பகுதி – 25
சாதனா அவள் பிறந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. வெற்றியும் ப்ரீதாவும் அவளை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டனர். பெரியம்மா மேகலாவும் உடன் இருந்ததால்…. அவரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.
சாதனா நடுநடுவே கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். ரிஷியும் ஊரில் இல்லை வெளிநாடு சென்றிருந்தான். அவனும் ஊரில் இல்லாததால்…. ஜோதியும் சாதனா அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் பற்றி ஒன்றும் நினைக்கவில்லை.
நடந்து முடிந்த தேர்தலில் சந்தானம், ராஜ்மோகன் இருவருமே அவரவர் தொகுதியில் வெற்றி பெற்று இருந்தனர். அதோடு இருவருக்குமே அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால்…. இனி ராஜ்மோகனும் ஜோதியும் வசிக்கப் போவது சென்னையில். அதனால் அவர் அந்த ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தார்.
ஒருநாள் சாதனா கல்லூரிக்குச் சென்றிருந்த போது மேகலா வெற்றியிடம் “உன் தங்கச்சி எப்ப அவ வீட்டுக்கு போறா?” என அவனிடம் கேட்க….
“ஏன் பெரியம்மா? ரிஷி கூட ஊர்ல இல்லையே…. அவர் வர்ற வரை அவ இங்க இருக்கட்டும். நீங்க கிளம்பனும்ன்னா கிளம்புங்க.” என்றான் வெற்றி.
[the_ad id=”6605″]
“சரி நானும் வந்து ரெண்டு வாரம் ஆச்சு. சாதனா கூப்பிட்டாளேன்னு போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டேன்.”
மேகலா சொன்னதைக் கேட்டு திடுகிட்ட வெற்றி “என்னது சாதனா உங்களைக் கூப்பிட்டாளா? அப்ப நீங்களா அவளை இங்க கூப்பிடலையா…” என்றதும்,
“அவ தான் எனக்குப் போன் பண்ணி அவளை இங்க கூப்பிட சொன்னா…” என்றார் மேகலா…
எதுக்கு அப்படிச் சொல்லி இருப்பா என வெற்றி யோசிக்க…. அதைக் கவனித்த மேகலா “இங்க வந்து சில நாள் தங்கி இருக்கலாம்னு நினைச்சிருக்கலாம்.” என்றார் அவராகவே.
இதை ஏன் தன்னிடம் சொல்லாமல் பெரியம்மாவிடம் சொன்னாள் என நினைத்து வெற்றி குழம்பியபடி இருக்க… அப்போது அங்கே வந்த ப்ரீதா “என்னங்க சாப்பிடுறீங்களா?” என்றதும்,
“இப்ப ரொம்ப முக்கியம்.” என வெற்றி அவளிடம் எரிந்து விழுந்தான்.
ஜோதி மருத்தவமனையில் பேசியதை எல்லாம் வெற்றி கேட்டுக் கொண்டு தானே இருந்தான். அதனால் அவர் எதாவது சாதனாவை சொல்லி இருப்பார். அதனால் தான் சாதனா இங்கு வந்து இருக்கிறாளோ என நினைத்து வந்த கோபம்.
வெற்றி இருந்த குழப்பத்தில் சாப்பிடாமலே வெளியே கிளம்பி சென்றான். மாலை வீட்டிற்கு வந்தவன் சாதனாவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன அண்ணா எதுக்கு என்னை அப்படிப் பார்க்கிற?”
“எப்ப நீ உன் வீட்டுக்கு கிளம்புற?” என வெற்றி பட்டென்று கேட்டு விட….
“இது என்னோட வீடு இல்லையா…” வெற்றி கேட்டதற்குப் பதில் சொல்லாமல்…. சாதனா அவள் ஒரு கேள்வி கேட்க….
“சரி இதுவும் உன் வீடு தான். ஆனா அந்த வீட்டுக்கு நீ எப்ப போற சொல்லு…” என வெற்றி விட்டுக்கொடுத்தே பேச….
“நான் இனி அங்க போக மாட்டேன். இங்க தான் இருப்பேன்.” எனச் சாதனா மின்னாமல் மிழங்காமல் ஒரு குண்டை போட…. வெற்றி அதிர்ச்சியில் வாயடைத்து போய் நின்றான்.
சிறிது நேரம் சென்றே திகைப்பில் இருந்து மீண்டவன், “விளையாடாத சாதனா….” என்றான் கடுப்பாக.
