பூ 24:
மீட்டிங்கில் அசோசியேஷன் சார்பாக அங்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்க, விஜய்யின் கவனம் முழுவதும் துளசியின் மீது தான் இருந்தது. இவ்வளவு அருகில் அவளைப் பார்ப்பது அவனுக்கு இதுவே முதல் முறை. அவர்கள் கிட்டத் தட்ட ஒரே வீட்டில் இருந்தாலும், தொட்டுப் பேச கூட வள்ளி அனுமதிக்க மாட்டார். அதனால் யாரும் அத்தை மகள், மாமன் மகன் என்று கொஞ்சி குலாவியது இல்லை. அத்தை மகளே ஆனாலும், இரண்டடி தள்ளி நின்று தான் பேச வேண்டும் என்று வள்ளி உறுதியாக உணர்த்தியிருந்தார். அதனால் தானோ என்னவோ, துளசியிடம் அவன் அவ்வளவு நெருங்கிப் பழகியது இல்லை. முன்பே அவளுக்காக அவன் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வான். அதில் எல்லாம் ஒரு அக்கறை ஒளிந்திருக்குமே தவிர, வேறு எந்த மறைமுக எண்ணமும் இருக்காது. அதனால் தானோ என்னவோ மனதிற்குள் இருந்த எண்ணத்தை, அக்கறை என நினைத்துக் கொண்டான்.
துளசியின் காதோரத்தில் சுருண்டிருந்த முடியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அப்படியே அவள் முகம், மூக்கு என்று பார்த்து வர, அதற்கு மேல் பார்வை கீழிறங்க, தலையைக் கோதிக் கொண்டான்.
“சத்திய சோதனைடா விஜய்.. கண்ட்ரோல் பண்ணு..கண்ட்ரோல் பண்ணு…!” என்று தலையைக் கோதிக் கொண்டே, எதார்த்தமாய் பார்ப்பவன் போல் சுற்றிலும் பார்த்து வைக்க, விமல் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். விஜய்யின் பார்வையில் அவன் விழுக,
“என்ன..?” என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி கேட்ட விஜய்யின் முகம் நொடியில் இறுகிப் போனது. விமல் பதிலுக்கு தெனாவெட்டாய் பார்த்து விட்டு திரும்ப, விஜய்யின் கை பரபரவென்று இருந்தது. அவர்கள் பேசி முடித்து, அந்த மீட்டிங் முடியும் வரை அமைதியாய் இருந்தான் விஜய்.
“என்ன விஜய்..? முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு..?” என்றான் பிரவீன்.
“இங்க ஒரு சம்பவத்தை நடத்திடலாம்ன்னு தோணுது.. நீ என்ன நினைக்கிற..?” என்று விஜய் கேட்டுக் கொண்டிருக்க, ஒவ்வொருவராய் கலைந்து சென்றனர்.
“எதா இருந்தாலும் இங்க வேண்டாம்..!” என்றான் பிரவீன்.
“அப்படிங்கிற..?” என்று யோசித்தான் விஜய்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்களின் அருகில் வந்தாள் திவ்யா.
“என்ன மாமா..? நல்லா இருக்கிங்களா..?” என்றாள் வேண்டும் என்றே.
அவளின் ‘மாமா’ என்ற அழைப்பில் கடுப்பின் எல்லைக்கே சென்றான் விஜய்.
“ஏய்..! மரியாதையா இருந்துக்க. யாருக்கு யாரு மாமா..?” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
அவளின் வார்த்தைகளை கேட்ட துளசிக்கு உள்ளே கனன்று கொண்டே இருந்தது. எதையும் வெளியே காட்டாமல் இருக்க,
“நீங்க தான் மாமா..! எங்க அக்காவுக்கு நீங்க புருஷனா..? எனக்கு அக்கா புருஷன்..ம்ம் மாமா தான..? என்ன நான் சொல்றது..?” என்றாள்.
எதையோ சொல்ல வாயெடுத்த விஜய், அப்படியே நிறுத்திக் கொண்டான். இறந்து போனவளைப் பற்றி பேச விஜய் விரும்பவில்லை. பிரவீன் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது, வந்தனாவை கெட்ட பொண்ணாக அவனால் நினைக்க முடியவில்லை.
