“ஓகே’டா! பி கேர்புல்! தேவையில்லாத எதுலையும் தலையிடாத! கொஞ்ச நாள் அமைதியா இரு! புதுசா வர கமிஷ்னர் டைரெக்ட்டா இந்த கேஸ் ஹேண்டில் பண்ணப்போறதா கேள்விப்பட்டேன்!” என்று சொல்ல,
‘யார் அது?’ என்று கேட்க தோன்றினாலும் அவள் கேட்கவில்லை.
“நம்ம ஊருல இருக்க போலிஸ் வேண்டான்னு கேரளா’ல இருக்கவனை வம்படியா இங்க கொண்டு வராரு டி.ஐ.ஜி! பாப்போம் அவன் என்ன செய்யுறான்னு!” என்று சொல்ல,
“யார் சார் அது!?” என்றாள் அவள்.
அவளை பார்த்து குறும்பாய் சிரித்தவர், “உன் ரோல் மாடல்!” என்று சொல்ல, புருவம் சுருக்கினாள் அவள்.
“என்ன பாக்குற? எட்டு வருஷம் முன்ன யூபிஎஸ்சி’ பரீட்சைய பர்ஸ்ட் அட்டெம்ப்ட்’லயே கிளியர் செஞ்ச, ‘THE YOUNGEST IPS OFFICER IN INDIA’ மிஸ்டர் ரகுநந்தபூபதி!” என்று அவர் சொன்னபோது ஆச்சர்யத்தில் தன்னை போல் விரிந்தன அவள் இதழ்கள்!
அவள் ஆச்சர்யத்தை கண்டு சிரித்தவர், “அவனை பார்த்து தானே நீயும் அதே மாதிரி ஆகணும்ன்னு தீயா படிச்ச!?” என்று சொல்ல,
அவர் தன்னை இயல்பாக்கவே இப்படி இலகுவாய் பேசுகிறார் என்பது வேறு அவளுக்கு வேதனையாய் இருந்தது.
“யார் வந்தா என்ன சார்? நம்ம வேலையை நம்ம பாக்கப்போறோம்!” விட்டேத்தியாய் சொன்னாள்.
தன் இலகு பேச்சை கைவிட்டவர், “வரவன்க்கிட்ட கொஞ்சம் தள்ளியே நில்லு! எனக்கு தெரிஞ்சவரை அவன் வேற மாதிரி! இதை நான் கமிஷ்னரா சொல்லல! உன் ‘அங்கிள்’ளா சொல்றேன்!” என்றார் தீவிரமாய்.
அவளுக்கு புரியவேயில்லை. இவர் எதற்கு இப்படி ஒன்றும் இல்லாததை பூதாகரமாய் சொல்ல வேண்டும் என்று!!!
ஆனால், அவளுக்கு தெரியாதே வரப்போவதே ‘பூதம்’ தான் என்று!!!
அந்த காருக்குள் பாடல் காது ஜவ்வு கிழியும் அளவுக்கு ஒலிக்க, அதனூடே சேர்ந்து,
‘ஆ…ஹஹன்… ஆ…ஆ…! ம்ம்… ஹஹான்… ஆ…ஆ!!!’ என சத்தமாய் ராகம் போட்டுக்கொண்டிருந்தது ஒரு குரல்.
டிரைவர் சீட்டில் இருந்த நடேசனுக்கு சற்று நேரத்திற்கு முன் இருந்த உற்சாகம் இப்போது துளிக்கூட இல்லை.
கமிஷ்னர் மாற்றம் குறித்த செய்தி பரவியதுமே புதியதாய் வர போகும் நபரை பற்றி அறிந்துக்கொள்ள தன்னியல்பாய் ஆர்வம் பீறிட,
‘இளம்வயதில் ஐ.பி.எஸ் முடித்து சாதனை’ செய்த ஒரு வாலிபனை காண அனைவருக்குமே சற்று ஆவலாக தான் இருந்தது.
இதோ இன்று அவனை ஏர்ப்போட்டில் இருந்து அழைத்து வர நடேசன் கிளம்பியப்போது கூட, ஏதோ சற்று பரபரப்பாய், சந்தோசமாய்… காணாதவன் மீது காதில் கேட்டறிந்த விஷயங்கள் மூலம் உண்டான மரியாதையோடு அவர் வந்து நிற்க, தூரமாய் காக்கி உடையில் விறைப்பாய் நடந்து வந்தவனின் தோற்றத்திலேயே சொக்கிப்போனார் அவர்.
பயபக்தியுடன் கார் கதவை திறந்துவிட்டு அவன் அமர்ந்ததும் காரை கிளப்பியவரின் பூரிப்பு எல்லாம் சில நிமிடங்களிலேயே புஸ்வானம் ஆனது அவன் செய்கைகளில்.
“ரங்கம்மா மங்கம்மா
ஏ பில்லடு…
பக்கன்னே உண்டாலம்மா
பட்டிஞ்சுப்போடு!”
முன்னாடி மலையாளம்… இப்போது தெலுங்கு…!