“நான் உண்மையா தான் சொல்றேன். எனக்கு அங்க செட் ஆகாது. நான் போக மாட்டேன்.”
சாதனாவின் பேச்சு வெற்றியின் கோபத்தைத் தூண்ட, “நீ தான ரிஷியை வம்படியா கல்யாணம் பண்ண… இப்ப இப்படிப் பேசுற…. இனி இது மாதிரி எல்லாம் உளறாதே… யார் காதிலேயாவது விழப்போகுது.” என்றவன், ப்ரீதா அங்கே இல்லாததை உறுதி படுத்திக்கொண்டு மீண்டும் சாதனாவிடம் பேச்சை ஆரம்பித்தான்.
“இன்னும் உனக்கு அபார்ஷன் ஆனதையே நினைச்சிட்டு இருக்கியா…. அதைப் பத்தி யாரவது எதாவது சொன்னாங்களா…. என்கிட்ட சொல்லு சாதனா, நான் பார்த்துகிறேன்.”
வெற்றியின் தவிப்பை பார்த்து சாதனாவிற்கு க் கவலையாக இருந்தது. அவள் இல்லை என்பது போல் தலையாட்ட….
“அப்புறம் ஏன் டா?” வெற்றி உருக்கமாகக் கேட்க… சாதனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
[the_ad id=”6605″]
“நான் ரிஷியை கல்யாணமே பண்ணி இருக்கக் கூடாது.” என்றாள் மெதுவாக.
“ரிஷி மேல எதுவும் கோபமா…. நீ ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது…. அவன் எவ்வளவு தவிச்சான் தெரியுமா….”
“அண்ணா ப்ளீஸ் என்னை எதுவும் கேட்காதீங்க. ரிஷி மேல எந்தத் தப்பும் இல்லை… எல்லாத் தப்பும் என் மேல தான். இனியாவது ரிஷி நிம்மதியா இருக்கட்டும். நான் அங்க போக மாட்டேன்.” என்றவள், அங்கிருந்து விரைந்து அவள் அறைக்குச் சென்றுவிட…. வெற்றிக்குக் குழப்பத்தில் தலையே வெடித்து விடும் போல இருந்தது.
அவன் ப்ரீதாவிடம் கூடச் சாதனா சொன்னதைப் பத்தி எதுவும் சொல்லவில்லை… ப்ரீதா அவள் அம்மாவிடம் சொன்னால் கண்டிப்பாகப் பெரிய பிரச்சனை ஆகும் என நினைத்து, அவனே சாதனாவிடம் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு இருந்தான்.
ஆனால் என்ன முயன்றும் அவனால் சாதனாவை சமாதானம் செய்யவே முடியவில்லை. பிறகு ஒருநாள் முடியாமல் அவனே ரிஷியை செல்லில் அழைத்து விட்டான்.
“சொல்லுங்க வெற்றி.” எடுத்ததும் ரிஷி இப்படிக் கேட்க… அவனிடம் என்ன சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை….
“இல்லை சும்மா தான் கூப்பிட்டேன். எப்ப இங்க வருவீங்க?”
இவன் என்ன திடிர்ன்னு போன் பண்ணிட்டு இப்படிக் கேட்கிறான் என நினைத்த ரிஷிக்கு, ஒருவேளை சாதனாவிற்கு எதுவுமோ எனத் தோன்ற “சாதனாவிற்கு ஒன்னும் இல்லையில்ல… அவ நல்லா தான இருக்கா…” எனக் கேட்டான்.
“அவ நல்லா தான் இருக்கா….” என்ற வெற்றியின் குரலில் சுரத்தே இல்லை. ப்ரீதாவிற்கு எதுவுமோ என நினைத்து ரிஷி ப்ரீதாவை பற்றியும் விசாரித்தான். எப்ப வர்றீங்கன்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன் என வெற்றி சொன்னதை ரிஷி நம்பவில்லை… மறுநாள் வருவதாகச் சொல்லி போன்னை வைத்தான்.
வெற்றி அழைத்ததும் ரிஷிக்கு அதற்கு மேல் வேலையே ஓடவில்லை… அவன் சாதனா, தன் அம்மா, ப்ரீதா என ஒவ்வொருவராக அழைத்துப் பேசினான். சாதனாவை தவிர மற்ற அனைவரும் உற்சாகமாகப் பேச…. சாதனா தான் மென்று விழுங்கினாள். இவ தான் எதோ பண்ணி இருக்கா என ரிஷிக்கு நன்றாகவே புரிந்தது.
