நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Epilogue:
“ரொம்ப ஹாட்டா இருக்கு. பக்கத்து தெருவில் இருக்கிற பிரெண்டு வீட்டுக்கு போய்ட்டு வரதுக்குள்ள என் மண்டை காஞ்சு போச்சு.” என்று புலம்பிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் விக்ரம்.
“ யார் வீட்டுக்கு போயிட்டு வர்றீங்க?” என்றாள் சஞ்சனா. குழந்தை விஷாலுக்கு சாப்பாடு ஊட்யபடி.
“என்னோட பிரெண்ட் வீட்டுக்கு தான்.”
“ இது சம்மர். மூணு மணிக்கு போனால் அப்படி தான் வெயில் மண்டையை பிளக்கும். இந்த நேரத்துல எதுக்கு போனீங்க?”.
“அவன் காரில் ஏதோ பிரச்சினையாம். அதான் அர்ஜென்ட்டா கூப்பிட்டான்னு போனேன்.
“சரி சரி. கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க. நைட்டு நாம வேற இந்தியாவுக்கு கிளம்பனும்” என்றாள் சஞ்சனா அக்கறையாக.
விஷால் இப்பொழுது 10 மாத குழந்தை தத்தித்தத்தி நடந்து கொண்டிருந்தான். “பேக்கிங் எல்லாம் ரெடியா இருக்கா?”
“எல்லாம் பக்காவா இருக்கு.” என்றாள் இந்தியாவுக்கு பயணிக்கும் பூரிப்பில்.
பதில் புன்னகைசெய்தான் விக்ரம்.
கடல் கடந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் இந்தியாவுக்கு சென்று சொந்த ஊர், சொந்த மண், சொந்தங்களை பார்ப்பதில் ஒரு அலாதி ஆனந்தம் தான். அது அவர்கள் முகத்தில் நன்றாக தெரிந்தது.
இரவு 8 மணி அளவில் மாலை வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வெயில் காலத்தில் சூரியன் பொதுவாக எட்டரை மணி அளவில்தான் அஸ்தமனம் ஆகும். எனவே நன்கு வெளிச்சமாக இருந்தது. குழந்தைகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஜோதி பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
விஜயா அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கையில் சூட்கேசை தள்ளியபடி விக்ரம் வீட்டில் இருந்து வெளியில் வந்தான்.
ராஜேஷ் அந்த சூட்கேசை எடுத்து காரில் வைத்துக் கொண்டிருந்தான்.
“சஞ்சு பிலைட்டுக்கு டைமாச்சு சீக்கிரம் வா.” என்று பரபரத்துக் கொண்டிருந்த விக்ரம்
“வந்துட்டேன் வந்துட்டேன்.” என்று சொல்லிக்கொண்டே கையில் விஷாலுடன் வெளியில் வந்தாள் சஞ்சனா.
விஜயா அவளிடம் வந்தாள்.
“விஜயா நாங்க இந்தியாவுக்கு போயிட்டு வருகிறோம்.” என்றாள் சஞ்சனா.
“ஹாப்பி ஜர்னி. போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க.” என்று வழியனுப்பி வைத்தாள் விஜயா.
ஜோதி ஓடிவந்து விஷாலிடம் “மிஸ் யு”. என்று சொல்லிவிட்டு அவனைத் தொட்டு முத்தமிட்டாள்
“சரி விஜயா நான் போய் இவங்கள ஏர்போர்ட்டில் டிராப் பண்ணிட்டு வரேன்.” என்று விட்டு சென்றான் ராஜேஷ்.
சொன்னபடி டாலஸ் விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்றான்.
மூவரும் டாலஸ் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி பத்து மணி நேரம் பயணம் செய்து லண்டன் விமான நிலையத்தில் அடுத்த விமானம் பிடித்து இன்னும் பத்து மணி நேரம் பயணம் செய்து சென்னை விமான நிலையம் சோர்வாக வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த மூவரையும் விக்ரமின் பெற்றோர்கள் மற்றும் சஞ்சனாவின் பெற்றோர்கள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் சொந்தங்களை பார்த்த கணம் சோர்வு பறந்து முகத்தில் மலர்ச்சி உண்டானது.
