“ஒரு நாளும் நடக்காது..! எங்கப்பா நம்ப மாட்டார்” என்றாள் கோபமாக.
“ஏன் நம்பமாட்டார். அவரைப் பொறுத்தவரை நீ லவ் பண்றது வேற ஜாதிப் பையனை. அதுக்கு துணையா இருக்குறது விஜய்..! இப்படித்தாண்டி விஷயம் தெரியும் என் மக்கு மாமன் மகளே..!” என்றான் தெளிவாய்.
“நடக்காது..!” என்றாள்.
“நடக்கும்..! நடத்திக் காட்டுறேன். என்ன..? அந்த விஜய் தலையிடாம இருந்திருந்தா, கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணியிருக்கலாம். எதிர்காலத்துல நீ பீல் பண்ணக் கூடாது பாரு..!” என்றான் விமல்.
“நீ தாலி கட்டுனதுக்கு அப்பறம் எங்கப்பாகிட்ட நான் உண்மையை சொல்லிட்டா..?” என்று அவனை பயமுறுத்தினாள் வந்தனா.
“பாரேன்..! நீ கூட எவ்வளவு தெளிவா யோசிக்கிற..? உங்கப்பன் உன் பேச்சை என்னைக்குடி கேட்டிருக்கான்…அப்படியே கேட்டாலும் அதை எப்படி சமாளிக்கனும்ன்னு எனக்குத் தெரியும்..!” என்று விமல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்தான் விஜய்.
“என்னடா தெரியும் உனக்கு…?” என்ற விஜய்யின் வார்த்தையில், போன உயிரே திரும்பி வந்ததைப் போல் வந்தனா பார்க்க, உயிரை வாங்கவே வந்தவனைப் போல் விமல் பார்த்து வைத்தான்.
“எப்படியும் நீ வருவன்னு எனக்கு தெரியும் விஜய்..!” என்றான் விமல்.
“ஹோ..! சார்க்கு அவ்வளவு தைரியமா..?” என்று விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்த அனைவரும் விஜய்யைத் தாக்க வர, முடிந்த அளவு சமாளித்தான் விஜய். அனைவரையும் அடித்து வீசும் அளவிற்கு அவன் சினிமா ஹீரோ இல்லை என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கு இடையிலும் விமலை காட்டு காட்டென்று புரட்டி எடுத்தான் விஜய்.
“என்னடா பார்த்துட்டு இருக்கீங்க..?” என்று அவன் கேட்க, இருவர் விஜய்யைத் தாக்க முயற்சி செய்தனர். அந்த இடைவெளியில் வந்தனாவை அடைந்தவன், அவளது கழுத்தில் கத்தியை வைத்தான்.
“விஜய்..! அப்படியே நில்லு. எதாவது பண்ணனும்ன்னு நினச்ச, இவளை கழுத்தை அறுத்துட்டு போயிட்டே இருப்பேன்..!” என்றான் விமல்.
“டேய்..! கத்தியை எடுடா…!” என்றான் விஜய். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே பின்னிருந்து ஒருவன் அவனை கட்டையால் அடித்திருக்க, விஜய்க்கு பொறி கலங்கியது. விமல் ஏதோ இரண்டு பேரை காவலுக்கு வைத்திருப்பான் என்று விஜய் எண்ணியிருக்க, அவன் நினைத்தற்கு மாறாய் இருந்தான் விமல்.
“அது தான் இவளை உனக்குப் பிடிக்கலைல்ல. அப்பறம் நான் கல்யாணம் பண்ணா உனக்கென்னடா..!?” என்று விமல் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனைத் தாக்கினான் விஜய். அவனின் எதிர்பாராத தாக்குதலில், விமல் முன்னோக்கி விழ, அவன் கையில் இருந்த கத்தியும் எங்கோ சென்று விழுந்திருந்தது.
