Skip to content
Post Views: 5,744
“ஏன்?” ஒற்றை வார்த்தை உதிர்ப்பதற்குள் மொத்தமாய் உடைந்து கீழே அமர்ந்தாள் ஷைலஜா.
முன்பென்றால் எப்படியோ? இந்த இரு நாட்கள் நெருக்கத்தில் அவள் மனதை நெருங்கியிருந்தான் அவன்.
“ஏன்? கேட்கிறது ரொம்ப சிம்பிள்! பதில் சொல்றது கஷ்டம்” என்றவனும் அங்கிருந்த சிறு மரத்திட்டில் அமர்ந்தான்.
ஷைலஜாவிற்கு கண்கள் உடைப்பெடுக்கவெல்லாம் இல்லை. ஆனால், நெஞ்சே உடைந்தது போன்றதொரு வலி.
இனி வாழ்க்கை அவனோடு தான் என முடிவு செய்துவிட்டதன் ஏமாற்றமா? என்னவோ ஒன்று! அவள் நெஞ்சை அழுத்தி பிசைந்தது.
“முழுசா நனைஞ்சுட்டேன்… இனி முக்காடு எதுக்கு? எல்லாத்தையும் சொல்லிடுறேனே!” என்றவன் மொத்தமாய் சொல்ல ஆரம்பித்தான்.
“அமைச்சர் மகனை கொன்னுட்டேன்! எப்படியும் சும்மா விடமாட்டாங்க! நோண்டுவாங்க! தெரியும் எனக்கு! அப்போதான் உன்னை கேஸ் ஆபீசரா போட்டாங்க! உன்னை பத்தி எல்லா விஷயமும் கலக்ட் பண்ணேன்! நீ எப்படியும் என்னை கண்டுப்பிடிச்சுடுவன்னு தோணுச்சு! ஐ ஆல்வேஸ் பிலீவ் மை இன்ட்யூஷன்ஸ்“
“உன்னை குழப்புறதுக்கும் சரியா வேலையை பார்க்க விடாம செய்யுறதுக்கும் விக்கியை விலைக்கு வாங்குனேன்! நான் எதிர்ப்பார்த்த மாதிரியே மூணு மாசமும் உன்னை ஒன்னையும் கண்டுப்பிடிக்க விடாம நீ போற இடத்துல எல்லாம் கேட் போட்டான்! ஆனாலும் நீ போற ரூட் கரெக்ட்டா இருந்துச்சு! இப்படியே போனா மாட்டிப்போம்ன்னு ‘ஒரு ட்ரைஆங்கிள் லவ் ஸ்டோரியை‘ சொல்லி உன்னை குழப்ப சொன்னேன்!
பட் யூ ஆர் வெரி க்ளவர்! சிவா யாமினியை ஒன்சைடா லவ் பண்ணிருப்பான்… மே பீ இதனால ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டு செத்துருப்பாங்கன்னு விக்கி சொன்னதை நீ அக்சப்ட் பண்ணல! ஈவன் அந்த சைட் கூட நீ போகல!
ஃபைனலி… ரொம்ப நாள் இப்படியே ஓட்ட முடியாதுன்னு புரிஞ்சு, இந்த கேஸ் என் கைக்கு வரமாதிரி ப்ளான் பண்ணேன்!
அந்த மிட்நைட் ஆள்கடத்தல் கும்பல்! என் செட் அப்! அவங்களை நீ புடிச்சா எப்படியும் அமைச்சர் உன்மேல கோவப்படுவாரு! கேஸ் கை மாறும்ன்னு நினைச்சேன்! நடந்துச்சு!
ஆனா, நானே நினைக்காத ஒன்னு… கமிஷ்னரா என்னையே இங்க அப்பாய்ன்ட் பண்ணுவாங்கன்னு! தட் மேட் மை ஜாப் சோ ஈஸி!”
ஏதோ திரைப்படத்தின் கதையை சொல்வது போல அனாயசமாய் பேசுபவனை வெறிக்க வெறிக்க பார்த்தாள் ஷைலஜா.
