பகுதி – 27
இரண்டு நாட்கள் அமைதியாக சென்றது. ரிஷியும் சாதனாவும் எதை பற்றியும் பேசவில்லை. சாதனா மருத்துவமனைக்கும் செல்லவில்லை வீட்டில் தான் இருந்தாள்.
தனக்கே நம்பிக்கை இல்லாத போது…. நாம் மற்றவர்களுக்கு என்ன வைத்தியம் செய்து விடப்போகிறோம். ரிஷி சொன்னது சரிதான் என்று நினைத்து செல்லவில்லை.
சென்னைக்கு செல்வதால்…. ஜோதிக்கு பொருட்களை எடுத்து வைப்பதில் உதவி செய்து கொண்டு இருந்தாள். இனி அவளும் ரிஷியும் மட்டும் தானே இவ்வளவு பெரிய வீட்டில் இருக்க வேண்டும். ஜோதி அவளுக்கு எதை எதை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
“இங்க பாரு சாதனா மாமாவையோ, ரிஷியையோ தேடி வர்றவங்களை…. வீட்டில் பொறுப்பில் இருக்கிறவங்க பேசி அனுப்பிடுவாங்க. ஆனா அதே தூரத்து சொந்தக்காரங்க, பத்திரிகை கொடுக்கன்னு இப்படி யாரவது வருவாங்க.”
“ரொம்ப தெரிஞ்சவங்க வந்தா மட்டும் தான் உனக்கு தகவல் வரும். அவங்க வந்த பிறகு, அவங்களுக்கு காபியோ டீயோ கொடுப்பாங்க. அவங்க அதை குடிக்கிற நேரம் மட்டும் நீ அவங்களோட பேசிட்டு இருந்தா போதும். ரொம்ப பேசினா அப்புறம் நம்மகிட்ட நிறைய சலுகை எடுத்துப்பாங்க. அதனால அளவா பேசி அனுப்பிடு.”
“என்ன சலுகை அத்தை?”
“அதாவது இப்ப உங்க மாமா பதவியில இருக்கிறாரு. இல்லைனாலும் எதாவது ஒரு சாக்கு வச்சிக்கிட்டு வந்து என் பையனுக்கு இந்த சீட் வாங்கி கொடுங்க. இந்த இடத்தை எங்களுக்கு முடிச்சு கொடுங்க. இப்படி எதாவது சொல்வாங்க. நீ ரிஷிக்கிட்ட தான் கேட்கணும்னு சொல்லிடு.”
“இதே நெருங்கிய சொந்தக்காரங்கன்னா ரிஷி இருக்கும் போது தான் வருவாங்க. அதனால பிரச்சனை இல்லை…. அவன் பார்த்துப்பான். அவங்க வந்தா கண்டிப்பா சாப்பிட வச்சு அனுப்பு.”
“ஓ… இதில் இவ்வளவு இருக்கிறதா…” என சாதனா நினைத்தாள்.
[the_ad id=”6605″]
“சமையல் அறை பொறுப்பு சாமியோடது. ரிஷிக்கு அவர் சமைச்சா தான் பிடிக்கும். அதனால அவர் இங்க இருப்பார். ஆனா நீயும் எல்லா இடத்தையும் சுத்தமா வச்சிருக்காங்களா… அப்படின்னு தினமும் ஒரு தடவை பார்த்திடு.”
“நியாபகம் இருக்கிற வரை இப்ப சொல்லிட்டேன். மிச்சத்த அப்பப்ப போன்ல சொல்றேன்.” என்றார் ஜோதி.
ரிஷி அன்று மதியம் வீட்டிற்கு வந்தவன், உணவு அருந்திவிட்டு அறையில் ஓய்வு எடுத்தான். அப்போது சாதனாவும் உள்ளே வந்தாள். அவனுக்கு அவள் மருத்துவமனை செல்லவில்லை என்பதில் இருந்தே… இப்போது சரியாக யோசிக்க ஆரம்பித்து இருக்கிறாள் என நினைத்துக் கொண்டான்.
“சாதனா, நான் வக்கில்கிட்ட பேசினேன். கல்யாணம் ஆன மூன்னு மாசத்தில எல்லாம் டைவர்ஸ் கொடுக்க மாட்டாங்களாம். ஒரு வருஷம் முடிஞ்சா தான் கிடைக்குமாம்.”
“அதனால இப்பவே வீட்ல சொல்லி எல்லோரையும் டென்ஷன் பண்ண வேண்டாம். ஒரு வருஷம் முடியும் போது சொல்லிக்கலாம். அதோட கல்யாணம் ஆன மூன்னு மாசத்தில டைவேர்ஸ் பன்றோம்னு சொன்னா…. எல்லோரும் நம்மை தான் கேவலமா பார்ப்பாங்க.”
“ஒரு வருஷம் ஆனப் பிறகு நமக்குள்ள ஒத்து வரலை… அதனால பிரியறோம்னு சொன்னா.. கொஞ்சம் நம்புற மாதிரி இருக்கும். நீ என்ன சொல்ற?” ரிஷி கேட்க….
