“டேய், அவ தூங்கிட்டாலாம் டா…. அவளே சொல்றா….” ஜோதி சிரித்துக்கொண்டே சொல்ல… சாதனா அவரை முறைத்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
“அப்படியா… அவ எதுக்கு ஏர்போர்ட் வந்தான்னு கேளுங்க.”
“ஏர்போர்ட் போனியா சாதனா…”
“ரிஷியை பார்க்கத்தான் போனேன். அவங்க என்னைப் பார்த்தா திட்டுவாங்கன்னு தள்ளி நின்னு பார்த்திட்டு மட்டும் வந்திட்டேன்.” சாதனா ஜோதியிடம் சொன்னது ரிஷிக்கும் கேட்டது. ஆனால் அப்போது அவனுக்குக் கோபம் தான் வந்தது.
“உங்க மருமகளுக்கு விளையாட நேரம் காலம் இல்லையா…. என்னை டென்ஷன் பண்ணிட்டா… இருக்கட்டும், அவளுக்கு வந்து வச்சிக்கிறேன்.” ரிஷி சொல்ல… அதை அப்படியே ஜோதி சாதனாவிடம் சொல்ல… அவள் ஒழுங்கு காட்டினாள். அவன் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்ற தைரியம் தான்.
மறுநாள் விமானத்தில் ஏறி அமரும் வரை ரிஷிக்கு சாதனாவை பற்றி நினைக்கக் கூட நேரம் இல்லை…. அவன் லண்டன் செல்வதற்கான வேலைகள் மட்டுமே நினைவிருக்க… அதற்குத் தேவையான ஆவணங்களைச் சரி பார்த்து எடுத்து வைத்தான்.
மறுநாள் விமானத்தில் ஏறி அமர்ந்த ரிஷி விமானம் கிளம்ப ஆரம்பித்த சிறிது நேரத்திற்கெல்லாம் நன்றாக உறங்கி விட்டான். அவன் காலை உணவை கூட எடுத்துக்கொள்ளவில்லை…. அவன் உறங்கியதால்… விமானப் பணிப்பெண்ணும் பிறகு கொடுப்போம் என எடுத்து சென்று விட்டாள்.
முன் மதிய பொழுதில் எழுந்தவன், முகம் துடைத்து உணவு வரவழைத்து சாப்பிட்டான். பிறகு இருக்கைக்கு முன்பு இருந்த திரையில், ஆங்கிலப்படங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தான். பார்வை திரையில் இருந்தாலும் கவனம் அதில் இல்லை…. சாதனாவை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான்.
அவளிடம் ஒழுங்காகச் சொல்லிக்கொண்டு வந்திருக்கலாமோ என இப்போது தோன்றியது. நேற்று விமான நிலையம் வரை வந்துவிட்டுத் தன்னை அவள் பார்க்காமலே சென்றது வேறு கொஞ்சம் கஷ்ட்டமாக இருக்க…. அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தான்.
[the_ad id=”6605″]லண்டனில் விமானம் தரை இறங்கிய போது… அங்கே அப்போது தான் மாலை நேரம். அவனுக்கென்று ஒரு வீட்டையே ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்திருப்பதால்… நேராக அங்கேயே சென்றான். சமையலுக்கு ஆள் ஏஜன்சியில் சொல்லியிருப்பதால் கவலை இல்லை… ரிஷிக்குக் கொஞ்சம் சமையல் தெரியும். அதனால் வருபவன் எப்படி இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.
வீட்டிற்குச் சென்றதும் குளித்து உடை மாற்றியவன், சமையல் ஆள் செய்தது விட்டுச் சென்றிருந்த உணவை எடுத்து சுட வைத்து சாப்பிட்டான். பாரு டா ரிஷி உன் நிலைமையை… இதே நம்ம ஊருன்னா இந்நேரம் நமக்குச் சுடச் சுட எல்லாம் வந்திருக்கும் என நினைத்துச் சிரித்துக்கொண்டான். வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வதால் இதெல்லாம் பழக்கம் தான்.
சாப்பிட்டதும் பயண அலுப்பில் நன்றாக உறங்கியும் விட்டான். காலை எப்போதும் எழுந்து கொள்ளும் போது… முதலில் அருகில் படுத்திருக்கும் சாதனாவின் முகத்தில் தான் விழிப்பான். இன்றும் அது போல் பக்கத்தில் பார்த்தவனுக்கு, பிறகே இருக்கும் இடம் நினைவு வந்தது.
