பார்ட்டிக்கு போகிறேன் என சொல்லிவிட்டு அவன் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் இருந்தே தொடர்ந்து அழைத்துக்கொண்டிருக்கிறார். உள்ளே இருந்தபோது அவர் பேசுவது ஒன்றும் கேட்கவில்லை என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான். இப்போது வெளியே வந்துக்கூட அவர் தொடர்ந்து முயல,
“நான் பேசல… என்ன வேணுன்னு நீயே கேளு!” எரிந்து விழுந்தான் ஜெகன்.
‘ஒருவேலை எதுவும் முக்கியமாய் இருந்தால்?!’ என்ற எண்ணம் வர, யாமினியை பார்த்தான்.
அவளை எப்போதுமே அவனுக்கு பிடிக்காது!
காரை ஓரமாய் நிறுத்துவிட்டு, இறங்கி சற்று தள்ளி நின்று அமைச்சருக்கு அழைத்தான்.
ஒரே ரிங்கில் எடுத்தவர் எண்ணையில் விழுந்த கடுகு போல பொரிய ஆரம்பித்தார்.
அவர் திட்டுவதையெல்லாம் பொறுமையாய் வாங்கிக்கொண்ட சிவா, “என்ன அப்பா ஆச்சு?” என்று நிதானமாய் வினவ,
“உங்க கார் இருக்கைல எதுக்குடா அந்த பழைய காரை ஷெட்’ல இருந்து தூக்கிட்டு போனீங்க?” அத்தனை ஆவேசம் அவரிடம்.
“சரி எங்க இருக்கீங்க?” என்றார். சிவா அவர்கள் நிற்கும் இடத்தை சொல்ல,
“ரொம்ப கவனமா வாங்க! சரியா? நீங்க வீட்டுக்கு வர வரைக்கும் நான் முழிச்சுட்டு தான் இருப்பேன்!” என்றார்.
சிவாவுக்கு என்ன காரணம் என்று விளங்கவில்லை.
“என்ன பிரச்சனை ப்பா? என்கிட்ட சொல்லலாம்ன்னா சொல்லுங்க!” என்று கேட்க, அவன் மீது எப்போதுமே அமைச்சருக்கு அதீத நம்பிக்கை உண்டு! தன் மகனை காட்டிலும் அவனை தான் நம்புவார்.
“ஜகா’க்கு தெரிய வேண்டாம்!” பீடிகை போட்டவர், “கார் டிக்கி’ல எல்.பி.ஜி சிலிண்டர் இருக்குல? அது முழுக்க பணம்! கிட்டத்தட்ட ஐந்நூறு கோடி!” என்றதும் வாயை பிளந்தார் அதிர்ந்துப்போய்.
“மூணு மாசம் முன்ன நம்ம ஆளுங்க கொண்டு வரப்போ காணாம போச்சுன்னு சொன்னேனே அந்த கட்சி பணம் தான்! நான் தான் ஆளை விட்டு திருடி வச்சேன்! தேர்தல் முடிஞ்சதும் எல்லாத்தையும் வெள்ளையா மாத்திக்கலாம்ன்னு மறைச்சு வச்சேன்! இப்படி காரை தூக்கிட்டு போவீங்கன்னு நினைக்கல!” என்று சொல்ல, அந்த காரை பார்க்கவே திகிலாய் இருந்தது சிவா’வுக்கு.
“ப்பா!? என்ன ப்பா செய்யணும் இப்போ?”
“பயப்படாத… ஒன்னும் பிரச்சனை இல்லை! குடிச்சுட்டு வேற வரீங்க! போலீஸ் இல்லாத இடமா பார்த்து ஓட்டிட்டு வா! ஒருவேளை போலீஸ் மடக்கினாலும் என் பேரை சொல்லிடுங்க எப்பவும் போல! முகத்துல பயத்த மட்டும் காட்டாத!” என்றார்.
சொல்வதற்க்கெல்லாம் தலையாட்டினான் சிவா.
