உ
EPISODE 01
“அம்மா…. பால்!”
சைக்கிளில் வந்த பையன் தரையில் ஒற்றை காலை மட்டும் ஊன்றி, சற்றே எக்கி அந்த கதவில் தொங்கிக்கொண்டிருந்த கூடையில் பால் பாக்கெட்டை போட்டதும், தாழ்ப்பாளை வேகமாய் இருமுறை தட்டிவிட்டு, அத்தோடு தன் வேலை முடிந்ததென அடுத்த வீட்டை பார்க்க சைக்கிளை மிதித்துக்கொண்டு பறந்தான்.
உள்ளிருந்து, “இதோ வரேன்…” என குரல் கொடுத்துக்கொண்டே மெல்லிய வேகத்துடன் நடந்து வந்தார் விஜயவேணி.
கொஞ்சமே கொஞ்சம் கணத்த சரீரம். சாதாரண காட்டன் புடவையில் கூட பளிச்சென்று இருக்கும் தோற்றம் அவருக்கு. கழுத்தில் ஒரு தங்க சங்கிலி, கைகளில் ஒரு ஜோடி தங்க வளையல், காதில் சின்னதாய் தோடு… இத்தனையும் தாண்டி, அவர் நெற்றியில் கீற்றென வெண்கோடாய் விபூதி!
கணவரை விபத்தில் இழந்து, கையில் ஒரு வயதே நிரம்பிய மகனுடன், அவர் தனித்து நின்றபோது அவருக்கு வயது வெறும் பத்தொன்பது தான்!
முப்பது வருடங்களுக்கு முன்பே காதலித்து கலப்பு திருமணம் செய்தவர் அவர். இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி வாழ ஆரம்பித்தவரின் வாழ்க்கை அத்தனை சீக்கிரத்தில் முடியும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
அதன்பின்னே யாரையும் சார்ந்து நில்லாமல், தன் மகனுடன் தன் வாழ்வை பிணைத்துக்கொண்டவருக்கு, இரு வீட்டு சொந்தங்களிடம் இருந்தும் பெரிதான ஒட்டுதல் கிடைக்கவில்லை.
கணவரின் இறப்பால், விபத்து காப்பீட்டு தொகையாக கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை சேமிப்பில் போட்டுவிட்டு, மீதியில் திருச்சியருகே தனி வீடாக பார்த்து வாங்கி, அங்கேயே தன்னை இருத்திக்கொண்டார்.
இவர் வாங்கிய புதிதில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் ஒரு வீட்டை பார்ப்பதே அரிதாக இருக்க, இப்போதோ பக்கத்து வீட்டுக்காரன் தும்மும் சத்தம் கூட கேட்குமளவு அத்தனை நெருக்கத்தில் எக்கச்சக்க வீடுகள்.
பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரை அத்தனையும் அருகருகே வந்துவிட்டது. வீட்டை வாங்கும்போது கொடுத்த விலையை விட இப்போது அதன் மதிப்பு மும்மடங்குக்கும் மேல் உயர்ந்துவிட்டது.
வீட்டை விட்டு வெளியே வந்தவர், வாசலின் இருபுறமும் நிறைந்து பூத்து குலுங்கும் ஜாதிமல்லி கொடியை கண்களில் நிரப்பிக்கொண்டு கூடையில் இருந்த பால் பாக்கெட்டை எடுக்க, பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வந்தது.
“இந்த பயலை பாருங்களேன் க்கா, ஆறு மணிக்கு கொடுக்க வேண்டிய பாலை எட்டு மணிக்கு வந்து வீசிட்டு போறான்” பாக்கெட்டை கையில் எடுத்துக்கொண்டே பக்கத்து வீட்டு கௌசி விஜயவேணியிடம் குறைப்படிக்க,
“போறான் விடு, ஒரு நாள் தானே” என்றார் விஜயா.
“ம்ம்! நீங்க சொல்லுவீங்க ஒரு நாள் தானேன்னு! ஆனா, என் வீட்டுல இருக்குறது இருக்கே…! ஏழரை மணிக்கு சுட சுட காபி கைக்கு வரலன்னா, பேசியே சாவடிச்சுடும்!” என்று மெல்லிய குரலில் சொல்ல,
“நீ உன் புருஷனை சொல்றியா? இல்ல உன் மாமியாரை சொல்றியா?” என கேலியாய் கண்ணடித்தார் விஜயா.