பேரன் விஷாலை தூக்கி கொஞ்சினார்.
விக்ரமின் பெற்றோர்கள் “என் பேரன் விஷாலை இப்ப தான் இப்பதான் பார்க்க முடிஞ்சது.” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தார் மஞ்சுளா.
“அதுக்கு தான் உங்கள அங்க வர சொன்னேன்.” என்றான் விக்ரம்.
“என்னப்பா பண்றது? உன் அப்பாவோட பிசினஸ் அப்படி. ஆறு மாசமா ஒரே டென்ஷன். இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்காரு. வரலாம்னு பார்த்தோம். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. ரொம்ப சந்தோஷம்.” என்றார் மஞ்சுளா.
விக்ரமின் தந்தை குழந்தையை வாங்கி “என்னடா குட்டி பையா என்னை உனக்கு தெரியுதா?” என்று கேட்டார்.
அவன் “தாத்தா” என்றான் அவர் அவனை அணைத்துக் கொண்டார். அனைவரது கண்களும் ஆனந்தத்தில் கலங்கியது.
“சஞ்சனா போட்டு காமிச்சு சொல்லி கொடுத்திருக்கா. அப்புறம் நீங்கதான் வாரவாரம் வீடியோ காலில் பேசுறீங்களே. அவனுக்கு ஞாபகம் இருக்கு.” என்றான் விக்ரம்.
“எங்கே இருந்தாலும் சொந்தத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றான் விக்ரம்.
அதைக் கேட்ட அனைவரின் முகத்திலும் பூரிப்பு தெரிந்தது.
“சரி போகலாமா?” என்று சூட்கேசை நகர்த்தினான் விக்ரம்.
அனைவரும் கிளம்பி கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தனர். அங்கு காலை உணவை முடித்து விட்டு விக்ரமின் பெற்றோர்கள் கிளம்பிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் வந்தார் கார்த்திகேயன்.
“சஞ்சனா, மாப்பிள்ளை, குழந்தை மூணு பேரும் நேரா உங்க வீட்டுக்கு வராம இங்க வந்துட்டாங்க. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்கலையே சம்மந்தி ?”
“இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு சம்மந்தி? எங்க வந்தால் என்ன? எல்லாம் ஒன்னுதான். அதுவுமில்லாமல், உங்க பெரிய பொண்ணு வீட்ல விசேஷம். அதனால அவங்க இங்க இருக்கறது தான் சரி. விசேஷம் முடிந்ததும் பொறுமையா எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க.” என்றனர் விக்ரமின் பெற்றோர்கள் சாதாரணமாக.
“நிச்சயமா வருவாங்க. எங்களை புரிந்து கொண்டதற்கு ரொம்ப சந்தோஷம்.” என்றார் கார்த்திகேயன்.
வீட்டு வாசலில் சாமந்திப் பூக்களால் ஆன பெரிய மாலை தொங்க விடப்பட்டிருந்தது.
சுற்றிலும் செடிகொடிகளுக்கு இடம் விட்டு நடுவில் ஒரு புத்தம் புதிய வீடு கட்டப்பட்டிருந்தது. வீட்டினில் மேளதாளம் முழங்கியது.
தாமரை மற்றும் வாசுதேவன் கழுத்தில் மாலையுடன் மனையில் அமர்ந்திருந்தனர். சாதனா, சுகந்தன் இருவரும் கழுத்தில் ரோஜா பூ மாலையுடன் அவர்களுக்குப் பின் அமர்ந்திருந்தனர்.
புரோகிதர் மந்திரம் கூற ஹோமம் நடந்து கொண்டிருந்தது.
சஞ்சனா, விக்ரம், விஷால் மூவரும் கலைவாணி, கார்த்திகேயன் உடன் விருந்தினர்களை வரவேற்று கொண்டிருந்தனர்.