“மரியாதையா போய்டு..! இல்லைன்னா ரொம்ப வருத்தப்படுவ..!” என்றான் பிரவீன்.
“என்ன பிரவீன் சார்.. உங்க நண்பன் உங்க கிட்ட பேசிட்டாரு போல. அன்னைக்கு கல்யாண மண்டபத்துல அவ்வளவு கோபமா போனாரு. மனுஷன் போன வேகத்துலையே திரும்பி வந்துட்டார் போல. அப்படி என்னதான் உங்க தங்கச்சி சொக்குப் போடி போட்டு வச்சிருக்கா. சொன்னா, எங்களுக்கும் உதவும் இல்லையா..?” என்றாள் நக்கலாக.
விஜய் ஏதோ அவளைக் கோபமாக பேசப் போக, அவனின் கையைப் பிடித்த துளசி, அவனைத் தடுத்து..
“கண்டிப்பா உனக்குத் தெரிஞ்சே ஆகணுமா..?” என்றாள் திவ்யாவை ஊன்றி பார்த்தவாறு.
“சொன்னா எனக்கும் கொஞ்சம் யூஸ் ஆகும்ல..!” என்று திவ்யா சொல்ல, அவள் முடிக்கும் முன் அவளை ஓங்கி அறைந்திருந்தாள் துளசி. அவள் அப்படி செய்வாள் என்று எதிர்பார்க்காத திவ்யா, தடுமாறி விழப் போக, விமல் தான் பிடித்தான்.
“ஏய்..!!!” என்று விமல் கையை நீட்டிக் கொண்டு வர, அவனையும் ஓங்கி ஒரு அறை அறைந்தாள் துளசி.
“என்ன..? உனக்கு கண்ணு இருக்குன்னா.. நீ யாரை வேணும்ன்னாலும் பார்ப்பியா..? சாவு வீடுன்னு கூட பார்க்காம, அங்கையும் வந்து பொம்பளை சதையை பார்த்துட்டு இருக்க.. வெட்கமாயில்லை. உனக்கு மனசுல பெரிய மன்மத குஞ்சுன்னு நினைப்பா.. இந்த ஓரப்பார்வை பாக்குறது, வெறிநாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுட்டு பார்க்குறது.. இந்த வேலையெல்லாம் என்கிட்டே வச்சுகிட்ட தொலைச்சுப்புடுவேன், ஜாக்கிரதை.. யார்கிட்ட..!” என்று பொங்கிய துளசி, மீண்டும் அவனை அடிக்கப் போக, விமல் அரண்டானோ இல்லையோ, திவ்யா அரண்டு விட்டாள்.
“விடு துளசி..! பாரு, கன்னம் எல்லாம் வீங்கிப் போய்டுச்சு..! சார்க்கு இந்த கவனிப்பே போதும்..!” என்று அவனின் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டே விஜய் சொல்ல, விஜய் கையையைப் போட்டு இறுக்கிய இறுக்கத்தில் விமலின் தோள்பட்டை முதல் முதுகு தண்டுவடம் வரை அனைத்தும் அப்படியே வின்னென்று தெறித்தது.
“நீ இன்னைக்கு என் கையால தான் அடிவாங்குவன்னு நினைச்சேன். ஆனா, இது ரொம்ப ஹைலைட்..! என் பங்குக்கு ஏதாவது குடுக்கலைன்னா.. நீ ரொம்ப வருத்தப்படுவ பாரு…!” என்று விஜய் சொல்ல, விமலுக்கு வலியைத் தானகவே முடியவில்லை.
விமலை முடித்து திவ்யாவிடம் திரும்பிய துளசி…
“யாருக்கு யாருடி மாமா..! இனிமேல் எங்கையாவது மாமா, சோமான்னுட்டு வந்து நின்ன, இவனை மாதிரி நான் பதில் சொல்லிட்டு எல்லாம் நிக்க மாட்டேன். என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது.. உங்கக்கா வந்தனா மாதிரி தெரியுதா…? எதுகெடுத்தாலும் ஐயோ அம்மான்னு கண்ணைக் கசக்கிட்டு நிக்க..?மரியாதை கெட்டுடும்..! உங்க அக்கா உசுரோட இருந்தப்பவே இவன் புருஷனா இருந்தானா என்னான்னு தெரியலை. வந்துட்டா அக்கா புருஷன்..என் புருஷன்னுட்டு..! உன்னையெல்லாம் ஆரம்பத்துலையே தட்டியிருக்கணும்… தப்புப் பண்ணிட்டேன்..!” என்று துளசி விடாமல் பேசிக் கொண்டிருக்க, கொஞ்சம் அரண்டு தான் போய் விட்டாள் திவ்யா.
