“சத்யா ரிஷி வந்துட்டாங்க.”
“ஓகே சாதனா பாய்.” சத்யா அழைப்பை துண்டிக்க…. சாதனா கதவை திறந்தாள்.
நேரம் அப்போதே இரவு எட்டு மணி ஆகி இருந்தது. ரிஷிக்கு சாதனாவை பார்க்கவே சங்கடமாக இருந்தது. ரொம்ப நேரம் அவளைத் தனிமையில் விட்டு விட்டோம் என்று புரிந்தது. அவள் எதாவது கேட்பாள் என்று நினைத்தால்… அவள் எதுவுமே கேட்கவில்லை. கையில் புத்தகத்தோடு அமர்ந்துவிட்டாள்.
ரிஷி குளியல் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான். சாதனா ஒரு வார்த்தை கூடப் படிக்கவில்லை… சும்மா படிப்பது போல் உட்கார்ந்து இருந்தாள்.
இப்படி என்னைத் தனியா விட்டதுக்கு ஊருக்காவது அனுப்பி இருக்கலாமே என மனதிற்குள் கொந்தளித்தபடி இருந்தாள்.
குளித்துவிட்டு வந்த ரிஷியை சாதனா திரும்பி கூடப் பார்க்கவில்லை. வேறு உடை மாற்றிவிட்டு வந்தவன், அவள் கையில் இருந்த புத்தகத்தை எடுத்தான்.
“சாரி, நான் சீக்கிரம் வரணும்னு நினைச்சு தான் போனேன். ஆனா ரொம்ப நாள் கழிச்சு வந்ததுனால நிறையப் பேரை பார்க்க வேண்டுயது இருந்தது. அதுதான் லேட் ஆகிடுச்சு. சென்னை டிராபிக் வேற… நான் ஆறரை மணிக்கு கிளம்பி இப்பதான் வந்திருக்கேன்.”
“உங்களுக்குத் தான் இங்க இவ்வளவு வேலை இருக்கே… என்னை அத்தை கூட ஊருக்கு அனுப்பி இருக்கலாம். நீங்களாவது ப்ரீயா இருந்திருப்பீங்க.” சாதனா பட்டும் படாமல் பேச…. ரிஷிக்கு அவளின் கோபம் புரிந்தது.
[the_ad id=”6605″]“சாரி இனிமே இப்படி நடக்காம பார்த்துகிறேன். நீ எழுந்து கிளம்பு நாம வெளிய போய்ச் சாப்டிட்டு வரலாம்.” ரிஷி அழைக்க… சாதனா மறுக்கவே நினைத்தாள். ஆனால் காலையில் இருந்து அறைக்குள் தனியாக இருந்தது மண்டையைச் சூடாக்கி இருந்தது. இப்படியே இருந்தால் எரிச்சல் இன்னும் அதிகமாகும், அதையும் ரிஷியிடம் தான் காட்டுவோம் என நினைத்தவள், எழுந்து வேறு உடை அணிந்து கிளம்பினாள்.
நீல நிறத்தில் சுடிதார் அணிந்து வந்தவளை பார்த்த ரிஷிக்குக் காலையில் நேகா சொன்னது தான் நியாபகம் வந்தது. நாளைக்கு இரவு வேறு ஒரு பார்டி இருக்கிறது. அதற்குள் எதாவது செய்ய வேண்டும் என நினைத்தான்.
இருவரும் வேறு ஒரு உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டனர்.
“சாதனா, உனக்கு எப்ப காலேஜ் போகணும்?”
“எனக்குப் பரிட்சைக்கு படிக்கிறதுக்காக லீவ் தான். இனி பரீட்சை எழுத தான் போகணும். அதுக்கு இன்னும் மூன்னு வாரம் இருக்கு.”
“அப்ப இன்னும் ரெண்டு நாள் இங்க இருந்திட்டு போகலாமா…”
“ஐயோ ! இன்னும் ரெண்டு நாள் தனியா இந்த ரூம்லயே இருக்கனுமா…” என நினைத்து பயந்தவள், வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளாமல்…. சரி என்றாள்.
