நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விக்ரம் வீடு வந்தான்.
ராஜேஷ் காருடன் வெளியில் காத்து இருந்தான். அவனை பார்த்ததும் ஜோதி, விஜயா இருவரும் அவன் காரில் ஏறிக் கொண்டனர் .
ராஜேஷ் விக்ரமிடம்
“நான் பத்து நிமிஷம் கழிச்சு வரேன். எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு.” .
“அப்படினா அம்மா ரெடியா இருந்தா அவங்களையும் கூட்டிட்டு வாங்க.” என்றாள் சஞ்சனா.
“சரி. நான் கூட்டிட்டு வரேன்.” என்றான் ராஜேஷ்.
சஞ்சனா போன்செய்து தாய்க்கு விவரத்தை தெரிவித்தாள்.
கலைவாணி “எனக்கும் பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சுடும். நான் ராஜேஷ் உடன் வந்துடறேன்.” என்றார்.
இப்போது பின் இருக்கையில் சாதனாவின் பக்கத்தில் இடம் காலியாக இருந்தது.
சுகந்தன் “எனக்கு பின்னாடி போக கஷ்டமா இருக்கு. நான் இங்கேயே உட்காந்துக்கறேன்.” என்று பொதுவாகச் சொல்லி விட்டு சாதனாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். இருக்கையின் மீது இருந்த அவளது கை மீது அவன் கையை வைத்தான். அப்போது விக்ரம் வண்டியை வேகமாக திருப்ப அவன் கை அவள் விரலை நசுக்கியது.
சாதனா “ஆ”என்று கத்தினாள்.
அந்த சத்தத்தை கேட்ட சஞ்சனா “என்ன ஆச்சு சாது?” என்று பதறியபடி கேட்டாள்.
“ஒன்னும் இல்லை ஒன்னும் இல்ல மe)ஞ்சு.” என்றுவிட்டு விரல்களை அவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டாள்.
அவன் “ஸாரி” என்றான்.
அவள் பார்வையை வெளியே திருப்பினாள்.
சாலையில் ஆங்காங்கே உயரமான பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மரங்களின் இலைகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
“கிறிஸ்மஸ் டெக்கரேஷன் ரொம்ப சூப்பரா இருக்கு. விக்ரம்” என்றான் கந்தன்.
விக்ரம் “ஆமாம். நியூ இயர் வரைக்கும் இந்த டெக்கரேஷன் இருக்கும்.” என்றான்.
“ஓ அப்படியா? இந்த ஊரே பார்க்க ரொம்ப அழகா ஜொலிக்குது.” என்றான் கந்தன்.
ராஜேஷ் காரில் வந்து கொண்டிருந்தாள்d.
விக்ரமின் காரும் ராஜேஷின் காரும் மாலுக்கு சென்றது.
அனைவரும் இறங்கி அந்த குளிரில் வேகவேகமாக ஓட்டமும் நடையுமாக உள்ளே சென்றனர்.
மாலுக்குள் கடைகளில் அமெரிக்கர்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர். அனைவரது முகத்திலும் பண்டிகைக்கான மகிழ்ச்சி தெரிந்தது. கண்ணில் படுபவர் எல்லோரிடமும்
“மெரி கிறிஸ்மஸ்.” என்று சொன்னபடி அவரவர் அவரவர் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு கடையின் வாசலிலும் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், சாண்டா கிளாஸ் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன.
ஒரு கடையில் சிகப்பு, பச்சை, வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்களில் இலைகள் கொண்ட கிறிஸ்மஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்காக வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. கருப்பு நிறத்தில் சாண்டா கிளாஸ் வெள்ளை நிறத்தில் சாண்டா கிளாஸ் என்று இரண்டு நிறங்களிலும் சாண்டா க்ளாஸ் பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இப்படி எல்லா கடைகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த மக்களிடம் இருந்த உற்சாகம் இவர்களையும் தொற்றிக்கொண்டது.
ஜோதி “அம்மா எனக்கு கிறிஸ்மஸ்க்கு என்ன கிப்ட் வாங்கி தர போறீங்க?” என்று கேட்டாள்.
“உனக்கு ஒரு டால் ஹவுஸ். ஓகே வா?” என்று கேட்டாள் விஜயா.
