பகுதி – 21
சாதனாவிற்கு நள்ளிரவு வரை உறக்கம் வரவில்லை…. விமானத்திலும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதுவும் சின்னச் வாண்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடிக் கொண்டே இருந்தனர்.
நள்ளிரவுக்கு மேல் தான் எல்லோரும் அமைதியாக உறங்க ஆரம்பித்தனர். சாதனா கொண்டு வந்த பழங்களில் சிலது மட்டும் எடுத்து சாப்பிட்டாள். பிறகு அவளும் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து படுத்துக்கொண்டாள்.
எப்போது உறங்கினாளோ அவளுக்கே தெரியாது. ஒரு சிறுவனின் அழுகை சத்தம் கேட்டு தான் விழித்தாள். அவள் பக்கத்து இருக்கையில் யாரும் இல்லை…. நடைபாதையை விட்டு அடுத்து இருந்த இருக்கையில் இருந்த தம்பதிகளின் ஐந்துவயது சிறுவன் தான் அழுதது.
சாதனாவை பார்த்த அந்தப் பெண் “சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.” எனச் சங்கடமாகக் கூற….
“பரவாயில்லை இருக்கட்டும் சின்னப் பசங்கன்னா அப்படித்தான்.” என்றாள் சாதனா பெருந்தன்மையாக.
[the_ad id=”6605″]
இன்னும் சில மாதங்களில் அவளுடைய நிலையும் இப்படித்தானே இருக்கும். தான் எத்தனை பேரிடம் மன்னிப்பு கேட்க போகிறோமோ எனத் தன் குழந்தையைப் பற்றிய இனிய கற்பனையில் அவள் முகம் மலர்ந்தது.
கை கடிகாரத்தில் நேரத்தை பார்க்க… அப்போது லண்டன் நேரத்திற்கு அதிகாலை இரண்டு மணி. இன்னும் ஒரு மணி நேரத்தில் இறங்க வேண்டும். தனக்குத் தேவையானவற்றை ஒரு கவரில் எடுத்துக் கொண்டு ரெஸ்ட்ரூம் சென்றாள்.
பல் துலக்கி முகம் கழுவி துடைத்தவள், ஜீன்சுக்கு மேல் அணிந்திருந்த லாங் டாப்பை கழட்டிவிட்டு ஷார்ட் டாப் அணிந்து கொண்டு, கூந்தலை நன்றாக வாரி பின்னாமல் ஒரு கிளிப் மட்டும் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள். அதற்குள் வெளியே வரிசையில் ஆட்கள் நின்று கொண்டு இருந்தனர்.
தனது இருக்கையில் வந்து உட்கார்ந்ததும், முகத்திற்கு லேசாக ஒப்பனை செய்து…. உதட்டுச் சாயம் கொஞ்சமாகப் போட்டுக்கொண்டாள். ரிஷி அவளைப் பார்க்கும் போது… தான் அழுது வடியாமல் பிரெஷாக இருக்க வேண்டும் என நினைத்தாள்.
இன்னும் அந்தச் சிறுவன் தன் அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு தான் இருந்தான். சாதனா அவனிடம் பேர் என்ன எனக் கேட்க… அவன் அம்மா தான் “அமோக்.” எனப் பதில் சொன்னாள்.
“அமோக்… ஆன்டி கிட்ட வரியா…” சாதனா அழைக்க முதலில் மறுத்த சிறுவன், பிறகு என்ன நினைத்தானோ… அவன் இருக்கையை விட்டு இரங்கி அவளிடம் வந்தான்.
அவனைத் தன் பக்கத்து இருக்கையில் அமர வைத்த சாதனா அவனுக்காகக் கார்டூன், சேனல் தேடி வைத்து கொடுக்க…. முதலில் ஆவலாகப் பார்த்தவன், பிறகு அதை இதை என்று அங்கிருந்த ஒவ்வொன்றாக இழுக்க….
“நோ… அமோக். உனக்குச் சாக்லெட் பிடிக்குமா…” சாதனா கேட்க… அவள் சாக்லெட் கொடுக்கப் போகிறாள் என நினைத்து அமோக் வேகமாக ஆமாம் என்றான்.
“நீ எவ்வளவு சேட்டை பன்றியோ… அதை ஆன்டி கவுன்ட் பண்ணிட்டே இருப்பேன். அத்தனை நாள் உனக்குச் சாக்லெட் இல்லை….” சாதனா சொல்ல…. அமோக் திரும்பி அவன் பெற்றோரை பார்க்க… அவர்களும் ஆமாம் என ஆமோதிக்க… உடனே அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
அவன் சாதனாவை அடிக்க…. அதைப் பார்த்த அவன் பெற்றோர் பதற…. அவர்களைப் பார்த்து அமைதியாக இருக்கும் படி ஜாடை செய்த சாதனா… ஒன்று இரண்டு என்று எண்ணத் தொடங்க…. சிறுவன் அவளை அடிப்பதை நிறுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டான்.