“ம்ம்ம்? ரெண்டையும் தான்” என கௌசி நொடித்துக்கொள்ள, “அடிப்பாவி!” என அழகாய் சிரித்தார் அவர்.
இரு வீட்டிற்கும் நடுவே உள்ள காம்ப்பவுண்ட் சுவரில் இன்னும் சாய்ந்தபடி, “அப்பறம், இன்னைக்கு என்ன சமையல்?” என கௌசி இயல்பாய் கேட்பதாய் தோன்றினாலும், அவள் கண்களில் எள்ளல் தெரிந்தது.
“அது….?” என யோசித்த விஜயா, “அது, இனிதான் யோசிக்கணும் கௌசி” என்றிட, “மணி எட்டே கால் ஆச்சே க்கா? இன்னுமா யோசிக்கல?” என்றதும்,
“கொஞ்சம் வேலை இருக்கு இன்னைக்கு… அதான் லேட்டு! இனிமே போய் செய்யணும்” என்றார் அவசரமாய்.
“ம்ச்! பாவம்க்கா, உங்க பையன்!!! வீடு கூட்டி, பாத்திரம் தொலக்கி, பாத்ரூம் கழுவி, உங்க துணியெல்லாம் துவைச்சு, அதுக்கு பிறகு சமையல் செய்ய லேட் ஆக தானே செய்யும்!?” என்று வருந்துவதை போல கிண்டல் செய்ய, விஜயாவுக்கு முகம் சுருங்கியது.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, அவன் ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு ரூம்ல ஏதோ செஞ்சுட்டு இருக்கான்” என சமாளிக்கப்பார்க்க,
“சும்மா சொல்லாதக்கா! கொல்லை பக்கம் போய் பாரு, உன் புடவையை காயப்போட்டுக்கிட்டு இருப்பான்” என கிளுக்கி சிரிக்க, அதற்கு மேல் சமாளிக்க தெரியவில்லை அவருக்கு.
ஆனாலும், “ரொம்ப பேசாதடி! உனக்கெல்லாம் என் புள்ளையாட்டம் புருஷன் கிடைக்கலையேங்குற வகுத்தெரிச்ச!” என்று சொல்ல,
“ம்கும்! வயசுக்கு வந்த புள்ளையை கக்கத்துல வச்சுக்கிட்டு, இதுக்கு மேல தான் எனக்கு வகுத்தெரிச்ச வரப்போதாக்கும்? அடப்போக்கா!” என சலித்துக்கொண்டு காலை வேலையை கவனிக்க சென்றுவிட்டார் கௌசி.
கௌசி சென்றுவிட்டதும் வேகவேகமாய் வீட்டிற்க்குள் சென்றார் விஜயவேணி. வாய் அதுபோக்கில் “கண்ணா…. டேய் கண்ணா….” என அழைத்துக்கொண்டே செல்ல, ஹால், சாமியறை, இரு அறைகள், அடுக்களை என எங்கிலும் காணாத தன் மகனை தேடி பின்வாசலுக்கு சென்றார் விஜயவேணி.
அங்கே மடித்துக்கட்டிய லுங்கியும், கையில்லாத செந்நிற பனியனுமாய் அவருக்கு முதுக்காட்டி நின்றுக்கொண்டிருந்தவன், விஜயாவின் காட்டன் புடவையை நீருக்குள் முக்கி அலசிக்கொண்டிருக்க, “டேய் கண்ணா!” என விஜயா மீண்டும் அழைத்தார்.
‘சரக்..சரக்’ என்ற ஓசையுடன், “என்னம்மா?” என்ற அவனது ஓசையும் இணைந்தே வந்தது.
“என்னடா பண்ணிட்டு இருக்க?” கடுமையாய் கேட்க முயன்றார்.
“பார்த்தா தெரியலையாம்மா! உங்க கண்ணாடி எங்க?” என வேலையை நிறுத்தாது அவன் கேலி செய்ய,
“ப்ச்! இந்த லொள்ளு பேச்செல்லாம் வேண்டாம்! முதல்ல இப்படி வா!” என்றதும், “இருங்கம்மா! இந்த போர்வை, உள்பாவாடை மட்டும் அலசிட்டா வேலை முடிஞ்சுது!” என்றான் புடவையை உதறி கொடியில் தொங்கவிட்டபடி.