அவ்வப்போது சுகந்தன் எழுந்து புரோகிதர் கேட்கும் பொருளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
சுகன்யா, சேகர் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தை மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். புரோகிதர்
“குத்துவிளக்கில் நல்லெண்ணெய் தீந்து போச்சு. கொஞ்சம் எடுத்துட்டு வாங்க.” என்று சொல்லவும் சாதனா கையை கீழே ஊனிகொண்டு பொறுமையாக எழுந்து கொண்டிருந்தாள்.
அவள் வயிறு சற்று பெரிதாக இருந்தது. அவள் தரையிலிருந்து எழுவதை பார்த்த சுகன்யா
“அண்ணி அண்ணி இருங்க. நான் போய் எடுத்துட்டு வரேன். சும்மா சும்மா எழுந்து உட்காருவது உங்களுக்கு இப்போ கஷ்டமா இருக்கும். ஹோமம் முடியும் வரை இங்கேயே இருங்க.” என்று அவளை இருக்கச் சொல்லிவிட்டு நல்லெண்ணெய் எடுத்து வந்து கொடுத்தாள்.
ஹோமம் முடிந்தது. விருந்தினர்கள் அனைவரும் வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு கொண்டு வந்த பரிசுப் பொருட்களை கொடுத்து விட்டு சாப்பிட்டுவிட்டு சென்று கொண்டிருந்தனர்.
சாதனா, சஞ்சனா இருவரும் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தனர்.
“என்ன சஞ்சு விஷால் எங்க.?” என்று கேட்டாள் சாதனா
“அவன் அவனோட அப்பாவோட இருக்கிறான்.”
“நல்லா வளர்ந்துட்டா இல்ல?”
“ஆமாம் சாது. வளரவளர அவன் குறும்புத்தனம் ஜாஸ்தி ஆயிடுச்சு. இவ்வளவு நேரம் அவன் பின்னாடி சுத்தி டயர்டாயிட்டேன்.” என்றாள் சஞ்சனா சோர்வாக.
“இந்த வயசுல குழந்தைங்க இப்படித்தான் இருப்பாங்க. அவன் கரெக்டா தான் இருக்கான்.” என்றாள் சாதனா அவனுக்கு குழந்தையை விஷாலுக்கு பரிந்து கொண்டு.
“இப்போ இப்படித்தான் பேசுவ. உன் வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியில் வந்து உன்னை இதே மாதிரி ஓட வைக்கும் போது உனக்கு தெரியும்.” என்றாள் சஞ்சனா.
“.பாத்துக்கலாம் பாத்துக்கலாம் முடிந்த அளவு நான் ஓடுகிறேன். டயர்டான அவள் அப்பாவை ஓட செல்ல வேண்டியதுதான்.” என்றாள் சாதனா.
“அப்போ பெண் குழந்தைன்னு கன்பார்ம் பண்ணிட்டியா?”
“அப்படி இல்லைடி. அது எங்க எல்லாரோட ஆசை. ஆனால் எந்த குழந்தை பிறந்தாலும் எங்களுக்கு சந்தோஷம்தான்.” என்றாள் சாதனா.
“சரி வா. வீட்டை சுற்றி பார்க்கலாம்.” என்று சாதனா சஞ்சனாவை அழைத்தாள்.
ஒரு பெரிய சமையலறை, ஹால், 3 படுக்கையறை முதல் தளத்திலும் இரண்டாம் தளத்தில் இரண்டு படுக்கை அறை ஒரு பெரிய ஹால், அந்த ஹாலில் ஒரு பெரிய ஊஞ்சலும் இருந்தது. அதற்கு மேல் மொட்டை மாடியில் இன்னொரு ஊஞ்சல் இருந்தது. வீட்டிற்கு முன் இரண்டு கார் பார்க்கிங் இருந்தன.
“வீடு ரொம்ப அழகா இருக்கு சாது.” என்று மனமார பாராட்டினாள் சஞ்சனா.
“எல்லாம் சுகந்தன் பிளான் தான்.” என்று பெருமைப்பட்டுக் கொண்டாள் சாதனா.
“மாமா கலக்கிவிட்டார்.” என்றாள் சஞ்சனா மகிழ்ச்சியுடன்.
வீட்டின் முன் கார்த்திகேயன் சுகந்தன் நடந்து கொண்டிருந்தனர்.