அவள் தான் விவாகரத்து கேட்டாள். ஆனால் ரிஷியை போல் விவாகரத்தை பற்றி எளிதாக பேச அவளுக்கு வாய் வரவில்லை… அதனால் சம்மதமாக தலையை மட்டும் ஆட்டினாள்.
ரிஷி விவரமாக ஒருவருடம் இருவரும் பிரிந்து இருக்க வேண்டும் என்பதை சொல்லவில்லை…. சாதனாவிற்கு சட்டம் எல்லாம் தெரியாது. அதனால் அவன் சொன்னதை நம்பி விட்டாள். ரிஷி சொன்னதும், இன்னும் ஒரு வருஷம் இருக்கா என சாதனாவின் மனம் சந்தோஷமே கொண்டது.
மறுநாள் தோட்டத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த ராஜ்மோகனிற்கு ஜோதி காபி கொண்டு சென்றார். அப்போது ரிஷியும் ஜாக்கிங் முடித்து வந்தான். அவனை பார்த்த ராஜ்மோகன் “உட்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றார்.
“என்ன பிரச்சனை?” ராஜ்மோகன் நேரடியாக கேட்க…. அவர் விஷயம் தெரிந்து கேட்கிறாரா… அல்லது தெரியாமல் கேட்கிறாரா என்று ஒன்றும் ரிஷிக்கு புரியவில்லை….. இருந்தாலும் நாமாக வாயை விட வேண்டாம் என்று நினைத்து “ஆபீஸ்லையா அது எப்பவும் இருக்கிறது தான்.” என்றான்.
“நான் அதை சொல்லலை… நீயும் சாதனாவும் ஏன் யாரோ மாதிரி நடந்துகறீங்க. உங்க ரெண்டு பேர்குள்ள என்ன பிரச்சனை?” என கேட்க… ஜோதி இருவரையும் திகைத்து போய் பார்த்தார்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லையே… நாங்க நல்லா தான் இருக்கோம்.” ரிஷி சமாளிக்க…..
“இல்லை… நீ எதோ மறைக்கிற….” என்றார் ராஜ்மோகன்.
“நீ எதுவும் பிரச்சனை பண்றியா அவகிட்ட….” ஜோதி அவனை குற்றம் சொல்ல… ரிஷிக்கு கோபம் வந்துவிட்டது.
“எல்லாம் நீங்களும் பாட்டியும் பண்ண வேலை தான். அவகிட்ட குழந்தையை பத்தியே புலம்பி…. இப்ப நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு அவ என்கிட்டே சொல்ற நிலைமைக்கு கொண்டு வந்துடீங்க.”
ரிஷி சொன்னதை கேட்டு ஜோதி “ஐயோ ! நாங்க எதோ வயசானவங்க குழந்தை வரப்போகுதுன்னு இருந்திட்டு இல்லைன்னு ஆனதும், அந்த ஆதங்கத்தில எதோ புலம்பினா… அதுவும் நான் அவகிட்ட ஒண்ணுமே சொல்லலையே… உன் தங்கச்சி கிட்ட தான் புலம்புவேன்.” என்றார்.
“எனக்கு யாரு அவகிட்ட அப்படி பேசினதுன்னு தெரியாது. ஆனா யாரோ சொல்லி இருக்கீங்க. குழந்தை திரும்ப உண்டாகிறது கஷ்ட்டம். அப்படியே ஆனாலும் கலைஞ்சிடும். இப்படியெல்லாம் யாரோ பேசி இருக்காங்க. அவ அதையே பிடிச்சிட்டு தொங்குறா…”
“சத்தியமா ரிஷி, நான் அப்படியெல்லாம் பேசவேயில்லை… உன் பாட்டி தான் அப்படி சொன்னாங்க. நானே அதே கேட்டு கொஞ்சம் பயந்து போய் இருந்தது என்னவோ உண்மை.”
[the_ad id=”6605″]
ஜோதி பேசியதை கேட்ட ராஜ்மோகன் இப்போது அவரை முறைத்தார். “நான் அன்னைக்கே சொன்னேன் எல்லாரும் அவங்கவங்க வேலையை பாருங்கன்னு.”
“அவங்களும் முன்னாடி சொன்னது தாங்க. நீ சொன்ன பிறகு யாரும் அதை பத்தி பேசலையே…. ஆனா இவ டாக்டர் தான… இவளுக்கு எங்க போச்சு புத்தி?” என ஜோதி கடுமையாகவே பேசினார். அவருக்கு கணவனும், மகனும் தன்னை குறை சொன்ன கோபம்.
“அம்மா, எதாவது புரியாம பேசாதீங்க. டாக்டர்களுக்கு உடம்புக்கு முடியாம போறதே இல்லையா… அவங்களும் மனுஷங்க தானே…. அவகிட்ட போய் கரு உண்டானா கூட கலைஞ்சிடும்னு சொன்னா பயப்பட மாட்டாளா….”
“ஏற்கனவே ஒன்னை இழந்திட்டேன். இன்னொன்னும் இழக்க முடியாதுன்னு தான் சொல்றா.”