“இங்க வந்தப்போ என்னோட ப்ளான்… உன்னை இந்த கேஸ்‘ல மாட்டிவிட்டு நான் எஸ்கேப் ஆகணும்ங்குறது தான்! பட் ஃபோர்ச்சுனேட்லி, எனக்கு உன்னை பிடிச்சுப்போச்சு!” என்றான்.
“நீ வேணும்ன்னு தோனுச்சு! அதான் ப்ளான் ‘பி‘ போயிட்டேன்! அதுப்படி, விக்கியை எல்லார் கண்ணுலையும் சஸ்பெக்ட்‘டாக்கி கேஸ் முடிக்கிறது.
அவனுக்கு ஒரு லம்ப் அமவுண்ட் குடுக்குறேன்னு சொன்னேன்! ஒத்துக்கிட்டான்!
கொஞ்ச நாள் யார் கண்ணுலையும் படாம ஒதுங்கி இருடான்னா கம்முனாட்டி… உன் கண்ணுல சிக்கிட்டான்!” பல்லைக்கடித்து உக்கிரமாய் சொன்னான்.
அவள் அப்படியே பார்த்துக்கொண்டே இருக்க, அந்த பார்வை அவனை பாதித்தது போலும்.
“ஷைலுமா! ஆரம்பத்துல நான் பண்ற தகிடுதத்தம் உன் கவனத்துல வரக்கூடாதுன்னு தான் உன்னை ரொம்ப டீஸ் பண்ணேன்! இர்ரிடேட் பண்ணேன்! ஈவன், நான் உன் மாமா பையங்குற மாதிரி உன்னை யோசிக்கக்கூட வச்சு டிஸ்டிராக்ட் பண்ணேன்! ஆனா, போக போக எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு! புரிஞ்சுக்கோடா!” என்றான் அவள் முன்னே அமர்ந்து.
அவன் கண்களில் பொய் இல்லை! கள்ளம் உரைப்பவன் போல இல்லை! ஆனால், இப்படியே பேசி பேசி தானே இத்தனை நாளும் தன்னை முட்டாளாக்கி இருக்கிறான்!
“இன்னும் எதெல்லாம் உங்க திட்டத்துல நடந்துச்சு!?” விரக்தியுடன் கேட்டாள்.
“எல்லாமே! இதுவரை என்ன எல்லாம் நடந்துச்சோ… அது எல்லாமே!!!”
“எல்லாமே‘ன்னா? ஹாஸ்பிடல்ல அந்த பொண்ணு?”
“நான்தான்… பாக்க போனப்போ பிரேஸியிலியன் வாண்டரிங் ஸ்பைடரை பெட் ல போட்டுட்டு வந்தேன்“
“ஹெல்மெட்?”
“விக்கி மேல சந்தேகம் வரனும்ன்னு செஞ்சேன்…”
“நம்மளை கொல்ல வந்தது?!”
“எல்லாம் நான்தான் … இன்னும் உனக்கு என்ன எல்லாம் சந்தேகம் வருதோ அது எல்லாத்துக்கும் நான் தான் காரணம்” முற்றாய் முடித்தான்.
“ஏன்?” அயர்ந்துப்போனது அவள் மனது.
“ஏன்னா? சொல்லிட்டேனே எல்லாம்… இன்னும் என்ன?”
“ப்ச்! எதுக்காக இதெல்லாம்?”
“ஓ! அப்படி கேட்குறியா?” என்றவன்,
“பணம்!” என்றான் ஒற்றை சொல்லாய்.
“பணமா? கேவலம் பணத்துக்காகவா? மூணு உயிரை கூட எடுக்குற அளவு அப்படி என்ன பணத்து மேல ஆசை? என்ன இல்ல உங்கக்கிட்ட? இவ்ளோ நல்ல வேலை.. கை நிறைய சம்பளம்… போதாதா?” அவள் ஆத்திரமாய்க் கேட்க, அவளை விட ஆத்திரத்துடன் கத்தினான் அவன்…
“போதா…..து” அவன் குரல் அந்த அந்தகாரத்தில் அலறியது.