“ஐயா ஜாலி.” என்று ஜோதி குதித்தாள்.
“சரி நீங்க எல்லோரும் போய் அவங்க அவங்களுக்கு தேவையானதை வாங்கிட்டு ஒரு மணி நேரத்தில் இல்லை பத்தாது. ரெண்டு மணி நேரத்துல இந்த சோபாவுக்கு வந்துடுங்க.” என்று அந்த பெரிய மாலுக்கு நடுவில் போட்டிருந்த பிரமாண்டமான சோபாவை காண்பித்தான் விக்ரம்.
“ஓகே” என்று சென்றனர்.
சாதனா ஒரு கடையில் செருப்பு போட்டு பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான் கந்தன் .
“என்ன சாது நீதான் ஹீல்ஸ் வைத்த ஷூ போட மாட்டாயே? இதை எடுத்து போட்டு பாத்துட்டு இருக்க.” என்று கேட்டான்.
சாதனா போட்டிருந்த குதிரைவால் முடி அவன் முகத்தில் பட வேகமாக திரும்பினாள்.
“mind your own business! (உன் வேலையை பார்)
என்றாள்.
“நீ நல்லா உயரமா தானே இருக்க. உனக்கு எதுக்கு இந்த ஹீல்ஸ்? காலுக்கு நல்லது இல்லை அதனால சொன்னேன். பார்த்து நடக்கணும்.”.
சாதனா நிமிர்ந்து ஒரு பெண்ணை பார்த்தாள். கண்களால் அவனிடம் அவளை காண்பித்தாள்.
அந்த அமெரிக்க பெண், சாதனா கையில் வைத்திருந்த ஷூவை விட பெரிய ஹீல்ஸ் கொண்ட ஷூ போட்டுக்கொண்டு நடை பழகி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளை பார்த்த சுகந்தன்
“அவங்களுக்கு இந்த மாதிரி பெரிய ஹீல்ஸ் ஷூ போட்டு பழக்கம் இருக்கும். நீ அந்த மாதிரி போட்டு நான் பார்த்ததே கிடையாது. அதனால சொன்னேன்.”
“எனக்கு நிறைய விஷயத்தில் பழக்கம் கிடையாது. அதுக்காக அதை எல்லாம் பண்ணாமலா இருக்கேன்? எல்லாத்தையும் பழகி பண்ணிக்கிட்டு தானே இருக்கேன்.” என்று அவனை அர்த்தமாக பார்த்து கேட்டாள்.
அவன் அவளை புரியாமல் பார்த்தான்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலாம்னு ஆசைப்பட்டேன். அது நடக்காமல் தனியா இருக்க பழகிக் கொண்டேன். இப்போ இதுவே எனக்கு வசதியா இருக்கு. இதுல யாரும் நடுவுல வராமல் இருந்தாலே போதும். அதே மாதிரி இந்த ஷூவையும் போட்டு பழகுகிறேன்.” என்று அவனை மானசீகமாக ஒரு குத்து குத்து விட்டு எழுந்து சென்றாள்.
அவன் அவளை வலியுடன் ஒரு நிமிடம் பார்த்தான். அதற்குப் பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து அவள் பின் சென்றான்.
“சாதனா ஒரு நிமிஷம் நில்லு. நான் சொல்றதை கேளு.”
“நான் சொன்னதை நீ கேட்டியா?” என்று அவள்d கண்களை பார்த்து கேட்டாள்.
அவன் பதில் பேசவில்லை.
“என்ன பேச்சையே காணோம்? பேச முடியல இல்லை? எனக்கும் அன்னிக்கி அப்படிதான் இருந்துச்சு.”
“ப்ளீஸ். சாதனா. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு.” என்றான்.
அவள் திரும்பி நடக்க முயற்சித்தாள். அவள் கையை பிடித்தான்.
“கையை விடு.” என்றாள் முறைத்தபடி.
“விடமாட்டேன்.” என்றான் அவன் பிடிவாதமாக.
“ விடலனா நான் 911க்கு
கால்கூட வேண்டாம், டயல் பண்ணாலே போதும்.
அப்புறம் என்ன ஆகும் தெரியுமா?” என்று அவனைப் பார்த்து மிரட்டலாக கேட்டாள்.
