பூ 13:
ரத்னவேல் குடும்பமே எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. இரு மனங்களின் எதிர்ப்பும் அந்த குடும்ப சந்தோஷத்தில் காணாமல் போயிருந்தது. விடிந்தால் விஜய குமார்- விஷ்வ துளசி கல்யாணம். அந்த கல்யாண அரங்கமே கோலாகலமாக இருந்தது.
நண்பர்களின் வருகையில் விஜய்யின் மன இறுக்கம் கூட கொஞ்சம் குறைந்திருந்தது. மனதில் வேறு எண்ணங்கள் எதுவும் தோன்றவில்லை. எதுவும் தோன்றாமல், பிரவீண் பார்த்துக் கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
“என்ன வள்ளி..? பேரனுக்கு கல்யாணம்ன்னு சொன்ன உடனே உனக்கு இளமை திரும்பிடுச்சு போல. உன்னைப் பார்த்தா வயசான கிழவின்னு யாரும் சொல்ல மாட்டாங்க. அப்படியே கும்முன்னு இருக்கியே..?” என்று ரத்னவேல் அந்த வயதிலும் வம்பிழுக்க,
“சும்மா இருங்க. உங்களுக்கு இப்பதான் வயசு திரும்புதாக்கும்..!” என்று நொடித்துக் கொண்டவர்,
“இந்த நாள் வராதான்னு நாம எவ்வளவு ஏங்கியிருக்கோம்..? இனி விஜய் வாழ்க்கையைப் பத்தி கவலையில்லாம நிம்மதியா இருக்கலாம். துளசி பேசுறதுதான் பட்டுப்பட்டுன்னு பேசுவாளே தவிர மனசுல ஒன்னும் வச்சுக்க மாட்டா. பொறுப்பா இருப்பா..!” என்று வள்ளி சொல்ல,
“இதெல்லாம் என்னைக்காவது அவகிட்ட சொல்லியிருக்கியா..? எப்பப் பார்த்தாலும் அவளைப் பார்த்த உடனே திட்ட வேண்டியது. இப்போ என் பேத்தியைப் போல உண்டான்னு சொல்ல வேண்டியது..?” என்று ரத்னவேல் சொல்ல,
“இதையெல்லாம் அவ முன்னாடி சொன்னா அவ்வளவு தான். இப்ப கொஞ்சமா ஆடுறா. அப்பறம் சலங்கை கட்டிட்டு ஆடுவா..!” என்ற வள்ளிப் பாட்டியின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம் துளசியை நினைத்து.
அங்கே துளசியின் நிலைமையோ அதோ பரிதாபமாய் இருந்தது. போட்டோ சூட் என்ற பெயரில் அவளை படுத்தி எடுத்தனர். விஜய்யின் அருகில், அவன் அணைப்பில் என் நிற்கும் போதெல்லாம், ஏதோ முள்ளின் மேல் நிற்பதைப் போல் இருந்தது அவளுக்கு. சொல்ல முடியாத, வெளியே காட்ட முடியாத அவஸ்தை அவளுடையது. அவளின் நிலையைத் தெரிந்து கொண்டானோ என்னவோ, அதிகம் அவளைப் படுத்தவில்லை விஜய்.
எப்படியோ அனைத்தயும் முடித்து, இப்போது தான் மணப்பெண் அறைக்கு வந்திருந்தாள் துளசி. துளசிக்கு அதிக அளவில் பிரண்ட்ஸ் இல்லை என்றாலும், ரோஸ்லின் ஒருத்தியே போதும் அத்தனை பேரின் இடத்தையும் நிரப்புவதற்கு.
ரோஸ்லினுக்கு சில விஷயங்கள் புரியாமல் இருந்தாலும், துளசியின் வாழ்க்கை விஜய்யுடன் சேர்ந்ததில் ரோஸ்லினுக்கு மகிழ்ச்சியே.
“எதுக்குடி முகத்தை ஒரு மாதிரி வச்சிருக்க..? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா..?” என்றாள் ரோஸ்.
