காதல்-2
It’s the little things in life
“பட்டுச் சிரிப்பில்
உள்ளம் சரிந்திட
அகம் நனைந்தது
ஆசை சாரலில்..!!”
செங்கதிரோனின் கைரேகைகள் வானெங்கும் படர்ந்து இருள் நீக்கியதில் சர்வியின் சன்னல் வழியாய் பளீர் வெளிச்சம் அவள் அறையெங்கும் படர்ந்தது.
சற்று மங்கலான ஆரஞ்ச் நிற திரை சீலைகளும்… மங்கிய மஞ்சள் நிற சுவரும் பளீரென்றானது.. அவள் அவ்வறையை வடிவமைத்ததே இதை நினைத்துதானே… காலை கதிரவனின் ஒளி படரும்பொழுது அவ்வறை அதை அழகாய் பிரதிபலிக்க வேண்டும். மஞ்சளிலும் ஆரஞ்சிலும் பட்டுத் தெறித்து தரையில் விழும் கதிரொளி அவள் மனதில் புத்துணர்வை புகுத்த வேண்டும். அதனாலையே அவளறையில் பெரிது சிறிதென ஒவ்வொன்றையும் அவளே பார்த்து பார்த்து செய்திருந்தாள்.
சூரிய ஒளி சுள்ளென்று முகத்தில் அடிக்க எத்தனையாவது முறையாகவோ ஃபோன் அலாரத்தை ஸ்னூஸ் செய்ய உயர்ந்த கை பாதியிலேயே நின்றது.
அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து சென்று ஆதிராவை பார்த்து வந்தவள் வந்த பின் படுக்கையில் இப்படியும் அப்படியுமாய் புரண்டு… பல பொஸிஷன்களை மேற்கொண்டென கடைசியாய் ஐந்து ஐந்தரைக்கு கண்ணயர்ந்திருந்தாள்.
அவளது அலாரங்கள் அனைத்தும் ஐந்தில் இருந்து ஆறரை வரை பத்து நிமிடங்களுக்கு ஒன்று.. இருபது நிமிடங்களுக்கு ஒன்றென விடாமல் அடிக்குமாறு வேறு வைத்திருந்தாள். அதுவோ நேரம் காலம் பாராமல் அடித்து வைக்க கையை மட்டும் நீட்டி ஸ்னூஸ் செய்தவாரே அத்தனை அலாரங்களையும் கடந்தவள் கடைசி ஒன்றில் அடித்துப்பிடித்து எழுந்தமர்ந்தாள்.
அவள் கண்ணெதிரே சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரம்கூட தெரியாதளவு தூக்க கலக்கம் ஒரு புறமென்றால் மறுபுறம் அவளது எடையில் பாதியான முதுகு வரை நீண்டிருந்த சுருள் முடி அவள் உருண்டு புரண்டதில் அவள் தோள்தளைச் சுற்றி படர்ந்திருந்தது.
அத்தனை முடியையும் காதுக்கு பின் ஒதுக்க முயன்றவளாய் பக்கத்தில் கிடந்த ஃபோனை எடுத்துப் பார்த்தாள். மணி ஆறரை என்றது. நிம்மதி பெருமூச்சொன்றுடன் பொத்தென அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறு பின்னால் சரிந்தவள் பின் தன் இரு கைகளாலும் முகத்தை மூடி ஒரு முழு நிமிடம் அப்படியே அசையாமல் இருந்தாள். இன்னும் நேரமிருக்கிறது.. என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாய் மெல்ல எழுந்தமர்ந்தவளின் கறுப்பு நிற கயிறு கட்டப்பட்டிருந்த இடது கால் தரையில் பதிந்தன…
பொதுவாகவே சர்விக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையில்லைதான். ஆதிரா திருஷ்டி கழிக்கிறேன் என்று அவளை நிற்க வைக்கும் பொழுதெல்லாம் அவளை எத்தனை கிண்டலடித்திருப்பாள்? ஆனால் ஏனோ இந்த கறுப்பு கயிறு அவள் கால்களுக்கு வெகுவாய் பொருந்திப்போவதாய் ஒரு எண்ணம்.. அதனாலையே விரும்பி கட்டிக் கொண்டாள். நம்பிக்கை ஏதுமின்றி பிடித்தத்திற்காகவென கட்டப்பட்டது…
முகம் கழுவி துடைத்து வெளியேறியவள் அடுக்களையினுள் நுழைந்தாள்…
“பட்டூஸ் டீ தாயேன்..” என்றவாரே
[the_ad id=”6605″]
அடர் நீல நிறத்தில் ஆங்காங்கே சிதறியிருந்த ஆரஞ்ச் நிற பூக்களுமான அந்த ஸ்லீவ்லெஸ் டீஷர்ட்டும், அதற்கேற்றார்போல கறுப்பு நிறத்திலான ஷார்ட்ஸுமாய் வந்து நின்றவள் மொத்த கூந்தலையும் உச்சந்தலையில் கொண்டையாக்கியிருக்க அவளது மெலிந்த தேகமும் அடர்ந்த கேசமும் அவளது வயதை இன்னும் குறைத்து அவளை பள்ளி மாணவியாக்கிவிட்டிருந்தது..