“சரி வச்சுடுறேன்” என்றவர், சட்டென ஏதோ நினைத்து, “டேய், நீங்க இருக்க இடத்துல இருந்து கொஞ்ச தூரத்துல ஒரு ஹைவேஸ் வரும். அது வழியா வந்துடுங்க! அங்க தான் பணத்தை திருடுறதுக்காக சிசிடிவி எல்லாம் கழட்ட சொல்லிருந்தேன்! அதே வழில வந்துடுங்க!” என்றார்.
சிறிது நேரத்திலேயே யாமி அவசரம் என்று வண்டியை நிறுத்த வைக்க, இறங்கியதும் ஓடி சென்று ஒருபாடு குமட்டி தீர்த்தாள்.
சிவாவுக்கு எரிச்சலோ எரிச்சல். அநாதையான அவனுக்கு இந்த வாழ்க்கையே ஜெகனின் பிச்சை தான்! அவனுக்கு அமையும் வாழ்க்கை சிறப்பானதாய் இருக்க வேண்டும் என்பது சிவாவின் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு. அப்படிப்பட்டவனுக்கு இப்படி ஒரு கழிசடை துணையாக அமைவது கிஞ்சித்தும் ஒப்பவில்லை அவனுக்கு.
அவளை அருவெறுப்புடன் பார்த்துக்கொண்டு காரிலேயே அவன் அமர்ந்திருக்க, “என்னடா அப்படியே பாத்துட்டு இருக்க? தண்ணி பாட்டில் கொடு” என்றான் ஜெகன் வெளியே இருந்து.
சிவா வேண்டாவெறுப்பாய் எடுத்து கொடுக்க, சற்று நேரத்தில் மீண்டும் ஆரம்பித்தது பயணம்.
நெடுஞ்சாலையை தொட்டுவிட்டிருந்தனர்.
“ஜகா… ஐ ஃபீல் லைக் வாமிட்டிங் அகைன்” சோர்வாய் தன்மீது சாய்ந்தவளை தாங்கிய ஜகா, “வண்டியை நிறுத்து சிவா… கொஞ்சம் வெளில காத்தாட நிக்க வைப்போம்” என்றதும் அவன் சொன்னதை செய்தான்.
ஜெகனும் யாமினியும் காற்று வாங்க அந்த இரவு நேரத்தில் அங்கே நிற்க, சிவா மணியை பார்த்துக்கொண்டே ‘சீக்கிரம் வீட்டுக்கு போனுமே! அப்பா முழிச்சுட்டு இருப்பாரே’ என்று பரிதவித்துக்கொண்டிருந்தான்.
“டேய் போலாம் டா!”
“இரு சிவா… கொஞ்ச நேரம்!”
அப்போதும் அவர்களின் அருகே ஒரு பைக் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கியவனை இயல்பாய் ஏறிட்டனர் ஜோடிகள்.
அவன் தன்னை முழுக்க மறைத்திருந்த விதமும், ஹெட்லைட் கூட போடாமல் இந்த நேரத்தில் வந்து நிற்பதும் சிவாவுக்கு பதட்டத்தை கொடுக்க, காரை விட்டு இறங்கியவன்,
“ஹலோ… யாரு நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?” என்றான்.
வந்தவன் பேசவே இல்லை. நேரே கார் டிக்கியை சென்று அடைந்டஹன்.
சிவாவுக்கு நொடியில் விஷயம் புரிந்துப்போனது.
“ஏய் நில்லுடா… நில்லுடா…” என்று அவனை தடுக்க, ஒருவன் தன் பின்னே வந்து தடுக்கிறான் என்ற நினைவே இன்றி அவன் போக்கில் தன் வேலையை செய்துக்கொண்டிருந்தான்.
டிக்கி லாக்கில் இருந்தது. முன்பக்கம் சென்று லாக் எடுக்க அவன் போக, அதை உணர்ந்தவன் போல தடுத்து பிடித்தான் சிவா.
