கோகுல் மெல்ல நடந்து அந்த அலங்கார அரங்கத்தை அடைந்துக்கொண்டிருந்தான். மாலை நேர மங்கிய வெளிச்சத்தில், சூரியன் கொஞ்சம்கொஞ்சமாய் விடைபெற்று நிலாமகளை பதவியேற்க சொல்ல, அந்த நேரத்தில் பிரமாண்டமான பலவண்ண விளக்குகளால் ஒளிர்ந்துக்கொண்டிருந்தது அத்திருமண மண்டபம்.
வாயில் அருகே சென்றவனை செயற்கை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெயர் பலகை “ஆதித்யதேவ் வெட்ஸ் தன்யா” என்ற எழுத்துக்களுடன் இன்முகத்துடன் வரவேற்றது.
இருபக்கமும் தும்பிக்கை தூக்கிய உயிரற்ற யானைகள் வாயிற்காவலர்களாய் நிற்க, அதைத்தாண்டி உள்ளே சென்றான் கோகுல். சந்தனத்தட்டு நீட்டப்பட்டதோ, பன்னீர் தெளிக்கப்பட்டதோ, ரோஜா இதழ்கள் தூவப்பட்டதோ எதுவும் அவனது சிந்தையை சீண்டவில்லை.
பத்து நாட்களுக்கு மேலாய் மழிக்கப்படாது விட்ட அவன் குறுந்தாடி சொன்னது, ‘கண்ணாடி’ என்ற ஒன்றில் அவன் முகம் பார்க்க மறந்தே பல தினங்கள் ஆனது என்று!!!
குளிரூட்டப்பட்ட அந்த அரங்கத்தில் சர்வ அலங்காரங்களுடன் பகட்டாய் சுற்றிவந்த பெண்களும், அமைதியாய் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் ஆண்களும், அங்கும் இங்கும் ஓடியாடி திரியும் குழந்தைகளுமென கூட்டம் அதிகமாய் இருக்க, கோகுலுக்கு ஏனோ, அவன் மட்டும் தனித்து நிற்ப்பதை போன்று தோன்றியது.
மாலத்தீவில் இருந்து திரும்பி வந்து முழுதாய் முப்பது நாட்கள் ஓடிவிட்டது. ஆனாலும், நேற்று தான் தப்பித்து வந்ததைப்போல, அவன் காதல் கருகி, இறந்து போனதைப்போல தோன்றியது.
தினமும் ரெண்டு பாட்டில் ‘ஜெலூசில்’ குடித்தும் கூட ஜீரணிக்க முடியாத அந்த நாளின் நினைவுக்கு ஓட்டம் பிடித்தான் கோகுல்.
“டேய், எதுக்கு கடத்தி வச்சுருக்கீங்கன்னு சொல்லுங்கடா? விடிஞ்சே போச்சு! இன்னும் இங்கேயே உட்காந்து காராசேவு, வருக்கின்னு தின்னுட்டு இருக்கீங்களே, எப்போதான் உங்க ‘பெரிய பாஸ்’ வந்து ‘பஞ்ச் டைலாக்’ சொல்லுவான்?” எரிச்சலுடன் கத்திக்கொண்டிருந்தான் கோகுல்.
காராசேவை அள்ளி வாயில் போட்டு அரைத்துக்கொண்டே, “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது” என்றான் அல்லக்கை ஒருவன்.
“சரி, எங்க இடத்துலையே எதுக்கு அடைச்சு வச்சுருக்கீங்க?”
“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது”
“அப்ப, மத்தவங்களும் இங்கேயே தான் இருக்காங்களா?”
“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது”
கோகுலும் அல்லக்கைகளும் பேசிக்கொண்டிருக்கும்போதே, மெதுமெதுவாய் தரையோடு நகர்ந்த ஆதி, காராசேவு பேக்கெட் கட் பண்ண வைத்திருந்த ப்ளேடு துண்டை கைப்பற்றியிருந்தான்.