“சீக்கிரம் வா..!” என்று வந்தனாவை கூட்டிக்கொண்டு வெளியே வந்த விஜய், அவர்கள் பின் தொடர்ந்து வருவதற்குள் காரை எடுத்திருந்தான்.
“விஜய் உங்களுக்கு அடி பட்டிருக்கு..?” என்று வந்தனா அக்கறையுடன் சொல்ல,
“வாயைத் திறந்த கொன்னுடுவேன். எல்லாம் உன்னோட லூசுத் தனத்தால் வந்தது…!” என்று அவன் அவளைத் திட்டிக் கொண்டிருக்கும் போதே,
“பிளீஸ் விஜய்..! இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை..! இந்த தாலியை என் கழுத்துல கட்டுங்க..!” என்றாள் கையில் இருந்த தாலியைக் காட்டி.
“ஏய்..! இது எப்படி உன்கிட்ட..?” என்றான்.
“அந்த டேபிள்ள தான் இருந்தது. வரும் போது, நான் எடுத்துட்டு வந்துட்டேன்..!” என்றாள்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..? இப்போ இது ரொம்ப முக்கியமா..? மரியாதையா இருந்துக்க. உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன். உங்கம்மாகிட்ட நடந்ததை சொல்லிட்டு, உருப்படியா இருக்குற வழியைப் பாரு..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பிரவீனிடம் இருந்து விஜய்க்கு கால் வந்தது.
“சொல்லு பிரவீன்..!”
“அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே..?” என்று பிரவீன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
“பிளீஸ் விஜய்..! தாலியை மட்டும் கட்டுங்க..! நான் என்ன சொன்னாலும் ,இனி எங்க வீட்ல நம்ப மாட்டாங்க..!” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். அது பிரவீனின் காதிலும் தெளிவாக விழுந்தது.
“இங்க பிரச்சனை ஒண்ணுமில்லை பிரவீன். நான் உனக்கு கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்றேன்..!” என்றான் விஜய்.
“கவனம் விஜய்..!” என்று சொல்லிவிட்டு பிரவீன் வைக்க,
“அப்போ நீங்க கட்ட மாட்டிங்க..! இது தான் உங்க முடிவா விஜய்..?” என்றாள் வந்தனா.
“அப்படியே ஒரு அறை விட்டேன்னா தெரியும். உனக்குப் பாவம் பார்த்து வந்ததே தப்பு..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வந்தனா.. தனக்குத் தானே அந்த தாலியைக் கட்டிக் கொண்டாள்.
“ஏய்..!!!! என்ன பண்ற நீ..?” என்று உறுமினான் விஜய்.
“உங்களைத் தவிர வேற யாரையும் என்னால மனசால கூட நினைக்க முடியாது.நீங்க கண்டிப்பா ஒரு நாள் மனசு மாறுவிங்க விஜய். அதுவரைக்கும் நான் காத்திட்டு இருப்பேன்..!” என்றாள் வந்தனா.
“மண்ணாங்கட்டி.. அப்படி ஒரு நாள் வரவே வராது..!” என்றான் விஜய்.
“கண்டிப்பா வரும். அப்படி வரலைன்னா, இப்படியே இருந்தாலும் இருப்பேனே தவிர, வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணவே மாட்டேன்..!” என்றாள்.
கண்ணன், இவர்களைத் தேடி அருகில் வந்திருக்க, ப்ரீத்தியும் கண்ணனுடன் இருந்தாள்.
“என்னாச்சு கண்ணன்..?” என்று ப்ரீத்தி பரிதவிப்புடன் கேட்க,
“விஜய், வந்தனாவை கூட்டிட்டு வந்துட்டான்..! இப்போதான் பிரவீன் சொன்னான்..!விஜய் வந்தனா வீட்டுக்கு வர சொல்லியிருக்கான்” என்று ப்ரீத்தியிடம் சொல்ல,
“இப்பத்தான் நிம்மதியா இருக்கு..!” என்றாள் ப்ரீத்தி. இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருந்த நேரம், விஜய், வந்தனா வந்த கார்… ஒரு லாரியால் அடித்துத் தூக்கப்பட்டிருந்தது. லாரி தங்களை நோக்கி வருவதை முன்னமே உணர்ந்த வந்தனா , லாரி மோதிய அடுத்த வினாடி, விஜய் எதிர்பார்க்காமல் அவனை ரோட்டில் தள்ளியிருந்தாள்.
