“உதயா…!!! உதயா… எங்க போன..”
தான் அணிந்திருந்த வெள்ளை உள்பனியனின் மேலே வெள்ளை நிற பார்மல் ஷர்ட்டின் பட்டனை போட்டுக் கொண்டிருந்த உதய்யின் கைகளில் ஒரு அவசரமும் உடல்மொழியில் ஒரு படபடப்பும் கண்களில் அலைப்புறுதலும் அப்பட்டமாய் பிரதிபலிக்க வாயோ ஓயாமல் மனைவியை அழைத்துக் கொண்டிருந்தது.
சட்டை அணிந்து கண்ணாடி முன் நின்று தலைமுடியை சரி செய்தபடி மறுபடியும் உதயாவை கூப்பிட எத்தனித்தப்போது,
“இப்ப எதுக்கு என் பேர ஏலம் விட்டுட்டு இருக்கீங்க..அத்தையோட ஒரு வேலைல இருந்தேன்..அதை முடிச்சிட்டு வரதுக்குள்ள என்ன அவசரம்..”
படபடவென பொரிந்தபடி அறையினுள் பிரவேசித்த உதயாவை ஊதாவும் வெள்ளையும் கலந்த காட்டன் புடவை பாந்தமாய் தழுவியிருக்க சின்ன சின்ன அணிகலன்களோடு மெல்லிய அலங்காரத்தில் தேவதையாய் ஜொலித்தாள்.
“எனக்கு இங்க எந்த வேலையும் ஓடல..ஒரே நர்வஸா இருக்கு..”
என்றவன் முன்நெற்றியை சுட்டிக்காட்டி,
“இங்க பார்..ஏஸி ஓடும்போதும் வேர்த்து இருக்கிறதை..!! எல்லாம் சரியா நடக்கணும்..”
என்று அவன் தவிப்பாய் சொல்ல அருகில் வந்தவள் முத்து முத்தாய் வேர்த்திருந்த நெற்றியில் உதடுகளை குவித்து ஊதிவிட்டு,
“எதுக்கு இப்ப இவ்வளவு டென்ஷன்…!! உங்க பெஸ்ட்டை கொடுத்தாச்சு..அதுக்கான எதிர்வினை நல்லதோ கெட்டதோ போல்டா ஃபேஸ் பண்ற மைண்ட் செட்டோட வாங்க..”
என்று மெல்லிய குரலில் கூற பதில் எதுவும் கூறாமல் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அவன் உடலில் தென்ப்பட்ட நடுக்கத்தை உள்வாங்கிய உதயா,
“உதய்..உதய்..ஓகே..காம் டவுன்..”
என்று முதுகில் தடவிக் கொடுக்க சில நிமிடங்கள் கழித்தே அவன் உடல் மெல்ல தளர்ந்தது.
எதனால் என்று கேட்கிறீர்களா..!! இன்று உதய்யின் கனவு நினைவாகும் நாள்..!!!
அவன் பட்ட கஷ்டங்களுக்கான பலன் கிடைக்க போகும் நாள்..!!இன்னும் கடக்க வேண்டிய நீண்ட பாதையில் முதல் சுவடை பதிக்க போகும் நாள்..!!! ஆம்..இன்று உதய்யின் முதல் படம் திரையரங்கங்களில் வெளியாகும் நாள்..!!
நிமிர்ந்து அவன் கண்களை பார்த்து,
“எவ்ரிதிங் வில் பீ ஃபைன்..ஓகே..” என்றவள் கசங்கிய அவன் சட்டையை நீவி காலரை அட்ஜெஸ்ட் செய்துவிட்டு,
“உங்க மூவி ஹீரோவை விட..என்னோட ஹீரோ தான் பக்கா மாஸ்…உங்களால மட்டும் எப்படி உதய் டெய்லீ ஒருவகைல என்னை இம்ப்ரெஸ் பண்ண முடியுது..”
