நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சாதனா இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டாள்.
ஓரளவு ஜுரம் குறைந்து இருந்தது. ஆனால் முழுமையாக சரியாகவில்லை.
சுகந்தன் “என்ன சாதனா இவ்வளவு சோகமா முகத்தை வச்சிட்டு இருக்க? சாதாரண காய்ச்சல் தான். சரியா போயிடும். நீ ஆபீசுக்கு போ. ஏதோ முக்கியமான ப்ராஜெக்ட் போயிட்டு இருக்குன்னு சொன்னாயே.” என்றான்.
“அதெல்லாம் பரவா இல்லை.” என்றாள் சாதனா மெல்லிய குரலில்.
“என்ன பரவாயில்லை? உனக்கு இந்த வேலை எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும். இந்த ப்ராஜெக்ட் ரொம்ப இம்பார்டன்ட் ப்ராஜெக்ட். அதுவும் எனக்கு தெரியும். நீ போ. நான் பார்த்துக்கிறேன். அம்மா இருக்காங்க. தேவை ஏதாவது இருந்தா நான் அம்மாவை கேட்கிறேன்.” என்றான்.
“இல்ல வேண்டாம். அத்தை ஏதாவது சொல்லுவாங்க.” என்றாள் தயங்கியபடி. .
“அதையெல்லாம் நான் பார்த்துகிறேன். நீ கிளம்பு. நான் இப்ப எவ்வளவோ பெட்டர். நானே நாளையிலிருந்து ஆபீஸ்க்கு போனாலும் போயிடுவேன். அப்புறம் நீ இங்க இருந்து என்ன பண்ண போற?” என்றான்.
அதேநேரம் ஆபீஸிலிருந்து போன் வந்தது. எடுத்து பேசினாள்.
“நீங்க கேட்ட இன்பாமேஷன் எல்லாமே என்னோட டெஸ்க் டாப்ல இருக்குற போல்டரில் இருக்கு.” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு
“பாஸ்வேர்டு..” என்று அதை சொல்ல யோசித்தாள்.
“சரி நானே வந்து எடுத்து தரேன்.” என்றாள்.
“சாது ஒரு பொறுப்பான வேலையில் இருந்துட்டு இந்த மாதிரி பொறுப்பில்லாம நடந்து கொள்ளாதே. போயிட்டு வா.” என்றான்.
“சரி” என்றுவிட்டு தாமரை இடம் சென்றாள்.
“அத்தை ஆபீஸ்ல இருந்து எனக்கு கால் வந்துச்சு. நான் போயிட்டு சீக்கிரமா வந்துவிடுகிறேன். இப்போ கந்தனுக்கு எவ்வளவோ பரவாயில்லை.” என்றாள் தாங்கியபடி.
“ஆமா நீ என்ன டாக்டரா? பரவாயில்லைnu சர்டிபிகேட் கொடுக்கிற? அவன் முகத்தை பார்த்தா தெரியல? இன்னும் அவனுக்கு சரியாகல. ஆனால் நான் சொன்னா நீ கேட்கவா போற. எப்படியாவது போ.” என்றார்.
அதுவே போதும் என்று விட்டு சாதனா அலுவலகத்திற்குக் கிளம்பி வந்தாள். ஆனால் சொன்ன மாதிரி சீக்கிரம் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை.
மாலை 6 மணிக்கு வீடு திரும்பினாள். கைப் பையை வைத்து விட்டு நேராக கந்தனை தேடிப்போனாள். அவன் உறங்கிக் கொண்டிருந்தான் ஜுரம் அதிகமாக இருந்தது.
தாமரை மீண்டும் அர்ச்சனையை ஆரம்பித்தார்.
“புருஷனுக்கு உடம்பு சரியில்லன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? கொஞ்சம் கூட கிடையாது. புருஷனை விட ஆபீஸ் தான் முக்கியம். கிளம்பி போயிட்டா. நான் இவளை பார்க்கிறதா இவனை பார்க்க்கிறதா? வயிற்றுப் பிள்ளைக்காரி ஒருத்தி வீட்டில் இருக்கா. இவனுக்கு இருக்கிற ஃபீவர் இவளுக்கு வந்துருச்சுன்னா, நான் என்ன பண்றது? ஏற்கனவே வீக்கா இருக்கா. இதையெல்லாம் இந்த வீட்ல யாரு நினைக்கிறா? எல்லா வேலையையும் நான் ஒருத்தியே செய்ய வேண்டி இருக்கு.” என்று ஆரம்பித்து திட்டி தீர்த்தார்.
