்த வீட்டில் இன்னொரு ஆளும் உண்டு. அவன் கதிர்.
கதிர் வேறு யாரும் அல்ல. சிதம்பரத்தின் தங்கையின் மகன் தான். கதிரின் அம்மா பாக்கியமும் சிதம்பரமும் ஒன்றாக பிறந்தவர்கள். அது போல கதிரின் தந்தை சுந்தரமும் பாமாவும் ஒன்றாக பிறந்தவர்கள்.
கடைசி வரை சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று பெண் எடுத்து பெண் கொடுத்தனர்.
இன்பாவை விட கதிர் இரண்டு வயது இளையவன். கதிர் பள்ளிப் படிப்பை முடித்த வருடம் இன்பா கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் சிறு வயதில் இருந்தே இருவரும் நண்பர்கள் தான். இருவரும் சேர்ந்து தான் கவர்ன்மெண்ட் பரீட்சைக்கு படித்தார்கள். இன்பாவுக்கு வேலை கிடைத்து விட கதிருக்கு கிடைக்க வில்லை. அவனுக்கு அதில் விருப்பமும் இல்லை. அதனால் இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த தேர்தலில் அவனை பிரெஸிடெண்ட் பதவிக்கு நிற்க வைத்தார் சிதம்பரம். அவனுக்கு எதிர்த்து துரை என்பவன் நிற்க அவனை ஊர் மக்களுக்கு பிடிக்காததால் கதிர் அந்த ஊரின் பிரெஸிடெண்ட் ஆனான்.
ஊருக்கு நல்லது செய்வதில் இன்பாவும் கதிரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். அவர்கள் இருவரின் பதவியும், நல்ல குணமும் அந்த ஊரின் பெரியவர்களை கவர்ந்தது என்றால் இருவரின் அழகும், பதவியும் அவ்வூரின் இளம் பெண்களைக் கவர்ந்தது. இவர்கள் இருவரின் கவனமும் எப்போதும் எந்த பெண்ணின் மீதும் சென்றது இல்லை.
அப்படியும் சொல்ல முடியாது. கதிரின் மனம் ஒருத்தி பின்னால் தான் எப்போதும் சுற்றும். இப்போது மட்டும் அல்ல. சிறு வயதில் இருந்து அவள் மீது நேசம் கொண்டிருக்கிறான். அது வேறு யாரும் அல்ல. அவனுடைய மனம் கவர்ந்தவள் இன்பாவின் தங்கை இளவரசி தான். கதிருக்கும் இளவரசிக்கும் நான்கு வயது வித்தியாசம். அதனால் சிறு வயதில் இருந்து அவளிடம் கதிர் அதிகமாக வம்பிழுப்பான்.
கதிர் முதலாம் ஆண்டு கல்லூரிக்கு செல்லும் போது சுந்தரமும் பாக்கியமும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். அதன் பின் கதிரை தங்களுடைய வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார்கள் சிதம்பரமும் பாமாவும். தன்னுடைய மகளுடைய மகன் இங்கேயே இருப்பது பார்வதி மற்றும் சண்முகநாதனுக்கும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. மகளும் மருமகனும் இறந்ததும் பேரன் தனியாகி விடுவானோ என்று கவலைப் பட்ட இருவரும் கதிர் தங்கள் கண் முன்னே இருக்கவும் நிம்மதியாக இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் வீட்டுக்கு வந்த பிறகு கதிர் இளவரசியிடம் வம்பிழுப்பதை நிறுத்தி விட்டான். அதற்கு முன்னர் அவளிடம் வம்பிழுக்கும் போதெல்லாம் “நீ தான் டி என் பொண்டாட்டி, கல்யாணம் முடியட்டும், உன்னை எப்படி கொடுமை படுத்துறேன் பார்”, என்று சொல்பவன் இப்போதெல்லாம் அவள் எதிரில் வந்தாள் கூட தலை குனிந்து சென்று விடுவான்.
கதிருக்கு இளவரசியை மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு அவர்களுக்கே துரோகம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் தான் விலகி இருக்கிறான். ஆனால் அது தெரியாத இளவரசிக்கோ அவனது அமைதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இவ்வளவு நாள் போல அவன் இருந்திருந்தால் அவள் அவனை பெரிதாக கண்டு கொண்டிருக்க மாட்டாள். இத்தனை நாள் ஒரு நண்பனை போல தன்னிடம் சகஜமாக பேசியவன், பேச்சுக்கு பேச்சு ‘பொண்டாட்டி’ என்று சொல்லி அவளை கடுப்பேத்துபவன் இப்போது அவளை கண்டு கொள்ளாமல் செல்லவும் அவன் மீதான அவளது கவனம் கொஞ்சம் அதிகமானது.