எதை கேட்டாலும் ‘தெரியாது, தெரியாது’ என சொல்ல, அதில் கடுப்பான கோகுல், “நீங்கள்லாம் மனுஷங்க தானா?” என்று கேட்க, அதற்கும், “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது” என்ற பதிலே வர, ‘அடங்கொக்கமக்க” என தரையில் மீனை போல ஆவேசத்தில் குதித்த கோகுலை மதிக்காது, “மெசேஜ் வந்துருச்சு, வீ காட் தி மெசேஜ்” என கூவினான் தலைவன்.
“இருந்து இருந்து நானே இப்போதான் ஒரு சூப்பர் பிகரை உஷார் பண்ணி லவ் பண்ற அளவுக்கு வந்துருக்கேன்! என் கல்யாண ஆசையில கல்லெறிஞ்சுட்டு போய்டாதீங்கடா கிட்னாப் கழுதைங்களா?” என்று கோகுல் கதறுவது அவர்களுக்கு கேட்டது போல் கூட இல்லை.
அல்லக்கைகள் உடனே எழுந்துக்கொண்டு, “அப்போ நம்ம கிளம்புற நேரம் வந்துடுச்சு” என்று வேகமாய் வெளியேற தலைவனும் அவர்கள் பின்னோடு வேகமாய் ஓடினான்.
‘என்ன பண்றானுங்க இவங்க?’ என கோகுல் வேடிக்கைப்பார்க்கும் போதே, “ஹே இடியட்! ஹெல்ப் மீ அவுட்” என அடிக்குரலில் சீறினான் ஆதி.
அவன் முதுகின் பின்னே கட்டியிருந்த கைகளுக்கு இடையே பிடித்திருந்த ‘ப்ளேடு’ கொண்டு கட்டினை அறுத்துக்கொண்டிருந்தான். கோகுலும் தன்னால் இயன்ற மட்டும் அவனுக்கு உதவ, கட்டியிருந்த கயிறு அறுந்து விழுந்தது. ஆதி எழுந்ததும், கோகுலையும் விடுவித்து, கடத்தல் கும்பல் பூட்டாமல் விட்டுச்சென்றிருந்த அவர்கள் அறையை விட்டு வெளியே வர, “எனக்கென்னவோ எல்லாரும் இங்கதான் இருக்காங்கன்னு தோணுது” என்றான் கோகுல்.
ஆதி சில நொடிகள் அந்த விசாலமான விடுதியை சுற்றி கண்களை ஓட்ட, கதவடைக்கப்பட்டிருந்த மூன்று அறைகள் அவனுக்கும் சந்தேகத்தை உண்டுப்பண்ணியது.
இருவருமாய் சேர்ந்து ஒரு அறையின் கதவை வலுக்கொண்டு திறக்க, அதன் உள்ளே சுவரை வெறித்துக்கொண்டு சுரேனும், அவனையே வெறித்தபடி மதுதேவாவும் நின்றிருந்தனர்.
மதுவை அங்கே கண்டதும், “மதூ…!!” என ஆதி விளிக்க, அவனை திரும்பி பார்த்தவள் ஒரே பார்வையில் ஆச்சர்யமாய், “அண்ணா? நீ எப்படி இங்க?” என்றாள்.
அவள் கேட்பதற்குள் அவளை நெருங்கியிருந்தவன், அவள் கைக்கட்டினை அவிழ்க்க, கோகுல் சுரேனின் கட்டுகளை விடுவித்துக்கொண்டிருந்தான்.
மது மீண்டும், “நீ எப்டி இங்க வந்த?” என்று கேட்க, சுரேன், “சிலரை பார்க்கவேக்கூடாதுன்னு நினைச்சாலும் முடிய மாட்டேங்குது, ச்சை” என்றான் வெறுப்பாய்.
அவன் அப்படி சொன்னதும் திரும்பிய ஆதி, “நான் வந்ததே உன்னை பார்க்கத்தான் சுரேன்! உன்னைப்பார்த்து மன்னிப்பு கேட்கதான் நானே வந்தேன்” என்றான்.