மறுநாள் மதுரை வந்த ரிஷி வெற்றியை அழைக்க… அவன் ஒரு நட்ச்சத்திர ஹோட்டல் பாரில் இருப்பதாகச் சொல்ல… ரிஷி நேராக அங்கேயே சென்றான்.
வெற்றி மது அருந்திக்கொண்டு இருக்க…. ரிஷி அவன் எதிரில் சென்று அமர்ந்தான். அவனுக்கும் வேண்டுமா என வெற்றி கேட்க ரிஷி மறுத்தான். இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு ரிஷியே பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன சொல்றா உங்க தங்கச்சி?”
“அவ என்னென்னமோ சொல்றா…. பேசுற அவ லூசா இல்லை கேட்கிற நான் லூசான்னு தான் தெரியலை….”
வெற்றி விரக்கதியாகப் பேச…. “என்ன தான் சொல்றா….” என்றான் ரிஷி பொறுமை இழந்து.
“அவ இனி உங்க வீட்டுக்கு வர மாட்டாளாம்.”
“ஏன்னாம்.”
“உன்னை டைவேர்ஸ் பண்ணப் போறாளாம்.”
இதைக் கேட்ட ரிஷிக்குக் கோபம் வர…. “டைவேர்ஸ் பண்ற அளவுக்கு இப்ப என்ன ஆச்சு?” என்றான் சிடு சிடுப்பாக.
“அதைத் தான் கேட்டா சொல்ல மாடேங்கிறாளே… ஒரு வாரமா என்னைப் பைத்தியம் பிடிக்க வச்சிட்டு இருக்கா….”
வெற்றி சொன்னதைக் கேட்டு ரிஷிக்கும் ஒன்றும் புரியாத நிலை…. மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்னு தெரியலையே என நினைத்தவன், மேஜையில் இருந்த மதுவை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டான்.
இருவரும் எதுவும் பேசாமல் அவரவர் யோசனையில் இருந்தனர். சிறிது நேரம் சென்று எழுந்த ரிஷி “நீ என்கிட்டே பேசுனது அவளுக்குத் தெரியவேண்டாம். நான் பார்த்துகிறேன்.” என்றவன், அவனிடம் விடைபெற்று கிளம்ப… வெற்றி அவனை வழியனுப்பி வைத்தான்.
இருவரும் மரியாதை பன்மையைக் கைவிட்டு ஒருமையில் அழைத்ததைக் கூட உணரவில்லை. ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ரிஷி நேராகச் சாதனாவின் வீட்டிற்குத் தான் சென்றான்.
திடிரென்று அவன் வந்து நின்றதும் ப்ரீதாவிற்கு ஒன்றும் புரியவில்லை…. “என்னடி அப்படிப் பார்க்கிற? சாதனாவை வர சொல்லு….” ரிஷி சொல்ல… திகைப்பில் இருந்து வெளி வந்த ப்ரீதா “அண்ணி மெடிகல் கேம்ப் போயிருக்காங்களே… உன்கிட்ட சொல்லலை… வர பத்து நாள் ஆகுமே.” என்றாள்.
சாதனா ரிஷியை தவிர்க்கவே இப்படிச் செய்கிறாள் என அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
“சொன்னா நியாபகம் இல்லை…” என்ற ரிஷி உடனே கிளம்ப…..
“ஏன் உன் பொண்டாட்டி இல்லைன்னா இங்க இருக்க மாட்டியா…. சாப்டிட்டாவது போயேன்.” ப்ரீதா சொல்ல… ரிஷி சரி என்றான்.
“மேல அண்ணி ரூம்ல போய்ப் பிரெஷ் ஆகிட்டு வா அண்ணா…. நான் அதுக்குள்ள உனக்குச் சாப்பாடு ரெடி பண்றேன்.” ப்ரீதா சொல்ல… ரிஷி எழுந்து சாதனாவின் அறைக்குச் சென்றான்.
அறைக்குள் சென்று விளக்கை ஒளிர விட்ட ரிஷி அங்கிருந்த சோபாவில் சோர்வாக அமர்ந்து விட்டான். வெளிநாடு வரை தனக்காக வந்தவள், இன்று அவன் ஊரில் இருந்து வருகிறான் என்று தெரிந்தும், வீட்டில் அவனை வரவேற்க இல்லை. எளிதாக அவளைச் சமாளிக்க முடியாதோ என்ற கவலை பிறந்தது.
சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்தவன், முகம் கழுவ எண்ணி குளியல் அறைக்குள் சென்றவனுக்குக் குளிக்க வேண்டும் போல் இருக்க…. துவட்ட துண்டு எடுப்பதற்காகச் சாதனாவின் அலமாரியை திறந்தான்.
வரிசையாக ஒவ்வொரு கதவாகத் திறந்து பார்த்தவன், கடைசியாக இருந்த கதவை திறக்க…. கதவின் உள் பக்கம் போஸ்டர் ஒட்டி இருந்தது.
அதில் இருப்பது யார் என்று அவனுக்கு முதலில் புரியவில்லை…. மீண்டும் மீண்டும் பார்த்ததும் தான் அதில் இருப்பது அவன் என்றே தெரிந்தது.
ரொம்ப வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது எடுத்த படம். மிகவும் இளமையாக இருந்தான். அதே அலமாரியின் மறு கதவை திறந்து பார்க்க… அதிலும் அவன் படம் தான். அதுவும் கல்லூரியில் எடுத்தது தான்.
[the_ad id=”6605″]
அடிப்பாவி ! இவளுக்கு எப்படி இந்தப் போட்டோ கிடைச்சது என அவன் யோசிக்கும் போதே… சாதனாவும் அவன் படித்த பள்ளியிலேயே படித்ததாகச் சொன்னது நினைவு வந்தது.
அவன் பார்வை உள்ளே இருந்த பொருட்களை ஆராய்ந்தது.
உள்ளே ஒரு கால்பந்து இருந்தது. அதைக் கையில் எடுத்தவனுக்குப் பழைய நியாபகங்கள்.
ரிஷி கல்லூரியில் படிக்கும் போது கால் பந்து விளையாடுவான். ஒருநாள் அப்படி விளையாடிவிட்டு வரும் போது கையில் பந்தை வைத்து உருட்டிக் கொண்டு வந்தவன், பந்தை கீழே போட்டு விட்டான். அவன் என்ன தேடியும் அந்தப் பந்து அவனுக்குக் கிடைக்கவில்லை….
அடி திருடி ! அது உன்வேலை தானா… என நினைத்தவனின் முகத்தில் புன்னகை. அவன் மீண்டும் அவள் அலமாரியை ஆராய… உள்ளே அவனின் ஒரு டி-ஷர்ட், பேனா… அவனின் ஒரு நோட்டுப் புத்தகம் கூட இருந்தது.
இப்படி ஒரு பொண்ணு உன்னையே சுத்தி சுத்தி வந்தது கூடத் தெரியாமலா டா ரிஷி இருப்ப… என அவனையே நொந்து கொண்டவனுக்கு மனதில் அவ்வளவு மகிழ்ச்சி.
இருக்காதா பின்னே… ஒரு பெண் அவனை உருகி உருகி காதலித்து இருக்கிறாள் எனத் தெரிந்தால் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். அதுவும் அவள் இப்போது அவனின் மனைவி.
இப்போது ரிஷிக்கு நிறைய விஷயம் புரிந்தது. சாதனா ஏன் அவனைத் தேடி நள்ளிரவில் வந்தாள்? அவனைத் திருமணம் செய்வதில் அவ்வளவு உறுதியாக ஏன்இருந்தாள்? என எல்லாமே புரிந்தது.
ரிஷி உட்கார்ந்து யோசித்துப் பார்த்தான். அவனுக்குச் சாதனாவை பள்ளியில் படிக்கும் போதோ… கல்லூரியில் படிக்கும் போதோ பார்த்ததாக நியாபகமே இல்லை.
இந்தப் பொண்ணு எதாவது சொல்லுச்சா… இப்ப கல்யாணம் ஆன பிறகு கூடச் சொல்லலையே…. சாதனா பள்ளியில் படிக்கும் போது எப்படி இருந்திருப்பாள் எனத் தெரிந்துகொள்ள ரிஷிக்கு மிகவும் ஆர்வமாக இருக்க… அவள் புகைப்படத்தைத் தேடி அவள் அலமாரியை மீண்டும் ஆராய்ந்தான்.
நீண்ட நேர தேடலுக்குப் பிறகே அவனுக்குச் சில ஆல்பங்கள் கிடைத்தது. சாதனா கைக் குழந்தையாக இருந்ததில் இருந்து கல்லூரியில் படித்த போது எடுத்த புகைப்படங்கள் கூட இருந்தது.