அரிசி களைந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டி பின்பக்கம் வந்த கௌசி இவர்கள் உரையாடலை கேட்டு நக்கலாய் சிரித்துக்கொண்டு செல்வதைக்கண்ட விஜயாவுக்கு, கோவம் ஏற,
“நீ முதல்ல வாடா இப்படி” என அவனது கரம் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார்.
அவர் பிடியில் இருந்து விலகாமல், “ஏன்ம்மா வேலை நேரத்துல கூப்புடுறீங்க? நியூஸ் முடிஞ்சுதுன்னா ‘வணக்கம் தமிழா’ பார்க்கலாம்ல? இன்னும் ரெண்டே துணி தான் இருந்துச்சு… விட்டா ஒரடியா முடிச்சுருப்பேன்…” என்று பேசிக்கொண்டே வர,
அதை கண்டுக்கொள்ளாது, “உன்னை யாருடா இந்த வேலையெல்லாம் செய்ய சொல்றா?” என்றார் விஜயா.
“நம்ம வீட்டு வேலையை நாம செய்யுறதுக்கு யாருமா வந்து சொல்லணும்?” என்றவன், நொடியும் நிற்காது, பாலை காய்ச்ச சென்றுவிட்டான்.
அவன் பின்னோடு ஓடியவர், “இனி பண்ணாத, நான் பார்த்துக்குறேன் இதெல்லாம்… நகரு” என அவனிடம் இருந்து பால்பாக்கெட்டை வாங்கி கத்தரித்து கிண்ணத்தில் ஊற்ற,
அவரையே பார்த்துக்கொண்டிருந்தவன், “இன்னைக்கு யாரு?” என்றான் கேள்வியாய்.
“என்னது?”
“இன்னைக்கு யாரு, என்ன சொன்னதுன்னு கேட்டேன்” அவன் தெளிவாய் கேட்க, பதில் சொல்லாமல் அடுப்பின் மீது கவனம் வைத்தார் விஜயா.
பட்டென அடுப்பை அணைத்தவன், அவர் தோள் தொட்டு தன் புறம் திருப்பி, “என்ன மா? என்ன ஆச்சு?” என்று வினவ,
“இனி வீட்டு வேலையெல்லாம் நீ செய்யாதடா கண்ணா! உன்கிட்ட நானும் பல முறை சொல்லிட்டேன்! கேட்கவே மாட்டேங்குற” என்றார் குறையாய்.
“ஏன்ம்மா? நான் செஞ்சா என்ன இப்போ?” என்றிட, “கிண்டல் பண்றாங்க டா எல்லாரும்! இன்னைக்கு கூட இந்த கௌசி, ‘உங்க புள்ள புடவை அலசிகிட்டு இருப்பான், போய் பாருங்க’ன்னு சொல்றா!’ நீயும் அதே தான் செஞ்சுட்டு இருக்க” என்று முகத்தை சுருக்க,
“இப்போ அதனால என்னவாம்?” என்றான் இன்னமும் விளங்காத பாவத்தில்.
அவர் பேசாது நிற்கவே, “ம்மா…! நானும் பலமுறை உங்ககிட்ட சொல்லிட்டேன்! நம்ம வீட்டுவேலையை நம்ம செய்யுறதுல எந்த கேவலமும் இல்ல… யாராவது எதாவது சொன்னா, ‘இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?’ன்னு நேரா கேட்டுட்டு போயிட்டே இருக்கணும்ம்மா!” என்றான் சிறுப்பிள்ளைக்கு சொல்வதைப்போல்.
