அந்த மகளிர் கல்லூரியின் மைதானம் வண்ண வண்ண பெண் மலர்களால் நிரம்பி வழிந்தது. அவர்களின் உடையலங்காரமே அங்கு ஒரு பெரும்விழா நடக்கப்போவதை பார்ப்பவருக்கு உணர்த்த, அதை மெய்ப்பிக்கும் வகையில் தோரணங்களும், பலகைகளும், பலவண்ண காகிதங்களும் அந்த விசாலமான ஆடிட்டோரியத்தை அலங்கரித்திருந்தது.
பெண்கள் கூட்டம் கொஞ்ச கொஞ்சமாய் அரங்கத்தை அடைக்க ஆரம்பித்திருந்தது. பளிச்சென அலங்கரிக்கப்பட்டு, மஞ்சள் நிற ‘புல் போக்கஸ்’ பிரகாசமாய் மின்னிய மேடைக்கு பின்னே இருந்த மறைவில், அதாவது ‘பேக் ஸ்டேஜில்’
“இப்போ என்ன பண்றதுன்னே எனக்கு தெரியலையே!?” என்று புலம்பினாள் ஒருத்தி!
அவள் முகமும், உடலசைவும் அவளது பதற்றத்தை மறைக்காது வெளிப்படுத்த, அவளுக்கே எதிரே அடுக்கியிருந்த நான்கு பிளாஸ்டிக் சேர்களின் மீது ஜம்மென அமர்ந்துக்கொண்டு துளிக்கூட பதட்டமின்றி ஆப்பிளை கொறித்துக்கொண்டிருந்தாள் ஜனனி.
“ம்ச்! இப்போ என்னடி செய்வேன்?” முன்னவள் மீண்டும் புலம்ப,
“இப்போ என்ன ஆச்சு? அதை சொல்லாம பத்து நிமிஷமா உளறிட்டு இருக்கியே!”
ஜனனியின் நிதானமான கேள்வியில் எரிச்சல் தான் வந்தது அவளுக்கு.
“ம்ச்… போடி!”
உண்மையிலேயே அவள் பதற்றத்தில் இருக்கிறாள் என்பது விளங்க,தன் விளையாட்டை விட்டவள் அவள் அருகே சென்று,
“கூல் தங்கம்! எதுவா இருந்தாலும் சும்மா லெப்ட்’ல விட்டு ரைட்டு’ல வாங்கிடலாம்! சப்பை மேட்டர்! கவலைய விடு!” என்றாள்.
ஜனனிக்கு எப்போதுமே எல்லாமே ‘சப்பை மேட்டர்’ தான்! எதை கண்டும் அத்தனை சீக்கிரத்தில் கலவரமடைய மாட்டாள்! உணர்ச்சி ரீதியான பேச்சுக்களோ, முடிவுகளோ கூட இதுவரை அவளிடம் இருந்ததில்லை.
“ம்ச் ஐயோ!!!” என சோர்வாய் தரையில் அமர்ந்த அந்தப்பெண், “அவர் வரலன்னா தான் பரவாலையே! அவருக்கு பதிலா அவர் பையன் வராராம்’டி!” என்றாள்.
“வாட்? பையனா? நம்ம கரெஸ்’ ஒண்டிக்கட்டை இல்லையா?”
‘இதுவல்லவோ இப்போது முக்கியம்!?’ என்ற பாவனையில் இருந்தது ஜனனியின் கேள்வி.
“பையன்னா… அவர் அக்கா பையன்’டி!” என்றவள், “இப்போ லாஸ்ட் மினிட்’ல வந்து, ‘ஷ்யாமளன்’ன்னு ஒருத்தர் வராரு.. அவரை புகழ்ந்து நாலு வரி சொல்லிடு’ன்னு ப்ரின்சி சொல்லுது!
பேரை’ மட்டும் வச்சுக்கிட்டு ஒண்ணுமே தெரியாத ஆளை பத்தி என்னன்னு நான் புகழுவேன்? நீயே சொல்லு!
இன்னும் ஒன் ஆர்’ல கெஸ்ட் வந்துடுவாங்க! எனக்கு மண்டை காயுது!” என்று புலம்பித்தள்ளினாள்.
‘இது உண்மையில் சற்று சிக்கல் தான்! வரும் அத்தனை பேரையும் மானே… தேனே… பொன்மானே… என்று கொஞ்சிவிட்டு ஒருவனை மட்டும் விட்டாலும் சரியிருக்காது, அதற்காக அத்தனை பேரின் புகழுரைகளையும் ரத்து செய்யவும் முடியாது!’
