இன்பா வண்டியை எடுக்க அவன் பின்னே ஏறி அமர்ந்தாள் இளவரசி. ஊரைத் தாண்டியதும் “கதிர் கூட போறியா டி? அவனை வரச் சொல்லவா? வீட்ல யாருக்கும் தெரியாம நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னான் இன்பா.
இப்போது அவளுக்கே கதிருடன் வண்டியில் அமர்ந்து தனியே போவது ஒரு மாதிரி வெட்கமாக இருக்க “வேண்டாம் அண்ணா. உன் கூடவே வரேன்”, என்று சொல்லி விட்டாள்.
அன்றைய பகல் பொழுது இன்பாவுக்கு வேலையில் கடந்தது. இன்று மாலை எப்படியாவது அவளிடம் பேச வேண்டும் என்று எதிர் பார்த்தான்.
இரவு ஏழு மணி போல அவன் மாடியில் நின்று அவளுடைய வீட்டை நோட்டம் விட்டான். அவன் எதிர் பார்த்தது போல வினோதினி அப்போது அவளுடைய வீட்டுத் திண்ணையில் சென்று அமர்ந்தாள். பூச்சி அதிகம் வருகிறது என்று விளக்கை வேறு அனைத்திருந்தாள். தெரு விளக்கு மட்டும் தான் எரிந்து கொண்டிருந்தது.
“இது தான் டா சரியான நேரம். இப்ப அவ கிட்ட பேசியே ஆகணும். இல்லைனா இந்த ஆச்சி அவ கூட வந்து உக்காந்துரும்”, என்று எண்ணிக் கொண்டு கீழே வந்தான்.
கதிர், சண்முகநாதன், சிதம்பரம் மூவரும் கிரிக்கட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இளவரசி அவளுடைய அறையில் இருந்தாள்.
பாமா தோசை ஊற்றிக் கொண்டிருக்க பாட்டி தரையில் அமர்ந்து கத்திரிக்காயை கடைந்து கொண்டிருந்தார். மெதுவாக நழுவி வீட்டை நோக்கிச் சென்றான். சுற்றி இருந்த இருளால் அவன் வருவதை கவனிக்காமல் வானில் பவனி வரும் நிலவைப் பார்த்த படி அமர்ந்திருந்தாள். ஏதோ தனிமை அவளை சூழ்ந்து கொண்டிருந்தது. அதில் இருந்து வெளி வர முடியாமல் திணறினாள்.
மாலை நேரத்தின் அந்த இதமான குளுமை கூட அவள் தனிமையை விரட்ட வில்லை. சுவரில் சாய்ந்து, முழங்கால்களைக் கட்டிக் கொண்டு முகத்தை காலில் வைத்த படி அமர்ந்திருந்த அவளது தோற்றம் அவனைக் கவர்ந்தது.
தனிமையில் இருந்த வினோதினிக்கு அவளை அறியாமலே இன்பாவின் நினைவு வந்தது. இப்போது அவனுடைய முத்தத்தை நினைத்து கோபம் வராமல் சிறு வெட்கமே வந்தது. மெதுவாக தன்னுடைய விரலால் உதட்டை வருடிக் கொண்டாள்.
அவளைப் பார்த்த படி அருகில் வந்து நின்றான் இன்பா. ஏதோ அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்தவள் அவனை அந்த நேரம் அங்கு எதிர் பாராததால் திகைத்துப் போனாள்.
அதிர்ந்து போய் அவள் திண்ணையில் இருந்து இறங்கி நிற்க “பிளீஸ் பொய்றாத. நான் உன் கிட்ட பேசணும்”, என்றான் இன்பா. அவன் என்ன பேசப் போகிறான் என்று தான் அவளுக்கு தெரியுமே? அதனால் தன்னைச் சமாளித்துக் கொண்டு “என்ன பேசப் போறீங்க? என் கிட்ட பேச என்ன இருக்கு? நானே இருக்க இடம் இல்லாம இங்க வந்து தங்கி இருக்குற பிச்சைக் காரி”, என்று கோபம் இருப்பது போல பேசினாள்.
“பிளீஸ் வினோ, அன்னைக்கு நான் பேசினதை எல்லாம் மறந்துரு”, என்று அவன் கெஞ்ச அவனது செல்லமான அழைப்பு கூட அவளுக்கு பிடித்து தொலைத்தது.
மனதை திடப் படுத்தி “சத்தியமா மறக்க முடியாது. மறக்க கூடிய வார்தைகளை நீங்க பேசலை. எந்த உரிமையிலே நீங்க என் கிட்ட அப்படி நடந்துக்கிட்டீங்க?”, என்று கேட்டவளின் குரலில் கோபம் இருந்தது.
“பிளீஸ் வினோ, அன்னைக்கு இளவரசி வாழ்க்கையை காப்பாத்தணும்னு வேகத்துல அப்படி நடந்துக்கிட்டேன்”
“யாருன்னே தெரியாத பொண்ணு கிட்ட அப்படி நடந்துக்கணும்னா நீங்க எவ்வளவு பெரிய அயோக்கியனா இருக்கணும்”
“சத்தியமா யாருன்னே தெரியாத பொண்ணு கிட்ட என்னால அப்படி நடந்துக்க முடியாது. நீ எனக்கு சொந்தமானவன்னு உரிமையில தான் நான் அப்படி பண்னினேன்”
“வாட்? சொந்தமா?”
“ஆமா, உன்னைப் பாத்த நாள்ல இருந்து நான் உன்னை விரும்புறேன்”, என்று அவன் தன்னுடைய காதலைச் சொல்ல அவளுக்குள் உள்ளுக்குள் இளகியது.