அவன் சொன்னதை கேட்டு ஜோதிக்கு கவலை வந்துவிட்டது. “இப்ப என்ன டா பண்றது?” என ரிஷியிடம் கேட்க….
“ஒன்னும் பண்ண வேண்டாம். நான் அவளை சரி பண்றேன். ஆனா திரும்ப நீங்களும், பாட்டியும் எதுவும் அவகிட்ட குழந்தையை பத்தி பேசிடக்கூடாதுன்னு தான் உங்ககிட்ட இப்ப சொன்னேன்.”
“அவ உங்க யாரை பற்றியும் குறை சொல்லலை…. ஏன் பாட்டி பேசினதை கூட எங்கட்ட சொல்லலை…. அவ தன்னை தான் வருத்திக்கிறா. இனி அவகிட்ட பேசும் போது கவனமா இருங்க.” என்றுவிட்டு ரிஷி சென்றான்.
தங்கள் அறைக்கு ரிஷி வந்த போது… அங்கே சாதனா இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தாள். ரிஷி கட்டிலில் அமர்ந்து அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அழகான அமைதியான முகம். சாதனாவும் அந்நேரம் சரியாக கண்திறந்து அவனைப் பார்த்தாள்.
“என்ன என்னையே பார்த்திட்டு இருக்கீங்க?”
“என்னால பார்க்க மட்டும் தானே முடியும். அதனால அதையாவது ஒழுங்கா செய்யலாம்னு.”
“கல்யாணம் செஞ்சு ஒரு வாரம் ஒழுங்கா குடும்பம் நடத்தி இருப்போமா… ஆனா அதுக்குள்ளே நூறு அக்கப்போரு. அடுத்த கல்யாணமாவது பார்த்து பண்ணனும் டா ரிஷி.” என அவனே அவனுக்கு சொல்லிக்கொள்ள…. இவன்கிட்ட போய் வாய் கொடுத்தோமே என நினைத்த சாதனா, எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள்.
அவள் முகம் துடைத்தபடி வெளியே வர….. ரிஷி அவளுக்காகவே காத்திருந்தான்.
[the_ad id=”6605″]
“சாதனா, அடுத்த கல்யாணத்துக்கு எனக்கு நீயே பொண்ணு பார்க்கிறியா…. எங்க அம்மா பார்த்தா உன்னை மாதிரி தான் யாரையாவது பார்ப்பாங்க. அதனால நீயே பாரு. இப்பவே பார்க்க ஆரம்பிச்சிடு. அப்ப தான் நம்ம டைவேர்ஸ் ஆனதும் கல்யாணத்தை வச்சுக்கலாம்.” ரிஷி அவளை வேண்டுமென்றே வெறுப்பேத்த…. சாதனாவிற்கு ம் அது தெரியும் என்பதால் அவள் டென்ஷன் ஆகவில்லை.
“என்னை மாதிரி வேண்டாமா…. அப்ப நேகா மாதிரி பார்க்கவா…” சாதனா நக்கலாக கேட்க….
“உனக்கு அவளே தேவலை…” என்றான் ரிஷியும் நறுக்கென்று.
இருடி ரொம்ப கூல்லா இருக்கியா… உன்னை டென்ஷன் பண்ணலை என் பேரு ரிஷி இல்லை என்று நினைத்தவன், சாதனாவை முறைத்தபடி குளியல் அறைக்குள் சென்றான்.
அடுத்த இரண்டு நாட்களில் ராஜ்மோகனும் , ஜோதியும் சென்னைக்கு செல்வதால் வீடு பரபரப்பாக இருந்தது. ப்ரீதாவும் இங்கே வந்து விட்டாள்.
“வயசான காலத்தில மகன் மருமகளோட சேர்ந்து இருக்கலாம்னு நினைச்சா முடியுதா. இவரை யாரு எலெக்ஷன்ல ஜெயிக்க சொன்னது?”
“சாதனா, நீ தான் ப்ரீதாவை பார்த்துக்கணும். அவ உன்னை மாதிரி பொறுப்புக் கிடையாது.” ஜோதி சொல்ல… ப்ரீதா அவரை முறைத்தாள்.
அவளைப் பார்த்து சிரித்த ஜோதி “சும்மா சொன்னேன் டி. பக்கத்து பக்கத்தில இருக்கீங்க. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருங்க.”
“சாதனா, உடம்பை பார்த்துக்கோ…. இப்ப குழந்தைக்கு எல்லாம் ஒன்னும் அவசரம் இல்லை. இன்னும் ஒரு வருஷம் கூட போகட்டும். நீயும் ரிஷியும் அங்க இங்க போயிட்டு வாங்க. குழந்தை வந்திட்டா எங்கையும் போக முடியாது.” என்றவரை சாதனா திகைப்பாக பார்க்கும் போதே….
“பாட்டி உன்னை எதாவது பேசிட போறாங்கன்னு தான் மாமா அவங்களையும் சேர்த்து சென்னைக்கு இழுத்திட்டு போறாரு. நீயும் ரிஷியும் ப்ரீயா இருங்க.” என்றார்.