“நைட்டுக்கு எப்படி சாயங்காலமே சாப்பாடு வாங்கிட்டு வந்துருக்க முடியும்? உனக்கு சாப்பாடு கொடுக்கலைன்னா அம்மா என்னைத் தான் தப்பா நினைக்கும். ஒழுங்கா வா”
“அம்மா கிட்ட நான் எதுவும் சொல்ல மாட்டேன். நேத்து நான் சாப்பிடாமலே என்ன சாப்பிட்டேன்னு சொன்ன தானே? இன்னைக்கும் அதையே சொல்லு. இப்ப போ இங்க இருந்து”, என்று சொன்னதும் விஜி சென்று விட்டாள்.
எட்டரை மணி போல் பசி எடுக்க அவன் கொடுத்த கவரைப் பிரித்தாள். உள்ளே இரண்டு பார்சல் இருந்தது. பார்சலைப் பார்க்கும் போதே தெரிந்தது அதை வீட்டில் தான் போட்டிருக்கிறார்கள் என்று.
ஒரு பார்சலில் மூன்று சப்பாத்தியை வைத்து அதன் மீது கோழிக் குழம்பை ஊற்றி இருப்பார்கள் போல? அது ஊறிப் போய் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
இன்னொரு பார்சலைப் பிரித்துப் பார்த்தாள். அதன் உள்ளே கொத்துப் பரோட்டா இருந்தது. இரண்டு உணவுகளும் பசியைத் தூண்ட ஆசையாக அதை எடுத்து உண்டாள். பாமா அவளுக்காக கொடுத்து விட்ட அந்த உணவு அவளுக்கு தேவாமிர்தமாக இருந்தது.
அவளுடைய அறையில் இருந்து நான்வெஜ் வாசனை வர “பாத்தியா உன் அக்காவை, நம்மளை விட்டுட்டு எப்படி சிக்கன் மட்டன்னு வெளுத்து வாங்குறாங்கன்னு”, என்றான் ரவி.
“அவ என்னமும் சாப்பிடுறா. என்னை சமைக்க விடாம இருந்தா சரி”, என்றாள் விஜி. அவளுக்கு அவள் கவலை.
“அது எப்படி டி விட முடியும்? அவங்க நம்மளை நம்பி தானே வந்துருக்காங்க? அவங்களை நாம தான் பாத்துக்கணும்”
“அதுக்கு என்னங்க பண்ண முடியும்? அவ கிட்ட போய் நீ நான்வெஜ் வாங்கிச் சாப்பிடாதே, வெஜிடேரியன் வாங்கிச் சாப்பிடுன்னா சொல்ல முடியும்?”
“என்ன விஜி பொறுப்பு இல்லாம பேசுற? நானே கண்ணால பாத்த விஷயத்தை நினைச்சு சாக்ல இருக்கேன். இதுல நீ வேற அவங்க வேற யாரோ மாதிரி பேசுற?”
“என்ன ஆச்சுங்க? என்ன பாத்தீங்க?”
“இன்னைக்கு உன் அக்கா யார் கூட வண்டில வந்தாங்க தெரியுமா?”
“வண்டில வந்தாளா? என்னங்க சொல்றீங்க? யார் கூட வந்தா?”
“நம்ம வி.ஏ.ஓ இன்பா கூட”
“அப்படியா? இவ ஒரு ஆம்பளை கூட வந்தாளா? அவனை எப்படி இவளுக்கு தெரியும்?”
“காலைல நம்ம பஸ் ஸ்டாண்ட்ல மயங்கி விழுந்துட்டாங்க போல? அவன் தான் காலைலயும் கூட்டிட்டு போயிருக்கான்”
“ஓ”, என்று குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் சொன்னாள் விஜி.
“இங்க பாரு விஜி, உங்க அக்கா கிட்ட கொஞ்சம் கவனமாவே நடந்துக்கோ. அப்ப தான் நிரந்தரமா பணம் கரக்க முடியும். உன் சிடுமூஞ்சித் தனத்தை அவங்க கிட்டயும் காட்டினேன்னு வை. ஒண்ணும் கிடைக்காது. அதுவும் உன் அம்மாவுக்கு தெரிஞ்சது முதலுக்கே மோசமாயிரும் பாத்துக்கோ”
“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? என்னால எல்லாம் அவளுக்கு மூணு தரமும் சமைச்சு கொட்ட முடியாது”
“இப்ப தான் அவங்களை கடைல வாங்கிக்க சொல்லிட்டல்ல? இனி அவங்க இங்க சாப்பிட மாட்டாங்க. ஆனா அவங்க இங்க தான் இருக்கணும். அதுக்கு ஏதாவது சொல்லாத”
“நான் ஏற்கனவே சொல்லிட்டேனே, இது என் வீடுன்னு”
“காரியத்தையே கெடுத்த போ. சரி வா. அவங்க கிட்ட பேசி சமாதானப் படுத்திட்டு வரலாம்”, என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
அவர்கள் மாடிக்கு போன போது தான் உணவை முடித்து விட்டு இன்பாவுக்கு அழைத்தாள் வினோதினி.