என்று கண்சிமிட்ட அந்த டென்ஷனிலும் மனைவியின் கொஞ்சல் அவனுக்கு புன்னகையை கொடுக்க,
“நீ இருக்க பாரு..”
என்று சிரித்தவன் அவளோடு வெளியே வர அங்கே செந்தில்நாதனும் சரண்யாவும் தயாராக இருந்தனர்.
பூஜை அறையினில் கடவுளிற்கு சரண்யா அர்ச்சனை செய்துக் கொண்டிருக்க செந்தில்நாதன் அருகில் உதய்யும் சரண்யா அருகில் உதயாவும் சென்று நின்று கைக்கூப்பி மனதார கடவுளை வணங்கினர்.அனைவர் மனதிலும் ஒரே வேண்டுதல் தான்.
பூஜை முடித்து தீபத்தை மற்றவர்களிடம் காட்டி அவர்கள் தொட்டு வணங்கியதும் மகனின் நெற்றியில் சிறு கீற்றாய் குங்குமம் இட்டு,
“நல்லதே நடக்கும் கண்ணா..”
என்று அவர் கூற தாய்-தந்தையின் காலில் விழுந்து ஆசிப்பெற்றுக் கொண்டான்.
வெளியே கார் இவர்களுக்காக காத்திருப்பதால் துரிதமாய் கிளம்பி வந்து காரில் ஏறிய போது மதிவாணனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“எங்கடா கிளம்பிட்டீங்களா..”
“ஆமா மாமா..காரில் ஏறியாச்சு..”
“சரிடா..நாங்க இங்க ஊருல தியேட்டர் வந்தாச்சு..செம்ம கூட்டம்..”
“எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு மாமா.. **** படமும் சேர்ந்து ரிலீஸ் ஆகுது..மக்கள் இங்க வருவாங்களா தெரியல..டிரயிலர் பார்த்து ரொம்ப எதிர்பார்ப்போட வந்தவங்க..மூவி பார்த்து திருப்தி ஆகலேனா..எனக்கு நினைச்சாலே டென்ஷனா இருக்கு மாமா..”
“டேய்..முதல்ல நீ அமைதியாகு..ஏண்டா இவ்வளவு டென்ஷன் ஆகுற..யாரு படம் ரிலீஸான என்ன..!! நியூட்ரல் ஃபேன்ஸ் எவ்வளவோ இருக்காங்க..கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்..நீ மனச போட்டு குழப்பிக்காத போ..ஆல் த பெஸ்ட்..எல்லாரும் இங்க படம் பார்க்கிற ஆர்வத்தில் இருக்காங்க..பார்த்துட்டு வந்ததும் பேச சொல்றேன்..சரியா..”
என்று கூறி வைத்துவிட அலைபேசியை பாக்கெட்டில் வைத்து சீட்டில் தலை சாய்த்தவன் மனக்கண்ணில் ஒரு வருடம் முன் நிகழ்ந்தவை படமாய் விரிந்தது.
***
தவரூபன் வீட்டில்..
அந்த பெரிய அரண்மனை போன்ற வீட்டின் முகப்பறையில் அமர்ந்திருந்தனர் உதய்யும் உதயாவும்..!!
தவரூபனின் மனைவி இவர்களை வரவேற்று அமர வைத்து அவர்களுக்கு காஃபி, ஸ்னெக்ஸோடு உபசரித்து உள்ளே சென்றிருக்க எதற்காக வர சொன்னார் என்று தெரியாமல் குழப்பமும் தவிப்பும் போட்டியிட அவருக்காக காத்திருந்தனர்.
“எனக்கு படபடப்பா இருக்குடி…சரியா சொல்லு..ஃபோன்ல சர் என்ன சொன்னாங்க..”