“ஹேய் வந்தனா..!” என்று அவன் கத்திக் கொண்டே உருண்டதில், அவன் தலை பயங்கர அடிவாங்கியது. வந்தனாவிற்கு கொஞ்சம் உயிர் உடலில் ஒட்டிக் கொண்டிருந்தது.
சில நிமிடங்களுக்கு முன்னால் போனில் பேசிய நண்பனை இப்போது இந்த நிமிடம் மருத்துவமனையில் குத்துயிரும் குலையுமாக பார்ப்போம் என்று கண்ணனும், ப்ரீத்தியும் எதிர்பார்க்கவேயில்லை.
“பிரவீன் எங்க இருக்க..?”
“இப்பதான் பிளைட் ஏத்தி விட்டுட்டு வெளியே வரேன் கண்ணா..! ஒருமணி நேரத்துல அங்க இருப்பேன்..!” என்றான்.
“நீ நேரா XXXஹாஸ்பிட்டல் வந்துடு..!” என்றான்.
“ஏன் யாருக்கு என்னாச்சு..?” என்றான் பிரவீன் பதட்டமாக.
“விஜய்க்கு ஆக்சிடென்ட்..!” என்று கண்ணன் சொல்லி முடிக்கவில்லை, பிரவீனின் கார் சீறிப் பாய்ந்தது. வந்தனாவின் குடும்பத்திற்கும் தகவல் சொல்ல, அதற்கு முன்பு விமல் அங்கே சிறப்பான ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தான்.
“அந்த ஆக்சிடென்ட் ஆனா பொண்ணு கூட வந்தது யாரு..! அவங்களைப் பார்க்குறவங்க பார்க்கலாம்..! ரொம்ப நேரம் உயிர் இருக்காது..!” என்று அந்த நர்ஸ் சொல்லிவிட்டு செல்ல,
“வந்தனா..” என்று கதறிக் கொண்டே உள்ளே சென்றாள் ப்ரீத்தி. வந்தனாவின் முக்கால்வாசி முகம் சிதைந்திருக்க, நூலிலையில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
“வி..வி..விஜய்..!” என்றவளின் வார்த்தைகளில் பாதிக்கு மேல் காத்து தான் வந்தது.
“விஜய்க்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்குடி..! உனக்கு ஒன்னும் ஆகாது…” என்று ப்ரீத்தி சொல்ல, அப்போது தான் அவள் கழுத்தில் பாதி ரத்தத்தில் குளித்திருந்த தாலி அவள் கண்ணில் பட்டது.
“எப்படிடி..?” என்று அதைப் பார்த்து ப்ரீத்தி அதிர்ந்து விழிக்க,
“நானா..தாலியை..கட்டிகிட்டேன்..! விஜய் மனைவி…வெளிய தெரிய…” என்று மூச்சு வாங்க,
“ஒன்னும் புரியலைடி..! சொன்னாலும் சொல்லாட்டியும் விஜய் மனைவி நீதாண்டி..! நீ பிழைச்சு வாடி..! அப்பறம் பேசிக்கலாம்..!” என்றாள் ப்ரீத்தி.
“நான்.. மனைவி இல்ல…!” என்று திணறி வந்த வார்த்தைகள் தான் அவள் வாயில் இருந்து வந்த இறுதி வார்த்தைகள்.
“வந்தனா…!!!!” என்ற ப்ரீத்தியின் குரல் அந்த மருத்துவமனை வளாகத்தையே நிரப்பியிருந்தது.