இன்னமும் அவன் வாய் ஓயாமல் பாடிக்கொண்டு தான் இருந்தது.
பின்னால் இருந்தவனை கண்ணாடியில் பார்த்துவிட்டு சத்தமில்லாமல் ‘உச்சு’ கொட்டினார் நடேசன்.
கியர் மாற்ற வேண்டி அவர் கைகள் நகர, அங்கே நெடுநெடுவென நீண்டிருந்தது அவன் கால்கள். பின்னால் இருந்து முன்னே நீட்டியவனின் கால்கள் டேஷ்போர்டில் இடித்தது.
சலிப்பு எழ, அவன் காலை இடிக்காதபடி பார்த்து கியர் மாற்றிக்கொண்டார்.
அவனோ, “கமிஷ்னரை கூட்டிட்டு வர அனுப்பிருக்க கார்’ல ஏ.சி’யே இவ்ளோதானா?” என்றான், காக்கி உடையின் முதல் இரண்டு பட்டன்களை அவிழ்த்தபடி.
அவன் கேட்டதும் அவர் அளவை கூட்ட, “பார்ரா… கேட்டா தான் கிடைக்குமா?” என்றான் இடக்காய்.
“அப்படி எல்லாம் இல்ல சார்!” என்றார் நடேசன்.
“ம்ம்!” என்றவன், எதையோ தன் பேக்கெட்டில் இருந்து எடுத்து வாயில் கொட்ட, நடேசன் ஒரு நொடி திகைத்துப்போய் பார்த்தார் அவனை.
அவர் பார்வையை உணர்ந்தவன் நமட்டு சிரிப்போடு, “வேணுமா? இம்போர்டட் கஞ்சா!” என்று சொல்ல, வெடவெடத்தே போனார் அந்த தலை நரைத்தவர்.
அதைக்கண்டு ஆர்ப்பாட்டமாய் சிரித்தவன், சற்று முன்னே சென்று அவர் காதருகே ஊத, குப்பென நெடி தாக்கியது அவர் நாசியை.
வேகமாய் ஒற்றை கையால் மூக்கை பொத்திக்கொண்டவரை பார்த்து இன்னமும் சிரித்தான் அவன்.
“இந்த வாசனைக்கே ரெண்டு நாள் தலை கிர்ருன்னு இருக்கும்!” என்று வேறு சொல்ல,
‘இப்போதே மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு எங்காவது ஓடிவிட்டால் என்ன?’ என்று தோன்றியது அவருக்கு.
ஒரு நாளில் சில மணி துளிகளுக்கே இந்த பாடென்றால், இனி தினம் தினம் அவருக்கு காரோட்டியாக தன்னால் இருக்க முடியுமா என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
கார் சிட்டிக்குள் பயணித்துக்கொண்டிருந்தது.
“ட்ரீமும் வேக்கப்’பமும்
கிரிடிக்கல் கண்டிஷனும்…
ஹே… எர்த்தும் குவேக்’கப்பும்
ஹில் டூல் சப் ஷேக்’அப்பும்…!”
அடுத்த பாடல் ஓட, இவனும் உடன் சேர்ந்து வரிகளை மனப்பாடமாய் பாட, அதில் வரும் ‘ஒன்னு, ரெண்டு மூணு நாலு…’ என்பதை தவற நடேசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
‘இது என்னடா காவல்துறைக்கு வந்த சோதன! இவரை நம்பி சென்னை மாகாணத்தையே குடுத்துருக்காங்க! என்ன லட்சணமா இருக்க போவுதோ!?’ என்று அவர் மனதார வெம்பிக்கொண்டே வண்டியை செலுத்த, அவர் தோளில் ‘சொத்..சொத்’தென தட்டினான் பின்னால் உள்ளவன்.
“சார்?”
“வண்டியை நிறுத்து!”
ஏனென்று கேட்காமல் அவர் வண்டியை ஓரம் கட்ட, அதில் இருந்து இறங்கியவன் விறுவிறுவென சாலையை கடந்து மறுபறம் சென்றான்.
அங்கே ஒரு சிறு கும்பல் இருந்தது.
இரு வாகன ஓட்டிகளுக்கு இடையே எழும் வாய்சண்டை தான் என்பது பார்த்தாலே தெரிந்தது.
போனவனோ, போன வேகத்தில் சண்டை போட்டுக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவரை ‘பளாரென!’ அறைய, அங்கிருந்த ட்ராபிக் போலீசே ஸ்தம்பித்தனர்.
அவன் ஆட்டோவை பார்த்துக்கொண்டே, அவன் காலரை பிடித்து இழுத்தவன்,
“என்ன இது?” என்றான் அதில் எழுதியிருந்த வசனத்தை காட்டி.
அடியிலேயே மிரண்டு இருந்தவன், அவன் கேள்வி கேட்டதும், “சார்… நான் ஒன்னும் பண்ணல… இந்தாள் தான் ராங்கா வந்து இடிச்சான்!” என்று எதிரே இருந்த காரோட்டியை கைக்காட்டினான்.