என்று கேட்க,
“அட ஆண்டவா..இத்தோட எத்தனை வாட்டி தான் கேட்பீங்க.. ‘உன் புருஷனுட்ட நான் ஒரு விசயம் பேசணும்..அவனும் நீயும் நாளைக்கு என்னை வீட்டில் வந்து மீட் பண்ணுங்கன்னு’ சொல்லி பட்டுன்னு வைச்சிட்டார்..அவ்வளவு தான்..”
என்க,
“என்ன விஷயமா இருக்கும்..?? ஒருவேள மறுபடியும் என்னை அவரோட வேலையில் சேர்த்துக்க தான் கூப்பிட்டு இருப்பாரோ..என் மேல கோபம் போயிருக்குமா..”
“தெரியலையே..அப்படி கூப்பிட்டால் என்ன சொல்வீங்க உதய்..”
“கண்டிப்பா..மறுக்க மாட்டேன் தான்..ஆனால் மறுபடியும் அஸிஸ்டென் டைரக்டர்னு முதல்ல இருந்து ஆரம்பிக்கிறது..எவ்வளவு தூரம் சாத்தியம் தெரியல..”
இவர்கள் மெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது தவரூபன் வரவும் அனிச்சையாய் இருவரும் எழுந்து நின்றனர்.
“உட்காருங்க..” என்று பொதுவாய் சொன்னவர் உதய்யை கண்டுக் கொள்ளாமல் உதயாவை பார்த்து,
“ரொம்ப நேரம் காக்க வைச்சிட்டேனோ..”
என்று சொல்லவும்,
“இல்லங்க சர்..அதெல்லாம் ஒன்னுமில்ல..”
என்று அவளும் சொல்ல அவரோ தொடர்ந்து அவள் வேலை குறித்தும் அவர்கள் நிறுவனம் குறித்தும் பேசிக் கொண்டிருக்க பார்வையாளராய் அமர்ந்திருந்தவன் தானே பேசாதவரை அவர் தன் பக்கம் திரும்ப போறது இல்லை என்பதனை உணர்ந்து,
“சார்..சார்..”
என்று அழைக்க பார்வையை அவனிடம் நகர்த்தினார்.
“என்னுட்ட பேசவே மாட்டீங்களா..நான் பண்ணது தப்பு தான் சர்..அதுக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்..உங்களோட வெறுப்பை என்னால தாங்க முடியல சர்..”
“பேச்சு தான் ம்மா இப்படி இருக்கும்..ஆனால் செயலில் அதை காட்ட மாட்டான்..”
என்று உதயாவிடம் அவர் சொல்ல,
“ஏன் சர் அப்படி சொல்றீங்க..”
என்று அவனே கேட்க,
“நான் போடான்னு சொன்னதும் விட்டது தொல்லைனு போனவன்..திரும்பி கூட என்னை பார்க்கல..இப்ப நானா கூப்பிடுற வரை..எவன் எவன் ஆபிஸ் வாசலிலோ கிடையா கிடந்தான்..ஆனால் என்னிடம் மட்டும் நல்லா ரோஷம் பார்ப்பான்..இவனை வேற எப்படி சொல்வேன்..நீயே சொல்லு..”
என்று மீண்டும் அவர் உதயாவிடமே பேச,
“என்னாடா இது..” என்று திருதிருத்தாள் உதயா.
“நான் வந்தேன் சர்..நீங்க தான் அவாய்ட் பண்ணீங்க..மேலும் மேலும் உங்களை தொந்தரவு பண்ண வேண்டாமேன்னு ஒதுங்கி போனேன்..நம்புங்க சர்..இப்ப கூட ‘ம்ம்’நு சொல்லுங்க..நான் பழைய படி உங்களிடம் வேலைக்கு வந்திடுவேன்..”
“அதெல்லாம் வேண்டியது இல்ல..நான் கூப்பிட்ட போது நீ போனேல்ல..இனி உன்னை எனக்கு அஸிஸ்டா வைச்சிக்க எனக்கு விருப்பம் இல்ல..”