குறுக்கும் நெடுக்குமாய் நடந்து நகத்தை கடித்துத்துப்பி சில நிமிடங்கள் யோசித்தவள், “ப்ரின்சி வேற எதாவது டீடெய்ல்ஸ் குடுத்தாங்களா?” என்றாள்.
நினைவடுக்கை தூசி தட்டி யோசித்த தோழியோ, “ஹான்…? பேரு சொன்னாங்க… அப்பறம்… அப்பறம்… ஆங்… நம்ம பாய்ஸ் காலேஜ்’ல தான் அவர் டிகிரி முடிச்சாராம்!” என்றாள்.
“அட! இது போதுமே! கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு! அய்யா’வ பத்தின ஆள் டீடெயிலோட அம்மணி வர்றேன்!” என்றுவிட்டு சிட்டாய் பறந்தாள்.
இவர்கள் மகளிர் கல்லூரி இருக்கும் அதே சாலையில் தான் அவர்களின் ஆண்கள் கல்லூரியும் இருந்தது.
தோழியிடம் சொல்லிவிட்டு மறைந்தவள், அடுத்த அரைமணி நேரத்திற்குள் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கிக்கொண்டு கெத்தாய் வந்தாள்.
அவள் வந்த தோரணையே சொன்னது, போன காரியம் வெற்றி என!!!
அதன் பின்னே அந்த கல்லூரியின் செக்ரட்டரியாக’ அவளது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் ஜனனி!
அங்கும் இங்குமாய் சுற்றி திரிந்த மாணவிகளை ஒழுங்குப்படுத்தி ஆடிட்டோரியத்துக்குள் அடைத்து, லைட், ஃபேன் அத்தனையும் சரியாய் வேலை செய்கிறதா? ஸ்பீக்கர், மைக்’கில் எந்த பழுதும் இல்லையே..! நடக்கப்போகும் நிகழ்சிகளில் பங்குக்கொள்ள வேண்டிய மாணவிகள் எல்லோரும் தயார் நிலையில் உள்ளனரா? என்பது துவங்கி பாத்ரூம் பைப்பில் தண்ணீர் வருகிறதா என்பது வரை ஆராய்ந்து முடித்தவள் மீண்டும் ‘பேக் ஸ்டேஜ்’ போனபோது, அவளை நகரவிடாமல் பிடித்துக்கொண்டாள் மெர்லின்.
“விடு மெர்லின், பொக்கே’ எல்லாம் எடுத்து வைக்கணும்.. இன்னும் அஞ்சே நிமிஷம் தான் இருக்கு!” என்று துடித்த ஜனனியை இழுத்து பிடித்த மெர்லின்,
“இன்னைக்கு முதல் பர்ஃபாமென்சே நம்ம தான்… கொஞ்சமாவது அந்த நியாபகம் இருக்கா உனக்கு?” என்றாள்.
ஜனனி, “அட என்னடி நீ! பாட்டு பாடுறதென்ன நமக்கு புதுசா? சும்மா லெப்ட்’ல விட்டு ரைட்டு’ல வாங்கிடலாம்! ஜுஜுப்பீ!” என்று சொல்ல,
“உனக்கு எது தான்ம்மா கஷ்டம்! எல்லாமே ஜுஜுப்பி தான்” என்றாள் சௌமியா, அவர்கள் குழுவின் கிட்டார் வித்தகி.
“தெரியுது’ல? தென் வாட்? நான் இப்போ வாசல்ல இருக்கணும்! வரவங்களை இன்வைட் பண்ண நான் அங்க போகலன்னா என்னை தேடி ஒரு கூட்டமே வரும் தெரியுமா?” ஜனனி சொல்லிமுடிக்கும் முன்னே,
“இங்க என்னடி பண்ற? சீக்கிரம் போ! எல்லாரும் வந்துட்டு இருக்காங்க!” அவளை தேடி உக்கிரமாய் வந்து நின்றாள் ப்ரெசிடென்ட்!
“நான் சொல்லல?” என்று மெர்லினிடம் பந்தா காட்டியவள், “நான் போனா தான் எல்லாரும் உள்ள வர முடியும்! வழிய விடு!” என்று விட்டு நகரவே,
“ஏய், நல்லா பாடிடு ஜனனி! நீ பாடுன பிறகு தான் நாங்க ஆரம்பிப்போம்! ப்ராக்டிஸ் பண்ணதை சொதப்பிடாத!” என்று அவசர அவசரமாய் கத்தினாள் மெர்லின்.