“நோ சார்! ஹி ஒன்லி டிட் அ மிஸ்டேக்! என் கார் சைட்’ல டேமேஜ் ஆச்சு சார் இவனால!” என்றான் அவன்.
ஆட்டோ கரனின் காலரை தன்னை நோக்கி இழுத்து, “இது என்னன்னு கேட்டேன்!” என்று வினவ, அவன் காட்டியதை பார்த்து,
“மங்காத்தா!” என்றான் அந்த ஆட்டோ ஓட்டி..!
அஜித்தின் மங்காத்தா ஸ்டில்லை ஆட்டோவின் எல்லா பக்கமும் வரைந்து வைத்திருந்தான்.
“ஏன்டா, பெத்த ஆத்தாவுக்கு சோறு போட கணக்கு பாக்குற மூதேவி, ஆட்டோ முழுக்க, மங்காத்தா… உங்காத்தா… எங்காத்தா’ன்னு வசனமா எழுதிட்டு சுத்துற!?” என்றான்.
மீண்டும் அடித்துவிடுபவன் போல பேசியவனை கண்டு மிரண்டவன், “அழிச்சுடுறேன் சார்! அழிச்சுடுறேன்” என்றான் அவன் அவசரமாய்.
“அதை மொதோ செய்யு! சும்மா மனசுல பெரிய ஹீரோன்னு நினைச்சுக்கிட்டு ரோட்ல நின்னு ஸீன போடாத!” என்றவன், “கிளம்பு!” என்று விரட்ட, வேகவேகமாய் அங்கிருந்து நகர்ந்தான் ஆட்டோ ஓட்டி.
“தேன்க் யூ சோ மச் சார்! ஹி வாஸ் வேஸ்டிங் மை டைம்!” காரோட்டி நன்றி சொல்ல, அவனையும் ‘பளார்!’ என அறைந்துவிட்டான் அவன்.
அதிர்ந்து போய் அவன் நிற்க, “ராங் ரூட்டு’ல வந்ததே தப்பு! இதுல இங்குலீஷு வேற! போடா!” என்று சொல்ல, மறுநொடில்லாமல் ஓடினான் அவன்.
கூடி நின்று வேடிக்கை பார்த்த பொதுஜனத்தில் ஒன்று, “இதுக்கு தான் இப்படி ஒரு போலீஸ் வேனுங்குறது!” என்று சொல்ல, ஒரே எக்கில் அப்படி சொன்னவனை பிடித்து,
“இதை சொல்லதான் இவ்ளோ நேரமா நின்னு வேடிக்கை பார்த்தியா?” என்றதும், ‘எங்கே தன்னையும் அடித்து விடுவானோ?’ என அந்தாள் பயப்பட,
நடேசன், “சார்! போலாம் சார்! நேரமாச்சு!” என்றார்.
வாட்சை பார்த்தவன், ட்ராபிக் போலீசையும் கடிந்துக்கொண்டு காரில் ஏற, இப்போது நடேசன் மனதில் ஒரு துளி நம்பிக்கை வந்திருந்தது.
“இந்த சின்ன விஷயத்துக்கு நீங்களே போணுமா சார்?” என்றார்.
“கண்ணு முன்ன ஒரு அநியாயம் நடந்தா தட்டி கேட்கணும் பெருசு!” என்று அவன் சொல்ல, அவன் தன்னை மரியாதை குறைச்சலாய் விளித்தது கூட அவருக்கு பெரிதாய் படவில்லை.
‘இந்த மட்டிலும் பொறுப்பாய் இருந்தால் சரி!’ என நிம்மதியடைந்தார்.
“வாய் நமநமங்குது… ஒரு டீ குடிப்போம்!” என்றான்.
ஓரளவு நல்ல கடையாய் பார்த்து வண்டியை நிறுத்தினார் நடேசன்.
அவன் இறங்கி நின்றதுமே, சற்று தூரத்தில் ஒரு பெண்மணி, “ஐயோ திருடன்… திருடன்… என் செயினை அறுத்திட்டு போறானே! யாராவது புடிங்களேன்!” என்று அலற, இவன் கொட்டாவி விட்டுக்கொண்டே அதை பார்த்துக்கொண்டு நின்றான்.
நடேசன் பதறியபடி, “சார், திருடன்… நம்ம போனா புடிச்சுடலாம்!” என்று சொல்ல,
“ம்ச்! டீ சொல்லுங்க மொதோ!” என்றான் அசட்டையாய்!
“சார்?” திகைத்தார் அவர்.
ஆனாலும், “சார், கண்ணு முன்ன ஒரு அநியாயம் நடக்குது! தட்டி கேட்கணும்’ன்னு நீங்க தானே சொன்னீங்க!?” என்று கேட்க,
“கேட்கணும் தான்! ஆனா, எல்லாத்தையும் நம்மளே கேட்டா, அப்பறம் இந்த ஏரியா போலிஸ் என்ன செய்யுமாம்!?