சுரேன் கோவத்துடன், “உன் மன்னிப்பு என்னை சரிப்படுத்திடுமா? பழைய மாதிரி மாத்திடுமா? என் தாழ்வுமனப்பான்மையை சரிப்பண்ணுமா? சொல்லு? உன் மன்னிப்புக்கு அந்த சக்தி இருக்குன்னா அதை செய் முதல்ல” என்றான் ஆவேசமாய்.
சுரேனின் கண்கள் கலங்கியிருந்தது. எப்போதும் அவனுக்காய் அவனை எண்ணி கலங்கும் அவன் கண்கள் முதன் முதலாய், மதுவுக்காக, அவள் காதலை ஏற்க முடியாத நிலைக்காக, அவளை தூர நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்காக கலங்கியது.
அவனை நெருங்கிய ஆதி, “நடந்து முடிஞ்சத மாத்துற சக்தி எனக்கு இல்ல சுரேன்!” என்றவன், “நான் கோவத்துல உன்னை அடிச்சப்போ, உனக்கு இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்ப்படும்ன்னு கற்பனை கூட செஞ்சு பார்க்கல! என்னோட ஒரு நிமிஷ கோவத்தை உன்மேல வீசுன ஸ்டெம்ப்ல காட்டிட்டேன்! ஆனா, அதுக்காக, அதை நினைச்சு நான் இந்த நிமிஷம் வரைக்கும் எந்த அளவுக்கு வருத்தப்பட்டுட்டு இருக்கேன்னு எனக்கு தான் தெரியும்” என்றான்.
சுரேன் விரக்தியாய் முகம் சுழிக்க, “நிச்சயதார்த்தம் நின்னு போனதை எனக்கு யாருமே சொல்லல… போன வாரம் அம்மா சொல்லிதான் எனக்கு விஷயமே தெரியும்! நான் செஞ்ச ஒரு தப்பு, என் தம்பி வாழ்க்கையை பாதிக்குதுங்குறப்போ, என்னால சும்மா இருக்க முடியல! அதான் உடனே உன்னை பார்த்து பேசி, மன்னிப்பு கேட்க வந்தேன்! வந்த இடத்துல என்ன என்னவோ ஆகிப்போச்சு” என்று சொல்ல,
“வாட்….???” என ஒருசேர அதிர்ந்தனர் சுரேனும், கோகுலும்.
“உன் தம்பியா?” என சுரேன் திகைத்துப்போக, கோகுல் முதலில் தெளிந்தவனாய், “அப்போ நீ… நீங்க கிருஷ்ணா’வா?” என்றான் வியப்பாய்.
“ம்ம்ம்” என்ற கிருஷ்ணா, “ஆதிக்கு எப்பவுமே ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் கிடையாது! நான்தான் அவுட்டோர் கேம்ஸ்ல இண்ட்ரெஸ்ட் காட்டுவேன்! நான் உன்னை அடிச்சுட்டு அதை அதோட மறந்துட்டேன்! ஆனா, அடுத்த ஒரு வருஷம் கழிச்சு உன்னை யதேட்சையா மும்பைல பார்த்தப்போ தான் நான் செஞ்ச தப்போட வீரியம் புரிஞ்சுது! அப்போ ஆதிக்கிட்ட தான் இதை சொல்லி சொல்லி நான் வருத்தப்பட்டுட்டு இருந்தேன்!” என்றான் கிருஷ்ணா.
“கிரிக்கெட்ன்னு சொன்னதுமே எங்க வீட்ல இருந்த எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு, இதை செஞ்சது ஆதி இல்ல நான் தான்னு! ஆனா, ஆதி யாரையும் உண்மை என்னன்னு சொல்ல விடல! தப்பு செஞ்சது நம்ம குடும்பத்து ஆள் தானே, சுரேன் மன்னிக்குற வரை எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிருக்கான்” என்று சொல்ல,
“ஆமா, நான்கூட அன்னைக்கே இதை சொல்ல வந்தேன்! ஆதி தான் சொல்ல விடாம தடுத்துட்டான்” என்றான் கோகுல்.