“நீ ஆன்டியை அடிச்சது தப்பு தான… சாரி கேளு… அப்ப திரும்ப ஜீரோவுல இருந்து வரலாம்.” சாதனா சொல்ல…. அமோக் உடனே மகிழ்ந்து போய் “சாரி…” என்றான்.
“குட்… இனி திரும்பச் சேட்டை பண்ணா…. உன்னோட கவுன்ட் ஸ்டார்ட் ஆகிடும். அத்தனை நாள் சாக்லெட் இல்லை… ஓகே வா….” சாதனா சொல்ல…. அமோக் சரி என்றான். அவனை அவன் பெற்றோரிடம் சாதனா அனுப்பி வைத்தாள்.
அவர்களிடம் சென்றவன் அமைதியாக உட்கார்ந்து கார்ட்டூன் பார்க்க…. அமோகின் பெற்றோருக்கு ஆச்சர்யமாக இருந்தது. மிரட்டாமல், கத்தாமல் தங்கள் மகனை வழிக்குக் கொண்டு வந்துவிட்டாளே என நினைத்து அவர்களுக்கு ஆச்சர்யம்.
“சாரி அண்ட் தேங்க்ஸ்.” அமோகின் அம்மா சொல்ல….
“இத்தனை நாள் இப்படி இவனை மடக்கலாம்னு தெரியாம போச்சே…. உங்களுக்கு நிஜமாவே பொறுமை அதிகம்ங்க.” என்றார் அமோகின் அப்பா.
“உங்க பேர்…” என அமோக்கின் அம்மா கேட்க… சாதனா தன் பெயரை சொன்னாள்.
“சாதனா நீங்க டீச்சர் தான… அதுதான் உங்களுக்குப் பசங்களை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு தெரிஞ்சிருக்கு.” அமோகின் அம்மா தான் கண்டுபிடித்த பெருமையில் பேச…
“இல்லை… நான் டாக்டர். பிஜியில குழந்தைகள் நலம் தான் படிச்சேன்.” என்றாள் சாதனா.
“ஓ கிரேட்… அதுதான் இது மாதிரி நிறையக் குழந்தைகள் பார்த்து இருப்பீங்க இல்லையா…”
“நான் இப்பதாங்க படிப்பு முடிச்சேன். இனிமே தான் ப்ராக்டிஸ் பண்ணனும்.”
“பரவாயில்லை… அதுக்குள்ள நீங்க ஒரு நல்ல டாக்டர்ன்னு ப்ரூவ் பண்ணிடீங்க.”
[the_ad id=”6605″]
அமோகின் அம்மா சொன்னதைக் கேட்டுச் சாதனா சிரித்தாள். அதற்குள் அவர்கள் விமானம் தரை இறங்க போவதாக அறிவிப்பு வர… எல்லோரும் சீட் பெல்ட் போட்டுக் கொண்டனர். அதன் பிறகு யாருக்கும் பேச நேரம் இல்லை.
இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தவர்கள் விமானத்தில் இருந்து இறங்க ஆளாளுக்கு முந்த… சாதனா காத்திருந்து பொறுமையாக இறங்கி வந்தாள்.
அதன்பிறகு அவள் லக்கேஜ் எடுத்துக்கொண்டு இமிக்ரேஷனுக்குச் செல்ல… அங்கே அவளுக்கு முன்பு ஒரு பெரிய வரிசையே இருந்தது.
சாதனாவிற்கு ப் பசிக்க வேறு ஆரம்பித்து இருந்தது. மிகவும் சோர்வாக உணர்ந்தாள். விமானத்திலேயே எதாவது சாப்பிட தான் நினைத்து இருந்தாள். அதற்குள் அமோகின் பெற்றோரோடு பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் சென்று விட்டது.
அவள் அப்படி நேரத்திற்குச் சாப்பிடும் ரகமும் இல்லை… ஆனால் இப்போது அவள் வயிற்றில் இருக்கும் குட்டீஸ், பசியில் அவள் வயிற்ரை பிரண்ட ஆரம்பித்து இருந்தது.
இன்னும் எப்படியும் வெளியே செல்ல அரைமணியில் இருந்து ஒரு மணி நேரம் ஆனாலும் ஆகிவிடும். அதனால் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்தவள், தன்னிடம் இருந்த ஆப்பிள் எடுத்து உன்ன ஆரம்பித்தாள். அப்போது வரிசையில் நின்ற அமோக் எதோ சேட்டை செய்ய… அவன் அம்மா “த்ரீ…” என்று சொல்ல…. அவன் உடனே “நோ… ஒன்லி டூ.” என்றான். சாதனாவிற்கு அதைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.
அவள் சாப்பிட்டு முடித்து வரிசையில் நிற்க… அதற்குள் இன்னொரு கவுன்டரும் திறந்து விட… வரிசை வேகமாக நகர்ந்தது. ஒரு வழியாக எல்லாம் முடிந்து லக்கேஜோடு வெளியே வந்தவள், ஆவலாக ரிஷியை தேடினாள்.