என்று நேரடியாகவே அவர் தாக்க அதில் காயப்பட்டவன் அமைதியாய் தலை குனிந்து அமர உதயா தாங்க முடியாமல்,
“அப்புறம்..எதுக்கு சார் வர சொன்னீங்க…எதுவும் இல்லைன்னா நாங்க கிளம்புறோம்..”
என்று சற்று வேகமாய் கேட்டுவிட அவர் புருவங்கள் உயர்ந்து உதடுகள் லேசாய் சிரிப்பில் வளைந்தது.
“வேற ஒன்னும் இல்ல..இதோ இதுல அவன் சைன் வேணும்..பண்ணிட்டு தாராளமா கிளம்பலாம்..”
என்று ஒரு கோப்பினை அவன் புறம் வைக்க என்ன என்று புரியாமல் அதனை எடுத்து பார்த்தவன் உறைந்து போனான்.
பேச மறந்தவனாய் அதனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த கணவன் முகத்தை பார்த்தபின் தானும் அது என்னவென்று அருகில் சென்று படித்து பார்க்க கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
அது தவரூபனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் உதய்யின் படத்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தப் பத்திரம்..!!
“சார்..”
என்று அதிர்ச்சி விலகாத குரலில் அவன் அழைக்க குறுநகை புரிந்த தவரூபன்,
“தேங்க்ஸ் எல்லாம் சொல்லிடாத..நான் ஒன்னும் உனக்கு ஃபேவர் பண்ணல..என் ப்ரோடெக்ஷனில் எப்பவும் தரமான படத்தை மட்டும் தான் எடுப்பேன்..நான் எதிர்பார்க்கிறா மாதிரியான படம் உன்னால எடுக்க முடியும்னு எனக்கு தோனுது..அதனால உனக்கு இந்த வாய்ப்பு..அதை யூஸ் பண்ணி ஜெயிச்சு காட்டுவது உன்னோட சாமர்த்தியம்..”
என்று அவர் அன்று கூறியது அசரீரியாய் இன்று அவன் காதில் ஒலிக்க அந்நேரம்,
“உதய்..இறங்குங்க..”
என்று உதயா தோளை குலுக்கவும் தான் நினைவு மீண்டவன் திரையரங்கம் வந்துவிட்டத்தை உணர்ந்து கதவை திறந்து இறங்கினான்.
சென்னையின் மிகவும் பிரபலமான திரையரங்கம் அது..உதய் இங்கு எத்தனையோ படங்களை எண்ணில் அடங்கா முறை பார்த்திருக்கிறான்.ரசிகனாய் இரசித்திருக்கிறான்.தன் படமும் ஒரு நாள் இங்கே வெளியாக வேண்டும் என்ற ஏக்கத்தோடு பார்த்து நின்றிருக்கிறான்.
அவன் ஏக்கம் தீரும் வகையில் இன்று அவன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி..!! பல விருதுகள் பெற்று இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குநர் படத்தின் அருகே அவன் படத்தின் கட் அவுட்டும் கம்பீரமாய் நிற்க அதனை பார்த்து நின்றவனின் உடலில் மெல்லிய சிலிர்ப்பு..!!
படத்தின் கதாநாயகனும் நாயகியும் தயாரிப்பாளரான தவரூபன் இன்னும் பல முக்கியஸ்தர்களும் முதல் சில வரிசையில் படத்தினை காண அமர்ந்தனர்.எல்லாருக்குமே அதே பதட்டமும் படபடப்பும் இருந்தது.மக்களுக்கு பிடிக்க வேண்டுமே என்ற தவிப்பு அவர்கள் அனைவரின் மனதிலுமே இருந்தது.
படம் தொடங்க உதய் தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியின் கையோடு கைக்கோர்த்துக் கொண்டு ஆழமாய் இழுத்துவிட்ட மூச்சோடு அடுத்த மூன்று மணி நேரப்பொழுதினை கடக்க காத்திருந்தான்.