துளசி பேச பேச விஜய்யே உள்ளுக்குள் அரண்டு போனான். முகத்தில் காட்டாமல் தம் கட்டி நிற்க,
“என்ன விஜய்..? உன்பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் போலவே..?” என்றான் பிரவீன் முனுமுனுப்பாக.
“ஏண்டா சொல்ல மாட்டிங்க..? உன் தங்கச்சி என்னடா இந்த போடு போடுறா..? ஜாக்கிஜானோட லேடி வெர்ஷன் மாதிரி..?” என்றான் விஜய்.
“பெர்பாமன்ஸ பார்த்தல்ல.. அவகிட்ட எதுக்கும் அடக்கியே வாசி..!” என்றான் பிரவீன் சன்னமான சிரிப்புடன்.
“என்ன சொல்லு மச்சான்..! இந்த கோபத்துல கூட, எப்படி இருக்கா பாரேன்..! மூக்கெல்லாம் சிவந்து மிளகா மாதிரி ஆகிடுச்சு.. கன்னமெல்லாம் சிவந்து ஸ்ட்ராபெரி மாதிரி ஆகிடுச்சு..!” என்று விஜய் சொல்லிக் கொண்டே போக,
“டேய்..! நான் அவளுக்கு அண்ணன்டா..!” என்றான் பிரவீன் பல்லைக் கடித்துக் கொண்டு.
“நான் இல்லைன்னு சொல்லலையே..!ஆனா பாரு நான் அவ புருஷனாச்சே..? இப்படித்தான பேசியாகணும்..!” என்று நமட்டு சிரிப்பு சிரிக்க, சரியாக அதே நேரத்தில் திரும்பினாள் துளசி. அவளின் கண்களில், விஜய்யின் நமட்டு சிரிப்பு பட,
“என்ன சிரிப்பு..?” என்றாள் கடுப்புடன்.
“அப்படியா..? இல்லையே..?” என்றவன் அவளைப் பார்த்து கண்ணடித்து வைக்க, அவளுக்கு உள்ளே குப்பென்று இருந்தது.
“விவஸ்தைகெட்டவன்..!” என்று முனுமுனுத்தவள்,
“பிரவீன்.. நான் கீழ வெயிட் பண்றேன்..!” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள். இவர்களின் காதல் நாடகத்தை திவ்யாவால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இவர்களின் முன்னால் அவள் அறைந்தது வேறு, அவளுக்கு கோபத்தைத் தூண்டியிருக்க, விஜய்யைப் பார்த்து முறைத்து விட்டு சென்றாள்.
“என்ன மன்மதன் சார்… நீங்க போகலையா..? இல்ல இன்னும் உங்களுக்கு தனி கவனிப்பு வேணுமா..?” என்ற விஜய் மீண்டும் அவன் அருகில் செல்ல, அவனிடமிருந்து மிரண்டு விலகியவன்,
“ரொம்ப ஆட்டம் போடாதிங்கடா..! நல்லதுக்கு இல்லை. ஒரு நாள் இல்லை ஒரு நாள் அடங்கிடுவீங்க..!” என்றான் விமல்.
“ஏண்டா டேய்..! அவ்வளவு ஆட்டம் போட்ட நீயே இன்னும் அடங்காமத்தான் இருக்குற..! இதுல நாங்க ஆடுறோமா..?” என்றான் விஜய், அவனை நேராய் பார்த்து.
“நான் என்ன ஆடுனேன்..?” என்ற விமலின் வார்த்தைகள் தந்தியடிக்க,
“கண்டிப்பா சொல்லியே ஆகணுமா..?” என்று நிறுத்தியவன்,
“நான் வேணும்ன்னா..மிஸ்டர் கனகவேலை மீட் பண்ணி, அவர் பொண்ணு வந்தனா ஓடிப் போகலை.. நீதான் கடத்தி தாலி கட்டப் பார்த்தன்னு சொல்லவா..?” என்றான் விஜய்.. புருவத்தை உயர்த்தி, அவனை கூர்மையாகப் பார்த்து.
