இளவரசியை பார்க்க வினோதினிக்கு கவலையாக இருந்தது. கதிரின் சந்தோசத்துக்காக தன்னையே தனிமைப் படுத்திக் கொள்ளும் அவளை வியப்பாக பார்த்தாள். அவளை தனியே விட்டுவிட்டுச் செல்ல வினோதினிக்கு மனதில்லை.
அதனால் அவள் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “நீங்க போய் தாத்தா பாட்டி கூட பேசிட்டு இருங்க. அங்க இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கு தான் அதை இங்க இருந்து பாக்கணும்னு இருக்கு”, என்று சொன்னாள் இளவரசி.
“நீ ஒரு சாதாரண விஷயத்தை ரொம்ப பெருசா எடுக்குறேன்னு தோணுது இளவரசி. இது உன் வீடு. அவங்க எல்லாம் உன்னோட சொந்தம். அவங்க கிட்ட இருந்து நீ இப்படி விலகி இருக்குறது சரியா?”
“உங்களுக்கு இது சாதாரண விஷயமா தெரியலாம். ஆனா எனக்கு இது வாழ்க்கைங்க. நான் அத்தானை விரும்பலைன்னு வைங்க. எனக்கு இந்த கஷ்டமே இல்லை. ஆனா அவரை மனசுக்குள்ள நிரப்பி வச்சிக்கிட்டு அதை வெளியே காட்ட முடியாம, ஒரே வீட்ல இருந்துட்டும் நடிக்கிறது எனக்கு ஒவ்வொரு நிமிசமும் நரகமா தான் இருக்கு. அது மட்டுமில்லாம நான் இப்ப வெளிய போய் பேசாம இருந்தாலும் நான் இந்த குடும்பம் தான். கதிர் அத்தானும் இந்த குடும்பம் தான். ஆனா அவருக்கு அம்மா அப்பா இல்லை, இது அவரோட வீடு இல்லைன்னு ஒரு எண்ணம் இருக்க தானே செய்யும்? அந்த தனிமை அவர் மனசுல நான் உருவாக்க கூடாது. அவங்க எனக்கு சொந்தமா இருக்குறதை விட அவருக்கு சொந்தமா இருக்கணும். அது தான் எனக்கு முக்கியம்”
“கதிரை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?”
“பிடிக்குமாவா? அவர் மேல எனக்கு இருக்குறது சாதாரண அன்பு இல்லை. அவர் தான் எனக்கு உலகம்னு சொல்ற அளவுக்கு பிடிக்கும். ஆனா அவருக்கு தான் தெரியலை. அவர் மனசுல எனக்கான இடம் என்னன்னு எனக்கு தெரியலை”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.
“நான் இப்ப எங்க அப்பா கிட்ட நான் கதிர் அத்தானைத் தான் கட்டிக்குவேன்னு சொன்னா அப்பாவே எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. அத்தானும் அப்பாவுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்குவாங்க”
“அப்புறம் என்ன? அது தானே உனக்கு வேணும்? கல்யாணம் முடிஞ்சா நீங்க எல்லாருமே ஒரே குடும்பமா ஹேப்பியா இருக்கலாம்ல? நீ இப்ப படிச்சிட்டு இருக்க? அதனால உடனே கல்யாணம் வேண்டாம். அட்லீஸ்ட் பேசி வச்சா கூட போதுமே? கதிர் உனக்கு தான்னு பேசி வச்சிட்டா உனக்கு இந்த வலி இருக்காதுல்ல?”
“இருக்காது தான். ஆனா எனக்கும் சில எதிர் பார்ப்புகள் இருக்கும் தானே? கதிர் அத்தான் மனசுல நான் இருக்கேனா இல்லையான்னு தெரியலை. ஒரு வேளை அவர் மனசுல நான் இருந்தா அவர் என்னை பொண்ணு கேக்கணும்ல? ஆனா அவர் கேக்க மாட்டார். அத்தானுக்கு எங்க அப்பா மேல அதிக மரியாதை இருக்கு. அந்த மரியாதை என் காதலை ஜெயிக்க விடாது. நான் காலம் முழுக்க இப்படி வெந்தே சாகணும். அது தான் என் விதி”, என்று முற்றும் துறந்த துறவி போல அவள் பேச அவளைப் பார்க்க வினோதினிக்கு கஷ்டமாக இருந்தது.
ஆடிப் பாடித் திரியும் வயதில் அவள் இப்படி ஒடுங்கிப் போய் இருப்பது வினோதினிக்கு வருத்தத்தைக் கொடுத்தது. இதை சரி செய்ய வேண்டுமே என்று வினோதினிக்கு ஆசையாக இருந்தது.