“மாமா. நீங்க ஆசைப்பட்ட மாதிரி நீங்க சாதனாவுக்கு வாங்கிக்கொடுத்த காருக்காகதான் இந்த பார்க்கிங் இடம்.” என்று அந்த இடத்தை காட்டினான். அங்கு ஒரு போர்டில் “டாடிஸ் கிப்ட்” என்று இருந்தது.
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. சொன்ன மாதிரியே சாதித்து விட்டீர்கள். மாப்பிள்ளை.” என்று கந்தனை பாராட்டினார் கார்த்திகேயன்.
“எல்லாம் உங்கள மாதிரி பெரியவர்களின் ஆசிர்வாதம் தான் மாமா.” என்றான் கந்தன்.
“இந்த அடக்கம் தான் உங்களை இன்னும் உயரத்துக்கு கொண்டு போகும் மாப்பிள்ளை.” என்றார் கார்த்திகேயன் ஆசீர்வாதமாய்.
அப்போது அங்கு வந்த விக்ரமிடம் கந்தன்
“வீடு எப்படி இருக்கு?”. என்று கேட்டான்
“சூப்பரா இருக்கு.” என்றான் விக்ரம் உண்மையான மகிழ்ச்சியுடன்.
“இனிமேல் நீங்க எப்போ இந்தியா வந்தாலும் எங்க வீட்டுக்கு வந்துட்டு தான் போகணும்.”
“கண்டிப்பா வருவோம்.” என்றான் விக்ரம் புன்னகையுடன்.
“அப்புறம் எப்போ குழந்தை பிறக்கும்? சாதனாவுக்கு டியூ டேட் எப்போ?”
“டிசம்பரில் தான் டியூ டேட். குழந்தை பிறந்ததும் போட்டோ எடுத்தால் எனக்கு அனுப்புங்க.” என்றான் விக்ரம்.
“அதெல்லாம் சாதனா கண்டிப்பா சஞ்சனாவுக்கு அனுப்பிடுவா.”
“ சஞ்சனா இங்கேதான் இருக்கப் போகிறா. அஞ்சு மாசம் இங்கேயேதான் இருக்கணுமாம் குழந்தை பிறந்த அப்புறம் அப்பா, அம்மா கூட ஊருக்கு வருவாள். அவளுக்கும் குழந்தையை பார்த்துக்க இங்க வசதியா இருக்கும்.” என்றான் விக்ரம்.
“ ஓ அப்படியா? ரொம்ப சந்தோஷம்.” என்றான் கந்தன்.
அனைவரும் சேர்ந்து சாப்பிட அமர்ந்தனர்.
வடை பாயசம், சாதம், சாம்பார், பொரியல், குழம்பு ,கூட்டு என்று தலை வாழை இலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சுகந்தன் “இன்னும் கொஞ்சம் பொறியல் சாப்பிடு.” என்று பொறியல் எடுத்து சாதனாவுக்கு வைத்தான்.
“போதும் போதும். நான் நிறையவே சாப்பிட்டுட்டேன்.” என்று அவன் கையை பிடித்தாள் சாதனா.
“இந்த நேரத்தில் சத்தான சாப்பாடு நல்லா சாப்பிடணும். சாப்பிடு சாதனா.”. என்று சாப்பிட வைத்தார் தாமரை
அப்போது அவளுக்கு புரையேறியது.
“இந்தாங்க சிஸ்டர். தண்ணி குடிங்க.” என்று தண்ணீரை நீட்டினான் சேகர். அவன் இப்போது முற்றிலும் மாறி இருந்தான். சாதனா அந்த குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டு அவளை மரியாதையுடன் பார்த்தான்.
தாமரை அவளை தங்கத்தட்டில் வைத்து தாங்கினார். சுகன்யாவும் பாசமாக பழகினாள். சுகந்தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். இப்படி அவளை சுகந்தன் குடும்பம் தாங்குவதைப் பார்த்த கார்த்திகேயன் கலைவாணி இருவரும் மகிழ்ந்தனர்.
அவர்கள் ஆசைப்பட்டபடி அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.