படத்தொகுப்பிற்காகவும் அதன் பின்னமும் கூட எத்தனையோ முறை படத்தை பார்த்துவிட்டான்.ஆனால் இன்று அவன் கவனம் படத்தைவிட அதனை பார்க்கும் மக்கள் மீதே இருந்தது.ஒவ்வொரு காட்சிகளுக்கும் மக்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கிறது என்பதில் தான் அவன் கவனம் முழுவதும் இருந்தது.
அவர்கள் சிரிக்கும்போது, கைத்தட்டும் போது, பரபரப்பான காட்சிகளில் பதற்றத்தில் திட்டும் போது, விசில் அடித்து இரசிக்கும்போது என்று இரசிகர்களின் ஒவ்வொரு அசைவிற்கும் அவன் உள்ளம் பல்வேறு உணர்வுகளில் சிக்கி தவித்தது.
இடைவேளையில் இருந்தே வெவ்வேறு மாவட்டங்களில் இருந்த அவர்கள் படகுழுவினர்கள் படத்திற்கான பாசிடிவ் ரெஸ்பான்ஸ் பற்றி அலைப்பேசியில் அழைத்துக் சொல்லிக் கொண்டிருக்க படத்தின் இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க எதிர்பார்ப்போடு காத்திருந்தான்.
படம் முடிந்த நொடியில் இருந்து சடசடவென பெய்யும் மழைப்போல் கைத்தட்டுகள் அரங்கம் முழுவதை அதிரச் செய்தது.மக்களின் விசில் சத்தங்களும் ஆராவாரமும் அவர்கள் செவிப்பறையை கிழிக்க இதைவிட ஒரு கலைஞனுக்கு வேறென்ன தேவை..!!! அவனுக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரம் இந்த கைத்தட்டல்கள் தானே..!!
ஒவ்வொரு படைப்பாளிக்கும் விருதுகள் பல தராத கௌரவத்தையும் பெருமையும் ரசிகனின் பாராட்டும் கைத்தட்டலுமே அள்ளி சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
ஒரு படைப்பாளியின் வெற்றி என்பது இரசிகனை சார்ந்தே இருக்கும்..!! அவனுக்கு கிடைக்கும் பாராட்டு ஒரு வார்த்தையாக இருந்தாலும் அவன்தம் உள்ளம் அடையும் உவகையை சொல்ல அளவுகள் இல்லை…!!!
படம் முடிந்து திரையில்,
‘A flim by udhaykumar..’
என்ற வந்தபோது ஒலிக்க தொடங்கிய கைதட்டலினால் ஸ்தம்பித்த நிலையில் அமர்ந்திருந்தவன் காதுகள் சில நிமிடங்களுக்கு அதனை தவிர வேறு எதனையும் ஏற்கவில்லை.
முதல் முதலில் கோடம்பாக்கத்தில் அடியெடுத்து வைத்த ஞாபகம்..!! இயக்குநர்களிடம் வேலைக்கு சேர அவர்கள் அலுவலங்களில் காத்திருந்த ஞாபகம்..!!
தவரூபனின் உதவி இயக்குநராய் அலைந்து திரிந்த ஞாபகம்..!! தயாரிப்பாளர்கள் பலரால் அவமதிக்கப்பட்ட ஞாபகம்..!! படப்பிடிப்பு தொடங்கிய பின்பும் எதிர்க்கொண்ட இன்னல்களின் ஞாபகம்..!! என அனைத்தும் அவன் எண்ணத்தில் வலம்வர அப்படியே அமர்ந்திருந்தவனை முதலில் சுதாரிக்க செய்தது உதயா தான்.
கோர்த்திருந்த விரல்களை மடக்கி அழுத்தியவள்,
“யூ டிட் இட் உதய்..” என்று கண்கள் கலங்க தழுதழுப்போடு சொல்ல அவள் முகம் நோக்கிய அவன் கண்களும் சிறிது பனிக்கவே செய்தது கூடவே உதடுகளில் ஓர் அழகான புன்னகையும்..!!