ரிஷி யாரையோ செல்லில் அழைத்துப் பேசினான். “சிமி, நீ இப்ப ப்ரீயா….”
“….”
“ஓகே, இன்னும் ஒன் அவர்ல அங்க இருப்பேன்.”
திரும்பவும் எங்க போகப் போறான். தனியா விட்டுட்டு போயிடுவானோ எனச் சாதனா நினைக்க… ரிஷி அவளையும் அழைத்துக்கொண்டு தான் சென்றான்.
பெசன்ட் நகரில் இருந்த ஒரு பொட்டிக் சென்றனர். கடை முன்புறமாகப் பூட்டி இருந்தாலும், கடையின் பக்கவாட்டில் வீடும் இருந்ததால்…. அந்த வழியாகக் கடைக்குள் சென்றனர்.
“ஹாய் ரிஷி, ஹாய் சாதனா வெல்கம்…” என்றபடி சிமி அவர்களை வரவேற்று கடைக்குள் அழைத்துச் சென்றாள்.
“ஹாய் சிமி, எப்படி இருக்க? மாத்யு இல்லையா…”
“அவர் மும்பை போய் இருக்கார்… மெட்டிரியல் பர்சேஸ் பண்ண….”
அவர்கள் இருவரும் பேச…. இந்த நேரம் போய்க் கடைக்குக் கூடிட்டு வந்திருக்கானே… என்பது போல் சாதனா பார்த்தாள்.
“சாதனா, இவங்க சிமி டிரஸ் டிஸைனர். நிறையச் சினி ஸ்டார்ஸ்கு டிரஸ் டிசைன் பண்ணி தராங்க. இவங்க ஹஸ்பண்டும் டிரஸ் டிஸைனர் தான். எனக்கு அவர் தான் பண்றார்.” எனச் சாதனாவிடம் சொன்னவன், அதே போல் தன் மனைவியைச் சிமிக்கும் அறிமுகம் செய்தான்.
“சாரி உங்களை இந்த நேரத்திற்கு வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.” சாதனா சிமியிடம் சொல்ல….
“இல்லையில்லை…. நான் சாதாரணமா வேலை பார்க்கும் நேரமே இதுதான். சினி ஸ்டார்ஸ் எல்லாம் பகல்ல வர முடியாது இல்லையா… அவங்க இந்த டைம் தான் ப்ரீயா வருவாங்க.”
“பொட்டிக் பார்த்துக்க வேற ஆள் இருக்காங்க. வர்ற வி.ஐ.பி கஸ்டமர்ஸ் மட்டும் தான் நான் பார்ப்பேன்.”
சிமி சொன்னதைக் கேட்ட சாதனாவிற்கு இப்போது புரிந்து விட்டது. தனக்கு உடைகள் எடுக்கவே ரிஷி இங்கே அழைத்து வந்திருக்கிறான் என்று.
[the_ad id=”6605″]இப்போது தான் திருமணத்திற்காக நிறைய வாங்கி இருந்தாள்… அதனால் இப்போது எதற்கு என்பது போல் அவள் ரிஷியை பார்க்க…
அவள் பார்வையைப் புரிந்து கொண்ட ரிஷி “சாதனா உன் கிட்ட நிறைய டிரஸ்சஸ் இருக்கும். ஆனா இது உனக்கே உனக்குன்னு டிசைன் பண்றது. அதனால இன்னும் ரொம்ப ஸ்பெஷல்லா தெரிவ… ஜஸ்ட் ட்ரை இட்.” என்றான்.
“சாதனா உங்களுடைய உயரத்துக்கும், ஸ்லிம்மான உடம்புக்கும் நிறைய வரைடீஸ் டிசைன் பண்ணலாம். நான் டிஸைன் பண்ணது போட்டு பாருங்க. அப்புறம் நீங்களே வேற எங்கையும் போக மாட்டீங்க.” என்றாள் சிமி நம்பிக்கையாக.
“முதல்ல உங்களை அளவு எடுத்திடலாம்.” எனக் கையில் டேப்பும் மற்றும் குறித்துக்கொள்ளப் புத்தகத்துடன் வந்த சிமி அளவு எடுக்க ஆரம்பித்தாள்.