அடுக்களையில் செல்லம்மாவிற்கு உதவியாய் நின்றிருந்த ஆதிரா சர்வி கேட்ட அவளது டீயை கலக்கியவாறே மகளை கண்டிக்கவும் தவறவில்லை!
“என்ன சர்வி இது? ஆச்சி பார்த்தா திட்டப் போறாங்க! இன்னுமா குளிக்கலன்னு…” என்க அவளோ சமையல் மேடைமேல் ஒரே ஜம்பில் ஏறியமர்ந்தவளாய் அவள் கையிலிருந்த டீயை வாங்கி பருகியவாரே…
“பசிக்குது பட்டூஸ்! இதுல குளிச்சிட்டு வர வரைக்கும்னா… நோ வே!” என்க ஆதிராவோ,
“ஹ்ம்! இப்போ மட்டும் ஆச்சி பார்க்கனும்! அப்பறம் இருக்கு உனக்கு..”
“என்ன பண்ணுவாங்க? சாப்பாட கட் பண்ணிருவாங்களா.. அப்படி பண்ணா செல்லம்மா சமையல ரொம்பவே மிஸ் பண்ணுவேன்தான்…” என்றவள் செல்லம்மாவிடம் திரும்பி “ ஏன் செல்லம்மா… அப்படி ஏதாவது ஆச்சுனா எனக்கு நீங்க தனியா பேக் பண்ணிரமாட்டீங்க!?” என்று கேலியாய் கேட்க அதை உணர்ந்தவர் இதழிலும் புன்னகை மலர்ந்தது.
ஆதிராதான், “உன் கள்ளத்தனத்துல ஏன் செல்லம்மாவையும் கூட்டு சேர்க்கற!?” என்க
“சரி… அப்போ நான் வேணும்னா பழையபடத்துல வர்றா மாதிரி ஹால்ல டெண்ட் அடிச்சு ‘லோகநாயகி சோறு வேணும்னு’ போராட்டம் பண்ணவா?” என்று தீவிரமாய் கேட்க ஆதிராவின் மனக்கண்ணில் சர்வி சாட்சாத் காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரனாய் தெரிந்தாள்.. நினைத்துப் பார்க்கவே குபீரென்று சிரிப்பு பொங்கிட, அவள் கையில் இருந்த கப்பை பிடுங்கியவராய்…
“போ! போய் குளிச்சிட்டு வா ஓடு!” என்று விரட்ட இரண்டெட்டு எடுத்து வைத்த சர்வி, ஆதிரா ரசத்துக்கு தாளிக்க அதன் வாசத்தை ஆழ்ந்து ரசித்தவளாய்..
“என்ன ஸ்மெல் இது!? உனக்கு மட்டும் எப்படி பட்டூஸ் இப்படி வருது? செம!” என்க அவளை முறைத்தவளோ, “நெய்ல சீரகம் பொறிஞ்சா யார் செஞ்சாலும் அப்படிதான் ஸ்மெல் வரும்… வேணா நீ ட்ரை பண்ணிப் பாரேன்..” என்றிழுக்க அவளோ,
“நோ நோ.. ஒரு உறைல ஒரு கத்திதான் இருக்கனும்.. அது பட்டூஸாகவே இருக்கட்டும்..” என்று நழுவினாள்.