அவள் அழைப்பாள் என்று தெரிந்து கதிரின் சந்தேகப் பார்வையைத் தவிர்த்து விட்டு மொட்டை மாடியில் வந்து அமர்ந்திருந்தான் இன்பா. அவள் அழைக்கவும் ஒரே ரிங்கிலே எடுத்தவன் “சொல்லுங்க”, என்றான்.
“சாப்பாடு ரொம்ப அருமையா இருந்தது. இதுக்கே உங்க அம்மாவுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன்”, என்றாள் வினோதினி. அவள் பேசியது அப்படியே ரவியின் காதில் விழுந்தது. விஜியை அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு வினோதினி பேசுவதைக் கேட்டான். விஜியும் கேட்டாள்.
“பரவால்ல விடுங்க. சரி என்ன முடிவு பண்ணிருக்கீங்க? தினமும் பட்டினியா இருக்குறதுன்னா?”, என்று கேட்டான் இன்பா.
“இல்லை, வேற வீடு பாக்கணும். உங்களால பாத்து தர முடியுமா? என்னால இந்த வீட்ல இருக்க முடியாது. நரகம் மாதிரி இருக்கு. இந்த ஊரே எனக்கு வேண்டாம். வேற ஊர்ல பாருங்க. பேங்க் பக்கத்துல இருக்குற மாதிரி. சின்னதா இருந்தா கூட போதும்”, என்று வினோதினி சொன்னதும் விஜியும் ரவியும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“கண்டிப்பா பாத்து சொல்றேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் கேக்கலாமா?”
“என் வயிரை மட்டும் இல்லாம மனசையும் நிறைச்ச குடும்பம் உங்களோடது. ஆயுசுக்கும் இந்த உதவியை நான் மறக்க மாட்டேன். நீங்க என் கிட்ட என்னன்னாலும் கேக்கலாம்”
“ஒரு நாள் முழுக்க சாப்பிடாம இருக்குற அளவுக்கு என்ன நடந்துச்சுங்க? அதுவும் ரோட்ல மயங்கி விழுற அளவுக்கு?”
….
“சொல்ல இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்”
“சொல்லி சந்தோஷப் பட இது ஒண்ணும் நல்ல விஷயம் இல்லையே”, என்று தயக்கமாக சொன்னாள் வினோதினி.
“கஷ்டம்னாலும் சொன்னா பாத்தியா குறையும்ல?”, என்று அவன் கேட்டதும் ஆதியோடு அந்தமாக அனைத்தையும் சொல்லி விட்டாள்.
“சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை. அதான் என்னையே அறியாம இப்படி ஆகிருச்சு. ஆனா இதையெல்லாம் அம்மா கிட்ட கூட சொல்ல முடியலை. அவங்க நான் இங்க இருக்குறது தான் பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க. அதனால தான் வீட்டைப் பாத்து முடிச்சிட்டு அவங்க கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்”, என்று முடித்தாள்.
“சரி நான் நாளைக்கு தகவல் சொல்றேன். இப்ப நிம்மதியா தூங்குங்க”, என்று சொல்லி போனை வைத்தான் இன்பா.
அனைத்தையும் ஒட்டுக் கேட்ட விஜி மற்றும் ரவி இருவரும் பூனை போல கீழே வந்தார்கள். “இவ என்னங்க இப்படி முடிவு பண்ணிட்டா?”, என்று கேட்டாள் விஜி.
“எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப வந்து கேளு. இங்க பாரு விஜி. அவங்க இங்க இருந்து போகக் கூடாது. அதுக்கு ஒரே வழி உங்க அம்மா கிட்ட எல்லாத்தையும் வத்தி வைக்கிறது தான். எப்படி போட்டுக் கொடுக்கணுமோ அப்படி போட்டுக் கொடு. இன்னைக்கு அவன் கூட பைக்ல வந்ததைச் சொல்லு. அவன் தான் அவங்களுக்கு சாப்பாடு கொடுத்துருக்கான்னு சொல்லு. அவன் கிட்ட தான் வீடு பாத்துக் கொடுக்க சொல்லி சொல்லிருக்காங்கன்னு சொல்லு. அப்புறம் அத்தையே பாத்துக்குவாங்க”, என்று சொல்ல அடுத்த நொடி தேவியை அழைத்து விட்டாள் விஜி.