விஜய்யோ..! இடைப்பட்ட தன்னுடய நினைவுகள் அனைத்தையும் இழந்து, நினைவின்றி படுத்திருந்தான்.
“விமல் என்னடா ஆச்சு…?” என்றார் கனகவேல்.
“மாமா..! நம்ம வந்தனா நம்மளை விட்டுட்டு போய்ட்டா மாமா..! கடைசில அந்த விஜய்யைத் தான் லவ் பண்ணியிருக்கா மாமா. இதை சொல்லியிருந்தா நீங்களே சரின்னு சொல்லியிருப்பிங்களே மாமா..! ஆனா ஏன் மறைச்சான்னு தெரியலையே மாமா..!” என்று போலியாக அழுது நாடகம் போட்டான் விமல்.
“அடிச்சது நம்ம ஆளுங்களா..?” என்றார். அவர் குரலில் இருந்து அவர் என்ன நினைக்கிறார் என்று அவனுக்குத் தெரியவில்லை.
“இல்லை மாமா..! விஜய் தான் அந்த பையன்னு தெரிஞ்ச உடனே, நான் ஒன்னும் செய்யலை மாமா.கல்யாணம் கூட பண்ணிகிட்டாங்க மாமா. ஆனா, இப்படி ஆக்சிடென்ட் ஆகும்ன்னு நான் நினைக்கவேயில்லையே மாமா..!” என்றான்.
“கல்யாணம் பண்ணிகிட்டாங்களா..?” என்று அதிர்ந்தார் கனகவேல்.
“அவ கழுத்துல தாலி இருக்கு மாமா..!” என்று வார்த்தைக்கு வார்த்தை மாமா போட்டான்.
“இந்த விஷயம் வெளிய தெரிய கூடாது விமல். வந்தனா விபத்துல இறந்ததாத்தான் இருக்கணும்..! இது மட்டும் தலைவருக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்..” என்றார் அந்த நிலைமையிலும்.
“நீங்க எப்படி சொல்றிங்களோ அப்படியே செய்யறேன் மாமா..!” என்றான் விமல்.
“என்னாச்சு ப்ரீத்தி..?” என்றபடி வந்தான் கண்ணன்.
“வந்தனா இப்போ இல்லை கண்ணன்..!” என்றாள் ப்ரீத்தி அழுகையுடன்.
“கல்யாணம் நடந்ததைப் பத்தி எதுவும் சொன்னாங்களா..?” என்றான் கண்ணன். அவனின் கேள்வியில் பட்டென்று தெளிந்தாள் ப்ரீத்தி.
“என்ன கேள்வி இது கண்ணன். அது விஜய் கட்டின தாலி தான். அவளோட இறுதி சடங்கை அவர்தான் பண்ணனும்..!” என்றாள்.(இதுலையாவது உன்னோட ஆத்மா சாந்தி அடையட்டும் வந்தனா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.)
“வாய்ப்பே இல்லை ப்ரீத்தி. விஜய் தேறி வர நாட்கள் ஆகாது. மாசங்கள் தான் ஆகும்..!” என்றான்.
“என்ன சொல்றிங்க..?” என்றாள் ப்ரீத்தி.
“எஸ்..! அவனுக்கு உடம்புல அதிக அடி இல்லைன்னாலும், தலையில பலமா அடிபட்டிருக்கு. இப்போதைக்கு விஜய் கோமா ஸ்டேஜ்..!” என்று சொல்லும் போதே, கண்ணனின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே… அங்கே வந்தான் விமல்.
“வந்தனா பாடி எங்க இருக்கு..?” என்றான் கோபமாய்.