காலை நேரம் எப்போதும் ரிஷி தான் அவளை எழுப்பி விடுவான். மேடம் பெரிதாக அலாரம் எல்லாம் வைத்துக் கொண்டு படுத்தாலும், அது எல்லாம் அவள் காதிலேயே விழாது. அலாரம் சத்தம் கேட்டு எழும் ரிஷி தான் அவளை எழுப்பி விடுவான். பத்து தடவையாவது பிடித்து உலுக்கினால் தான் எழுவாள்.
காலை வெகு நேரம் உறங்கி இருப்பாளோ…. பரீட்சை வேறு வருகிறதே என நினைத்தவன், உடனே தன் அன்னையை அழைத்தான்.
நேற்று விமான நிலையத்தில் இருந்தே அவன் அழைத்துப் பேசி இருந்ததால்…. இப்போது திரும்ப அழைத்ததும் ஜோதிக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியூர் சென்றால் அவன் அப்படி எல்லாம் தினமும் அழைத்து பேசும் ரகமில்லை. அப்படி அவராகவே அழைத்தாலும், உங்களுக்கு வேற வேலை இல்லையா என்பான்.
“சொல்லுடா ரிஷி…”
“தினமும் காலையில சாதனாவை கொஞ்சம் எழுப்பி விட்டுடுங்க மா…”
“இதைச் சொல்லத்தான் போன் பண்ணியா…”
“ஆமாம், அவ என்ன பண்றா?”
“படிச்சிட்டு இருக்கா…. அவகிட்ட கொடுக்கவா…”
“இல்லை, வேண்டாம் படிக்கட்டும். நான் பிறகு கூப்பிடுறேன். ” என வைத்து விட்டான்.
இந்தியாவிலும் லண்டனிலுமாகப் புதிதாகத் தொடங்கவிருந்த தொழிலை பற்றிய பேச்சு வார்த்தைக்கு வந்திருந்தான். அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை… அதிக நாட்கள் இழுக்கும்.
அவனுக்கு இங்கே உதவி செய்ய அந்த ஊர் ஆள் ஒருவன் இருந்தான். இரண்டு மூன்று நாட்கள் அலைச்சலில் சென்றுவிட…. நான்காம் நாள் சற்று ஓய்வாக இருந்தான்.
இதுவரை பெட்டியை கூடப் பிரித்து அடுக்கவில்லை… தினமும் அதிலிருந்தே உடைகளை மட்டும் எடுத்து அணிந்து கொண்டு இருந்தான். அன்று தான் பெட்டியை பிரித்து அடுக்கினான்.
அவன் உடைகளுக்கு நடுவில் சாதனா அவனுக்காகச் சென்னையில் வாங்கியிருந்த இரண்டு சட்டைகளும் இருந்தது. அவனிடம் நேரில் கொடுக்காமல் பெட்டியில் வைத்திருந்தாள். அதைப் பார்த்ததும் மனதிற்கு ரொம்பவே கஷ்ட்டமாகப் போய்விட்டது. தான் அவளை ரொம்பவும் மிரட்டி வைத்திருக்கிறோமோ எனத் தோன்றியது.
இரவு உணவை சூடு படுத்தி அருந்தியவன், கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். உறக்கமே வரவில்லை…. சாதனா பக்கத்து அறையில் படித்தாலும், இரவு படுக்க அவர்கள் அறைக்குத் தான் வருவாள்.
ஒரு நாள் அவள் வெகு நேரமாக வரவில்லை என்றதும், அவன் மடி கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ரிஷி எழுந்து சென்று பார்க்க… அவள் அங்கேயே உறங்கி இருந்தாள்.
சரி உறங்கட்டும் எனப் பெரிய விளக்கை அனைத்து விட்டு, இரவு விளக்கை போட்டு விட்டு வந்தான். ஆனால் திரும்ப ரிஷி விடியற்காலையில் பார்க்கும் போது… சாதனா அவனுக்கு அருகில் படுத்திருந்தாள். எப்போது இந்த அறைக்கு வந்து படுத்தாளோ அவனுக்குத் தெரியாது.
இப்போது அவனும் இல்லாததால் அவளைக் கீழே இருக்கும் அறையில் தான் தங்க சொல்லிவிட்டு வந்தான்.
இன்றைக்கு என்னவோ ரிஷிக்கு அதிகமாகச் சாதனாவின் நினைவாகவே இருந்தது. இன்று மட்டுமில்லை அவன் இங்கே வந்ததில் இருந்தே, அவள் நினைவாகத்தான் இருக்கிறான். பக்கத்தில் இருக்கும் போது தெரியவில்லை… விட்டு விலகி இருக்கும் போதுதான், அவள் தன் மனதிற்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள் எனப் புரிந்தது.