சாதனாவிற்கு த் தெரிந்து அவள் ஒரு இடத்தைக் கூட விடவில்லை…. கையில் மட்டுமே நாலு இடங்களில் அளவு எடுத்தாள்… பின் மற்றதை பற்றிக் கேட்க வேண்டுமா… காலின் பாத அளவு கூட எடுத்துக்கொண்டாள். அளவு எடுக்கவே இருபது நிமிடங்கள் ஆகி விட்டது.
பிறகு சிமி நிறைய ரகங்களில் இருந்த துணிகளைக் காண்பித்தாள். சாதனாவிற்கு அதைப் பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியவில்லை… நல்லவேளை சிமியே அவளுக்கு எந்தெந்த நிறங்கள் பொருந்தும் என எடுத்து வைக்க… அதிலிருந்து ரிஷியே தேர்ந்தெடுத்தான்.
“நாளைக்குப் பார்டிக்கு ஒரு டிரஸ் மட்டும் உடனே ரெடி பண்ணி வீட்டுக்கு அனுப்பிடு. நீயும் கண்டிப்பா வரணும். மேத்யு அதுக்குள்ளே வந்திடுவாரா…”
“ம்ம்… வந்திடுவார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கீர்த்திப் போன் பண்ணி இன்வைட் பண்ணா…”
“ஓகே… நாளைக்கு எட்டு மணிக்கு பார்ப்போம்.” என ரிஷி விடைபெற, சாதனாவும் சிமியிடம் சொல்லிக்கொண்டு வந்தாள்.
வரும் வழியில் ரிஷி சாதனாவிடம் மறுநாள் நடக்கவிருந்த விருந்து பற்றித் தெரிவித்தான்.
“நான் நாம அடுத்த முறை வரும் போது பார்துக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா பிரண்ட்ஸ் விடலை… அவங்க கொடுக்கிற பார்ட்டி. அதனால மறுக்க முடியலை…”
“அவங்க எல்லாம் யாரு?”
“அவங்க எல்லாம் வேற வேற பிசினஸ் பண்றவங்க. நாங்க எல்லாம் சேர்ந்து சில படங்கள் தயாரிச்சோம். அதுல பிரண்ட்ஸ் ஆகிட்டோம். அப்புறம் கொஞ்ச பேர் சினி பிரண்ட்ஸும் இருக்காங்க. நாளைக்கு நீ நேர்ல பார்க்கும் போது சொல்றேன்.”
[the_ad id=”6605″]திரும்ப இவர்கள் தங்கி இருந்த அறைக்கு வந்த போது நள்ளிரவுக்கும் மேல் ஆகிவிட்டது. வந்ததும் இருந்த அலுப்பில் படுத்து விட்டனர்.
சாதனா உடனே உறங்கி விட… ரிஷி உறங்கும் அவளையே பார்த்திருந்தான். ஏனோ இன்று அவள் மிகுந்த அமைதியாக இருப்பது போல் உணர்ந்தான்.
காலையில் கூட அவள் நேகாவை பற்றி அவனிடம் எதுவுமே கேட்கவில்லை… சாதனா மட்டும் எதாவது கேட்டிருந்தால்… ரிஷியும் வீம்புக்கு எதாவது சொல்லி இருப்பான் பிறகு சண்டை வந்திருக்கும்.
அவள் ஏன் எதுவும் கேட்கவில்லை என்று புரியவில்லை… ஆனால் அப்படி எதுவும் அவள் கேட்காமல் இருந்ததே… ரிஷியின் மனதிற்குச் சற்று இதமாக இருந்தது.
கைக்கு எட்டும் தூரத்தில் மனைவி இருந்தும், அவளை அவன் தொட நினைக்கவில்லை… வேண்டாம், ஏற்கனவே அவளை மனதளவில் நிறையக் காயப்படுத்தி விட்டோம். முதலில் அவளோடு பழகி அவளைப் புரிந்து கொள்வோம் என நினைத்தான்.
ரிஷி இப்போது தான் சரியான பாதையில் யோசிக்க ஆரம்பித்து இருந்தான்.