அவர்கள் குழுவினர் ஒருவருகொருவர் வாழ்த்திக் கொண்டனர்.தவரூபன் உதய்யின் தோள்களை பற்றி, “என் நம்பிக்கையை காப்பாத்திட்ட உதய்…குருவை மிஞ்சிய ஷிஷ்யன் நீ..”என்று சந்தோஷமாய் கூறினார்.
மகனிற்கு கிடைத்த பாராட்டுகளில் பெற்றோர்களின் மனம் குளிர்ந்துபோக பெருமையோடு மகனை அணைத்துக் கொண்டனர்.
வெண்பாவிடம் இருந்து அழைப்பு வரவும் வேகமாய் ஏற்றவன்,
“அக்கா..” என்று சந்தோஷமாய் கூப்பிட்டான்.
“டேய் தம்பி…அசத்திட்ட போ..சந்தோஷத்தில தலை கால் புரியல..எவ்வளவு அருமையா எடுத்திருக்க தெரியுமா..!! கடவுளே..என் தம்பி..!! என் தம்பி..! நு பெருமையா கத்தனும் போல இருக்கு..உங்க மாமா அப்படியே பிடிச்சு வைச்சா மாதிரி உட்கார்ந்து இருக்கார்..அவருக்கு பேச்சே வரலை..பிரம்மிச்சு போயிட்டார்..இங்க எல்லாரும் அப்படி பாராட்டுறாங்க உதய்..படம் வெற்றி அடைஞ்சா முருகனுக்கு காவடி எடுக்கிறதா உங்க மாமா வேண்டியிருந்தார்..போறப்போக்கை பார்த்தால் வேண்டுதலை நிறைவேறிடலாம் போல..நீ வேணாப்பார்..இன்னும் நிறைய நாள் படம் தியேட்டரில் நின்னு காட்டும்..”
ஆராவாரமாய் மூச்சுவிடாமல் வெண்பா பேச மறுமுனையில் உதய்யின் முகம் பெரிதாய் ஒரு சிரிப்பில் மலர்ந்தது.வெண்பாவை தொடர்ந்து குடும்பம் மொத்தமும் பாராட்டியது.
அதே சமயம் உதயாவை அழைத்திருந்த ஜெகன்,
“ஹே..என்ன உதயா..படம் முடிஞ்சுதா..என்னாச்சு..இங்க பார்க்கவும் முடியாமல்..என்ன நடக்குதுனும் தெரியாமல் துப்பாக்கி முனைல நிற்கிறா மாதிரி டென்ஷன்ல உட்கார்ந்திருக்கேன்…”
என்று ஜெய்ப்பூரில் இருந்து அவன் பேச குதூகலத்தோடு அனைத்தையும் கூறினாள் உதயா..
வெளியே ஊடக நண்பர்கள் மக்களிடம் கருத்துக் கேட்க கையில் மைக்கோடு காத்திருக்க முக்கால் சதவீத மக்கள் பாராட்டுகளை குவித்தனர்.சில ரசிகர்கள் உதய்யை அடையாளங்கண்டு வாழ்த்தி செல்ல அனைத்தையும் சிரிப்போடு ஏற்றுக் கொண்டான் உதய்.
செந்தில்நாதன்,சரண்யா,உதயா மூவரையும் வழியனுப்பி வைத்தப்பின்பு அடுதடுத்து காட்சிகளுக்கும் இன்னும் திரைதுறையின் முக்கிய பிரமூகர்களோடும் விமர்சகர்களோடும் பிஸியாகி விட்டவன் மீண்டும் வீடு திரும்பியபோது நேரம் நல்லிரவை தாண்டியிருந்தது.
பெல் அடிக்காமல் உதயாவின் எண்ணிற்கு அழைக்கவும் முதல் ரிங்கிலே அழைப்பு ஏற்கப்பட அவன் வெளியே நிற்பதாய் கூறவும் உடனே வந்து கதவை திறந்தாள்.