“போதாது… போதவே போதாது!” என்றவன், “என்ன சொன்ன? கேவலம் பணமா? ஹும்… உனக்கென்னமா அப்பா அம்மா வலுவா சேர்த்து வச்சுட்டு போய்ட்டாங்க! நோகாம வளர்ந்துட்ட!
ஆனா, நான்…!?
எந்த பணத்தை கேவலம்ன்னு சொல்றியோ அதே பணத்துக்காக என் கண்ணு முன்னாடியே என் அப்பா அம்மாவை வெட்டி கொன்னானுங்க! அப்ப எனக்கு வயசு வெறும் பதினொன்னு!
வாழ்க்கை பணம் இல்லன்னா ரொம்ப ஈசின்னு நினைச்சியா என்ன? சாவனும்… நாலு காசு கைல இல்லன்னா சாவனும்! உயிரோட மட்டும் இருக்கக்கூடாது!
பதினொரு வயசுல சொந்தம்ன்னு இருந்த பெத்தவங்க ரெண்டு பேரையும் இழந்துட்டு, நடுரோட்டுல நான் நின்னப்போ இந்தா நாலு கான்னு எவனும் குடுக்கல! உனக்கு பசிக்குதா சாப்பிடுறியான்னு ஒருத்தனும் கேட்கல!
ஹோட்டல் வாசல்ல காய்ஞ்சி போய் கிடந்த வயிரோட எத்தனை நாள் நின்னுருக்கேன் தெரியுமா? எச்சி இலையாவது கிடைக்காதான்னு திங்குறவன் முகத்தை எல்லாம் பார்ப்பேன்! ஒரு அரை இட்லி மிச்சம் வச்சா போதுமேன்னு ஏங்குவேன்! கெட்டுபோன சாப்பாடு கிடைச்சா கூட பரவாலன்னு எத்தனையோ நாள் நினைச்சுருக்கேன்!
ஒரு டீ குடிக்க நினைச்சா கூட ரெண்டு ரூவா இருக்கான்னு கேட்பான் என்னை பார்த்ததும்! இல்லன்னு சொல்லிட்டா போதும், அடிக்காத குறையா துரத்துவானுங்க!
பசி…பசி…பசி…! அந்த வயசுல பசி மட்டும் தான்! பசி போகணும்ன்னா சாப்பிடனும்… அந்த சாப்பாட்டுக்கு பணம் வேணும்! அப்போ முடிவு பண்ணேன்! என் பதிமூணு வயசுல முடிவு பண்ணேன்! பணம் தான் என் வாழ்க்கையோட அல்டிமேட் ‘கோல்‘!
அப்போ எனக்கு தெரிஞ்சதெல்லாம் படிப்பு இருந்தா வேலை கிடைக்கும்… வேலை கிடைச்சா பணம் கிடைக்கும்! இதான்!!! என்னை நானே இந்த அளவு உயர்த்திக்க எவ்ளோ சிரமப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும்!
இப்போ என்னோட பிளாஷ்பேக்‘ எல்லாம் கண்ணீர் வழிய நான் சொல்லிட்டா மட்டும் நான் செஞ்சதெல்லாம் சரின்னு ஆகிடாது! சோ, நான் பழசி எல்லாம் சொல்லி சிம்பதி கிரியேட் பண்ண விரும்பல!” என்றவன், மேற்கொண்டு போனான்.
“எப்படியோ கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சு வேலையை வாங்கி, ஒரு இடத்துல வந்து நின்னுட்டு, ‘சாதிச்சுட்டோம்‘ன்னு திரும்பி பார்க்குறேன்… பத்தவே இல்ல!!! எனக்கு போதல! இன்னும் வேணும்.. இது பத்தலைன்னு உள்ளுக்குள்ள ஒரு குரல் சொல்லிட்டே இருந்துச்சு!
சரி என்ன செய்யலாம்ன்னு நானும் பல வருஷமா யோசிச்சுட்டே இருக்கும்போது தான் என் காதுக்கு ஒரு விஷயம் வந்துச்சு!