இன்னமும் அவர் முகம் அப்படியே இருக்க, “இங்க பாருங்க விஜிக்குட்டி! உங்க பையன் உங்களை எந்த வேலையும் செய்ய விட மாட்டான்! செய்யவும் கூடாது! உங்களுக்கு வேண்டிய எல்லாத்தையும் நான் தான் செய்வேன்!” என தாடைப்பிடித்து கொஞ்சலாய் சொல்ல,
“பெரும்வியாதி வந்தவங்க கூட வீட்டு வேலை செஞ்சுட்டு தான் இருக்காங்க! ஆனா நீ…? சாதாரண சுகர், பிபி-க்கு போய் என்ன இந்த கவனிப்பு கவனிக்குற!” என்றவர்,
“உன்னால நான் ஒரு ‘நோயாளி’ மாதிரி எனக்கே தோணுதுடா” என்றதும்,
“அட என்னம்மா நீங்க! நீங்க ‘பேஷன்ட்’ கிடையாது! என்னோட ‘ராஜமாதா'” என பாவனையாய் சொல்லி இடை வரை குனிந்து அவன் வணக்கம் வைக்க, கொத்தாய் அவன் சிகையை பிடித்து ஆட்டியவர், “போடா தடிமாடு” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றார்.
பாலை நன்றாய் காய்ச்சி, அதில் கொஞ்சமே கொஞ்சம் பனைவெல்லம் இட்டு கொண்டு வந்தவன், விஜிக்கு கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு, “குறைஞ்சது ஒரு வேலைக்காரங்களாவது வச்சுக்கலாம்ல டா?” என்றார்.
“இருக்குறதே ரெண்டு பேரு! அதுக்கு ஒரு வேலைக்காரங்க தேவையா ம்மா?” என்றவன்,
“அதுமில்லாம, என் அம்மாக்கு நான் பார்த்து பார்த்து செய்யுற மாறி சம்பளத்துக்கு வேலைக்கு வர யாரோ ஒருத்தர் செய்வாங்களா என்ன?” என்றதும், மகனைக்கண்டு பூரித்துப்போனது தாயுள்ளம்.
எத்தனைப்பேருக்கு கிட்டும் இப்படி தன்னை கண்ணுக்குள் வைத்து காக்கும் பிள்ளை?
அவனுக்கு இருபது வயது வரை வீட்டின் அத்தனை வேலைகளும் விஜியின் பொறுப்பில் தான் இருந்தது. ஒருமுறை விஜிக்கு ‘குறை ரத்த அழுத்த குறைப்பாட்டின்’ காரணமாக தலைசுற்றல் ஏற்ப்பட, அப்போது அடுப்பில் சாம்பார் தாளித்துக்கொண்டிருன்தவர், தன்னை சமாளித்துக்கொண்டு, அதை தூக்கி அருகே இறக்கி வைக்கும்போது தன்னையும் மீறி மயக்கி விழ, கொதித்த சாம்பார் அவர் காலில் கொட்டி ஒரு மாதம் வரை வலியாலும், புண்ணாலும் அவதிப்பட்டுப்போனதை பார்த்தவன், அதன்பின் கொஞ்சகொஞ்சமாக அன்னையின் வேலைகளை தனதாக்கிக்கொண்டு அவருக்கு முழு ஓய்வு வழங்கிவிட்டான்.
ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், விரும்பி செய்ததால் போக போக எல்லாம் அவன் கை பழக்கமானது.
விஜயா, “வீட்டுல ஒரு வேலையும் செய்யாம நேரமே போக மாட்டேங்குதுடா” என சொல்ல,
“லைப்ரரி என்னாச்சு? டெய்லி போய் புக் எடுத்துட்டு வந்து படிங்க! பக்கத்துல என்ன என்ன கோவில் இருக்கோ, எல்லாத்துக்கும் தினம் ஒண்ணுன்னு போயிட்டு வாங்க! நம்ம தோட்டத்துல இருக்க ஜாதி மல்லி பறிச்சு பூக்கட்டுங்க! இதெல்லாம் செஞ்சாலே நாள் பஞ்சா பறந்து போகும்!” என்றான் அவன்.
‘கொஞ்சமாவது இறங்கி வரானா பாரு?’ மனதில் நினைத்தவருக்கு…. இந்த பேச்சும் புதிதல்ல, அதற்கு அவன் கூறும் இப்பதில்களும் புதிதல்ல… நன்றாய் பழகியதே!
அவர் தன் போக்கில் சிந்தனையில் அமர்ந்துவிட மீதமிருந்த துணிகளை அலசி காயப்போட்டுவிட்டு அவன் திரும்ப வரும்வரை கூட அவர் அசைந்தபாடில்லை.