“உடம்புக்கு எல்லாம் ஒன்னும் பண்ணலை ரோசு. ஆனா, மனசு தான் கிடந்தது தவிக்குது. எனக்கு என்னமோ எதுவுமே சரியாப் படலை. விஜய் ரொம்ப சாதரணமா இருக்கான். எப்படி அவனால மட்டும் இப்படி இருக்க முடியுது. கொஞ்சம் கூட ஒரு குற்ற உணர்ச்சியே இல்லை அவன் முகத்துல..?” என்றாள் துளசி.
“நீ தேவையில்லாம யோசிக்கிற துளசி. அதுக்காக விஜய் அண்ணா கடந்து போன பக்கத்தையே நினைச்சு அழுதுட்டு இருக்கனும்ன்னு சொல்றியா..? அவர் எப்படி இருந்தார்ன்னு உனக்குத் தெரியும்ல ஆனா, இப்போ இருக்குற விஜய் அண்ணா பார்க்க எனக்கே புதுசா தெரியறார். அது மட்டும் தான் எனக்குப் புரியலை..!” என்றாள் ரோஸ்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே துளசியின் போனிற்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது.
“போன் ரிங்காயிட்டே இருக்கு. யார்ன்னு எடுத்துப் பேசு..!” என்றாள் ரோஸ்லின்.
“யார்ன்னு தெரியலை. புது நம்பரா இருக்கு..!” என்ற துளசி, யோசனையுடன் போனை எடுத்து காதில் வைத்தாள்.
அவள் வைத்தது தான் தாமதம்,
“என்னடி புதுப்பொண்ணு..? ரொம்ப சந்தோஷமா இருக்க போல. நான் அன்னைக்கு அவ்வளவு சொல்லியும் நீ கேட்கலை இல்ல… நீயா இந்த கல்யாணத்தை நிறுத்தியிருந்தா, மேடை வரைக்கும் வந்து அசிங்கப்படுறதில் இருந்து தப்பிச்சிருப்ப. இப்ப அந்த வாய்ப்பும் போய்டுச்சு. எப்படியும் இந்த கல்யாணம் நடக்காது. அப்பறம் எதுக்குடி இவ்வளவு மேக்கப்பு…” என்று ஆங்காரமாய் கத்தினாள் திவ்யா.
அதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கி, துளசியின் முகத்தில் திமிர் வந்து அமர்ந்து கொண்டது.
“என்ன மேடம்..? நேர்ல வருவிங்கன்னு பார்த்தா…இப்படி போன்லயே மிரட்டிட்டு இருக்கீங்க..?” என்றாள் எகத்தாளமாய்.
“என்ன துளசி, கிண்டலா..?” என்றாள் திவ்யா கோபமாய்.
“பார்றா… கரெக்ட்டா கண்டு பிடிச்சுட்ட. நான் தான், உன்னைக் கிண்டல் பண்றேன்னு தெரியுதுல்ல. அப்பறம் ஏண்டி வழிய வந்து வாங்கிக் கட்டுற..?” என்றாள் துளசி.
“நீ பேசுடி..! எல்லாம் நாளைக்கு வரை மட்டும் தான். அப்பறம் அழுதுகிட்டு ஒரு மூலையில உட்காரப் போறடி என் அறிவு கொழுந்தே..?” என்றாள் திவ்யா.
“அதை நான் பார்த்துக்கறேன். சரி சரி…என்ன பிளான் பண்ணியிருக்க..? என்னைக் கடத்த போறியா..? இல்லை விஜய்யைக் கடத்தப் போறியா..? ஏன் கேட்குறேன்னா.. நீ தெளிவா சொல்லிட்டா, நாங்க ரெடியா இருப்போம் பாரு..!” என்றாள் கிண்டலாய்.
“துளசி..!!” என்று ஆங்காரமாய் கத்தினாள் திவ்யா.
“காது வலிக்குதுடி. மெதுவா பேசு..!” என்றாள் துளசி.
“உங்க ஆத்தாக்காரி புருஷன் இருக்கப்பவே இன்னொருத்தனை சேர்த்துகிட்டா. எப்படியோ விஷயம் வெளிய தெரிஞ்ச உடனே, எங்கப்பனை கழட்டி விட்டுட்டு, உங்கப்பனை கட்டிகிட்டா. உங்கம்மாவுக்கு ரெண்டு புருஷன். நீயும் ரெண்டா தாரம்…அட அட..என்ன குடும்ப ஒத்துமை..?” என்று, துளசியை அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தால் திவ்யா. ஆனால் திவ்யா நினைத்தது, நடந்த பழைய விஷயங்கள் துளசிக்குத் தெரியும் என்று. ஆனால் அவளுக்குத் தான், அம்மாவின் பழைய கதையே தெரியாதே. இப்போது, வாயடைத்துப் போனது துளசி தான்.
