அத்தியாயம் 10
“எப்பா என்னை விட வேகமா அடிக்கிறா? இந்த பிரச்சனையை கடைசி தடவை பேசி முடிக்கணும். இல்லைன்னா அந்த அர்ச்சனா மாதிரி வேற யாரவது பிரச்சனையை கிளப்புவாங்க”, என்று நினைத்து கொண்டு “எதுக்கு இப்ப அடிச்ச? நான் கேட்டதுல என்ன தப்பு?”, என்று கேட்டான்.
“என்ன தப்பா? லூசு தனமா பேசிட்டு இருக்கீங்க. நான் எப்படி அப்படி ஒரு சூழ்நிலைல உங்களை விட்டு போவேன். அசிங்கமா பேசாதீங்க மாமா. எனக்கு நீங்க தான் முக்கியமே தவிர, வேற எதுவும் இல்லை. உங்களுக்கு கை, கால் போனா கூட நான் உங்களை தாங்குவேன். என்னை பத்தி இப்படி சொன்னா, தோசை கரண்டி எடுத்துட்டு வந்து சூடு வச்சிருவேன்”, என்று பத்திர காளியாய் மிரட்டினாள் பஞ்சு.
அவள் மிரட்டலில் சிரிப்பு வந்தது ஆதிக்கு.
“லூசு தனமா பேசுறேன்னா? உனக்கு நான் தான் முக்கியமா? உனக்கு நான் முக்கியம், ஆனா எனக்கு நீ முக்கியமா இல்லை அப்படி தான? நானாடி லூசு மாதிரி பேசுறேன்? நீ தான் டி லூசு மாதிரி பேசி உயிரை எடுக்குற? உன்னை சொன்னா மட்டும் கோபம் வருது. அப்ப என்னை மட்டும் வேற கல்யாணம் பண்ண சொல்ற? வேற ஒருத்தி என்னை தொட முடியுமா? சொல்லு டி சொல்லு. அந்த அர்ச்சனா நல்ல அழகி தான். ஏன் அவளை விட நிறைய அழகான பொண்ணுங்க, என்கிட்ட வந்து என்னை விரும்புறேன்னு சொன்னாங்க. அவங்க பின்னாடி என்னோட நிழல் கூட போகாது. ஆனா, என்னை போய் வேற கல்யாணம் பண்ண சொல்ற? உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்?”
தலை குனிந்தவள் “நான் உங்க நல்லதுக்குனு நினைச்சு தான் மாமா, அப்படி சொன்னேன்”, என்றாள்.
“நல்லதா? எது நல்லது? யாருக்கு நல்லது? என்னை பத்தி உனக்கு கொஞ்சமாவது புரிஞ்சிருந்தா, என்கிட்டே நீ இப்படி பேசிருப்பியா? இப்ப என்ன சொன்ன? நான் தொட்டா செத்து போயிருவியா? நான் தொட்டா செத்து போக மாட்ட டி. உருகியே போவ டி லூசு. என்னோட தொடுகையை உன்னோட மனசும் உடம்பும் எதிர்பார்க்கும். என்னோட தொடுகைல தான், உன்னோட உணர்வுகள் எல்லாம் சிலிர்க்கும். தொட்டு காட்டவா? நிரூபிச்சு காட்டவா? ஆனா மாட்டேன். என்னை பத்தி நீ எப்ப இப்படி ஒரு வார்த்தை சொன்னியோ? அப்பவே நீ பஞ்சு மட்டும் தான். என்னோட வர்ணா நீ இல்லை போடி. இனி உங்கிட்ட பேசவே மாட்டேன்”,
என்று அவளை பார்த்து சொன்ன ஆதி “தொட்டா செத்துருவன்னு சொன்ன நீயே என்னை நெருங்குவ. அப்ப உன்னை பாத்துக்குறேன் “, என்று நினைத்து விட்டு தரையில் படுத்து விட்டான்.
அடுத்து அவள் அழைத்த “மாமா… மாமா”, என்ற குரலுக்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை.
அவனுடைய கோபத்தில் வாயடைத்து போயிருந்தாள் பஞ்சு.
“தன்னுடைய கவலையில் அவனுடைய மன நிலையை யோசிக்க மறந்து விட்டோமே. இப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்தால் என்னால தாங்கியிருக்க முடியுமா? இப்ப மாமாவே, நீ படிக்கலை. எனக்கு நீ வேண்டாம். என்னை விட்டு போன்னு சொன்னால் செத்துருக்க மாட்டேனா? படிப்பு என்ன படிப்பு? எனக்கு என் மாமா தான் முக்கியம். எப்படி மாமாவை சமாதான படுத்த?”, என்று காலம் கடந்து யோசித்தாள் பஞ்சு.