“விஜி, என்ன பன்ற டி? அக்கா என்ன பண்ணுற? எனக்கு இப்ப தான் வேலை முடிஞ்சது. நானே அவளுக்கு கூப்பிடணும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீயே கூப்பிட்ட? எல்லாரும் சாப்பிட்டீங்களா? குட்டிப் பையன் தூங்கிட்டானா?”, என்று கேட்டாள் தேவி.
“அவ சாப்பிட்டா. நாங்க இன்னும் சாப்பிடலை மா. குருமா அடுப்புல கொதிச்சிட்டு இருக்கு. இனி தான் சாப்பிடணும்”
“அப்படினா அவ என்ன சாப்பிட்டா? மாப்பிள்ளை அவளுக்கு கடைல வாங்கிக் கொடுத்தாரா?”
“அவளுக்கு இவர் எதுக்குமா கடைல வாங்கிக் கொடுக்கணும்? அவளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஆளா இல்லை? சாப்பாடு வாங்கிக் கொடுத்து, வண்டிலயும் ஏத்தி இறக்கி விடக் கூட ஆள் இருக்கு”
“என்ன டி உளறுற?”
“நான் உண்மையை தான் சொல்றேன். உன் மூத்த மக. இங்க ஒருத்தனை பிடிச்சிட்டா’
“விஜி”
‘கத்தாத மா. நான் இல்லாததைச் சொல்லலை’
“வாயை மூடு டி. அவ ஒண்ணும் உன்னை மாதிரி இல்லை”
“நீ அப்படியே நம்பிட்டு இரு. நான் கெட்டவ தான். ஆனா நான் எப்பவும் நியாயவாதின்னு சொல்லிக் கிட்டது இல்லை. ஆனா அவ அப்படியா?”
“அவ உன் அக்கா டி. நீ அவளையே இப்படி பேசுவியா விஜி? எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமாக இருக்கு”
“அம்மா நான் பொய்ச் சொல்லலை. உண்மையைத் தான் சொல்றேன். இங்க இன்பான்னு ஒருத்தன் இருக்கான். அவன் கூட தான் காலைல வேலைக்கு போயிருக்கா. சாயங்காலம் அவன் கூட தான் வண்டில வந்துருக்கா. அவன் தான் சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கான். இவ்வளவு நேரம் அவன் கிட்ட தான் போன்ல பேசிட்டு இருந்தா. வேற வீடு பாக்கச் சொன்னா. அதுவும் இந்த ஊர்ல வேண்டாம் அவன் ஊர்லயே பாக்கச் சொன்னா”
“விஜி”
“என்னை நீ நம்பலைன்னா அவ கிட்டயே கேளு மா. அவன் கூட நைட் முழுக்க பேசிட்டு இருக்கணும்னு ரிஷியை அவ ரூம்ல விடக் கூடாதுன்னு சொல்லிட்டா தெரியுமா? வினும்மாட்ட போகனும் போகனும்னு சொல்லி அழுதுட்டு இருந்தான். நாலு அடி போட்டேன். இப்ப தான் அழுதுட்டே தூங்கிட்டான்”
“உண்மையாவா டி சொல்ற? நம்ம வினுவா இப்படி?”
“அவ இப்ப நம்ம வினுவே இல்லை மா. வேலை கிடைச்சிருச்சு. இனி உன் தயவு அவளுக்கு எதுக்கு? இங்க தனியா ஒரு ரூம், பாத்ரூம் வசதியோட கொடுத்துருக்கோம். சாப்பாடும் நான் செஞ்சு தரேன். அப்புறம் எதுக்கு அவ வேற வீடு பாக்கணும்? இங்க வசதி இல்லைன்னு அவ போனா எல்லாரும் எங்களை எப்படி மதிப்பாங்க? அது மட்டுமில்லாம அவ மட்டும் தனியா ஒரு வீட்ல இருந்தா அவளுக்கு எப்படி மா பாதுகாப்பா இருக்கும்? நீ பேசு மா அவ கிட்ட”, என்று மனசாட்சியே இல்லாமல் ஏற்றி விட்டாள்.