“ஏய்..? என்ன புதுக் கதை சொல்ற..? எங்கம்மாவைப் பத்தி பேசுற அருகதை உனக்கு இல்லை..!” என்று கோபத்தில் பேச,
“பார்டா..! அப்போ விஷயமே தெரியாதா…? விளங்கிடும்..” என்ற திவ்யா,
“நல்லா சொல்றேன் கேட்டுக்கோ துளசி, உங்கம்மாவோட முன்னால் புருஷன் தான், என்னோட இந்நாள் அப்பா…!” என்றாள் ஏற்ற இறக்கத்துடன்.
“நோ..!!” என்றாள் துளசி.
“எஸ்..! ஒருவகைக்கு பார்த்தா நம்ம ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிட்டோம்ல..” என்றாள் திவ்யா.
அவள் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கே துளசிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அதிலும் தன் அம்மாவைப் பற்றி அவள் சொன்னதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
ஒரு நிமிடம் கண்களை மூடி நன்றாக யோசித்தாள் துளசி. அவள் நியாபகப்படுத்திப் பார்த்தவரை, அவளுக்கு ஒன்றும் புலப்படவில்லை. வித்யாவைப் பற்றி அப்படி ஒரு கோணத்தில் அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதிலும் சுரேஷ், அவரைப் பற்றி ஒரு குறை சொல்ல முடியாது அவளால். தேடினாலும் அவரிடம் அழுக்கைக் கண்டு பிடிக்க முடியாது.
“என்ன துளசி..? சத்தத்தையே காணோம். ஒருவேளை சத்தமில்லாம அழுதுட்டு இருக்கியோ..?” என்றாள் நக்கலுடன்.
சட்டென்று சுதாரித்த துளசி,
“நான் ஏண்டி அழப் போறேன். நீ சொல்ற கதையை எல்லாம் கேட்டு, ஐயோ, அம்மான்னு அழறதுக்கு நான் ஒன்னும் அம்மாஞ்சி இல்லை, துளசிடி. நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும், அதுல என் அப்பா-அம்மா தப்பு பண்ணியிருக்க மாட்டாங்க. இதோ இப்படி கேவலமான புத்தியோட திரியறியே நீ, உங்க அப்பா வேணுமின்னா அப்படி இருந்திருக்கலாம். எங்கப்பாவுக்கு சுட்டுப் போட்டாலும் அந்த புத்தி வராது.வைடி போனை..!” என்று கட் பண்ணி விட்டாள் துளசி.
என்னதான் திவ்யாவிடம் பேசிவிட்டு வைத்தாலும், மனதில் ஏதோ ஒரு மூலையில் கணம் கூடியது அவளுக்கு.
“என்னாச்சு துளசி? யாரு போன்ல..?” என்றாள் ரோஸ்.
‘ஒண்ணுமில்லை’ என்பதைப் போல் அவள் தலை மட்டும் ஆட, முகம் உணர்ச்சித் துடைத்திருந்தது.
அங்கே திவ்யாவோ கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சொன்னா அந்த துளசி..?” என்ற விமலின் முகத்தில், நரியின் தந்திரம்.
“அவளுக்கு இருந்தாலும் இவ்வளவு நம்பிக்கை ஆகாது. எவ்வளவு திமிரா பேசுறா..?” என்றாள் திவ்யா.
“உன்னை விடவா..?” என்றான் விமல்.
“இப்போ இது ரொம்ப முக்கியமா..? எல்லா வகையிலும் முயற்சி பண்ணி பார்த்தாச்சு. அந்த பிரவீண் எல்லா இடத்துலையும் முட்டுக் கட்டை போட்டு வச்சிருக்கான். இந்த கல்யாணத்தை நிறுத்த நீ தான் ஒரு வழி சொல்லணும்..?” என்றாள் விமலிடம்.
“நானா..?” என்றான்.