ஆனால் இவ்வளவு பெரிய விஷயம் பேசும் அளவுக்கு அந்த குடும்பத்திற்கு அவள் முக்கியமானவள் அல்லவே.
அதற்கு மேல் அவளைக் கட்டாயப் படுத்த முடியாமல் வெளியே வந்து பார்வதி அருகே அமர்ந்து கொண்டாள். முதலிலே இங்கேயே இருந்திருந்தால் இளவரசியை அழ வைத்திருக்க வேண்டாமே என்று தோன்றியது.
“என்ன கண்ணு, இளவரசி வரலைன்னு சொல்லிட்டாளா?”, என்று கேட்டார் பார்வதி.
“ஆமா பாட்டி”
“அந்த கழுதை அப்படி தான் பண்ணும். நாலு சனத்துக் கூட வந்து பேசிட்டு இருக்கணும்னு நினைக்க மாட்டா. படிக்கிறேன் படிக்கிறேன்னு உள்ளயே அடைஞ்சு கிடப்பா. பொண்ணுன்னா சிரிச்ச முகமா வீட்ல இருக்குறவங்க கிட்ட பேசணும். இவ எப்பவும் இப்படி தான்”, என்று பார்வதி அவளைத் திட்ட வினோதினி கதிரை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தில் ஏதோ குற்ற உணர்வு தெரிந்தது. இவனுக்கு ஏதோ புரிந்திருக்கிறது என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.
“என் பேத்தியை எதுக்கு குறை சொல்ற? அவ எங்க கிட்ட எல்லாம் சிரிச்சாப்ல தான் பேசுவா. உன்னைப் பாத்தா தான் அவ சிரிக்க மறந்துடுறாளோ என்னவோ? உனக்கு சிரிச்சாப்ல பொண்ணு வேணும்னா இதோ இவனுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வை. சிரிச்சாப்ல பொண்ணு கிடைப்பாங்க”, என்று பேத்திக்காக பரிந்து வந்தார் சண்முகநாதன்.
“நானா மாட்டேன்னு சொல்றேன்? இவனுங்க சரின்னு மண்டை ஆட்டினா தானே? கல்யாணம்னு சொன்னா தெரிச்சு ஒடுறாணுங்க”, என்று பார்வதி சலிப்புடன் சொல்ல கதிரும் இன்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
இன்பாவுக்கு உதவி செய்ய நினைத்து “அம்மாச்சி, நீ வேணும்னா மச்சானுக்கு பொண்ணு பாரேன். அவன் கண்டிப்பா இந்த தடவை கல்யாணம் பண்ணிப்பான்”, என்றான் கதிர்.
“டேய் என்னை ஏண்டா கோத்து விடுற?”, என்று உண்மையிலே அலறினான் இன்பா. “ரெண்டு பேருக்குமே பாக்கணும். நல்ல பொண்ணா இருந்தா சொல்லச் சொல்லி தரகர் கிட்ட சொல்லி வைக்கணும்”, என்று சொன்னாள் பாமா. அதைக் கேட்டு இன்பா அன்னையை முறைத்தான்.
“கல்யாணப் பேச்சு வந்துருச்சு. இது தான் சரியான டைம். ஏதாவது செய்”, என்று வினோதினியின் மூளை குரல் கொடுக்க “நான் ஒரு விஷயம் சொல்லலாமா?”, என்று கேட்டாள்.
“எங்க கிட்ட என்ன தயக்கம்? சொல்லு டா கண்ணு”, என்றார் பார்வதி. இன்பாவுமே அவள் என்ன பேசப் போகிறாள் என்று ஆர்வமாக பார்த்தான்.
அவன் ஆர்வத்தைக் கண்ட கதிர் “வாட்டர் பால்ஸை குளோஸ் பண்ணு மச்சான்”, என்று சொல்லி அவன் காதைக் கடித்தான்.
“எனக்கு ஒரு பொண்ணு தெரியும்”, என்று தயக்கத்துடன் சொன்னாள் வினோதினி.
அனைவரும் அவளை திகைப்பாக பார்க்க “மச்சான், உன் காதலியே உனக்கு பொண்ணு பாப்பா போல? இப்படியா உன் நிலைமை அமையனும்”, என்று நக்கல் அடித்தான் கதிர்.
அவன் தலையில் கொட்டிய இன்பா தன்னுடைய தாயை பாவமாக பார்க்க பாமாவும் “பொறு டா”, என்று சைகை செய்து விட்டு “எந்த பொண்ணு மா?”, என்று கேட்டாள்.