சில நொடிகள் தயங்கியவனோ, இம்முறை சிவாவின் முகத்தின் மீதே அழுத்தமாய் ஐவிரலையும் மடக்கி ஒரு குத்து விட, சித்தமே கலங்கியது அவனுக்கு.
அதுவரை என்னவோ நடக்கிறது என அசட்டையாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜெகனுக்கு போதையெல்லாம் வடிந்துப்போனது.
“ஏய் யாருடா நீ? என்ன செய்யுற?” அவன் கேட்டுக்கொண்டே வர, அதற்குள் ‘லாக்’கை விடுவித்திருந்தவன், டிக்கியை திறந்துவிட்டான்.
அடியில் சுருங்கி விழுந்திருந்த சிவா, மூக்கில் இருந்து வழியும் ரத்தத்தை பார்த்து பயந்தபடி, “ஜகா… அதுல பணம் இருக்குடா! அவனை விடாத!” என்றான் வலியோடு!
ஜெகனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தடுக்க வேண்டுமே!!!
“அவனுடன் போராட சென்றான். அவனை பின்னால் பிடித்து இழுக்க பார்த்தான், அசைக்க கூட முடியவில்லை. இத்தனை ஜெகன் ஒன்றும் நோஞ்சான் உடம்பு கிடையாது.
ஆனாலும், கிடாமாடு போல நிற்பவனை ஒன்றும் செய்யமுடியவில்லை.
யாமினிக்கு மயக்கமே வரும்போல இருந்தது. ஜெகன் அவனுடன் போராடுவதை கண்டு தன்னை தானே சமாளித்து எழுந்து அங்கே போன சிவா,
“அப்பா’க்கு போன் பண்ணு!” என்றான் யாமினியிடம்.
அவ்வளவுதான்!
அதுவரை காது கேளாதவன் போல நின்றவன், நொடியில் தன் பின்னே இருந்து தாக்கிக்கொண்டிருக்கும் ஜெகனை இழுத்து முன்னே வீச, எழுந்துக்கொள்ளவே முடியவில்லை அவனால்.
விரைந்து யாமினியிடம் சென்றவன், அவள் கரத்தில் இருக்கும் போனை வாங்கி நெடுஞ்சாலை சுவரில் அடித்து நொறுக்கினான்.
அடுத்து மற்றவர் போனையும் காரில் இருந்து எடுத்தவன் உடைத்துப்போட, திகில் அப்பியது மூவருக்கும்.
சிவாவுக்கு அடிக்கும் அளவு வலு உடலிலும் இல்லை, மனதிலும் இல்லை!
“எனக்கு இந்த பணம் மட்டும் தான் வேணும்! சும்மா இருந்தீங்கன்னா எடுத்துட்டு வந்த வழியே போய்டுவேன்! அதைவிட்டுட்டு ஏதாவது ஆக்ஷன் காட்டுனா… என் பக்க ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கும்!” என்றான் வார்னிங் போல!
அவன் கணீர் குரலில் வெளிறி நின்ற மூவரையும் திருப்தியாய் ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் டிக்கி பக்கம் சென்று அதன் உள்ளே இருக்கும் எல்.பி.ஜி சிலிண்டரை கழட்ட ஆரம்பித்தான்.
சிவாவுக்கு எப்படியேனும் அவனை தடுக்க வேண்டும் என்ற உந்துதல்.
விழுந்துக்கிடக்கும் ஜகாவை தட்டி எழுப்பினான்.
“ஐநூறு கோடிடா! அப்பாக்கு பதில் சொல்லணும்! ரெண்டு பேரும் சேர்ந்து எப்படியாவது தடுப்போம்!” அவன் காதுக்குள் ஓத, கண்களை திறந்த ஜகா, நம்மளால முடியுமா? என்றுதான் பார்த்தான்.
சிவாவுக்கும் அதே சந்தேகம். பார்க்க ஒருவன் போல இருந்தாலும் பலத்தில் அசுரனாய் இருந்தான்.