திரும்பிக்கூட பாராதவள், கட்டை விரலை மட்டும் உயர்த்திக்காட்டிக்கொண்டே ஓட,
“இவ கண்டிப்பா சொதப்புவா இன்னைக்கு!” என்று ஆரூடம் சொன்னாள் சௌமியா.
அது ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் கல்லூரி! மொத்தம் இருபத்தி ஐந்து உறுப்பினர்கள் சேர்ந்து அந்த கல்லூரியை துவங்கி இருக்க, இரு வருடங்களுக்கு ஒருமுறை தலைமையும், பொறுப்பும், இன்ன பிற பதவிகளும் சுழற்றி முறையில் அனைவருக்கும் வரும்.
அதுவகையில் மார்த்தாண்டம் இந்த வருடத்துக்கான ‘நிருபர்’ராக இருந்தார்.
கல்லூரி பொறுப்பாளர்கள் அத்தனை பேரையும் ஒருசேர ஆடிட்டோரியத்துக்கு பிரின்சிபால் அழைத்துக்கொண்டு வர, வாயிலில் வரவேற்க நின்றிருந்த ஜனனியின் கண்கள் அந்த கூட்டத்தில் ‘புதியவனை’ தேடியது.
மேடையில் ப்ரெசிடென்ட் ஒவ்வொருவருக்கான புகழுரைகளை வாசிக்க ஆரம்பித்திருந்தாள்.
அவர்கள் நடந்து வர வர, அந்த புகழ்ச்சி மழையில் நனையட்டுமே! என்று இந்த ஏற்ப்பாடு!
ஓரளவு அருகே வந்த பிறகே ஊன்றி கவனித்தாள். இளம் தலை ஒன்றுமே அதில் தென்படவில்லை.
‘அட கிராதகா! உன்னை வரவேற்க சுவர் ஏறி குதிச்சு, உன் பழைய காலேஜ் வாட்ச்மேன்’னை எல்லாம் ஐஸ் வச்சு விஷயத்தை வாங்கிட்டு வந்தா, நீ இப்படி ஏமாத்திட்டியேடா!’ முகம் காணாதவனை மென்மையாய் கடிந்துக்கொண்டு அவள் வந்தவர்களை இன்முகமாய் பூச்செண்டு கொடுத்து வரவேற்றாள்.
மேடையில் போடப்பட்டிருந் நாற்காலிகளில் அத்தனை பேரும் அமர, கல்லூரியின் ‘இருபத்தி ஐந்தாம் ஆண்டு’ கொண்டாட்டம் ஆரம்பமானது.
ப்ரின்சியின் உத்தரவின் பேரில் மேடையின் ஓரத்திலேயே நின்றிருந்தாள் ஜனனி. வந்த அத்தனை வெள்ளை தலையும் கல்லூரியின் வரலாறு பூகோளத்தை அள்ளிவிட, கொட்டாவி கூட விட முடியாத தன் நிலையை கண்டு தானே வருந்தியபடி,
‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவ! என் நிலைமையை பார்த்தியா சிவகாமி!?’ என்றாள் மேடையின் மேற்கூரையை பார்த்து.
அவள் காதருகே, “என்னடி பண்ற?” என்றாள் ப்ரெசிடென்ட்.
“செத்து போன என் அம்மாக்கிட்ட பேசுறேன்டி!” என்று சாதரணமாய் சொன்னவளை கண்டு விழித்தவள்,
“செத்துப்போய்ட்டாங்கன்னு ஃபீலிங்’சே இல்லாம சொல்ற?” என்றாள் அவள் ஆச்சர்யமாய்.
“இப்போ நான் ஃபீல் பண்ணிட்டா மட்டும் எப்பவோ செத்துப்போன அம்மா திரும்ப வந்துடுவாங்களா?” என்ற ஜனனி,
“எனக்கு என் அப்பா இருக்காரு! செம்ம அப்பா! ஒருவேளை என் அம்மா எதாவது மொக்க புருஷனை கட்டிருந்தா, எனக்கு இப்படி சூப்பர் அப்பா கிடைச்சுருப்பாங்களா சொல்லு…?” என்று கேட்க,
ஜனனியின் பேச்சில் ‘ங்கே’ என விழித்தவள், நைசாக தள்ளி நின்றுவிட்டாள்.