பூ 12:
விஜய்-துளசி திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருந்தது. நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மும்பாரமாய் நடந்து கொண்டிருந்தது. விஜய்யும் பெங்களூருவில் இருந்து திரும்பியிருந்தான். ஆனால் முன்பை விட அவன் முகம் கொஞ்சம் இறுக்கமாகக் காணப்பட்டது. யாரிடம் பேசினாலும் கொஞ்சம் யோசனையுடன் தான் பேசினான். இதை அனைவரும் கவனித்தாலும் அவனிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஏதாவது கேட்டு, அவன் ஏதாவது சொல்லி கல்யாணத்தில் ஏதும் தடை வந்து விட்டால் என்ற பயம் தான் அனைவருக்கும்.
மனதில் இருந்த கவலைகள் எல்லாம் மறந்து, தன்னுடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாது ராஜ சேகர் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். யார் என்ன சொன்னாலும் அவர் கேட்கவில்லை. மகனின் வாழ்க்கையில் அந்த திருமணம் அவருக்கு அவ்வளவு முக்கியமாகப் பட்டது.
நீலாவிற்கு கொஞ்சம் மனசுணக்கம் இருந்தாலும், எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் பம்பரமாய் வேலை செய்து கொண்டிருந்தார். அதற்கு காரணம் சுந்தர சேகர் தான். நீலாவின் மன சுணக்கத்தை அவர் நன்கு அறிவார். நீலாவிற்கு, துளசியை தன்னுடைய மருமகள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நெடு நாட்களாக இருந்தது. என்னதான் விஜய்யை பெற்ற மகன் போல் பார்த்துக் கொண்டாலும், பெற்ற மகனா,விஜய்யா என்று கேட்டால் நீலாவிற்கு தன்னுடைய மகன் தான் உயர்வாகத் தெரிவான்.
அவரின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட சுந்தர், தன் மனைவியிடம் திட்டவட்டமாக சொல்லி விட்டார்.
“எனக்கு மூத்த மகன் விஜய் தான். அவனை என் அண்ணன் பையனா நான் என்னைக்குமே பார்த்தது கிடையாது. விஜய்க்கு துளசி தான் பொருத்தமா இருப்பா. வீட்ல எல்லாரோட விருப்பமும் அது தான். உனக்கு சந்தேகம்ன்னா நீ அருண்கிட்ட கூட கேட்டுக்கோ..! துளசி என்றால் அருண் காத தூரம் ஓடுவான். எதையும் மனசுல வைக்காம கல்யாண வேலையைப் பார்க்குற வழியைப் பார்..” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
அதனால் தான் நீலா அமைதியாக நடமாடிக் கொண்டிருந்தார். நீலாவிற்கு இப்படி ஒரு எண்ணம் இருந்தது என்று தெரிந்தாலே, வள்ளிப் பாட்டி உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்.
வித்யாவிற்கு அப்படி ஒரு சந்தோசம். நெடுநாளைய எதிபார்ப்பு. இரண்டு நாட்களில் நனவாகப் போகிறது. ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் கனகவேலைப் பற்றிய பயம் இருந்து கொண்டே இருந்தது. வித்யாவின் முகத்தை வைத்தே அவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சுரேஷ் நன்றாகப் புரிந்து கொள்வார்.
“எதுவும் நடக்காம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. இந்த கல்யாணம் நல்ல முறையில நடக்கும். அதுக்கு நான் பொறுப்பு. எங்க பேசணுமோ அங்க பேசியிருக்கேன். அதனால நீ கவலைப் படாம, சந்தோஷமா கல்யாண வேலையைப் பாரு..!” என்று சுரேஷ் கொடுத்த தைரியம் தான், வித்யாவின் மகிழ்ச்சிக்குக் காரணம்.
இதில் சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே எந்த சந்தோஷமும் ஆரவாரமும் இன்றி, அவர்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அன்று தொழில் முறைக் கூட்டத்திற்கு விஜய்யும், அருணும் சென்றிருக்க, சுரேஷ் கம்பெனி சார்பாக பிரவீணும், துளசியும் சென்றிருந்தனர். கனகவேலின் தொழில் வாரிசான திவ்யாவும் வந்திருந்தாள்.