இரண்டு ஆண்கள் இருந்தும் ஒருவனை தடுக்க முடியவில்லை என்றால் எப்படி?
சிலிண்டரை உடைத்து அதில் இருந்த பணத்தை எல்லாம் தன் பைக்குள் நிரப்பிக்கொண்டிருந்தான்.
எப்படி தாக்குவது? எப்படி தடுப்பது?
இருவரும் ஏதேனும் வழிக்காக சிந்திக்க, சாலை மறுசீரமைப்பு பனி பாதியில் நின்றதால் அங்கே கிடந்த கற்களையும் இன்னும் சிலவற்றையும் பார்த்தான் சிவா.
‘எடுத்து அடிப்போம்!’ முடிவாக அவன் கருத்தை கவராமல் இருவரும் நகர்ந்து கைக்கு கிடந்ததை எடுத்துக்கொண்டு அவனை மின்னல் வேகத்தில் தாக்க, ஹெல்மெட் அணிந்திருந்தவன் தலையை பாதிக்காமல், உடலை மட்டும் சீண்டியது அக்கற்கள்.
அதுக்கூட அவனை பாதிக்கவில்லை. இன்னும் வேகமாய் அள்ளிப்போட ஆரம்பித்தான்.
இவர்கள் தைரியமாய் இன்னும் வேகம் கொண்டு அவனை தாக்க, அவன் தடுக்கக்கூட முயலவில்லை. யாமினி அவள் பங்கிற்கு பெரிய கற்களாக எடுத்துக்கொடுக்க ஆரம்பித்தாள்.
அப்போது பணத்தை மொத்தமும் அள்ளி எடுத்தவன், சிலிண்டரை முன்பிருந்ததை போல வைத்து போட்ட, நேர்த்தியான அவன் வேலைக்கண்டு திகைத்து தான் நின்றனர்.
சத்தியமாக அவர்கள் அடித்த ஒவ்வொரு அடியும் வலித்திருக்கும். எப்படி வலி பொறுத்துக்கொண்டு இத்தனை செய்கிறான் என்ற வியப்பு மேலிட இருவரும் நின்ற கணமே, டிக்கியை அடித்து சாத்தியவன், பைக்கில் ஏறி அமரப்போக, அவன் கிளம்பிவிடுவான் என்பதை உணர்ந்த இருவரும் ஒருசேர அவனை பிடித்து இழுக்க, நிலை தடுமாறி கீழே விழுந்தான் அவன்.
விழுந்தவன் மீது நொடியில் ஏறி அமர்ந்த சிவா, அவன் முகத்தில் இருக்கும் ஹெல்மெட்டை கழட்ட போராட, உடன் ஜெகனும் சேர்ந்துக்கொண்டதில் அது கழண்டுப்போய் தனியே கிடக்க, அவன் முகத்திரையையும் போராடி கழட்டிவிட்டனர் இருவரும்.
முழுதாய் தெரிந்தது அவன் முகம்! மனதில் பதியும்படி பார்த்துக்கொண்டனர் இருவரும்.
இருவரும் அவனை தாக்க வர, வெகு அசட்டையாய் தட்டிவிட்டான் அவர்களை.
“என்னை அப்படியே விட்டுருந்தா உங்க உயிராவது மிஞ்சிருக்கும்! இப்போ தேவையில்லாத வேலை பார்த்து சாவப்போறீங்க” என்று சொல்ல,
“டேய், நான் அமைச்சர் பையன்டா… என் அப்பா உன்னை சும்மா விட மாட்டாரு!” என்றார் ஜெகன்.
“யாருன்னு தெரிஞ்சு தான் செஞ்சுருக்கேன்! எனக்கு பயம் இல்ல! உங்கொப்பன என்ன வேணாலும் செய்ய சொல்லு!” என்றவன், அதுவரை அவர்கள் அவனை அடித்துக்கொண்டிருந்த கற்களை இப்போது கையில் எடுத்து குறிப்பார்த்தான்.