“நீதான். நீ மட்டும் தான் எனக்கு உதவி செய்ய முடியும். பிளீஸ் விமல்.. எனக்கு விஜய்யைக் கல்யாணம் பண்ணியே ஆகணும். அதுக்கு என்கிட்டே ஒரு வழி இருக்கு. அந்த மண்டபத்துக்கு மட்டும் எப்படியாவது கூட்டிட்டு போ..!” என்றாள்.
“என்னால முடியாது திவ்யா. மாமாவுக்குத் தெரிஞ்சா என்னை கொன்னே போடுவார்.!” என்று விமல் விலகிக் கொண்டான். ஆனால் அவன் மனதில் திவ்யாவுக்கு மேல் திட்டம் தீட்டி வைத்திருப்பது அவர்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.
விடிந்தால் திருமணம், ஆனால் விஜய்க்கு நிறைவாக இல்லை.ஏனோ மனம் கொஞ்சம் வெறுமையாய் உணர்ந்தது. அந்த திருமண மண்டபத்தின் மொட்டைமாடியில் தனிமையில் இருந்தான் விஜய். ஏனோ இந்த தனிமை அவனுக்கு கொஞ்சம் இனிமையாக இருந்தது என்று கூட சொல்லலாம்.
மனதில் எப்போது வெறுமையாய் உணர்ந்தாலும், அவனுக்குத் தனிமை தேவைப்படும். அவனை அவனே சரி செய்து கொள்வான். அவனுடைய இயல்பு கொஞ்சம் மாறியிருந்தது. மண்டபமே வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருக்க, அதையெல்லாம் வெறும் பார்வையாக மட்டுமே பார்த்திருந்தான் விஜய்.
“என்னாச்சு விஜய்..? இந்த நேரத்துல இங்க என்ன பண்ற..?” என்றபடி வந்தான் பிரவீண்.
“ஜஸ்ட் காத்து வாங்கலாம்ன்னு வந்தேன்..!” என்றான்.
“போட்டோ ஷூட் எல்லாம் எப்படிப் போச்சு..?” என்றான்.
“எப்படிப் போயிருக்கும்ன்னு நீ நினைக்கிற..? உன் தங்கச்சு முகத்துல பேருக்கு கூட சிரிப்பு இல்லை. ஏதோ என் பக்கத்துல வந்தாலே, வரக் கூடாதவங்க பக்கத்துல வந்த மாதிரி ஒரு ரியாக்சன் காட்டுறா..? நான் தொட்டா அவளுக்கும் எரியும் போல, அப்படியே முகமெல்லாம் சிவந்து போய்டுது..!” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.
“அவ கோபத்துல இருக்கா விஜய். கல்யாணத்துக்கு அப்பறம் எல்லாம் சரியாகிடும்..!” என்றான் பிரவீண்.
“எனக்கு என்னமோ இது வெறும் கோபம் மட்டும் இல்லை. அதையும் மீறி வெறுப்பா தான் தெரியுது..!” என்றான் விஜய்.
“உனக்கு எப்படியோ தெரியட்டும். விடிஞ்சா கல்யாணம்.இப்ப ஏன் தேவையில்லாததை எல்லாம் மனசுல போட்டுக் குழப்பிக்கிற. போய் நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடு விஜய்..!” என்றான்.
“உனக்கு தான் ரெஸ்ட் தேவை பிரவீண். நான் பார்க்க, நீதான் ரொம்ப அலையற. நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு பிரவீண்..!” என்றான் விஜய் அக்கறையாக.
முன்னாடி எல்லாம் விஜய் இப்படி பொறுமையாக பேசிக் கொண்டிருக்க மாட்டான். அவனின் செயலில் எல்லாம் ஒரு அதிரடி இருக்கும். ஆனால் இப்போது அதெல்லாம் இல்லாமல் அவன் அமைதியாக இருப்பது பிரவீனுக்கே ஒரு மாதிரியாகத் தான் இருந்தது.
இருந்தாலும் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தான் பிரவீண். அவனுக்கு இப்போது வேண்டியது எல்லாம் விஜய்-துளசி கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது தான். விடிந்தால் அதுவும் சிறப்பாக நடந்து முடிந்து விடும் என்று முழுமையாக நம்பினான் பிரவீண்.அவனின் நம்பிக்கைக்காகவாவது எந்த பிரச்சனையும் நடக்காமல் இருக்க வேண்டும்.