திவ்யாவிற்கு அவர்களை அங்கு பார்த்ததும் அப்படி ஒரு கோபம். நிச்சயம் அவர்களை அங்கு எதிர்பார்த்தாள் தான். ஆனால் நேரில் பார்க்கும் போது, உள்ளுக்குள் தோன்றிய வெறுப்பு கோபமாக வெளியே தெரிந்தது. எப்படியாவது கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று அவளும் பல வழிகளில் முயற்சி செய்து பார்த்து விட்டாள். ஆனால் எல்லா வழியையும் விஜய் அடைத்திருந்தான் யாரும் அறியாமல். இனி திவ்யாவிடம் இருப்பது ஒரே ஒரு வழி மட்டும் தான். அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள்.
“சீக்கிரம் திருமண பந்தத்தில் இணையப் போகும், நம்ம RRS இண்டஸ்டரியல்ஸ் எம்டி மிஸ்டர். விஜய குமார் அவருக்கும், நம்ம VVP இண்டஸ்டரியல்ஸ் ஜேஎம்டி மிஸ்.விஷ்வ துளசி அவங்களுக்கும், நம்ம அசோசியேஷன் சார்பா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..!” என்று ஒருவர் அறிவிப்பு செய்ய, பார்மாலிட்டிக்காக இருவரும் இணைந்து ‘தேங்க் யு ஆல்..!” என்றனர்.
விஷ்வ துளசி பெயருக்கு சிரித்து வைக்க, அதைப் பார்த்த திவ்யாவிற்கு உள்ளுக்குள் எரிந்தது. விஜய்யின் முகத்தில் சிரிப்பு இல்லையென்றாலும் நிறைவு இருந்தது. அவர்கள் இருவரையும் அப்படி ஜோடியாகப் பார்க்க முடியவில்லை திவ்யாவிற்கு.
“இந்த சிரிப்பு உனக்கு நிலைக்காது துளசி. உன்னோட சிரிப்பை எப்படி அழிக்கனும்ன்னு எனக்குத் தெரியும். விஜய் கையால நீ தாலி வாங்கவே முடியாது..!” என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க,
கடவுள் போட்ட கணக்கை சாதாரண மனிதர்களால் மாற்றி விட முடியுமா என்ன..? இதை அறியாத மனித பிறவிகள், எல்லாம் தனக்கேத் தெரியும் என்றும்… தாங்கள் செய்யும் தப்பு யாருக்கும் தெரியாது என்ற இறுமாப்புடன் அலையும் அற்ப ஆசை மனிதர்கள். உருவமில்லா உண்மை தான் கடவுள் என்பதை எப்போது தான் இந்த மனித குலம் புரிந்து கொள்ளுமோ..? அது இறைவனுக்கே புரியாத புதிர். மனிதர்களைப் படைத்த இறைவன் கூட நினைத்திருக்க மாட்டார். மனிதர்கள் இப்படி நிறம் மாறுவார்கள் என்று அப்போதே தெரிந்திருந்தால், மனிதன் என்ற ஒரு பிறப்பையே அவர் உருவாக்கியிருக்க மாட்டார்.
“பார்க்குற பார்வையிலேயே எரிச்சுடுவ போல..?” என்றான் பிரவீண் நக்கலாய்.
“என்ன நக்கலா..? நடக்காத கல்யாணத்துக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா..? எப்படியும் கல்யாணம் நின்னுடும். எதுக்கும் உன் தங்கச்சியை பத்திரமா பார்த்துக்கோ. கல்யாணம் நின்ன சோகத்துல ஏதாவது பண்ணிகிட்டா… அப்பறம் அதுக்கும் நான் பொறுப்பில்லை..!” என்றா திவ்யா நக்கலாக.
“நீயும் எதுக்கும் பத்திரமா இருந்துக்க. கல்யாணம் நல்லபடியா நடக்கப் போகுது. அதைப் பார்த்து உன் இதயம் வெடிக்கப் போகுது. அதனால நான் என்ன சொல்றேனா..? இப்போவே போய் ஒரு நல்ல ஹாஸ்பிட்டலா பார்த்து சேர்ந்துக்கோ..!” என்று பிரவீணும் விடாமல் அவளை வெறுப்பேற்றினான்.
“ரொம்ப அகம்பாவத்துல ஆடாத. உன்னோட இந்த சிரிப்பு நிரந்தரம் இல்லை..!” என்றாள் திவ்யா.
“அப்படியா..? அதையும் பார்த்துக்கலாம். கண்டிப்பா கல்யாணத்துக்கு நீயும்..” என்று நிறுத்தியவன்,
திவ்யா முறைத்துப் பார்க்கவும்,
“வந்துடாத..! உன்னை மாதிரி விஷக் காத்து எல்லாம் கல்யாணத்துக்கு வந்தா, அங்க இருக்குற யாருக்கும் நல்லது இல்லை..!” என்றான் பிரவீண்.