கட்சி பணத்தை தானே திருடி மறைச்சு வச்சுட்டு அது களவு போச்சுன்னு இந்த அமைச்சர் நாடகமாடுறதா!!! அமைச்சரோட அல்லக்கை மூலமா இது தெரிஞ்சுது!
ப்ளான் போட்டேன்! தூக்கிட்டேன்!”
சொல்லி முடித்தான் அவன்.
“இதெல்லாம் தப்பு இல்லையா ரகு?”
“நான் எப்போ சரின்னு சொன்னேன்?” உடனே கேட்டான்.
“தப்பு தான்… நான் செஞ்சது தப்பு தான்! ஆனா, யாரு தான் தப்பு செய்யல?” என்றவன்,
“மக்களோட வரிபணத்தை கட்சி பணமா மாத்துன அந்த அரசியல்வாதிங்க மேல தப்பு இல்லையா?
கட்சி பணத்தை திருடி மறைச்சு வச்சு, தான் மட்டுமே அனுபவிக்கனும்ன்னு நினைச்ச மினிஸ்டர் மேல தப்பு இல்லையா?
மினிஸ்டர் திருடலாம்! போலிஸ் திருடக்கூடாது? அப்படியா ஷைலு?” என்று கேட்டவனிடம் பதில் அற்றுப்போனாள் ஷைலஜா.
“நான் எவன் வயித்துலயும் அடிக்கல! எவன் உழைச்சு சம்பாதிச்சதையும் திருடல! மிதமிஞ்சி கிடக்குற இடத்துல இருந்து கொஞ்சமா கிள்ளி எடுத்தேன்! என்னை பொறுத்தவரை இது பெரிய விஷயமே இல்லை!” என்றான் நிர்தாட்சண்யமாய்.
“பணத்தை விடுங்க! அந்த மூணு பேர்? அவங்க உயிர்? அது கூட பெருசு இல்லையா?”
“அது என் மிஸ்டேக் இல்ல ஷைலுமா! நான் வார்னிங் கொடுத்தேன்! அவங்க கேட்கல! என் முகத்தை பார்த்த பிறகு அவங்களை விட்டு வச்சா அது என் முட்டாள்த்தனம்!” என்றான் வெகு இயல்பாய்.
தலையை தாங்கிக்கொண்டு அமர்ந்தவள், “என்னால இதை ஜீரணிக்கவே முடியல ரகு!” என்றாள்.
“எனக்கு தெரியும் நீ ரொம்ப நியாயவாதின்னு! அதனால தான் உனக்கு எதுவும் தெரிய வேண்டாம்ன்னு இருந்தேன்! எல்லாத்தையும் பக்காவா செஞ்ச நான், அசிங்கமா இந்த மோதிரத்துல மாட்டிக்கிட்டேன்! ஆசை யாரை விட்டுச்சு!” தன்னைத்தானே திட்டிக்கொண்டான்.
ஷைலஜா அப்படியே மரம் போல இருக்க,
“ஷைலு… ஒரு பிரச்சனையும் இல்ல! நீ இங்க நடந்த எல்லாத்தையும் மறந்துடு! கேஸ் முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்! நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்! லைஃப்ல இனி எப்பவும் உனக்கு பிடிக்காதது எதுவுமே செய்யமாட்டேன்… ஐ ப்ராமிஸ் யூ!” என்றான்.
நிமிர்ந்துப்பார்த்தாள் அவனை.
தீவிரமான முக பாவனையில் அவள் பதிலை எதிர்க்கொண்டு காத்திருப்பவனை பார்த்து,
“ரகு… வேண்டாம் ரகு! இது எதுவும் வேண்டாம்! சரண்டர் ஆகிடுங்க” என்று சொல்ல அவன் உடல் விறைத்தது.
“செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிங்க! பத்து வருஷமோ, இருபது வருஷமோ… வெளில வந்து நிம்மதியா இருக்கலாம்! நான் உங்களுக்காக காத்திருக்கேன் ரகு!” இறைஞ்சலாய் அவன் கரம் பற்ற, வெடுக்கென தட்டிவிட்டு எழுந்தவன்,
“லூசா நீ? எவ்ளோ பெரிய விஷயம் இது! அசால்ட்டா சரண்டர் ஆகுங்குற? ஜெயில்ல கம்பி எண்ணத்தான் இவ்ளோ கஷ்டப்பட்டேனா நான்? இல்ல, நான் தான் கொலையாளின்னு தெரிஞ்சா அந்த அமைச்சர் தான் சும்மா இருப்பானா? உள்ளே போன மறுநாளே ஆளை விட்டு போட்டு தள்ளிடுவான் என்னை!” என்றான் காட்டமாய்.
“இல்ல ரகு! நான் உங்களை சேஃப்‘பா பாத்துக்குறேன்!” அவசரமாய் சொல்ல, “புடுங்குவ!” என்று ஆவேசமானான் அவன்.
“ரகு… சொன்னா கேளுங்க! காலம் முழுக்க குற்றவுணர்வோட வாழ முடியாது!”
“எனக்கு குற்றவுணர்வு இருக்குன்னு நான் எப்போ சொன்னேன்?”
“என்னால முடியாது ரகு!!! ஒரு போலீசா இருந்துக்கிட்டு இவ்ளோ பெரிய தப்பு செஞ்சவனை என்னால ஏத்துக்க முடியாது!” என்றவள்,
“பனிஷ்மென்ட் முடிஞ்சு வாங்க ரகு! நான் உங்களுக்காக வெயிட் பண்றேன்!” என்றாள்.
“அய்ய! உண்மை தெரிஞ்ச ஷாக்‘ல பைத்தியமாகிட்டியா நீ?” என்றவன்,
“நமக்கு இப்போ என்ன இளமை ஊஞ்சலாடுதா? நான் லேட்டர் தர்ட்டீஸ்… நீ இயர்லி தர்ட்டீஸ்! இருவது வருஷம் ஜெயில்ல இருந்து நான் திரும்பி வந்து என்ன செய்ய சொல்ற? மூட்டு வலிக்கு மருந்து தேக்க தான் நேரம் இருக்கும்!
முட்டி செத்தவனை கட்டிக்கிட்டு முதிர் கன்னியா இருக்கலாம்ன்னு உத்தேசமோ?” அப்படி ஒரு எரிச்சல் அவனுக்கு.
“லுக் ஷைலஜா! நான் வாழ்க்கையை அனுபவிக்கனும்! என்ஜாய் பண்ணனும்ன்னு நினைக்குறேன்! அதுக்கு இந்த பணம் எனக்கு வேணும்! கூட நீயும் இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது! யோசிச்சு சொல்லு!” என்றான்.
“ரகு! ஒய் டோன்ட் யூ கன்சிடர் மை…” அவள் கேட்க ஆரம்பிக்கும்போதே,
“எனஃப் ஷைலஜா! ஒரு விஷயம் செய்ய முன்னாடி தான் யோசிக்கணும்! செயல்ல இறங்கின பின்னாடி யோசிச்சாலோ, பேக் அடிச்சாலோ அது நமக்கே ரிட்டன் ஆகிடும்!
என் விஷயமும் அதுமாதிரி தான்!
என்னால பேக் அடிக்க முடியாது! பணம் வேனுங்குறதை விட, செஞ்ச தப்பு வெளில தெரிஞ்சுட்டா என் உயிருக்கே உத்திரவாதம் இல்லை! சோ, ஐ ஸ்டிக் டு மை பாயின்ட்!” என்றான் பேச்சு முடிந்ததை போல கைகளை மேல உயர்த்திக்கொண்டு.
அதுவரை உணர்ச்சி வேகத்தில் இருந்தவள் சற்றே தெளிந்தாள்.
“எனக்கு வேற ஆப்ஷன் இல்லை ரகு!” என்றவள் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுக்க, அவசரமாய் அதை பறித்தவன்,
“நோ.. நோ!” என்றான்.