“ஆஹா! நல்லா சமாளிக்கற..” ஆதிராவின் குரலில் கேலி இழையோட இளையவளோ,
“அப்படியில்ல பட்டூஸ்… நாம மனுஷங்கல்லாம் ஏதாவது ஒரு விஷயத்துல யாரயாவது சார்ந்துதான் இருக்கோம்… நான் ரொம்ப இன்டிபெண்டண்ட்னு சொல்லிக்கிட்டாலும் ஏதோ ஒரு விதத்துல நமக்கு யாரோ ஒருத்தர் தேவைப்படறாங்க… அது எதுக்காக வேணாலும் இருக்கலாம்.. இங்க மத்தவங்கள சார்ந்து வாழாத மனுஷன்னு யாரையும் சொல்லிடவே முடியாது. ஏன்னா எல்லாரும் ஏதோ ஒருவிதத்துல இன்னொருத்தர சார்ந்து இருக்கோம், நேரடியாவோ இல்ல மறைமுகமாவோ… அதுக்காக இந்த சுயத்த இழந்து இன்னொருத்தங்க இல்லன்னா நாம வாழவே முடியாதுனு நினைக்கறாங்க பாரு.. அதுதான் தவறான விஷயம்… அது சார்ந்திருக்கிறதில்ல முட்டாள்த்தனம்!..” என்று சர்வி வெகு தீவிரமாய் பேசிக்கொண்டிருக்க
[the_ad id=”6605″]
“இப்போ ஏன் நீ ரொம்ப ஃபிலோஸஃபிகலா இறங்கற சர்வி? இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ?” என்று ஆதிரா சரியான பாய்ண்ட்டை பிடித்துவிட சர்வியோ,
“அதாவது பட்டூஸ்… நான் சொன்னேன்ல எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்துல டிபெண்ட்டண்ட்தான்னு… அதே மாதிரிதான்! நானும் நீயும் சமையலும்… மோரோவர் அதுக்கான கட்டாயமும் எனக்கு வரலையே…” என்று எதையோ கொண்டு வந்து இதில் சேர்த்தவள் லோகநாயகி வரும் அரவம் கேட்டு அறைக்கு ஓடிவிட்டாள்.
அதே சமயம் மற்றொரு வீட்டில்…
கொதிக்க கொதிக்க ஆவி பறக்கும் வெண்ணீர் பானையை தூக்கி வந்து ஃபேனுக்கு அடியில் வைத்தவனுக்கு வேர்த்து விறுவிறுக்க அதை கவனித்தாற்போல ஃபேன் ஆன் ஆனது. ஆனால் இவனிடமோ அர்ச்சனை மட்டும் குறைந்தபாடில்லை.
“இத்தனை வயசாச்சு… ஒரு வெண்ணீர்கூட சரியா வைக்கத் தெரியல! எல்லாம் உங்க அக்காவ சொல்லனும்!!…” என்று கௌதம் சத்தமாய் முணுமுணுப்பதற்கு மிக முக்கிய காரணம் ஒன்றுண்டு.
அது அருண்! தான் குளித்துவிட்டு வரும்வரை வெண்ணீரை பார்த்துக் கொள்ளும்படி இவன் பல முறை அறிவுறுத்திவிட்டு சென்றிருக்க அருணோ வழக்கம்போல் சொதப்பியாயிற்று! வேண்டுமென்று அருண் செய்வதில்லை ஆனால் ஏனோ அப்படியாகிவிடுகிறது.
பேச நினைத்தவனின் மூக்கை தீண்டிய நெய் வாசத்தில் இமை மூடி ஆழ்ந்து சுவாசித்த அருண் “வாவ்!! செம்ம ஸ்மெல்… அப்படியே எங்க அக்கா வைக்கற ரசம் மாதிரி..” என்று ரசித்து உரைக்க இடுப்பில் கை வைத்தபடி முறைத்து நின்றான் கௌதம்.
“அது வெண்ணீர்! அப்போ உங்கக்கா ரசம் வைச்சா இப்படிதான் இருக்குமாக்கும்!? நோட் பண்ணிக்கறேன்..” என்க ஒரு கணம் விழித்த அருண் பின் அடுக்களையினுள் நுழைய அருணுக்கு பின்னாலே நுழைந்த கௌதமின் முகத்தில் இப்பொழுது அசடு வழிந்தது.
“அப்போ இது என்னவாம்?” என்று அடுப்பில் கொதித்து கொண்டிருந்த ரசத்தை காட்டி கேட்க அவனோ ரசத்தை தாளித்துக் கொட்டி மூடிவைத்துவிட்டு திரும்பினான்.
“நெய்ல சீரகம் போட்டு யார் தாளிச்சாலும் இப்படிதான் வாசம் வரும்..” என்றுவிட்டு சாப்பிட எடுத்து வைக்க அருண் மதியத்திற்கு பேக் செய்யவென வேலை வேகமாய் நடந்தது.