“ஏய்..!!!!” என்று திவ்யா கோபமாய் கத்த,
“அட ச்சீ வாயை மூடு..! நானும் போனாப் போகுதுன்னு பார்த்தா ரொம்பத் தான் ஆடுற. இதுவரைக்கும் நீ செஞ்ச எதுவும் எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா..? அதையெல்லாம் அசால்ட்டா ஹேண்டில் பண்ணது யாருன்னு நினைக்கிற….கண்டிப்பா நான் இல்லை. அதோ அங்க நிக்குறானே விஜய்… அவன் தான். நீதான்னு தெரிஞ்சும் உன்னை மட்டும் ஏன் சும்மா விட்டு வச்சிருக்கான் தெரியுமா…?” என்று நிறுத்தியவன்,
“உன்னையெல்லாம் ஒரு ஆளாவே மதிக்கலை. அப்படி மதிச்சா அது எங்களுக்குத் தான் அசிங்கம்..!” என்றான் பிரவீண்.
“இதுக்கெல்லாம் அனுபவிப்பிங்கடா…! எப்படி இந்த கல்யாணம் நடக்குதுன்னு நானும் பார்க்குறேன்..!” என்று கோபமாய் சொன்னவள், அதே கோபத்துடன் வீட்டிற்கு சென்றாள்.
விஜய்யின் திருமணம் நெருங்க நெருங்க திவ்யாவிற்கு தான் பித்துப் பிடித்ததைப் போல் இருந்தது. ஏற்கனவே குதித்துக் கொண்டிருந்தவளுக்கு, இன்று பிரவீணின் பேச்சு தூபமாய் அமைய, அவள் நேராக வந்தது கனகவேலிடம் தான்.
“இப்ப உங்களுக்கு சந்தோஷமா..? இதைத்தான எதிர்பார்த்திங்க…! அந்த கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. என்ன பண்ண போறீங்க..? அந்த பிரவீண் இன்னைக்கு என்கிட்டயே சவால் விட்டுட்டுப் போறான்..! நீங்க ஒரு அமைச்சரா இருந்து என்ன பிரயோஜனம்..?” என்று ஆங்காரமாய் கத்தினாள் திவ்யா.
“திவ்யா..! எதுக்கு இப்படி ஒரு ஆங்காரம். ஒரு பொண்ணுக்கு இவ்வளவு ஆங்காரம் ஆகாது..!” என்று அதட்டினார் ராதிகா.
“வாங்க தாய்க்குலமே…! இதெல்லாம் வாய் கிழிய பேசுங்க. ஆனா, நான் கேட்டதை மட்டும் செஞ்சுடாதிங்க…? எனக்கு அந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆகணும். உங்களால முடியுமா? முடியாதா..?” என்றாள் கனகவேலிடம்.
“உனக்கு மூளை இருக்குத்தான திவ்யா. அவனுக்கு தான் உன்னைய பிடிக்கலையே. அப்பறம் வீம்பா அவனைக் கட்டி எண்ணத்தை சாதிக்கப் போற..? இனி நானே நினைச்சாலும் நிறுத்த முடியாது..” என்றார் கனகவேல்.
“என்னப்பா…? பழசெல்லாம் மறந்து போயிடுச்சா..? நான் வேற நியாபகப்படுத்தனுமா..? இல்லை நடந்த எதுவும் எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறிங்களா..? உங்களால முடியாத காரியம்ன்னு ஒன்னு இல்லவே இல்லை. ஒரு காரியத்தை நடத்திக் காட்ட, நீங்க எந்த அளவுக்கு போவிங்கன்னு மத்தவங்களுக்குத் தான் தெரியாது. பெத்த பொண்ணு எனக்குமா தெரியாது. அந்த விஜய் என் கழுத்துல தான் தாலியைக் கட்டனும். இது மட்டும் நடக்கலை, நீங்க என்னை கொலைகாரியா தான் பார்ப்பிங்க..!” என்று கத்திக் கொண்டிருக்கும் போதே,
“சார்..! சிஎம் லைன்ல இருக்காரு..!” என்று கனவேலின் மேனேஜர் அவரிடம் போனை கொடுக்க,
“சிஎம்மா…?” என்று பரபரப்புடன் போனை வாங்கினார் கனகவேல்.