ரிஷி ஒவ்வொன்றையும் எடுத்து ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனை ப்ரீதா அழைக்கும் குரல் கேட்க…. “இதோ வரேன்.” என அவளுக்குக் குரல் கொடுத்தவனுக்கு, இன்றைய நிலையும் சேர்ந்து நினைவுக்கு வர… அதுவரை இருந்த உற்சாகம் வடிந்தது.
மீண்டும் எல்லாவற்றையும் எடுத்த இடத்தில் வைத்தவன், அவள் அலமாரியை மூடி விட்டு, முகம் மட்டும் கழுவிகே கொண்டு வெளியே வந்தான்.
ப்ரீதா பரிமாறிய உணவை என்ன என்று கூடச் சரியாகப் பார்க்காமல் அவன் சாப்பிட…. ப்ரீதா அவனிடம் தன் அம்மாவும் அப்பாவும் சென்னை போவதை பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தவன், தன் பெற்றோர் கேட்ட கேள்விகளுக்குக் கடனே எனப் பதில் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தான்.
ஒவ்வொன்றாக நினைக்க நினைக்க.. சில நேரம் மகிழ்ச்சியாகவும், சில நேரம் வருத்தமாகவும் இருந்தது. அதுவும் குறிப்பாகத் தன்னை இவ்வளவு தூரம் நேசித்தவளுக்குத், தான் நேகாவை நேசித்தது தெரிய வந்த போது… எவ்வளவு வருத்த பட்டிருப்பாள் என அவளுக்காக அவளுடைய இடத்தில் இருந்து யோசித்தான்.
இவ்வளவு தூரம் விரும்பி தன்னைத் திருமணம் செய்து கொண்டு ,இப்போது அவள் ஏன் பிரிந்து செல்ல நினைக்கிறாள்? எனப் புரியவில்லை….
எதையோ நினைச்சு குழப்பிட்டு இருக்கு லூசு என நினைத்தவன் சாதனாவை செல்லில் அழைத்தான்.
[the_ad id=”6605″]
“வந்துடீங்களா…..”
“ம்ம்…. என்ன டி நிம்மதியான தூக்கமா?”
“இன்னும் தூங்களை…”
“நான் இன்னைக்கு வருவேன்னு உனக்குத் தெரியும் தான… நீ இங்க இருக்காம எங்க போன?”
“எனக்குக் கேம்ப் இருந்துச்சு.”
“சரி என்னைக்கு வருவ…”
“அது… இது முடிஞ்சு… இன்னொன்னு…” எனச் சாதனா இழுக்க….
“ஒரு ஆணியும் நீ …. வேண்டாம். ஒழுங்கா இந்தக் கேம்ப் முடிஞ்சதும் வீட்டுக்கு வர்ற… சரியா….” என்றான் ரிஷி.
அவனின் குரலில் இருந்த கடினம் சாதனாவிற்கு மறுத்து பேசும் தைரியத்தைத் தராததால்…. சரி என்று செல்லை வைத்தாள்.
மருத்துவ முகாம் முடியும் நாள் நெருங்க நெருங்க சாதனாவிற்கு மனம் திக் திக்கென அடித்துக் கொண்டது. ரிஷியிடம் எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. முகாமின் கடைசி நாள் மாலை சாதனா அவள் தங்கி இருந்த அறைக்குத் திரும்ப… அங்கே ரிஷி அவளுக்காகக் காத்திருந்தான்.
அவனை அங்கே அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரிஷியை பார்த்ததும் எல்லாமும் மறந்து விட…. மனம் சற்று துள்ளவே செய்தது. மெதுவாக நடந்து சென்றவள், செல்லும் வழியாவும் தான் எடுத்திருந்த முடிவை நியபகப்படுத்திக் கொண்டாள்.
தன்னைப் பார்த்ததும் முதலில் சாதனாவின் விழிகளில் இருந்த துள்ளலையும். பிறகு அவள் அதைக் கவனமாக மறைத்துக் கொண்டதையும் ரிஷி கவனித்தே இருந்தான்.
வாடி வா… நீ எந்த அளவுக்குப் போறேன்னு நானும் பார்கிறேன் என நினைத்தவன், அவளைப் பார்த்து பளிச்சென்று ஒரு மயக்கும் புன்னகை சிந்த…. தனக்கு வந்த சோதனையை நினைத்து சாதனா நொந்தபடி சென்றாள்.