“அவளை இப்படி ஆக்குனதே நீதானடா..!” என்று அவனின் சட்டையைப் பிடித்த கண்ணன், அவனை சரமாரியாக தாக்க,
“விடுடா..! நீயென்ன அவளுக்கு புருஷனா ..? பேச வந்துட்டான். மேல கைவைக்கிற வேலை எல்லாம் வச்சுகிட்ட.. நடக்குறதே வேற..!” என்று கண்ணனை மிரட்டியவன், அடுத்து துரிதமாக செயல்பட்டு, வந்தனாவின் உடலை பெற்றுக் கொண்டு சென்றான். அவன் வெளியே செல்லும் அதே நேரம் உள்ளே நுழைந்தான் பிரவீன்.
விமலைப் பார்த்த பிரவீன், கொலைவெறியுடன் அவனைத் தாக்கப் போக, விமலின் பின்னால் இருந்த ஆட்கள் பிரவீனை அடிக்க வர, கண்ணன் வந்து தடுத்து விட்டான். அவர்களிடம் இருந்து விடுபட்டவன், வந்தனாவின் முகத்தில் இருந்த துணியை விலக்க, அழகு தேவதையாய் பார்த்தவளை, இப்படி ரத்த கோலத்தில் அவனால் பார்க்க முடியவில்லை. பட்டென்று திரும்பி விட்டான்.
விமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட, விஜய் இருக்கும் அறையை நோக்கிப் போனான் பிரவீன். ரத்னவேல் குடும்பத்திற்கு தகவல் கொடுக்க, அவர்களும் வந்து கொண்டிருந்தனர்.
“டாக்டர் என்ன சொன்னங்க..?” என்றான் கண்ணனிடம்.
“கோமா ஸ்டேஜ்..! நினைவு திரும்பினாலும், பழைய நியாபகங்கள் இருக்குமான்னு சொல்ல முடியாதுன்னு சொல்லியிருக்காங்க..!” என்றான் கண்ணன். பிரவீன் அப்படியே இடிந்து அமர்ந்து விட்டான்.
“அமைச்சரின் மகள் விபத்தில் சிக்கி பலி..” என்று தான் தகவல் வெளியானது. பணம் பாதாளம் வரை பாய,உடன் இருந்த விஜய் என்பவன் அந்த செய்தியில் இருந்தும், விபத்தில் இருந்தும் அடியோடு நீக்கப்பட்டான். இதில் ரத்னவேலின் பங்கும் இருந்தது.
“ஏன் தாத்தா..?” பிரவீனின் கேள்விக்கு அவரின் முறைப்பு மட்டுமே பதிலாய் கிடைத்தது.
“இப்போதைக்கு விஜய் மீண்டு வருவது தான் முக்கியம்.அப்படியே அவனுக்கு எதுவும் நியாபகம் வரலைன்னாலும் பரவாயில்லை, இந்த விஷயம் நம்மைத் தவிர யாருக்கும் தெரிய கூடாது..” என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
இங்கே பெற்ற மகள் உயிரை விட்டிருக்க, அங்கே அவளைப் பெற்ற தகப்பன், அவள் சாவிலும் அரசியல் செய்து கொண்டிருந்தார். இந்த களேபரங்கள் தெரியாத ராதிகாவும் அழுது தீர்த்துக் கொண்டிருந்தார்.
“சார்..! நம்ம தான் ஆக்சிடென்ட் பண்ணோம். நீங்க தலைவர்ட்ட இல்லைன்னு சொல்லிட்டிங்க..?” என்றான் விமலின் ஆட்களில் ஒருவன்.
“முட்டாளாடா நீ..! அவ உயிரோட இருந்திருந்தா, கண்டிப்பா என்னைப் பத்தி அவ அப்பன்கிட்ட போட்டுக் குடுத்திருப்பா. அந்த ஆளும் விஜய்க்கு சந்தோஷமா கல்யாணம் பண்ணி வச்சிருப்பான். நான் தான் தெருவுக்கு போயிருக்கனும். அவ செத்துட்டா. அவனுக்கு இனி ஜென்மத்துக்கும் எந்த நியாபகமும் வரப்போறதில்லைன்னு சொல்லிட்டாங்க..! அப்படியே வந்தாலும், அதை அப்ப எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எனக்குத் தெரியும். இதைப் பத்தி வெளிய மூச்சு விடக் கூடாது..!” என்ற விமலின் வார்த்தைகளில் எச்சரிக்கையே மிகுந்திருந்தது.