“சொல்லுங்க தலைவரே..!” என்றார் பணிவாய்.
“கனகு அங்க என்ன பிரச்சனை..? RRS குடும்பத்தோட உனக்கு என்னய்யா பிரச்சனை..?” என்றார் எடுத்த எடுப்பில்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை தலைவரே..!” என்றார் கனகு.
“பிரச்சனை இல்லாமத்தான் விஷயம் என் காது வரைக்கும் வருதா…?” என்றார் சிஎம்.
“யார் என்ன சொன்னாங்க தலைவரே..?” என்றார் கனகு.
“எல்லாம் அந்த ரத்னவேல் தான்ய்யா..! அவங்க வீட்டு கல்யாணத்துல பிரச்சனை பண்றியாமே…? ஏற்கனவே கட்சியில நிலைமை சரியில்லை. இதெல்லாம் தேவையாயா உனக்கு. இந்த இடத்துக்கு வர எவ்வளவு பாடுபட்ட. அதெல்லாம் ஒரேயடியா ஒண்ணுமில்லாம ஆக்கப் போறியா..?” என்றார்.
“அப்படி எல்லாம் இல்லை தலைவரே..!”
“கல்யாணத்துல மொத்த மீடியாவும் இருக்கும்ய்யா. ஏதாவது ஏடாகூடமா செஞ்சு வச்ச, உன்னோட அரசியல் வாழ்க்கையே அவ்வளவு தான். எதை சாக்கா வச்சு வம்பை இழுக்கலாம்ன்னு எதிர்க்கட்சிகாரன் வேற காத்திருக்கான். அவனுகளுக்கு கதவை நீயே திறந்து விடாதையா..! அந்த ரத்னவேல் குடும்பத்தைப் பகைச்சுகிட்டு ஒன்னும் செய்ய முடியாது…” என்று சிஎம் சொல்ல,
பல்லைக் கடித்த கனகவேல்.. “சரிங்க தலைவரே..!” என்பதோடு முடித்துக் கொண்டார்.
அவர் பேசி முடித்து போனை கொடுப்பதற்கு முன்னால்,
“நான் கேட்டத்துக்கு என்ன பதில் டாடி..?” என்றாள் திவ்யா.
“கொஞ்ச நேரம் வாயை மூடு திவ்யா. சிஎம் வரைக்கும் தகவல் போயிருக்கு. எனக்கு என் பதவி தான் முக்கியம். இந்த பதவிக்கு வர நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருக்கேன்னு எனக்குத் தான் தெரியும். அந்த உழைப்பை எல்லாம் ஒரேயடியா தூக்கிக் குடுத்துட முடியாது..” என்றார் கனகு.
“ம்ம்..! பெரிய உழைப்பு..?” என்று திவ்யா அவரை இகழ்ச்சியாய் பார்க்க,
“திவ்யா..????” என்றார் கனகு.
“கட்டின பொண்டாடிக்கு அவுசாரி பட்டம் வாங்கிக் கொடுத்து, அந்த அனுதாபத்துல அரசியல்ல ஜெயிச்சவர் தான நீங்க..? இதுல என்ன பெரிய உழைப்பைக் கண்டுட்டிங்க..?” என்றாள் கோபமாய்.
“திவ்யா..!” என்று அவளை அறைந்திருந்தார் ராதிகா.
“என்ன புருஷனை சொன்ன உடனே கோபம் வருதா..? நான் ஒன்னும் இல்லாததை சொல்லலையே. நடந்ததைத் தான சொல்றேன். இது போதுமா..? இல்லை இன்னும் கொஞ்சம் சொல்லனுமா..?” என்றாள்.
“பெத்த அப்பாவை பேசுற பேச்சா இது..?” என்று ராதிகா கண் கலங்க,
“அவரோட பொண்ணு நானும் அப்படித்தான இருப்பேன். அவர் ரத்தம் தான என் உடம்புல ஓடுது. அவர் செஞ்சா சரி. அதே விஷயத்தை நான் செஞ்சா தப்பு. என்னங்கடா உங்க நியாயம்..?” என்றாள் திவ்யா.
“நீ வரம்பு மீறி பேசுற திவ்யா..!” என்றார் கனகு.
“நீங்க தான் வரம்பு மீற வைக்குறிங்க. அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது..?” என்றாள் எகத்தாளமாய்.