“தெரியும். போலீஸ் வந்து என்னை பிடிச்சுட்டு போய்டுவாங்க.” என்றான் சிறிதும் பயம் இல்லாமல்.
“தெரியுது இல்ல? ஒழுங்கா கையை விடு.” என்றாள்.
“நான் விடமாட்டேன். நீ 911க்கு டயல் பண்ணு. போலீஸ் வரட்டும். அவங்க வந்ததும் அவங்க கிட்ட என்னை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணு. அவங்க என்னை பிடிச்சிட்டு போகட்டும்.” என்றான் பிடிவாதமாக.
“பண்ணமாட்டேன்னு நினைக்கிறியா?” என்று தன் பையிலிருந்த கைபேசியை எடுத்தாள்.
ஆனால் அவள் விரல்கள் சற்று தயங்கின.
அதே நேரம் அங்கு வந்து விக்ரம்
“சாதனா, சுகந்தன் வாங்க அந்தக் கடைக்கு போகலாம்.” என்று கூறி சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றினான்.
இவர்கள் இருவரையும் விக்ரம், சஞ்சனா கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். சாதனா பேசியதை கேட்ட விக்ரம் அங்கு ஓடிவந்து இருவரையும் திசை திருப்பினான்.
மாலின் நடுவில் ஒரு பெரிய இடத்தில் மூன்று தளத்திற்கு உயர்ந்திருந்த பெரிய கிறிஸ்மஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதற்கு கீழ் ஒரு வீடு போல அமைத்து அந்த வீட்டில் ஒரு பெரிய சிகப்பு நிற பிரம்மாண்டமான நாற்காலி போடப்பட்டு அதில் அச்சு அசல் சாண்டா கிளாஸை போலவே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.
வெள்ளை தாடியுடன் கண்ணாடி அணிந்து சிகப்பு மற்றும் வெள்ளை உடை, சிகப்பு தொப்பி, சிகப்பு மற்றும் வெள்ளையில் பூட் அணிந்து பார்ப்பதற்கு தெய்வீகமாக இருந்தார் அவர். அவர் பக்கத்தில் அமர்ந்து குழந்தைகள், பெரியவர்கள் குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அந்த புகைப்படம் எடுப்பதற்கு பெரிய வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
அந்த வரிசையில் வந்து நின்றான் விக்ரம்.
“நாம எல்லோரும் இங்கே போட்டோ எடுத்துட்டு போகலாம்.” என்றான். அவனுக்குப் பின் ராஜேஷ் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தான். இவர்களது முறை வந்ததும் அந்த புகைப்படம் எடுப்பதற்கான டாலர்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு சஞ்சனா, விக்ரம் குழந்தையுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
பிறகு கலைவாணி, சாதனா உடன் சேர்ந்து நின்று இன்னொரு புகைப்படம் எடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது விக்ரம் “ சுகந்தா நீங்களும் வாங்க.” என்று கூப்பிட்டான்.
அவன் தயங்கி நின்று கொண்டிருந்தான்.
“வாங்க வாங்க டைம் ஆச்சு.” என்று அவன் அவசரப் படுத்த கந்தன் வந்து சாதனா பக்கத்தில் நின்றான்.
புகைப்பட நிபுணர்
“say cheese (சீஸ் என்று சொல்லுங்கள்)” என்றார். அப்படி எல்லோரும் சொல்லும் பொழுது புன்னகைப்பது போல இருக்க அவர் அழகாக புகைப்படம் எடுத்தார்.
“சாதனா குழந்தையை ஸ்டாலரில் வை.” என்று கையில் கொடுத்தாள் சஞ்சனா.
சாதனா குழந்தையை கையில் வாங்கியதும் அவள் மனதில் இருந்த இருக்கம் மறைந்தது.
அவள் அவனை பார்த்து புன்னகைத்தாள். கால்விரல்கள் முதல் தலை வரை முழுதுமாக குளிருக்கு இதமாக கருநீல நிற உடை மற்றும் அதே நிறத்தில் சாக்ஸ் கையுறை, தொப்பி என்று மூடப்பட்டிருக்க அவனது முகம் மட்டும் பளிச்சென்று தெரிந்தது.