கூடவே அன்னை தந்தையை இழந்த அவன் மேல் இனம் புரியாத பாசமும் வந்தது. இனி தங்கள் வீட்டில் அவனும் ஒருவன் தான். அவனுக்கு தாங்கள் தான் எல்லாமுமே. அவனைத் தாங்கள் தான் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமை உணர்வையும் அவள் மனதில் வளர்த்துக் கொண்டாள்.
பல நாட்கள் அவளாகவே அவனிடம் சென்று பேசுவாள் தான். ஆனால் அவனோ அவளுடைய கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்று விடுவான்.
அவன் விலகி விலகிச் செல்வதே அவளுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது. அவன் மீது ஈர்ப்பை வளர்த்தது. கூடவே அவளை பாமா மற்றும் சிதம்பரத்தின் கட்டாயத்தால் பள்ளியில் விடச் செல்லும் போதும், கல்லூரியில் விடச் செல்லும் போதும் அவளுடைய தோழிகள் ‘உன்னோட மாமா சூப்பர், ரொம்ப அழகு’ என்று வர்ணித்தார்கள். அப்படிச் சொல்லும் போது அவளுக்குமே அவனது அழகான தோற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையில்லை.
மொத்தத்தில் கதிர் மனதில் அவள் மீதான நேசம் இருந்தும் அதை குடும்பத்துக்காக அதை வெளிக்காட்டாமல் விலகி இருக்கிறான். இளவரசியோ அவனுடைய கடைக்கண் பார்வை தன் மீது திரும்ப வேண்டும் என்றும், மீண்டும் பழைய படி தன்னிடம் சிரித்து பேச மாட்டானா என்றும் ஏங்கிப் போய் காத்திருக்கிறாள்.
பெரியவர்கள் அனைவருக்குமே அவர்கள் இரண்டு பெரும் ஒன்று சேர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது தான். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். பார்வதி மட்டும் அவ்வப்போது அவள் தான் அவனது மனைவி என்று சொல்லிச் சொல்லி அவன் மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தாள்.
தன்னுடைய தவிப்பு புரியாமல் ஆச்சி அப்படி பேசுவது கதிருக்கு சில நேரம் எரிச்சலை தரும். அதனால் தான் பார்வதியை அடிக்கடி திட்டு விட்டுச் செல்வான். பாட்டி பேரன் இருவருக்கும் அடிக்கடி இளவரசியை வைத்து சண்டை வரும். இதை இன்பா பெரிதாக கண்டு கொள்ளவே மாட்டானா.
பார்வதி மற்றும் சண்முகநாதனுக்கு தங்களுடைய பேரன்கள் மற்றும் பேத்தி மீது அதிக அன்பு உண்டு. அதனால் தங்களுடைய காலத்துக்குள் அவர்களுக்கு திருமணம் செய்ய ஆசை கொண்டார்கள். ஆனால் எல்லாத்துக்கும் மூத்தவனான இன்பா திருமணத்தைப் பற்றி பேசினாலே கழண்டு கொள்வான். ஏனோ அவனுக்கு திருமணத்தின் மீது எந்த ஆசையும் வரவில்லை. “அவன் தான் பிடி கொடுக்க மாட்டிக்கிறான். நீயாவது கல்யாணம் பண்ணிக்கோ டா”, என்று பார்வதி கதிரிடம் திருமணம் பற்றி பேசினால் ஆச்சியை ஒரு முறைப்புடன் கடந்து விடுவான்.
என்ன தான் கதிர் இன்பா வீட்டில் தங்கியிருந்தாலும் அவனுக்கும் தனியாக சொத்து நிலங்கள் எல்லாம் உண்டு. கதிரின் தந்தை சுந்தரம் பெயரில் இருந்த சொத்தை எல்லாம் கதிரின் பெயரில் மாற்றி எழுதினார் சிதம்பரம். அது மட்டுமில்லாமல் அவனுடைய நிலங்களை எல்லாம் தன்னுடையதைப் போலவே பார்த்துக் கொள்கிறார்.