“நீயெல்லாம் ஒரு பொண்ணாடி..?” என்று ராதிகா கண்ணீர் வடிக்க,
“சும்மா நடிக்காதம்மா..! இந்த மாதிரி அப்பனுக்கு பொறந்த எந்த பொண்ணும் இப்படித் தான் இருப்பா…” என்று நிறுத்தியவள்,
“இல்லையில்ல..! எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.. அப்படின்னு சும்மாவா சொன்னாங்க. உன்னோட வளர்ப்பு சரியில்லை. என் உடம்புல ஓடுற, இதோ இவர் ரத்தம் சரியில்லை… அதுக்கு நான் என்ன பண்ண முடியும். நானே நினைச்சாலும் என்னோட குணத்தை மாத்த முடியாது. பச்சோந்தி அப்பாக்கு பொறந்த பொண்ணும், பச்சோந்தி பொண்ணுதான். நிறத்தை தான் மாத்த முடியும். குணத்தை….மாத்தவே முடியாது…” என்று உதட்டப் பிதுக்கினாள்.
கனகவேல் கூசிக் குறுகிப் போனார். ராதிகாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திவ்யா இப்படி எல்லாம் பேசுவாள் என்று அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
“நான் பேசுறது நூத்துக்கு நூறு சரி. என்னால இனி மாற முடியாது. எனக்கு விஜய் வேணும்..!” என்றாள் தீர்மானமாய்.
“புரிஞ்சுக்கோ திவ்யா..! விஜய் மருமகனா வரதுல எனக்கும் சந்தோசம் தான். ஆனா, அவனுக்கு உன்னைப் பிடிக்கலை. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்..! இப்ப எப்படி முடியும்…” என்று மன்றாடினார்.
“அப்போ முடியாதுன்றிங்க..?” என்றாள் யோசனையாய்.
“ஆமா..!” என்றார் ராதிகா.
“அப்ப சரி…! எப்படிப் பார்த்தாலும் நீங்க நடத்திக் குடுக்கப் போறதில்லை. அதனாலே நானே நடத்திக்கிறேன்..!” என்றாள் முடிவாய்.
“என்னால எந்த பிரச்சனையும் வராதுன்னு தலைவர்கிட்ட வாக்குக் குடுத்திருக்கேன். இந்த ஒரு விஷயத்துல மட்டும் அப்பாவுக்காக கொஞ்சம் யோசிமா..!” என்று இறங்கி வந்தார் கனகு.
“உங்களால பிரச்சனை வராதுன்னு தான சொல்லி இருக்கீங்க. என்னால பிரச்சனை வராதுன்னு நீங்க சொல்லலையே…?” என்று அவரை நக்கலுடன் பார்த்தவள், வந்த வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.
“இதுக்குத்தான் சொன்னேன்.. சென்னையை விட்டு வர வேண்டாம்ன்னு. நீ எங்க கேட்குற..?” என்று நொந்து கொண்டார் கனகவேல்.
“அவ கேட்டதை நீங்க செஞ்சிருந்தா இந்த பிரச்சனை இல்லை. இன்னைக்கு நான் வளர்த்ததே சரியில்லைன்னு சொல்லிட்டுப் போறா. ஒருத்தியைத் தூக்கி குடுத்தது பத்தாதா..? இருக்குற இவளையும் தூக்கிக் குடுக்க என்னால முடியாது. என் பொண்ணுக்கு எதுவும் ஆகக் கூடாது. அதுக்கு நீங்கதான் பொறுப்பு..!” என்றபடி ராதிகா செல்ல, கனகவேல் நிலைமையை சொல்லித் தெரிய வேண்டுமா என்ன..?
அங்கே விஜய்யின் வீட்டில், திருமண ஏற்பாடுகள் படு ஜோராக நடந்து கொண்டிருந்தது.
“எங்க? விஜய்யையும்,துளசியையும் இன்னமும் காணோம்..? ரெண்டு நாள் தான் இருக்கு. இன்னைக்கும் ஆபீஸ் போகனுமா..?” என்று வள்ளி குறைபட,
“ஆபீஸ் போகலைம்மா..! சின்னதா ஒரு மீட்டிங். சீக்கிரம் வந்துடுவோம்ன்னு சொன்னங்க..!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைந்தனர்.