“ஐ ஹேவ் டு!”
“தப்பு பண்ற ஷைலஜா! உனக்கு ஓகேன்னா என் கூட வா! இல்லனா உன் வழில போ! அதைவிட்டுட்டு தேவையில்லாதது செய்யாத!” அவன் குரலே மாறியிருந்தது.
“நான் என் வேலையை தான் செய்யுறேன்! குற்றவாளியை கண்டுப்பிடிச்சு கூண்டுல ஏத்துறது தானே போலிஸ் வேலை! கண்ணுமுன்ன நிக்குறவனை எப்படி தப்பிக்க விடுவேன்!?” என்று நிமிர்வாய் சொன்னவள், வந்த வழியே வேக வேகமாய் ஓட ஆரம்பிக்க, இதை எதிர்ப்பாராதவன் பின்னோடு ஓடினான்.
“ஷைலஜா வேண்டாம்!!! நில்லு!”
“ஷைலஜா சொன்னா கேளு!!!” ஓடிக்கொண்டே கத்தினான்.
இன்னும் சில அடிகள் ஓடினாலும் தெளிந்த பாதை வந்துடும்! அடுத்த சில அடி தூரத்தில் சாலை! ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி!
“நில்லு ஷைலஜா! என்னை வேற மாதிரி யோசிக்க வைக்காத!”
அவள் காதில் வாங்காமல் ஓடினாள்.
ரகு தன் ஓட்டத்தை நிறுத்தினான். ஒரு நொடி இறுக்கமாய் கண்மூடி தன் உணர்வுகளை அடக்கினான், பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட, இம்முறை அதில் இருந்து வந்தது பொட்டலம் அல்ல… பிஸ்டல்!!!
முன்னே ஓடிக்கொண்டிருந்தவளை குறிவைத்தான்.
ஒன்று… இரண்டு… மூன்று…
“டமால்!!!!!!”
அதிர வைத்த துப்பாக்கி சத்தத்தில் ஆங்காங்கே இருந்த பறவைகள் எல்லாம் படபடவென சிறகு அடித்து கூட்டமாய் விலகி பறந்தது.
அவள் பின்னங்கழுத்தில் பாய்ந்த புல்லட் கழுத்தைத் துளைத்துக்கொண்டு வெளியேற, அப்படியே தரையில் சரிந்தாள்.
சில நொடிகளில் ரத்தம் ஆறாய் பெருகியது.
அருகே சென்று நின்றான். அவள் கண்கள் திறந்து இருந்தது.
உயிர் இழுத்துக்கொண்டிருந்தது.
மண்டியிட்டு அமர்ந்தான்.
அவன் முகம் கசங்கி போய்க்கிடந்தது.
“ஐ லவ் யூ ஷைலுமா!!! லவ் யூ சோ மச்!” இப்படி ஒரு ப்ரோபோசல் இதுவரை எங்குமே நடந்திருக்காது!
“உன்கிட்ட கடைசி வரைக்கும் ஹீரோவா இருக்கனும்ன்னு நினைச்சேன்! ஹும்! ஆன்ட்டி ஹீரோவா மாத்திட்டல்ல!” இளப்பமாய் சொன்னவன்,
“பான் வோயேஜ்!” என்றான் அவள் கண்களை மூடிவிட்டு!
பின்னால் எங்கிருந்தோ திபுதிபுவென ஓடிவந்தான் விக்கி. ஷைலஜாவை பார்த்துவிட்டு, “சார்… கொன்னுட்டீங்களா?” என்றான் பதட்டமாய்.
நின்றவனை நிமிர்ந்து பார்த்தான். ஒரு நொடி தான்!
பின்னே மீண்டும், “டமால்!!!!!”
பல்லைக்கடித்துக்கொண்டு “எல்லாம் உன்னால!” என்றவன்,
“என் ஷைலுவையே கொன்னுட்டேன்! நீ எம்மாத்திரம்!” என்றதோடு ‘உனக்கு கொடுத்த வேண்டிய பணம் மிச்சம்!’ என்று முனகிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து யாருக்கோ தகவல் கொடுக்க,
மறுநாள்….