ஒருவகையில் அவர் சொன்னதும் சரிதான் என்று தோன்றியது சாதனாவுக்கு. அடுத்த நான்கு நாட்கள் விடுமுறை எடுத்தாள்.
பக்கத்தில் இருந்து அவனை பார்த்துக் கொண்டாள்.
அவன் உடம்பு தேறியது. ஆனால் இவளுக்கு அவளது அலுவலகத்தில் ஒரு கெட்ட பெயர் வந்தது. ஆனால் அதனை அவள் அவனுக்காக சகித்துக் கொண்டாள். ஆனால் கந்தனுக்கு ஒரு சோதனை வந்தபோது அவன் அவளை விட்டுக் கொடுத்து விட்டான். இப்போதும் அதை நினைக்க நினைக்க சாதனாவின் கண்களில் நீர் முட்டியது.
அவள் அலுவலகத்தில் இறந்த நற்பெயரை பெறுவதற்கு அவளுக்கு சில மாதங்கள் ஆனது. அவளுக்கு ஒரு பிரச்சனை வரும் என்று தெரிந்திருந்தும் அவள் அவன் பக்கம் இருந்தாள். ஆனால் அவனுக்கு ஒரு பிரச்சனை வந்தபோது அவன் அவள் பக்கம் இல்லை. அவளை வெகு சுலபத்தில் விட்டுக் கொடுத்து விட்டான். அவனுக்கு எப்போதுமே அவன் தாய், தந்தை தங்கை, மாப்பிள்ளை இவர்கள் எல்லோரும் தான் முக்கியம். இவள் அவனுக்கு எப்போதும் இரண்டாம்பட்சம்தான் என்று நினைத்து வருந்தினாள்.
அலுவலகத்தில் திலீப் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தான்.
“our project is a grand success! (நாம் செய்த வேலை வெற்றியடைந்துள்ளது)” என்று அவன் முன்பு அமர்ந்திருந்த அனைவரிடமும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருந்தான்.
“Fabulous job guys! You all did it! (அற்புதமான வேலை செய்துள்ளீர்கள்)” என்று அந்த கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தான்.
எல்லோரது முகத்திலும் வெற்றியின் மகிழ்ச்சி தெரிந்தது. . ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் திலீப் அந்த பெரிய அறையை விட்டு வெளியில் வந்தான்.
சாதனா அவனை பார்த்து புன்னகைத்தாள்.
“சாதனா you did a great job! (நீங்கள் நல்ல வேலை செய்துள்ளீர்கள்.) இந்த ப்ராஜெக்ட் சக்ஸஸ்புள் ஆனதற்கு நீ ஒரு இம்பார்டன்ட் ரீசன்.” என்று வாயார அவளை புகழ்ந்தான்.
“தேங்க்யூ திலீப்.” என்றாள்
“ஆமாம் ராத்திரியும் பகலும் வேலை வேலை தான் இவளுக்கு. சரியான வொர்க் ஹாலிக்(workaholic).” என்றாள் லதா சாதனாவின் தோளை தட்டியபடி.
“ஆமாம் சாதனா. நீ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற. அது உன்னோட உடம்புக்கு நல்லது இல்லை. நம்ம வேலை நமக்கு முக்கியம் தான். அதைவிட நமக்கு நம்ம ஹெல்த் முக்கியமா இருக்கணும்.
அடுத்த ஒன் வீக் நமக்கு பெருசா வேலை கிடையாது. நீ ஏதாவது ட்ரிப் ரிலாக்ஸ்டா போயிட்டு வா. லீவு வேணும்னா எடுத்துக்கோ. இல்லன்னா ரிலாக்ஸ்டா வொர்க் பிரம் ஹோம் பண்ணு.” என்றான் திலீப்.
“சாதனா நான் என் பிரண்டோட கலிபோர்னியா போகலாம்னு இருக்கேன். நீயும் வரியா?” என்று கேட்டாள் லதா.
“இல்ல லதா அம்மா வந்திருக்காங்க. அவங்க வந்ததிலிருந்து சஞ்சனாவின் டெலிவரியில் குழந்தையை பார்த்துக்கொள்வதில் ரொம்ப பிசியா இருக்காங்க. .வெளியே கூப்பிட்டாலும் வர மாட்டாங்க.