முதல் முறை அவளை நள்ளிரவில் சந்தித்ததில் இருந்து நினைத்துப் பார்த்தான். அவளோடு கூடல் கொண்ட இரவுகளும் நினைவு வந்து அவனை வாட்டியது. இரண்டே நாட்கள் என்றாலும் இனிமையான அனுபவம் அல்லவா… அவ்வளவு எளிதில் மறக்குமா…. இப்போதே அவள் வேண்டும் போல் தோன்றியது.
நினைவுகளின் தாக்கம் தாங்க முடியாமல்… படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.
[the_ad id=”6605″]
இருபத்திநாலு வருஷமா நான் இல்லாம நல்லா தான இருந்த… ஒரு மாசம் இருக்க முடியாதா எனச் சாதனாவை பார்த்து கேட்டவனே.. இப்போது அவளின் நினைவால் வாடுகிறான். இதுக்குத்தான் ரொம்பப் பேசக்கூடாது.
அலைபேசியில் அவளைப் புகைப்படம் எடுத்தது நினைவு வர அதை எடுத்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான். சாதனா அவன் அருகில் முகத்தில் புன்னகையுடன் அழகாக நின்றிருந்தாள். இருவருமே ஒருவருக்கொருவர் பொருத்தமான ஜோடி தான் அதில் குறையே சொல்ல முடியாது.
நீ மட்டும் அன்னைக்கு நைட் வரலைன்னா… நான் இப்படி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற நிலையே வந்திருக்காது என எத்தனை நாள் அவளிடம் கோபத்தைக் காட்டி இருப்பான்.
அப்படி அவள் மட்டும் வராமல் இருந்திருந்தால்… தன்னுடைய நிலையை நினைத்து பார்க்கவே முடியவில்லை… இன்னும் தன்னை நேகா எமற்றிக்கொண்டே இருந்திருப்பாள் என நினைத்தவனுக்கு இதுவரை மனதில் இருந்த இனிமை போய்…. மனம் கசக்க ஆரம்பித்தது.
வேண்டாம் அதை எல்லாம் நினைக்கவே வேண்டாம் என நினைத்தவன், செல்லில் சாதனாவை அழைத்தான்.
அன்று பரீட்சை என்பதால் சாதனா இரவு இரண்டு மணி நேரம் மட்டும் தான் உறங்கி இருந்தாள். அந்நேரம் ரிஷி அழைக்கவும் அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை…..
“ஹாய் ரிஷி, எப்படி இருக்கீங்க?”
“ம்ம்… நல்லா இருக்கேன். திட்ட நான் இல்லாம நீ ரொம்பச் சந்தோஷமா இருக்கியா….”
அவன் சொன்னதைக் கேட்ட சாதனாவிற்கு ச் சிரிப்பு வந்துவிட்டது.
“அப்படியெல்லாம் இல்லை…. நீங்க நாளைக்கே வந்தா கூட எனக்குச் சந்தோஷம் தான்.”
“இதெல்லாம் நல்லா பேசு…. ஒழுங்கா படிச்சியா… இன்னைக்குப் பரீட்சை நல்லா எழுதுவியா…”
“சூப்பரா எழுதிடுவேன் கவலைப்படாதீங்க.”
“சரி பரீட்சை நல்லா எழுது, வச்சிடவா…”
“ம்ம்….” என்ற சாதனாவிற்கு வைக்கவே மனம் இல்லை…. “ரிஷி எப்ப வருவீங்க?” என்றாள்.
[the_ad id=”6605″]
அவளின் குரலில் இருந்த ஏக்கம் ரிஷிக்கு நன்றாகப் புரிந்தது. அவனையும் மீறி அவனின் வாயில் இருந்து “சீக்கிரம் வரேன்.” என்ற வார்த்தை வெளி வந்தது.
செல்லை வைத்த பின்பு அவளிடம் இன்னும் நல்லா பேசி இருக்கலாமோ என ரிஷி நினைத்தான். பிறகு அவனே, வேண்டாம் அவளுக்குப் பரீட்சை படிக்கட்டும் என நினைத்தான். அவனுக்குக் குழைந்து எல்லாம் பேச வராது. அவனின் இயல்பே அதுதான்.
ரிஷியே அவளை அழைத்துப் பேசியது, அதுவும் மறக்காமல் அவள் பரிட்சையை நினைவு வைத்து வாழ்த்தியது, எல்லாம் நினைத்து சாதனா மனதளவில் பறந்து கொண்டு இருந்தாள். அடுத்த வாரம் உண்மையிலேயே விமானத்தில் பார்க்க போவதை அறியாமல்.