“என்ன சொல்லு.. உன் கை மணமே தனிதான்!” என்ற அருணையே வைத்த கண் வாங்காமல் பார்த்த கௌதம், “உங்கக்காவ விடவா?” என்று கொக்கி போட சுதாரித்தவனாய்,
“அக்காவோட ப்ராடெக்ட் அக்காவ போலத்தான இருக்கும்..” என்று நழுவிட
“இத சொல்லியே தப்பிச்சிருங்க.. ஒரு நாளில்லை ஒரு நாள் வசமா மாட்டப் போறீங்க பாருங்க!! அப்போ கவனிச்சிக்கறேன்..” என்றவாரே கிளம்பியவனை ட்ராப் செய்துவிட்டு கிளம்பிய அருணிற்கு வயது நாற்பதை தாண்டி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.
[the_ad id=”6605″]
கல்லூரிப் பேராசிரியராய் இருக்கும் தம்பியுடன் தன் மகனை விட்டுவிட்டு ஆஸ்த்ரேலியா பறந்த மஞ்சரியின் சமயலைப் பற்றிதான் இத்தனை நேர பேச்சும். கௌதம் என்னதான் அக்கா மகன் என்றாலும் அருணுடன் தங்கியிருந்த இந்த ஐந்தாறு வருடங்களிலேயே இருவரிடையும் அத்தனை நெருக்கம் வந்துவிட்டிருந்தது.
கௌதம் சமையல் விஷயத்தில் அப்படியே மஞ்சரியைப்போல செய்வதை ரசித்துச் செய்யும் ரகம். ஆனால் அருணோ அவனுக்கு நேரெதிர்.. சமைப்பதில் என்றுமே கௌதமிற்கு குறையேதும் இருந்ததில்லைதான். ஆனால் தான் கேட்கும் சின்ன சின்ன விஷயங்களில் அவர் கோட்டை விடுவதில் இப்பொழுது நடந்ததைப்போலவே எதையாவது தொடங்க அவர் நழுவிடுவார்.
ஆடாமல் அசையாமல் பொறுமையாய் தன் முன்னிருந்த கண்ணாடியிலேயே கவனம் பதித்து இமைகளுக்கு மேல் ஐ-லைனரிட்டவளை சத்தமெழுப்பி கலைத்தது அவளது ஃபோன்.
ஐ-லைனரை மூடி அதனிடத்தில் வைத்துவிட்டு டேபிளில் கிடந்த ஃபோனிடம் விரைந்தவள் அதை எடுத்துப் பார்க்க அதில் “மாம்ஸ்” என்ற பெயரைத் தாங்கியபடி ஒளிர்ந்தது அந்த பத்து இலக்கங்கள்..!!
சர்விக்கு இந்த அழைப்பு எதற்கென்றும்.. எதனால் என்றும் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஒரு மலர்வு..!! அழைப்பை ஏற்றாள்.
“மாம்ஸ் சௌக்கியமா? என்ன திடீர் தேடல்? அந்த அடுத்தவீட்டு அனகோண்டா எப்படியிருக்கு?” என்று படபடக்க மறுமுனையில் இருந்த ஆதவனின் இதழோ அழகாய் விரிந்தது.
தங்கை மகள் என்பதை தாண்டி சர்வசக்தி அவரது செல்லமகள். அதிக நாட்கள் ஒன்றாய் கழித்திராவிடினும் சர்வி அவரிடமும் அவர் குடும்பத்திடமும் காட்டும் ப்ரியமும் நெருக்கமும் அலாதியானது. அதுமட்டுமின்றி, எப்படி என அவரை பல முறை சிந்திக்க வைத்ததும்கூட! முதல் முறை சிறுமியாய் அவள் அவர் வீட்டுக்கு வந்தது இன்னும் நினைவிருக்கிறது… மறக்கக்கூடியவையா அவையெல்லாம்!?
அவள் கேட்கும் அந்த அடுத்தவீட்டு அனகோண்டா ஆதவனின் பக்கத்து வீட்டுப் பெண்மணிதான். ஊரில் ஒருவரை விடாமல் அவர் இழுத்து வைத்து பேசியதில்… ஒரு நாள் கடுப்பு கரைகடந்து சர்வி அவருக்கு வைத்தப் பெயர்தான் அனகோண்டா!