“கண்டிப்பா சமாதான படுத்துவேன்”, என்று நினைத்து கொண்டு அவனுக்கு ஒரு போர்வையை மூடினாள்
அடுத்த நொடி அந்த போர்வையை தூக்கி தூர எறிந்தான் ஆதி.
“எப்படி சமாதான படுத்த?”, என்று நினைத்து கொண்டே அங்கு இருந்த கட்டிலில் அமர்ந்து யோசித்தாள் பஞ்சு.
“மாமா. இவ்வளவு கோபத்துலயும் அந்த அர்ச்சனாவை அழகின்னு சொல்றீங்க? இதை மறக்காமல் நினைவு வச்சிருப்பேன். உங்க கோபம் குறைஞ்ச உடனே சொல்லுங்க. இதுக்கு ஒரு பஞ்சாயத்து வைக்கணும்”, என்று அவனுக்கு கேட்கும் படி சொன்னாள் பஞ்சு.
“அட பாவி! மூச்சு விடாம அவ்வளவு பெரிய டயலாக் பேசுனேன். அதுல ஒரு வார்த்தையை பிடிச்சிக்கிட்டு பஞ்சாயத்துன்னு சொல்றாளே. இதுக்காகவே கோபத்தை கன்டினியூ பண்ணனும் டா ஆதி”, என்று தனக்குள் சொல்லி கொண்டான் ஆதி.
அவள் “என்ன செய்யலாம்?”, என்று மண்டையை கசக்கி அவனை சமாதான படுத்த யோசித்தாள். ஆனால் இப்பவே போய், அவனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்திருந்தால் கோபத்தை எல்லாம் மறந்திருப்பான்.
அது தெரியாமல் அடுத்த நாள் சகுந்தலாவிடமும், பூங்கோதையிடமும் நடந்த கதையை எல்லாம் சொல்லி “என்ன செய்ய?”, என்று ஐடியா கேட்டாள் பஞ்சு.
“லூசுங்க கிட்ட போய், லூசு ஐடியா கேக்குது பாரு?”, என்று சிரித்தது விதி.
காலையிலே மூவர் கூட்டணி ஆரம்பித்திருந்தது. கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள் பஞ்சு.
கையை மேலே ஆட்டி ஆட்டி, எதுவோ பிளான் செய்து கொண்டிருந்தாள் சகுந்தலா.
இல்லாத மூளையை, இருக்கு என்று நினைத்து, தலையை தட்டி தட்டி யோசித்து கொண்டிருந்தாள் பூவு.
காலையில் எழுந்து வந்த சீனி, இந்த காட்சியை பார்த்து விட்டு பயந்து போய் ஆதி அறைக்குள் சென்றான்.
அங்கே குப்புற படுத்து தூங்கி கொண்டிருந்தான் ஆதி.
அவன் அருகில் சென்ற சீனி “டேய் ஆதி எந்திரி டா. இங்க ஒரு பூகம்பவே வந்துருமோன்னு பயந்து போய் பீதியாகி வந்துருக்கேன். நீ கவுந்து படுத்திருக்க”, என்று கத்தினான்.
அவன் பதட்டமான குரலில் திடுக்கிட்டு எழுந்த ஆதி “என்ன சீனி சொல்ற? என்ன பூகம்பம்?”, என்று கேட்டான்.
“நீயே அந்த கொடுமையை வந்து பாரு”, என்று அழைத்து சென்று அவர்களை கட்டினான்.
“என்ன சீனி இது? இப்படி மூணு பேரும் சேர்ந்து உக்காந்து தீவிரமா யோசிச்சிட்டு இருக்காங்க “
“ஆமா டா. இவங்க ஒரு ஆள் உக்காந்து யோசிச்சாலே, உடம்பு புண்ணாகிரும். மூணு பெரும் சேர்ந்து மாஸ்டர் பிளான் போடுறாங்க டா. அதுலயும் அம்மாவை பாரு காத்துலையே கணக்கு போடுறாங்க. என் பொண்டாட்டியை பாரு, மண்டையை தட்டி தட்டி யோசிக்கிறா? அங்க என்ன இருக்குனு அந்த தட்டு தட்டுறா? எனக்கு பயமா இருக்கு டா ஆதி. இன்னைக்கு லீவு தான? எங்கயாவது வெளியே போயிரலாம். எதுவோ பெருசா விபரீதம் வீட்டில் நடக்க போகுது”, என்று பயந்து போய் சொன்னான் சீனி.
“இந்த பஞ்சு தான் அவங்க கிட்ட விஷயம் சொல்லிட்டா”, என்று புரிந்து கொண்ட ஆதி, “அது ஒரு சின்ன பிரச்சனை டா. உன்னை கவுக்க அவங்க பிளான் செய்யலை. என்னை கவுக்க தான் பிளான் செய்றாங்க”, என்றான்.