வீசுகையில் ஜெகன் நகர, அது காரின் முன்பக்க போர்டில் விழுந்து காயம் செய்தது.
“அமவுண்ட் பெருசாச்சேன்னு தான் அடி விழுந்தப்போக்கூட அமைதியா இருந்தேன்! ஆனா, இனிமே… என்னை அடையாளம் தெரிஞ்ச உங்களை எப்படி சும்மா விடமுடியும்?” என்றவன், சிவாவை அடிக்க, ஒரு அடிக்கே தள்ளிப்போய் விழுந்தான்.
ஜெகன் அடிக்க வந்தபோது அவன் கையை சேர்த்து முறுக்கியவன் கண்களில் விழுந்தது அந்த மோதிரம்.
“நைஸ்!” என்றவன், விரலில் இருந்து அதை உருவிக்கொண்டான்.
இருவரும் அவனிடம் அடிவாங்குவதை கண்ட யாமினி டிக்கியில் இருந்து கீழே விழுந்த கிடந்த ஸ்பேனர் செட்டில் இருந்து கனமான ஒன்றை எடுத்து அவன் தலையில் அடிக்க, சுர்ரென வலி ஏறியது அவனுக்கு.
அதுவரை சாதாரணமாய் இருந்தவன், அதன்பிறகு மிருகமென மாறிப்போனான்.
கண்மண் தெரியாமல் இருவரையும் தாக்கினான். தடுக்க வந்த யாமினியின் முடியை கொத்தாக பற்றியவன், சுற்றுசுவரில் கொண்டு கொண்டு தலையோடு வேகமாய் இடிக்க, அவள் தலையில் இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
அதைக்கண்டதும் அவன் கால்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்ட ஜெகன்,
“யாமி… நீ கார்க்குள்ள போ… போய்டு!” என்றான் கதறிக்கொண்டு.
மயங்கி விழப்போன நிலையிலும் அவன் குரல் காதில் விழ, தரையிலிட்ட மீனை போல துடித்தப்படி திறந்திருந்த காரில் சென்று விழுந்தவள், சுயநினைவை இழந்தாள்.
காலை கவ்வியிருந்தவனை மிதித்து தள்ளியவன், அவன் தலையை அப்படியே இழுத்து சுவரில் முட்டினான். ஆத்திரம் தீரும் வரை முட்டியவன் அவன் உடலில் அசைவில்லை என்றதும் அப்படியே போட்டுவிட்டு நகர,
ஏற்கனவே அவன் அடித்த அடியை தாங்க முடியாமல் அரைமயக்க நிலையில் கீழே கிடந்தான் சிவா.
ஒருநொடி நின்று பார்த்தவன், தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து ஒரு பொட்டலத்தை பிரித்து வாயில் கொட்டினான்.
சில நொடிகள் மென்றவன், காலை தூக்கி வைத்து நின்றுவிட்டு பின் விலக, அவன் கால் பதிந்த இடம் ஒருவனின் சுவாசத்தை நிறுத்தும் இடமாக இருந்தது.
சுற்றிலும் நின்று பார்த்தான்.
விடியல் ஆரம்பித்திருந்தது. இதற்குமேல் தாமதிக்க வேண்டாம் என்று நினைத்து ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பணப்பையோடு அங்கிருந்து மறைந்தான்.
“இதான் நடந்துச்சு!” எந்தவித குற்றவுணர்வும் இன்றி சொல்லிமுடித்தான் ரகுனந்தபூபதி.
ஷைலஜாவுக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை.
அவனா? ரகு’வா? இத்தனை பெரிய பொறுப்பில் இருப்பவனா?
“ஹே… சும்மா விளையாடுறீங்க தானே ரகு?” அப்படியும் இருந்துவிட கூடாதா என்ற நப்பாசையில் கேட்க, அவள் ஆசையை குழித்தோண்டி புதைக்கும்படி,
“நான் சொன்ன அத்தனையுமே உண்மை!” என்று ஆணித்தரமாய் சொன்னான் ரகுனந்தபூபதி.