“துளசி இனி நீ வெளிய எல்லாம் போகக் கூடாது. விஜய் உனக்கும் தான். ஆபீஸ் வேலையெல்லாம் தூக்கி ஓரம்கட்டி வைங்க. விளையாட்டு காரியமில்லை. எங்க காலத்துல எல்லாம் இப்படியா இருந்தது. இந்த காலத்து பிள்ளைங்க, கல்யாணத்துக்கு முதல் நாள் வரைக்கும் வெளிய சுத்துறிங்க…” என்று வள்ளிப் பாட்டி சொல்ல,
“எங்களைப் பார்த்தா ஊர் சுத்திட்டு வந்த மாதிரி இருக்கா பாட்டி..?” என்றாள் சலிப்புடன்.
‘அப்படி ஊர் சுத்திட்டு வந்திருந்தா தான் பரவாயில்லையே. என் பேரன் உன்னை சுத்தி சுத்தி வந்திருப்பான். அதுக்கும் வழியில்லை..’ என்று மனதில் நினைத்த வள்ளிப் பாட்டி,
“சரி சரி..! பேச்சுக்கு பேச்சு பேசாம, போய் குளிச்சுட்டு வா…! விஜய் நீயும் தான்..!” என்றார்.
விஜய் எதுவும் பேசாமல் மேலே செல்ல, அவனை யோசனையுடன் பார்த்தனர் அனைவரும். துளசி கூட அப்படித்தான் பார்த்தாள்.
‘என்னாச்சு இவனுக்கு..? மூஞ்சியத் தூக்கி வைக்க வேண்டிய நானே சும்மா இருக்கேன். இவன் ஓவராத்தான் சீனைப் போடுறான்…எல்லாம் என் நேரம்..’ என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றாள் துளசி.
“அம்மா, எல்லாம் சரியா நடக்கும்ல..!” என்றார் வித்யா.
“அதெல்லாம் சரியா நடக்கும். நீ எதுவும் உளறாம இரு..!” என்று வித்யாவின் வாயை அடைத்து விட்டார் வள்ளி.
அறைக்கு சென்ற விஜய்க்கு எதுவோ சரியில்லை என்பதைப் போல் தோன்றிக் கொண்டே இருந்தது. துளசியிடம் பேசியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கு.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்க,
“கதவு திறந்து தான் இருக்கு, உள்ள வாங்க..!” என்றாள்.
விஜயோ மீண்டும் தட்டினான்.
“அதான் சொல்றேன்ல..!” என்றபடி துளசி கதவைத் திறக்க, அங்கு விஜய்யைப் பார்த்து புருவம் நெரித்தாள்.
“என்ன வேணும்..?”
“உன்கிட்ட பேசணும்..!” என்றான்.
“எதைப்பத்தி..?”
“சொன்னாத்தான் வருவியா..?” என்றான்.
“கண்டிப்பா..சொன்னா மட்டும் தான் வருவேன். அதுவும் கூட கொஞ்சம் யோசனை தான்..!” என்றாள் திமிராய்.
அவன் அவளை முறைக்க,
“என்ன விஷயம்..?” என்றாள்.
“எனக்கு ஒரு விஷயம் தெரியனும்..?” என்றான்.
“என்ன தெரியனும்..?”
“நமக்குள்ள எதுக்கு சண்டை வந்துச்சு..? எப்ப வந்துச்சு..? அதையேன் இன்னும் மனசுல வச்சுகிட்டே இருக்க..?” என்றான் பட்டென்று.
அவள் புரியாமல் முழிக்க,
“சொல்லு..!” என்றான் இறுகிய முகத்துடன்.
“என்ன சண்டை..??” என்று அவள் மீண்டும் புரியாமல் முழிக்க,
“துளசி..! பாட்டி உன்னை சீக்கிரம் கீழ கூப்பிடுறாங்க. இங்க என்ன பண்ணிட்டு இருக்க..?” என்றபடி சரியாக பிரவீண் வந்தான்.
“இந்த பாட்டி வேற…? நான் குளிச்சிட்டு வந்துடுறேன்..!” என்றபடி சென்று விட்டாள் துளசி. விஜய் கேட்ட கேள்வியும், அதற்கான பதிலும் அப்படியே காற்றோடு போனது.
“என்ன விஜய்..?” என்றான் பிரவீண்.
“ஒண்ணுமில்லை..!” என்று பல்லைக் கடித்தான் விஜய்.
“நீயும் கிளம்பி வா..!” என்று சொல்ல, விஜய் அறைக்குள் சென்று விட்டான். அப்போது தான் நிம்மதியான மூச்சே வந்தது பிரவீணுக்கு.
‘ஜஸ்ட் மிஸ்டா…! நீ கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும் எல்லாமே சொதப்பியிருக்கும்..!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் பிரவீண். விதி யாரை விட்டது..?