விஜய் அப்படி கேட்டவுடன், விமலின் முகம் பேயறைந்ததைப் போல ஆனது. சட்டேன்று முகபாவத்தை மாற்றிக் கொண்டவன்,
“இதென்ன புதுக்கதை..” என்றான்.
“புதுக்கதை இல்லடா… நீ மறைச்ச… நான் மறந்த பழைய கதை.. என்ன சொல்லவா..?” என்றான்.
“நான் ஒன்னும் மறைக்கலை. உனக்குத்தான் புத்தி மாறிப் போய்டுச்சு..!” என்றான் விமல்.
“அப்படியா..? அப்போ சரி.. வந்தனா என்னோட பொண்டாட்டின்னா.. அதையேண்டா வெளி உலகத்துல இருந்து மறைச்சிங்க.. நீயும், உன் மாமனும். அவர் பொண்ணு ஓடிப் போய் கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் செத்துட்டா, அப்படின்னு தெரிஞ்சா… அந்த சிஎம்.. உங்க மாமனுக்கு எப்படிடா மினிஸ்டர் சீட் குடுத்திருப்பாரு. அதுலயும் தொழில் துறை அமைச்சர் வேற..? ம்ம்.. எல்லா சேப்ட்டரும் குளோஸ் ஆகப் போகுது.. வெயிட் அன்ட் வாட்ச்..!” என்றான் விஜய்.
“நீ என்ன உளறிகிட்டு இருக்க..?நடக்காத விஷயத்தை நடந்துச்சுன்னு சொல்லிட்டு இருக்க..? மாமாவை எப்படி சமாளிக்கனும்ன்னு எனக்குத் தெரியும்..!” என்றான் விமல்.
“நீதான் ஒண்ணுமே செய்யலையே..? அப்பறம் எதுக்குடா சமாளிக்கணும்..!” என்றான் விஜய்.
“நீ மாத்தி மாத்தி பேசுற.. உன்கிட்ட எனக்கென்ன பேச்சு..!” என்று விமல் அந்த இடத்தை காலி செய்ய பார்க்க,
“பிரவீன்..! அந்த லாரி டிரைவரை கூட பிடிச்சாச்சுல்ல..!” என்ற விஜய்யின் வார்த்தைகளில், போக முற்பட்ட விமல் மிரண்டு போய், பதட்டத்துடன் நின்று விஜய்யைத் திரும்பிப் பார்க்க, விமலின் அந்த முகத்தை வைத்தே உறுதி செய்துவிட்டான் விஜய், அவன்தான் அனைத்திற்கும் காரணம் என்று. அடுத்த நிமிடம் விமல் அங்கு நிற்கவில்லை.
“என்ன விஜய்..? இவன்கிட்ட அவசரப்பட்டு இப்படி பேசிட்ட..? அவன் உனக்கு எல்லாமே நியாபகம் வந்திடுச்சுன்னு நினைச்சுக்கப் போறான்.” என்றான் பிரவீன்.
“நினைக்கட்டும் பிரவீன்..! அது தான் நமக்கு இப்போ முக்கியம். இப்போ அவனுக்கு பயம் வர ஆரம்பிச்சிருக்கும். பயத்துல அவன் யோசிக்கிறது எல்லாமே தப்புத் தப்பாத் தான் இருக்கும். அதை நம்ம யூஸ் பண்ணிக்க வேண்டியது தான். இவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லைன்னு தோணுது..!” என்றான் விஜய்.
பிரவீன் சற்று உணர்ச்சிவசப் பட,
“என்னாச்சு பிரவீன்..?” என்றான் விஜய்.
“அந்த ஆக்சிடென்ட்க்கு முன்னாடியும் நீ இப்படித்தான் சொல்லிட்டே இருப்ப விஜய்..!” என்றான்.
“என்னன்னு?” என்றான் விஜய்.
“இவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லைன்னு..! ஆனா, அவன்தான் இவ்வளவு வேலையும் பண்ணியிருக்கான்…!” என்றான் பிரவீன்.