ஆனாலும் அவன் பேச்சு நினைவில் வர “இதை நான் நம்பனுமா?”, என்று கேட்டாள்.
“என் குடும்பத்து மேல சத்தியமா என் காதல் உண்மை டி. ஐ லவ் யு. ஐ லவ் யு சோ மச்”, என்று சொல்ல உள்ளுக்குள் திணறியவள் “உங்க காதல் உண்மையான காதலா?”, என்று கேட்டாள்.
“ஆமா, நான் நேசிச்ச ஒரே பொண்ணு நீ தான் டி”
“நேசிக்கிற பொண்ணு கிட்ட யாரும் அப்படி மோசமா பேச மாட்டாங்க, நடந்துக்க மாட்டாங்க”
“அதான் அது கோபத்துல… இளவரசிக்காக”, என்று அவன் தடுமாற “இப்படி காதலைச் சொல்லுறதுக்கு முன்னாடியே உங்க தங்கைக்காக இப்படி பேசுற நீங்க கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி பேச மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?”, என்று கேட்டாள்.
“கண்டிப்பா அப்படி ஒரு சிட்டுவேசன் வந்தாலும் நான் இப்படி தான் நடந்துப்பேன். நம்ம கல்யாணத்துக்கு பின்னாடி நீ ஏதாவது தப்பு செஞ்சா நான் கண்டிப்பா உரிமையா உன்னை தண்டிக்க தான் செய்வேன். ஏன்னா நீ எனக்கு வேற யாரோ இல்லை டி. எனக்கானவ. என்னோட தேவதை. அன்னைக்கு என்னைக் காபாத்திட்டு என் கால்ல இருந்து தலை வரை ஒரு பார்வை பாத்தியே? அதுலயே நான் விழுந்துட்டேன். நீ என் பொண்டாட்டி டி. நீ தப்பான ஒரு காரியம் செய்யப் போன. அதை தடுக்க நான் அப்படி செஞ்சிட்டேன். அது என்னையே அறியாம வந்த உரிமை உணர்வு. ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நான் அப்படி நடந்துக்கிட்டது தப்பு தான். என்னை மன்னிச்சிரு”, என்று அவன் சொல்ல இப்போது அவள் தான் அவனிடம் விழுந்து விட்டாள்.
ஆனாலும் அதை ஒத்துக் கொள்ள முடியாமல் “முடியாது”, என்றாள்.
“என்னை மன்னிக்கவே மாட்டியா?”
“அதான் மாட்டேன்னு முதல்லே சொல்லிட்டேனே?”
“நீ சாயங்காலம் பாத்த தானே? அப்பா பொண்ணு பாத்துட்டாராம். என்னால உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது டி”
“எனக்கும் உங்களைக் கல்யாணம் பண்ண முடியாது”
“ஏன் வினோ இப்படி பேசுற? நான் உனக்கு பொருத்தம் இல்லைன்னு நினைக்கிறியா? உனக்கு பேங்க்ல வேலை பாக்குற ஒருத்தன் தான் புருசனா வரணும்னு ஆசை இருந்தா சொல்லு டி. நான் எக்ஸாம்க்கு படிக்கிறேன்”, என்று அவன் சொல்ல ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
ஆனாலும் பார்வதி அவளிடம் “உடனே அவன் கிட்ட சரின்னு சொல்லிறாத. அவனை கொஞ்ச நாள் அலைய விடு”, என்று சொல்லி இருக்க அதை மனதில் வைத்து “எனக்கு உங்க காதல் மேல நம்பிக்கை இல்லை”, என்றாள்.
“அதை நிரூபிக்க நான் என்ன செய்யணும்? சொல்லு டி செய்யுறேன்”, என்று அசராமல் கேட்டான்.
அவன் காதல் அவளை பிரமிக்க வைக்க “எனக்கு அதெல்லாம் தெரியாது. நமக்குள்ள செட்டே ஆகாது அது மட்டும் தெரியும். நீங்க உங்க அப்பா சொல்ற பொண்ணையே கட்டிக்கோங்க. எனக்கு நீங்க வேண்டாம்”, என்று சொல்லி விட்டு அவள் வீட்டுக்குள் செல்லப் பார்த்தாள். ஆனால் அவளைச் செல்ல விடாமல் அவள் கையைப் பற்றி நிறுத்தினான் இன்பா. அவனுடைய செய்கையில் வெலவெலத்து விட்டாள்.
முதன்முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசம் பட்டதில் மின்சாரம் பாய்ந்தவளாக அவள் அதிர்ந்து விழித்தாள். அவள் கைகள் நடுங்கியது. அன்று கோபத்தில் அவன் நெருங்கிய போது அவளுக்கு வெறுப்பு வந்ததே தவிர வேறு உணர்வு இல்லை. ஆனால் இப்போது அவனைப் பிடித்து தொலைத்ததே. அங்கிருந்து ஓடி விட வேண்டும் போல இருந்தது.
“பிளீஸ் கொஞ்ச நேரம் இங்கயே இரு வினோ. எனக்கு உன் கிட்ட நிறைய பேசணும். உன்னோட சம்மதம் வாங்கணும். இப்ப பேசலைனா வேற எப்பவும் பேச முடியாது. யாராவது உன் கூட இருந்துட்டே இருக்காங்க. கொஞ்ச நேரம் மட்டும் என் கூட பேசு டி. பிளீஸ்”, என்று கெஞ்சினான்.
இவ்வளவு நேரம் அவன் மீதான கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தவள் இப்போது அவன் தொடுகையில், அவன் கெஞ்சலில், அவனுடைய உரிமையான அழைப்பில் முதன் முதலாக முகம் சிவந்தாள் வினோதினி.