அலைச்சலினால் விளைந்த களைப்பையும் மீறி அவன் முகம் ஒரு தனி தேஜஸில் ஜொலித்தது.
கதவை சாற்றிவிட்டு ஷூவை கலட்டியபடி,
“தூங்கலையா நீ..”
என்று கேட்க,
“நீங்க வராமலா..?? அத்தையும் மாமாவும் கூட இவ்வளவு நேரம் காத்திருந்து இப்ப தான் தூங்க போனாங்க..”
என்று கூறிவிட்டு திரும்பி உள்ளே சென்றவளை அவள் எதிர்பாராத நேரத்தில் இடுப்பை பற்றி அருகில் இழுக்க அவன் மேல் மோதி,
“உதய்..” என்று திகைப்போடு நிமிர்ந்தவள் நெற்றியோடு நெற்றி முட்டி,
“ஒரு சூப்பர் நியூஸ் இருக்கு..என்ன சொல்லு பாப்போம்..”
என்று உற்சாகமாய் கேட்க மலர்ந்த புன்னகையோடு,
“என்ன..” என்று கேட்டவளிடம்,
“இன்னைக்கு ரிலீஸான அஞ்சு படத்துல நம்ம படம் தான் டாப்..!! படம் கன்ஃபர்ம் ஹிட்னு அறிவிச்சிட்டாங்க..”
என்று அவன் கூற அப்பவும் அவள் முகத்தில் அதே புன்னகை தான்..!!
“என்னடி..சப்ரைஸாவேன்னு நினைச்சேன்..நோ ரியாக்ஷனா..”
“எதிர்பாராத விசயத்தை கேட்டா தானே ஆச்சரியம் ஆவாங்க..எனக்கு படம் ஹிட்டாகும்னு எப்பவோ தெரியுமே..!!!”
என்று உதட்டை சுளித்து அபிநயம் பிடித்தவளின் பாவனையில் கவரப்பட்டவனாய் சுளித்த உதட்டினை சுவைப்பார்த்த பின்பே விலகினான்.
அதரங்களுக்கு ஈடாய் அவளின் அழகு வதனமும் சிவந்துபோக தேங்கிய குறுநகையோடு,
“உங்களை..” என்று போலியாய் முறைத்து பின்,
“போய் ரெஃப்ரெஸ் ஆகிட்டுவாங்க..இன்னைக்கு இருந்த அலைச்சலில் சாப்பிட்டு இருக்க மாட்டீங்களே..இப்ப சாப்பிடுறீங்களா..”
என்று கேட்க,
“ம்ம்ம்..ஆனா எனக்கு ஸ்ட்ராங்-ஆ சப்பாத்தி தான் வேணும்..”
என்று விஷமமாய் கூறியவனின் முதுகிலே ஒன்று வைத்தாள்.
சிரிப்போடு குளித்துவிட்டு வந்தவனுக்கு அவள் உணவு பறிமாறிக் கொண்டே,
“காலையில் இருந்து ஃபோன் மேல ஃபோன்..ஒரே பாராட்டுகள் தான்..!! சொந்தமே வேணானு தூக்கி போட்டவங்க எல்லாம் மாமா மச்சான்னு சொல்லி பேசுறாங்களாம்…இவங்க எல்லாம் நிமிர்ந்து பார்க்கிற உயரத்திற்கு என் மவன் வருவான்னு நம்பினேன்..என் நம்பிக்கை நிறைவேறிடுச்சுன்னு மாமா பெருமையா சொல்லிட்டே இருந்தாங்க..எல்லாருக்கும் ரொம்ப ஹேப்பி..அப்பாவுக்கு உங்களை நேரில் பார்த்து வாழ்த்தணுமாம்..சென்னை வரேன்னு நிற்கவும் மதிண்ணா நாளைக்கு எல்லாரும் வரோம்னு சொன்னாங்க…நாங்க சேர்ந்து ஒருவாட்டி நாளைக்கும் படம் பார்க்கலாம்னு இருக்கோமே..”