“நீ போனதை நினைச்சு கவலைப் படாத பிரவீன். எனகென்னமோ நாம ரிஸ்க் எடுக்கவே தேவையில்லை. அவனே மாட்டிக்குவான்னு தான் தோணுது..!” என்றான்.
“எதை வச்சு அப்படி சொல்ற..?” என்றான் பிரவீன்.
“அவன் ஒரு தப்பு செஞ்சிருந்தா பரவாயில்லை. அந்த கனகவேல் இவனை நம்புனதுக்கு இவன் பண்ணி வச்சிருக்கறது எல்லாமே பிராடுத்தனம் தான். அந்த ஆள் இவனை அடிமையா வச்சிருக்கோம்ன்னு நினைச்சுட்டு இருக்கான். ஆனா, கூடிய சீக்கிரம் அந்த ஆள் தான் இவனுக்கு அடிமையாகனும். இப்பவே முழிச்சுகிட்டா நல்லது. இல்லைன்னா தெருவுக்கு தான் வரணும்..!” என்றான் விஜய்.
“நீ சொல்றதைப் பார்த்தா.. எல்லாமே இவன் கைவசம் இருக்கா..?” என்றான்.
“கூடிய சீக்கிரம் கனகவேலை போட்டுத் தள்ளிட்டு, அந்த திவ்யாவை கல்யாணம் பண்ணி, அந்த ஆள் சொத்தையெல்லாம் இவன் அடையணும்கிறது தான் இவனோட மொத்த பிளானே..! இந்த ஒரு மாசமும் நான் என்ன பண்ணேன்னு நினைச்ச..? முழுசா இவனைப் பத்தின தகவலைத் தான் கலெக்ட் பண்ணியிருக்கேன்.” என்று விஜய் சொல்ல,
“என்ன சொல்ற விஜய்..? நீ மனசு சரியில்லாம இருக்கன்னு நாங்க நினச்சுட்டு இருந்தா.. நீ இவ்வளவு வேலை பண்ணி வச்சிருக்க..?” என்றான் பிரவீன்.
“என்னைப் பத்தி என்ன நினைச்ச பிரவீன். என்னை ஒருத்தன் இந்த அளவுக்கு நடைபிணமா ஆக்கியிருக்கான். நான் காப்பாத்தி கூட்டிட்டு வந்த ஒரு பொண்ணு இவனால செத்திருக்கா. எல்லாத்தையும் மறந்து நான் பைத்தியமா இருந்திருக்கேன். அவ்வளவு சீக்கிரம் இவனை விட்றுவேனா..? அதெல்லாம் அவனுக்கு எங்கெங்க ஆப்பு சொருகனுமோ.. அங்கங்க சொருகித் தான் வச்சிருக்கேன். அது சீக்கிரம் வேலை செய்யும்ன்னு நினைக்கிறேன். ரொம்ப நாள் எடுக்காது..!” என்றான் விஜய்.
“இப்போதாண்டா பழைய விஜய்யைப் பார்த்த மாதிரி இருக்கு..!” என்று பிரவீன் அவனைக் கட்டிப் பிடிக்க,
“மச்சான் சார்.. விலகுங்க. உங்க தங்கச்சி தான் நியாயத்துக்கு கட்டிப் பிடிக்கணும். ஆனா, அவ என்னடான்னா தட்டிக் கழிச்சுட்டே இருக்கா..?” என்ற விஜய் பெருமூச்சு ஒன்றை விட..
“வாடா..! கீழ தான் இருக்கா. நான் வேணும்ன்னா சொல்லட்டுமா..?” என்றான் பிரவீன் சிரிப்புடன்.
“ஏன்..? நான் நல்லா இருக்குறது உனக்குப் பிடிக்கலையா..? நீ சிபாரிசு பண்ற அளவுக்கு எல்லாம் போகாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா..? உன் தங்கச்சி மேல எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு..!” என்றான்.
“என்னடா டவுட்..?” என்றான்.
“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. அது எங்க பர்சனல். சீக்கிரம் வா, என் பொண்டாட்டி வெயிட் பண்ணுவா..!” என்று விஜய் வேகமாக நடக்க,
“அடப்பாவி..! நான் என்னமோ இவனை நிறுத்தி வச்சு பேசுன மாதிரி பேசிட்டு போறான்..?” என்று நொந்து கொண்டவன், அவனுக்கு பின்னால் சென்றான்.