“என்னம்மா அப்படியே உட்கார்ந்துட்டீங்க? பூவையும் பறிச்சு பிரிட்ஜ்ல வச்சுடவா?” என அவன் கேட்ட மறுநிமிடம், சட்டென எழுந்தவர்,
“இந்த வீட்டுல எனக்கு இருக்குறதே அது ஒரு வேலை தான்! அதையும் புடுங்கிக்காதடா” என சத்தமாய் சொல்லிவிட்டு கூடையுடன் தோட்டத்தை நோக்கி அவர் நாலு கால் பாய்ச்சலில் ஓட, அவரைக்கண்டு சிரித்தபடி குளிக்க சென்றான் அவன்.
சிறிது நேரத்திலேயே “கண்ணா… கண்ணா….” என விஜயா அழைக்கும் சத்தம் கேட்டிட, சட்டையின் கடைசி பொத்தானை போட்டபடியே, “என்னம்மா?” என வந்து நின்றான் அவன்.
“அந்த தரகர் நம்பர் எதுல வச்சேன்னு தெரியல! கொஞ்சம் எடுத்துக்குடேன்” டிவி மேசையை கலைத்துப்போட்டு தேடிக்கொண்டிருந்தார் விஜயா.
அவர் எண்ணம் உணர்ந்து புன்னகித்துக்கொண்டவன், ‘இது அடுத்ததா?’ என நினைத்தபடியே, “எதுக்கும்மா?” என்றான் ஒன்றும் அறியாதவன் போல!
“ரெண்டு மாசம் முன்ன, சுளையா ஆயிரம் ரூபா வாங்கிட்டு போனானே மறந்துட்டியா? ஒரே வாரத்துல உங்களுக்கு ஏத்த இடமா, நல்ல பொண்ணா பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போனவனை இன்னமும் காணல”
“அப்ப அதுலையே தெரிய வேண்டாமா? பொண்ணு ‘கடல்லயே இல்லையாம்!” என்று வாய்விட்டே சிரித்தான் அவன்.
சிரிக்கும் தன் மகனை ஆசையாய் ரசித்தார் விஜயா. கைகொள்ளா கேசம் முன்நெற்றியில் கொத்தாய் விழ, லேசான கன்னகுழியோடு அவன் சிரிக்கையில் அழகோ அழகு என எண்ணிக்கொண்டது அவர் மனது.
பின்னே, ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு’ தானே!
ஆறடியில், அகண்ட தோளோடு, திரண்ட புஜங்களோடு, பாதி முகத்தை தாடி மறைக்க, பாதாம் நிறத்தில் பார்த்ததும் வசீகரிக்கும் தோற்றம் என்றெல்லாம் கற்பனை செய்தால்… சோ ஸாரி!!!
ஐந்தரைக்கும் ஐந்தே முக்காலுக்கும் இடைப்பட்ட உயரம், திராவிட நிறம், முறுக்கி விடப்படாத கட்டை மீசை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை ‘ட்ரிம்’ செய்யப்படும் தாடி, அவ்வப்போது பத்து தண்டால் எடுப்பதால் லேசான சுண்டெலி எட்டிப்பார்க்கும் கைகள், சோமபான பழக்கம் இல்லாததால் தொப்பை துறந்த வயிறு, சாதாரண பேண்ட்டு சட்டை…
சுருங்க சொல்வதென்றால், சாலையில் நடந்து செல்கையில் ‘நல்லா இருக்கானே’ என எதார்த்தமாய் எண்ணியபடி நாம் கடந்து செல்லும் இளைஞர்களில் பத்தோடு பதினொன்று தான் இவன்!!!
இவன்… வீர கேசரி!
வயது முப்பத்தி இரண்டு!
படிப்பு பி.காம்!
வேலை, தந்தையின் நண்பருடன் சேர்ந்து, சத்திரம் பேருந்து நிலையம் அருகே சொந்தமாய் ஒரு பெட்ரோல் பங்க்!
தேவை! ஒரு மணமகள்…
ஜாதி தடையில்லை!
படிப்பு…. ஏதோ சுமாராய் இருந்தால் போதுமானது!
அழகு…. தேவையே இல்லை…!
இருந்தும் ஐந்து வருடங்களாய் எந்த வரனும் கூடி வரவில்லை.
காரணம்….! எட்டில் செவ்வாய்!!!
-தொடரும்…