“அப்பாடா! அப்ப டார்கெட் நீ தானா? ஒரு நிமிஷம் நான் தானோன்னு பயந்துட்டேன்”
“உனக்கு உன் கவலை”, என்று சொல்லி விட்டு சீனியை முறைத் தான் ஆதி.
“சரி சரி கோப படாத டா. எதுக்கு உன்னை கார்னர் பண்ண பாக்காங்க?”
“நேத்து பஞ்சுவை ரெண்டு வப்பு வச்சிட்டேன் டா. அது மட்டும் இல்லாம அவ கிட்ட பேசமாட்டேனு சொல்லிட்டேன் அதான்”
“ஐயையோ எதுக்கு அடிச்ச? எப்பவும் அவ தானே உன்னை விரட்டி விரட்டி அடிப்பா. நேத்து நீ அடி கொடுத்திருக்க. ஆனாலும், எனக்கு உன்னை நினைச்சா பெருமையா இருக்கு டா ஆதி”
“என்னது பெருமையா? எதுக்கு சீனி?”
“நீ தைரியமா உன் பொண்டாட்டியை அடிச்சிருக்கியே? எப்படி தைரியம் வந்தது? நானும் என் பொண்டாட்டியை நாலு அடி வைக்கணும்னு முயற்சி செய்றேன்… ஆனா எங்க? எப்ப பாத்தாலும் அவளே முந்திக்கிறா?”
“நீ வேற டா சீனி. நேத்து அவ அசந்த நேரம் அடிச்சிட்டேன். மித்த நேரமா இருந்திருந்தா, பஞ்சு என்னை பந்தாடிருப்பா”
“என்ன தான், ஆதி பிரச்சனை?”
“நேத்து அந்த அர்ச்சனா லூசு பஞ்சு கிட்ட, நீ ஆதிக்கு சரி பட்டு வர மாட்ட, படிக்காதவ, பட்டிக்காடு அப்படி இப்படின்னு பேசி வெறுப்பேத்திருக்கா”
“ஐயையோ, அந்த அர்ச்சனா அடங்கவே மாட்டாளா டா?”
“அதெல்லாம் பஞ்சு, எதாவது அவளுக்கு திருப்பி கொடுத்து தான் அனுப்பிருப்பா டா”
“சரி நீ எதுக்கு அடிச்ச?”
“என்னத்தை சொல்றது? இவ என்கிட்ட வந்து, நீங்க வேற பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கோங்கன்னு சொன்னா. செம கோபம் வந்துச்சு மச்சி. திருப்பியும் சொன்னாளா? மறுபடியும் வாங்கினா”
“இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ண சொன்னாளா? ச்ச என் பொண்டாட்டி எனக்கு இப்படி ஒரு ஆபர் கொடுக்க மாட்டுக்காளே”
“சும்மா பேசாத, நீ பூவோட முந்தானையை பிடிச்சுட்டே சுத்துறது எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால, நீயும் வேற பொண்ணை எல்லாம் நினைக்க கூட மாட்டே. அதை விடு. அவளை நான் அடிச்சது எல்லாம் பிரச்சனை இல்லை டா”
“அப்புறம் என்ன தான் டா நடந்தது?”
“கோபத்துல அவளை சமாதான படுத்தணும்னு நினைச்சு, பக்கம் பக்கமா வசனம் பேசி அவளை சமாதானமும் படுத்திட்டேன்”
“அப்புறம் என்ன? பஞ்சு தான் சமாதானம் ஆகிட்டாளே”
“அது இல்ல சீனி, சமாதான படுத்தும் போது அர்ச்சனா அழகி தான். அவளை விட அழகி எல்லாம் கூட என்கிட்ட காதலை சொன்னாங்க. அவங்களை எல்லாம் நான் திரும்பி கூட பாக்கலை அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டேன் டா”
“ஐயையோ அப்புறம்”
“அவளை அழகின்னு சொன்னதை மட்டும் வச்சு, ஒரு பஞ்சாயத்து இருக்குனு சொன்னா. நானும் பீதில அவ கிட்ட கோபமா இருக்குற மாதிரி சீன் போட்டேன். இதை போய் அம்மா கிட்டயும், பூவு கிட்டயும் பேசிருப்பா. இப்ப எனக்கு என்ன டவுட்டுன்னா, அவங்க எல்லாரும் என்னை பேச வைக்க பிளான் போடுறாங்களா? இல்லை நான் அர்ச்சனாவை அழகின்னு சொன்னதுக்கு, எனக்கு ஆப்பு வைக்க பிளான் போடுறாங்களான்னு தான் டா சீனி தெரியலை”
“ஆனா நீ இப்படியா டா வாயை கொடுப்ப ஆதி? இன்னொருத்தியை அழகின்னு சொன்னா எந்த பொண்டாட்டி டா சாமியாடாம இருப்பா? எனக்கு என்னமோ அவங்க அதுக்கு தான், உன்னை பிச்சி எடுக்க பிளான் போடுறாங்கனு தெரியுது”
“தெரியாம சொல்லிட்டேன் டா. நீ வேற பீதியை கிளப்பாத. நாம இன்னைக்கு வெளிய எங்கயாட்டும் ஓடிறலாம். அவங்க கிட்ட வாய் கொடுக்காம கிளம்பிரு டா சீனி. அவங்க யோசிச்சிட்டே இருக்கட்டும். நல்லா நினைவு வச்சிக்கோ சீனி, தப்பி தவறி கூட யார் கிட்டயும் வாய் கொடுத்து மாட்டிக்காத”, என்று சொன்னான்.