‘சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த மூவர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
அமைச்சரின் மகன் மற்றும் உடனிருந்த இருவரிடம் இருந்தும் நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அவர்களை கொலை செய்த துணை காவல்துறை கண்காணிப்பார் ஷைலஜா மற்றும் இளநிலை ஆய்வாளர் விக்னேஸ்வரன் இருவரையும் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளினார் சென்னை மாகாண கமிஷ்னர் திரு.ரகுனந்தபூபதி!’
அவன் பேட்டி…
‘திருடன் கைல சாவி கொடுத்தது போல கொலை செஞ்சவங்க கைல கேஸை கொடுத்து விசாரிக்க சொல்லிருக்காங்க! நான் பொறுப்பு எடுத்ததும் கொஞ்சகொஞ்சமா எல்லா உண்மையும் தெரிய வந்துச்சு!
இறந்து போன ஜெகனோட குடும்ப மோதிரத்தை ஷைலஜா கைல பார்த்ததும் தான் எனக்கு எல்லாம் புரிஞ்சுது! நான் கேட்டப்போ எல்லா உண்மையும் ஒத்துக்கிட்டாங்க! சரண்டர் ஆக சொன்னேன்… தப்பிச்சு ஓடப் பார்த்தாங்க! சுட்டுட்டேன்!” என்றவன்,
“கூடவே அந்த விக்னேஸ்வரனும் என்னை தாக்க வந்ததால அவனையும் சுட வேண்டியதா போய்டுச்சு” என்றான்.
‘காவல்துறை அதிகாரியே இத்தனை பெரிய தவறை செய்ததை கண்டு பலரும் கண்டிக்கத்தக்க விவாதங்களை முன்னிறுத்தும் அதே நேரத்தில் கமிஷ்னரின் இந்த துணிகர செயல் கண்டு பலரும் தங்கள் பாராட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்‘
அன்றைய இரவு நேர செய்தி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்க,
‘ஓ ஐ லவ் யூ ஷைலஜா… ஷைலஜா…
ஓ ஷைலு.. ஷைலு!!!’ என்ற ரிங்க்டோன் சத்தத்தில் அழைப்பை ஏற்றான் ரகுநந்த பூபதி.
மறுபுறம் அவன் கேட்டிருந்த கருப்பு பணத்தை வெள்ளையாய் மாற்றும் வேலைகளை பாதிக்கு மேல் முடிந்துவிட்டதாக தகவல் வர உற்சாகமானான்!
‘சீக்கிரமே வேலையை விட்டுட்டு வெளிநாடு ஓடிடணும்!’ என்ற நினைப்போடு விளக்கை நிறுத்திவிட்டு சோபாவில் சரிந்து விழ, காலிங் பெல் சத்தம்!
திடுக்கிட்டான்!
மணி பத்துக்கு மேல் ஆனது!
இப்போது யார் என்ற எண்ணம் எழ, கதவை திறந்தவன் அதிர்ந்தான்.
“துர்கா?” அவன் விளிக்க,
அவனை பேச்சின்றி நிமிர்ந்துப்பார்த்தவளின் கைகளில் டைரி ஒன்று இருந்தது.
மறுகையில் எதையோ வைத்திருந்தாள்.
அவள் அவள் உயர்த்தும் நேரம் அது என்ன என்று அவன் உணர்வதற்குள்….
அந்த வீட்டில் இருந்து பெரிய துப்பாக்கி சத்தம் ஒன்று கேட்டது…!!!
@முற்றும்@
Author note
மிஸ்டர் ராஸ்கலுக்கு தளத்திலோ அல்லது முகநூலிலோ பின்னூட்டம் தர விரும்பும் வாசகர்கள், தங்களுக்கு பின்னே புதிதாய் படிக்க வருபவர்களின் சுவாரஸ்யம் கருதி கிளைமேஸ் திருப்புமுனையை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Advertisement
error: Content is protected !!