அவள் நடந்தவையை பூரிப்போடு விவரிக்க அதனை உதட்டோர சிரிப்போடு கேட்டுக் கொண்டவன் சந்தோஷத்தில் மீனாய் துள்ளி குதிக்கும் அவள் கருவிழியை இரசித்தானா..? இல்லை மூடாமல் பேசிக்கொண்டே இருக்கும் அந்த உதடுகளை இரசித்தானா..? இல்லை அவள் பாவனையை இரசித்தானா..? தெரியவில்லை.ஆனால் அவளுள்ளே மூழ்கி விடுபவன் போல் கண்கள் அவளை விட்டு எங்கும் நகரவில்லை.
அவன் பார்வை அவளை ஏதோ செய்ய மூச்சு விடாமல் பேசியவளுக்கு வார்த்தைகள் தடுமாற ஒரு கட்டத்தில் அதனை தாள முடியாமல்,
“போதும்..இப்படி பார்த்தால் என்ன அர்த்தம்..”
என்று அதட்ட முயன்று குழைந்து ஒலித்தது அவள் குரல்..!!
சாப்பிட்டு முடித்திருந்தவன் கைகழுவிய பின் நாற்காலியை அவள் பக்கம் திரும்பிப் போட்டு அமர்ந்து,
“தெரியல..ஆனால் கண்ணை எடுக்கவே மனசு இல்ல..அப்படியே பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு..உனக்குள்ள ஊடுருவிட மாட்டோமான்னு இருக்கு..இந்த நாள் முடியாமல் அப்படியே நீண்டுட்டே போகாதான்னு இருக்கு..”
என்று நெஞ்சம் நிறைந்த காதலோடு கண்பார்த்து சொல்ல,
சிறகே இல்லாமல் வானில் பறந்தாலும்,
“இதெல்லாம் நல்லா பேசுங்க..ஆனால் ஒரு தடவையாவது லவ் சொல்லியிருப்பீங்களா..”
என்று அவள் நொடித்துக் கொள்ள அதனை கேட்டு குபீரென சிரித்தான்.
“அய்யோ நடுராத்திரியில் இப்படி சிரிக்காதீங்க..அத்தையும் மாமாவும் முழிச்சிட போறாங்க..”
என்று அவள் கூறியதை கண்டுக் கொள்ளாமல் சிரித்து ஓய்ந்து,
“ஏனுங்க அம்மணி..ஐ லவ் யூ சொன்னால் தான் காதல் இருக்குனு ஒத்துக்குவீங்களா..”
என்று கிண்டலாய் கேட்டவனிடம்
“ஏன் சொல்றதில் தான் என்ன தப்பு..உங்களுக்கு தெரியுமா..உங்களை காதல் வசனம் பேச வைக்கிறேன்னு சபதம் எல்லாம் எடுத்தேன்..ஆனால் இங்க ஒரு ‘ஐ லவ் யூ’ கூட இல்ல..”
என குறைப்பட்டுக் கொள்ள,
“இது எப்போ..”
என்றான் ஆச்சரியமாய்..
“ம்ம்ம்..நம்ம ஃபர்ஸ்ட் நைட் அப்போ..”
என்று முறைப்போடே அவள் கூறவும் சிரித்தவன் அவளை இழுத்து தன் மடியில் அமர்ந்திக் கொண்டு,
“இப்ப வசனம் என்ன..பாட்டாவே பாடிடலாம்..”
என்றவன் ஆர்வமாய் பார்த்த மனைவியை தன்னோடு இறுக்கமாய் பிணைத்துக் கொண்டு மெல்லிய குரலில் அனுபவித்து பாடினான்.
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம்
இதுவரை யாரும் கண்டதில்லை
நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததனால்.
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்….”
* முற்றும் *