கீழே துளசி எரிச்சலுடன் நின்று கொண்டிருந்தாள். விஜய் வந்ததைப் பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேற,
“இவ்வளவு நேரம் என்னடா பண்ணிங்க..? ஏன் மச்சினிச்சிய விட்டுட்டு வர மனசில்லையோ..?” என்றாள் எரிச்சலுடன். அவன் இவ்வளவு நேரம் திவ்யாவுடன் பேசிவிட்டு வந்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு.
“தேவையில்லாம பேசாத துளசி..!” என்றான் விஜய்.
“நான் அப்படித்தாண்டா பேசுவேன்..! நீ நிறுத்தி நிதானமா பேசிட்டு வருவ. அதுவரைக்கும் நான் வெயிட் பண்ணனுமா..?” என்றாள்.
“என்ன துளசி இதெல்லாம்..?” என்று பிரவீன் ஏதோ பேச வர,
“நீ சும்மா இருண்ணா.. உனக்கு ஒன்னும் தெரியாது..!” என்றாள்.
“எங்களுக்காக எதுக்கு நீ வெயிட் பண்ண..? நீ தனியா உன்னோட கார்ல தான வந்த. கிளம்பி போயிருக்க வேண்டியது தான..?” என்றான் விஜய்.
விஜய் அப்படி சொல்லவும் துளசிக்கு என்னவோ போல் ஆக, கலங்கிய கண்களை மறைத்தவள்,
“ஆமால்ல..! நான் தனியா தான வந்தேன். நான் தனியாவே போயிக்கிறேன். நான் எதுக்கு வெயிட் பண்ணனும்..?” என்று என்னவோ போல் சொன்னவள், வேகமாக காரை எடுக்கப் போக,
“சாவியை குடு..! நான் எடுக்குறேன்..!” என்றான் விஜய்.
“தேவையில்லை..! நான் தனியாவே போய்க்கிறேன்..” என்றவள் வீம்பாய் தர மறுக்க,
“குடுடின்னு சொன்னா..?” என்று அவளின் கையை முறுக்கி சாவியைப் பிடுங்கியவன், கார் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளி டோரை அடைத்தான்.
“நீ அந்த கார்ல வாடா நல்லவனே..!” என்று பிரவீனைப் பார்த்து கண்ணடிக்க..
“நீ நடத்துடா..! நல்லா இருந்தா சரி..!” என்று புலம்பியபடியே சென்றான் பிரவீன்.
விஜய் காரை எடுக்க..
“இப்ப எதுக்குடா என் கார்ல வர்ற..?” என்றாள் கோபமாய்.
“நான் ஒன்னும் உன்னோட கார்ல வரலை. என்னோட பொண்டாட்டி கார்ல தான் வரேன். பொண்டாட்டி கார் என்னோட கார் மாதிரி தான..?” என்றான் மந்தகாசமாய்.
“பொண்டாட்டி பொண்டாட்டி..!” என்று கத்தியவள்,
“யாருடா கண்டு பிடிச்சது இந்த பொண்டாட்டியை..? இப்ப என்ன அக்கறை வந்து உனக்கு ஆடுது. இத்தனை வருஷம் நான் தனியா தான் போயிட்டு இருக்கேன். அப்பல்லாம் உனக்கு அக்கறை வரலையோ..? பொண்டாட்டின்னா மட்டும் தான் அக்கறை எல்லாம் வருமா..?” என்றாள் கோபமாக.
“இத்தனை வருஷம் நான் கூட தனியா தான் போயிருக்கேன். தனியா இருக்குற மாதிரி ரொம்ப பீல் பண்ணியிருக்கேன். அப்பல்லாம் உனக்கும் எந்த அக்கறையும் வந்த மாதிரித் தெரியலையே. அப்பறம் என்கிட்டே இருந்து மட்டும் எப்படி எதிர்பார்ப்ப..?” என்றான் ஒரு மாதிரி விரக்தி குரலில்.
“பொண்டாட்டி போன சோகத்துல இருக்கேன்னு நினச்சேன்..! அப்போ, அடுத்தவ புருஷனை கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் தரங்கெட்டுப் போயிடலை..!” என்றாள்.
அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை முள்ளாய் தைத்து, கோபத்தை அதிகப்படுத்த, தன்னைத் தானே அடக்கிக் கொண்டான் விஜய். கஷ்ட்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்னைகையுடன்,
“அப்படியா..? அப்போதான் அடுத்தவ புருஷன். இப்போ உன் புருஷன் தான். இப்ப ஒன்னும் கெட்டுப் போகலை.. இப்பக் கூட நீ கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொல்லலாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..!” என்றான்.
“இவனுக்கு என்ன ஆச்சு..? முன்னாடி எல்லாம் இப்படிப் பேசுனா கோபப்படுவான். இப்ப எப்படி பேசுனாலும் எல்லாப் பக்கமும் கோல் போடுறான்..?” என்று துளசி யோசிக்க,
“என்ன துளசி..? எப்படிடா இவனை திடீர்ன்னு கட்டிப் பிடிக்கிறதுன்னு யோசனை பண்றியா..?” என்றான் சிரிப்புடன்.
“விஜய்..!!!” என்று பல்லைக் கடித்தாள் துளசி. காரை கொஞ்சம் ஸ்லொவ் செய்தவன்,
“நான் வேணுமின்னா சொல்லித் தரவா..?” என்றான்.
“ஆணியே புடுங்க வேண்டாம்..!” என்றாள் துளசி.
“நான் இன்னும் ஒன்னும் பண்ணவேயில்லையே..?” என்றான்.
“என்ன இவன் இப்படி எல்லாம் பேசறான். முன்னாடி இப்படி எல்லாம் பேச மாட்டானே..?” என்று நினைக்க,
“நான் என்ன பண்ண துளசி. சில விஷயங்களைப் பேசினாத்தான உனக்கும் புரியுது..!” என்று சொல்ல, அவனை முறைத்தாள் துளசி. அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“ஒரு உண்மையை சொல்லவா துளசி..” என்று நிறுத்தினான்.
என்ன..?
அவளே எதிர்பார்க்காமல் அவளை சட்டென்று இழுத்து அணைத்திருந்தான் விஜய். அவளுக்கு மூச்சு முட்டும் அளவிற்கு அவனுடைய அணைப்பு இறுகிக் கொண்டு போக,
“விஜய்..! என்ன பண்ற..? மூச்சு முட்டுது..! இது கார்.. பிளீஸ் விடு..!” என்று துளசி திமிர,
சில நிமிடங்கள் அவளுள் ஆழ்ந்து போனவன், அதற்கு பிறகே அவளை விட்டான். அவன் அணைத்திருந்த போது மூச்சு முட்டுவதைப் போல் இருந்த துளசிக்கு அவன் விடவும் மூச்சே விட முடியாது போல் இருந்தது.
“உனக்கு என்னதான் ஆச்சு துளசி..?” என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டிருக்க,
“அப்பா இறந்தப்போ… உன்கிட்ட இருந்து இப்படி ஒரு ஆறுதலை நான் எதிர்பார்த்தேன் துளசி. ஆனா, கடைசி வரைக்கும் அது நடக்கவே இல்லை. ஒருவேளை நடந்திருந்தா, மனசு கொஞ்சம் ஆறுதல் அடைஞ்சிருக்குமோ என்னவோ? யார் வந்து ஆறுதல் சொன்னாலும், நமக்கானவங்க சொல்ற மாதிரி இருக்காதுல்ல துளசி..!” என்று ஒரு மாதிரி குரலில் பேசியவன், சட்டென்று காரை எடுக்க அவனையே அதிர்ந்து பார்த்தாள் துளசி. அவனுடைய கலங்கிய முகம் அவளுக்கு என்னவோ செய்ய, அவள் தனக்குத் தானே போட்டிருந்த சில விளங்குகள் அங்கு உடையத் தொடங்கியிருந்தன.
அன்பிற்கும் மிஞ்சிய சக்தி இந்த உலகில் வேறு எதுவும் உண்டா… என்ன..? துளசியும் அப்படித்தான் இருந்தாள். அவள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியதை அறியாத விஜய், அதே விரக்தியில் காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.
மனதில் இல்லாத நிம்மதி.. அலைப்புறுதலாய் அவர்களின் முகத்தில் அலை மோதிக் கொண்டிருந்தது.