அவன் அங்கு எங்கேயும் இல்லை…. அவனைக் காணாமல் மனம் சோர்ந்து போனது. நேத்து அப்படிப் பேசினான் ஆனா. இன்னைக்கு ஆளையே காணோம். இவ்வளவு தானா அவனோட பாசம் என நினைத்தவளுக்குக் கண்கள் கலங்க ஆரம்பிக்க…. அப்போது அவள் முதுகை யாரோ தட்டினார்கள்.
யாரோ எனத் திடுக்கிட்டு திரும்பியவள், ரிஷியை பார்த்ததும் திகைத்து போய் நின்று விட்டாள். சத்தியமாக அவன் தனக்குப் பின்னால் நிற்பான் என எதிர்ப்பார்க்கவில்லை….
சாதனா தூரத்தில் வரும் போதே ரிஷி அவளைப் பார்த்து விட்டான். அவள் அவனைக் காணாமல் என்ன செய்கிறாள் எனப் பார்ப்போம் என்று தான் வேண்டுமென்றே மறைந்து நின்றான்.
சாதனாவை பார்த்து ரிஷி சிரிக்க….. அவன் வேண்டுமென்றே செய்தான் எனப் புரிந்த சாதனா அவனை அடிக்க…. அந்நேரம் எங்கிருந்தோ ஓடி வந்த அமோக், அவள் அடிப்பதை எண்ண ஆரம்பித்தான். அதைப் பார்த்த சாதனா தன் தலையில் கைவைத்துக் கொள்ள… ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை….
“அங்கிள் தப்புப் பண்ணா கவுன்ட் பண்ணனும். பார் தட் மெனி டேஸ் நோ சாக்லெட்ஸ். சோ டோன்ட் கிவ் சாக்லெட்ஸ் பார் ஆன்டி.” விமானத்தில் நடந்ததிற்கு அமோக் பழி தீர்த்துக்கொள்ள….
“அப்படின்னு யார் சொன்னா? இவ சொன்னாளா…” என ரிஷி அமோகிடம் கேட்க… அவன் ஆமாம் என்றான்.
“ஆமாம் இவ சொன்னா நாம அப்படியே கேட்கணுமா என்ன? பிரேக் தி ரூல்ஸ் மேன். சின்னப் பசங்கன்னா சேட்டை பண்ணத்தான் செய்வாங்க.” என்றான்.
[the_ad id=”6605″]
அமோக்கை தூக்கிக்கொண்டு அங்கிருந்த சாக்லெட் ஷாப் சென்றவன், “நீ எத்தனை தடவை சேட்டை பண்ண?” எனக் கேட்ட… இப்போது மட்டும் உஷாராக அமோக் த்ரீ என்றான். அதற்கு இரண்டு மடங்கு சாக்லெட் வாங்கி ரிஷி கொடுக்க…. சாதனா அவனை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அமோகின் பெற்றோரும் அவள் அருகில் நின்றிருந்தனர். அவர்களுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை….
“சாதனா இவர் தான் உங்க கணவரா… உங்களுக்குக் குழந்தை பிறந்திட்டா… ரொம்ப ஜாலியா இருக்கும் போங்க.” என அமோக்கின் அம்மா கேலி செய்ய…. அது சாதனாவிற்கு ம் தெரியும்.
சாதனா என்ன சொன்னாலும் அதற்கு எதிர்மறையாகத்தான் ரிஷி சொல்வான். பிறகு கலாட்டாவுக்கு கேட்கவா வேண்டும்.
அமோக்கின் அப்பா சென்று ரிஷியிடம் இருந்து தன் மகனை வாங்கினார். அமோக் சாதனாவிடம் ரிஷி கொடுத்த சாக்லெட்டை தூக்கி காட்டி சிரிக்க… சாதனாவும் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவர்கள் சென்றதும் சாதனாவின் அருகே வந்த ரிஷி “போகலாமா…” என்றான்.
“நான் ஒரு நல்லது செஞ்சா உங்களுக்குப் பொறுக்காதே….” சாதனா அவனுடன் நடந்தபடி கேட்க….
“அவன் என்ன பொம்மையா ஒரே இடத்தில உட்கார்ந்து இருக்க… ப்ளைட்ல எவ்வளவு நேரம் ஒரே இடத்தில உட்கார்ந்து இருக்க முடியும். அதனால சேட்டை பண்ணி இருப்பான். அதுக்காக இப்படியா அவனை மிரட்றது.”
“குழந்தைகளுக்குச் சாக்லெட்ஸ் தான் படிக்கும். அதுல போய்க் கை வைக்கலாமா… பாவம் இல்லை. அதோட நான் உனக்காகவும் தான் அப்படிச் செஞ்சேன். அவங்க அப்பா அம்மா சாக்லெட் தராத ஒவ்வொரு நாளும், அவன் உன்னைத் தான் மனசுல திட்டிட்டு இருப்பான். எதுக்குச் சின்னக் குழந்தையோட சாபம்?”
ரிஷி சொன்னதைக் கேட்டு சாதனா “ஓ எனக்காகவா… ரொம்பத் தான் அக்கறை.” என அவள் பொய்யாக ஆச்சர்யம் காட்டி கேட்க….