“எங்க சொந்தக்காரங்க தான். அவ பேர் வசந்தி. கவர்ன்மெண்ட் டீச்சரா இருக்கா. நம்ம கதிருக்கு மேட்சா இருப்பா”, என்று அவள் குண்டைத் தூக்கிப் போட அனைவரின் முகமுமே இருண்டது. அனைவரும் அவளை திகைப்பாக பார்க்க சிதம்பரம் கூட அவளைத் திரும்பிப் பார்த்தார்.
வினோதினியின் கண்கள் ஜன்னல் வழியாக தெரிந்த இளவரசியை நோக்க அவருக்கு எதுவோ புரிவது போல இருந்தது.
அவள் அப்படிச் சொன்னதும் கதிர் வினோதினியைக் கொலை வெறியுடன் முறைக்க அவளுக்கு அவன் மனது தெளிவாக புரிந்தது. உள்ளே இருந்த இளவரசிக்கோ நெஞ்சே வலித்தது.
“என்ன இவங்க இப்படி சொல்றாங்க? இவ்வளவு நேரம் நான் சொன்ன விஷயம் எதுவும் அவங்களுக்கு புரியலையா?”, என்று எண்ணி பயந்து போனாள்.
“பூனைக்கு யார் மணி கட்டுறது? ஏதாவது ஒரு திருப்பம் வரட்டும்”, என்று எண்ணிய பார்வதியும் “அப்படியா மா? ரொம்ப சந்தோஷம். அவங்க ஊர் எந்த ஊர்? அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க? குடும்பம் நல்ல குடும்பமா? பொண்ணு அழகா இருக்குமா?”, என்று ஆவலாக விசாரிக்க ஆரம்பித்து விட்டாள்.
இன்பாவுக்கு இந்த பேச்சு ரசிக்க வில்லை. “இவ ஏன் தேவையில்லாம பேசுறா?”, என்று எண்ணியவனுக்கு தங்கையை எண்ணி கவலையாக இருந்தது. அவனுக்கு கதிரின் மனது தெரியாமல் போனாலும் இளவரசியின் மனது தெரியுமே?
“கிழவி, இப்ப எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு உன்னைக் கேட்டேனா?”, என்று எரிந்து விழுந்தான் கதிர். “இத்தனை நாள் என்னையும் இளவரசியையும் சேத்து வச்சு பேசிட்டு இப்ப இன்னொரு பொண்ணு பத்தி கேக்குது பார்?”, என்று எண்ணி பார்வதி மேல் கொலை வெறி கொண்டான்.
“பொறு டா, நாலு இடத்துல விசாரிக்கணும்ல?”, என்று சொன்ன பார்வதி வினோதினியிடம் “நீ சொல்லு மா”, என்றார்.
“குடும்பம் நல்ல குடும்பம் பாட்டி. பொண்ணு அவ்வளவு அழகு. வீட்டுக்கு ஒரே பொண்ணு”, என்று கதிரை நோட்டம் விட்டுக் கொண்டே சொன்னாள்.
“அப்புறம் என்ன? பேசி முடிச்சிற வேண்டியது தான்”, என்று பார்வதி சொல்ல “கிழவி, நான் ஒரே பொண்ணு இருக்குற வீட்ல எல்லாம் கல்யாணம் பண்ண மாட்டேன். பொண்ணுக்கு அண்ணன், இல்லைன்னா தம்பி இருக்கணும்”, என்றான்.
“என்ன மா இவன் இப்படிச் சொல்றான்?”
“கவலை படாதீங்க பாட்டி. ஒரே பொண்ணுன்னு தானே சொன்னேன். கூட பிறந்த ஆண் இல்லைன்னு சொன்னேனா? அவளுக்கு ஒரு தம்பி, ஒரு அண்ணன் இருக்காங்க”, என்றாள்.
“அப்புறம் என்ன டா?”, என்று பார்வதி கேட்க சிதம்பரம் அவர்கள் பேச்சை சுவாரசியமாக வேடிக்கை பார்த்தார்.
“எனக்கு கவர்ன்மெண்ட் வேலை பாக்குற பொண்ணு வேண்டாம் அம்மாச்சி. என்னை மதிக்க மாட்டா”, என்றான் கதிர்.
“அவளை ரிசைன் பண்ணச் சொன்னா உடனே பண்ணிருவா பாட்டி”, என்று வினோதினி சொல்ல “எனக்கு மண்டையை ஆட்டுற பொண்ணு வேண்டாம் அம்மாச்சி”, என்றான் கதிர். பார்வதி எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார்.