“என்ன டா இப்படி பீதியை கிளப்புற? சரி யார் கிட்டயும் சத்தியமா பேச மாட்டேன்”, என்று சொல்லி கிளம்ப போனான் சீனி.
அவன் பின்னாடியே வெளியே வந்தான் ஆதி. இருவரும் அறைக்குள் இருந்தே வெளியே எட்டி பார்த்தார்கள்.
மூவரும் அதே பொசிசனில் தான் அமர்ந்திருந்தார்கள்.
“கையில் சிக்குனா சங்கு தான் டா ஆதி, நான் போய் கிளம்பி வீட்டுக்கு வெளியே நிக்குறேன். நீ வந்துரு”, என்று சொல்லி விட்டு அவர்களை கவனிக்காதது போல சென்றான் சீனி. ஆதியும் திரும்பி உள்ளே வந்து கிளம்ப ஆரம்பித்தான்.
ஆதி குளித்து முடித்து வேறு உடை மாற்றி வெளியே வரும் போது,
சீனியும் அவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.
அங்கு இருந்தே “சீக்கிரம் வா டா”, என்று சைகையில் ஆதியை அழைத்தான் சீனி.
“ம்ம்”, என்று சொல்லி நகர்ந்தான் ஆதி.
ஒரு வழியாக இருவரும் கிளம்பி, வெளியே சென்று விட்டார்கள்.
“அத்தை ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க”, என்று சொன்னாள் பூவு.
“ஹ்ம்ம் கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன் பூவு. போகட்டும். கழுதை கெட்டா குட்டி சுவர். எப்படியும் இங்க வந்து தான ஆகணும். அப்புறம் பாத்துக்கலாம்”, என்று சொன்னாள் சகுந்தலா.
“பாருங்க அத்தை, எப்பவும் மாமா என்கிட்ட சொல்லிட்டு தான் போவாங்க. இப்ப பேசாமலே போறாங்க. எப்ப அவங்க கோபம் குறையும்?”, என்று கேட்டாள் பஞ்சு.
“அதுக்கு நேத்து, நீ அவன் கிட்ட வாய் கொடுக்காம இருந்துருக்கணும். அந்த மேனா மினுக்கி சொன்னாளாம். இவளும் வந்து வேற கல்யாணம் செய்ய சொன்னாளாம். சரி சரி விடு. அதெல்லாம் சரி பண்ணிரலாம். சண்டையே போடாம இருந்தா நல்லாவே இருக்காது பஞ்சு. இரு யோசிப்போம். பேசாம நீங்க ரெண்டு பேர் மட்டும் எங்கயாவது தனியா போற மாதிரி அனுப்பவா?
அப்ப அங்க வச்சு உன்கிட்ட பேசிருவான்”, என்று சொன்னாள் சகுந்தலா.
“அதெல்லாம் வேண்டாம் அத்தை”
“சரி, அப்பறம் வேற என்ன செய்ய? பேசாம நீயும் அவன் கூட பேசாம இரு. அவனுக்கு சாப்பாடே கொடுக்காத”
“ஐயையோ மாமா பாவம். பசிக்கும்”
“அட என்ன டி எல்லாத்துக்கும் இப்படி சொல்ற? இரு நான் போய் சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன். வயித்துக்குள்ளே எதாவது போனா தான், யோசனையே வரும்”, என்று எழுந்து போனாள் சகுந்தலா.
சகுந்தலா போன பிறகு, “பேசாம அரை குறை டிரஸ் போட்டு, ஆதி மச்சான் முன்னாடி போய் நில்லு மயங்கிருவாங்க”, என்று பஞ்சுவின் காதில் சொன்னாள் பூவு.
“ஏய் பூவு செம ஐடியா டி. இதை செஞ்சு பாப்போம். அமைதியா இரு அத்தை வராங்க”, என்று அமைதியானாள் பஞ்சு.