அவங்க தங்கச்சி ஹூஸ்டன்ல இருக்காங்க. இங்கே வரேன்னு சொல்லி இருக்காங்க.
நான் அப்போ வீட்ல இருக்கணும். அப்பதான்
அம்மாகிட்ட நான் சஞ்சனா குழந்தையை பார்த்துக்க ஹெல்ப் பண்றேன்னு சொல்லி அம்மாவை அவங்க கூட ஒரு வாரம் ஹூஸ்டன் அனுப்பி வைக்க முடியும். you carry on. (நீ போயிட்டு வா )” என்றாள் சாதனா.
“சரி சாதனா. அப்புறம் எப்பயாவது சான்ஸ் கிடைச்சா நாம சேர்ந்து போகலாம்.” என்று விட்டு சென்றாள் லதா .
விக்ரம் அந்த பெரிய கிறிஸ்துமஸ் மரத்தை எடுத்து வந்து ஹாலில் வைத்தான்.
ஜோதி குதித்துக் கொண்டிருந்தாள்.
“ஐயா கிறிஸ்மஸ் ட்ரீ சூப்பர்!” என்றாள்.
சஞ்சனா .
அந்த கிறிஸ்மஸ் மரத்தில் தொங்க விடுவதற்காக வைத்திருந்த சின்ன சின்ன அலங்கார பொருட்களை டப்பாவுடன் எடுத்து வந்தாள்.
சஞ்சனா “ஜோதி வா. நாம ரெண்டு பேரும் டெக்கரேட் பண்ணலாம்.” என்று அவளையும் சேர்த்து கொண்டு ஒவ்வொன்றையும் எடுத்து அந்த மரத்தில் அழகாக தொங்க விட்டுக் கொண்டிருந்தாள்.
படியிறங்கி வந்த சாதனா
“that’s so beautiful! ( ரொம்ப அழகா இருக்கு.) யார் டெக்கரேஷன் பண்ணது?” என்று கேட்டாள்.
“நான் தான்!” என்று குதித்தாள் ஜோதி.
“ரொம்ப பியூட்டிஃபுல்லா டெக்கரேஷன் பண்ணியிருக்க. உன்னை மாதிரியே. ரொம்ப அழகா இருக்கு.” என்று ஜோதியின் கன்னத்தை ஆசையாக கில்லி பாராட்டினாள் சாதனா.
“ஜோ நீ மட்டுமா டெக்கரேஷன் பண்ண? சஞ்சனா ஆன்ட்டி உனக்கு ஹெல்ப் பண்ணாங்க இல்ல? அதை சொல்லவே இல்லையே?” என்று ஞாபகப் படுத்தினாள் விஜயா.
“சாரி” என்று சஞ்சனா, விஜயா இருவரையும் பார்த்து சொல்லிவிட்டு சாதனா விடம் திரும்பினாள் ஜோதி.
“சஞ்சனா ஆன்ட்டி, நான் ரெண்டு பேரும் சேர்ந்துதான் பண்ணினோம்.” என்றாள் ஜோதி.
“ஓ கிரேட் ஜாப்.” என்று புகழ்ந்தாள் சாதனா.
“சரி நாம இன்னிக்கு மால் போகலாமா?” என்று கேட்டபடி அங்கு வந்தான் விக்ரம்.
“போகலாமே என்றாள் ஜோதி.
ஆனால் விஜயா
“ஜோ, அப்பா வர டைம் ஆகும். அப்புறம் போகலாம்.” என்றாள்.
இதைக்கேட்ட விக்ரம் “அப்படியா விஜயா? சரி நாம இந்த தெருவுல இருக்குற டெக்கரேஷன் பார்க்கலாம். வரியா? ஜோ?” என்று அழைத்தான்.
“ஓகே அங்கிள்.” என்றாள்.
“சரி வாங்க. நாம காரிலேயே போயிட்டு வரலாம்.” என்றான் அங்கு இருந்த வீட்டினரை பார்த்து.
“இல்லை மாப்பிள்ளை. நீங்க போயிட்டு வாங்க. குழந்தை தூங்கிட்டு இருக்கான். நான் பார்த்துக்குறேன்.” என்றார் கலைவாணி.
“அம்மா நீங்க போயிட்டு வாங்க. நான் குழந்தையை பார்த்துக்கிறேன்.” என்றாள் சஞ்சனா.