காதலே இல்லாமல் ஒரு காதல்.. கல்யாணமே இல்லாமல் ஒரு கல்யாணம் என்று இருந்த வந்தனா, இறந்த காலமாகிவிட்டாள்.
இதில் எதுவும் சம்பந்தமே படாத விஜய்… நினைவே இல்லாத ஒரு புது உலகில் இருந்தான்.
வந்தனா காதலில் காட்டிய அவசரத்தனமும்,தேவையில்லாமல் காட்டிய பயமும், அதீத பதட்டமும்.. விமலின் பேராசையும், கனகவேலின் அரசியல் தனமும் சேர்ந்து, விஜய் என்ற ஒருவனை அடியோடு மாற்றியிருந்தார்கள்.
விஜய்க்கு நினைவுகள் இல்லாத விஷயம் விமலைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நினைவுடன் இருந்து தான் எதுவும் செய்யாமல் இருக்கிறான் என்று கனகவேல் இப்போது வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ப்ரீத்தியை,விமல் ஆட்களை வைத்து மிரட்டியதில், அவளுடைய குடும்பம், வேறு ஊருக்கு குடிபெயர்ந்திருந்தது. கல்லூரியையும் மாற்றிக் கொண்டு சென்று விட்டாள்.
கண்ணன் இப்போது மும்பையில் வேலை செய்கிறான். வருடத்திற்கு ஒரு முறை வந்து விட்டு செல்வான்.
இது தான் நடந்தது. வந்தனா கழுத்தில் தாலி இருந்தது உண்மை. ஆனா, அது நீ கட்டியதா இல்லையா அப்படின்னு எனக்குத் தெரியாது. தெரியாத ஒரு விஷயத்தை நான் எப்படி சொல்ல முடியும். அதே சமயம், நீ கட்டுனதுன்னு ப்ரீத்தி சொன்னதா கண்ணன் சொன்னான். அதனாலத்தான் அன்னைக்கு நீ கேட்கும் போது ஆமான்னு சொன்னேன்..! என்றான் பிரவீன்.
விஜய் பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்து விட்டான். அவனுக்கு இப்போது வரை எந்த நியாபகமும் வரவில்லையே. தலையை பிடித்துக் கொண்டு அப்படியே சாய்ந்து விட்டான் விஜய்.
மனைவி என்ற ஒரு பிம்பம், இத்தனை நாள் நினைவில் வராத காரணம் அவனுக்கு இப்போது நன்றாக புரிந்திருந்தது.
“நடந்தது துளசிக்குத் தெரியாதா..?” என்றான்.
“இல்லை அவளுக்கு தெரியாது. ஆனா, அம்மா-அப்பாக்கு தெரியும்..! துளசி,அருண்,பவித்ரா இவங்க யாருக்கும் தெரியாது. நீயும் எல்லாமே நியாபகத்துல இருக்குற மாதிரி நடந்துகிட்டதால, அவங்களுக்கு சந்தேகம் வரலை. உனக்கு நினைவு போனது தெரிஞ்சா, அது தொழில்ல உனக்கு நிறைய சங்கடங்களைக் கொடுக்கும்ன்னு தான் தாத்தா வேண்டாம்ன்னு சொன்னார். அதனாலத்தான் இத்தனை வருஷம் உன்னோட நிழலாவே கூட இருந்தேன் விஜய்..!” என்ற பிரவீனின் கண்கள் கலங்கியிருக்க,விஜய் அவனை அணைத்துக் கொண்டான்.
“சாரிடா..!” என்ற விஜய்யின் அணைப்பில் ஒரு உறுதி இருந்தது. அது என்னவென்று இனி தான் தெரியும்.