சுரேன் மௌனம் சாதிக்க, “உன்னையும் உன் தங்கச்சியையும் எப்படியாவது சமாதானப்படுத்திட்டு அதுக்கு பிறகு உண்மையை சொல்றேன்னு சொன்னான்… எனக்கு தான் பொறுமை இல்லை! என்னால என் தம்பிக்கு ஒரு கஷ்டங்குறப்போ, தூக்கம் கூட வரல! அதான் யார்க்கிட்டயும் சொல்லாம கிளம்பி வந்துட்டேன்” என்றான் ஆதி… ச்சை கிருஷ்ணா…ஹிஹி!
சுரேனுக்கு இதற்கு முன்பு இருந்த ஆக்ரோஷமும், ஆவேசமும் இப்போது இல்லை! ஏனோ சற்று தணிந்திருந்தது. அது மது’வால் என்றால் மிகையல்ல.
“யார் செஞ்சாலும் தப்பு தப்பு தான்! ஆனா, உங்க தங்கட்சிக்காக இந்த கல்யாணத்துக்கு நீங்க ஒத்துக்கலாம் இல்லையா?” என்றான் கிருஷ்ணா.
சுரேன் நீண்ட மௌனத்தை தொடர, “அதான் சாரி கேட்டுட்டியே ண்ணா… போலாம் வா” என்றாள் மதுதேவா, சுரேனை திரும்பியும் பாராது.
கிருஷ்ணாவுக்கு அப்போது தான் அவர்கள் கடத்தப்பட்ட நினைவே வர, “நம்மளை யாரு கிட்னாப் பண்ணாங்கன்னு தெரிஞ்சுதா?” என்றான் மதுவிடம்.
சுரேன், “இங்கிருந்து முதல்ல போகலாம், அப்பறம் பேசிப்போம்” என்றவன் அங்கிருந்து வெளியேற, ரெசார்ட்டின் வெளிப்பக்க கதவுகள் திறக்கப்பட்டு, அதன் வழியே துரிதமாய் நுழைந்துக்கொண்டிருந்தனர் தெய்வாவும் லட்சுமியும், கூடவே இனியன் இளஞ்செழியனும்…!
இனியனை கண்டதும், “பா…ஆஆஆஆ…ஸ்” என்ற ஆனந்த கூவலோடு ஓடி சென்ற கோகுல் அவனை அணைத்துக்கொள்ள, “நீயும் இங்கே தான் இருக்கியா?” என்றான் இனியன் வியப்பாய்.
“என்ன பாஸ்? நீங்க தானே சுரேன் சார்க்கிட்ட ரெக்கமென்ட் பண்ணி இந்த வேலை வாங்கி குடுத்தீங்க?” என கோகுல் உரிமையாய் முகம் சுளிக்க, “அத சொல்லல கோகுல், கிட்னாப் பண்ணதுல நீயும் மாட்டிருக்கியேன்னு கேட்டேன்” என்ற இனியன் சுரேனையும் அவன் உடன் இருந்த மூவரையும் தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.
கோகுலோ, “ஆமா பாஸ், கடத்துனதும் இல்லாம விடிய விடிய என்னை பார்க்க வச்சு சாப்பிட்டே டார்ச்சர் பண்ணிட்டானுங்க!” என்றவன், “அவுகளை விடாதீஹே! அடிச்சு கொல்லுஹே!” என ‘காதல் தண்டபாணி’ போல கோபமாய் பேச, அங்கே சூழ்நிலை இலகுவானது.
மகளை கண்டதும் தெய்வா, “மதுக்குட்டி! எப்படிடா இருக்க? உனக்கு ஒன்னும் இல்லல?” மகளை நெருங்கி பரிச்சோதித்தவர், “நீ எதுக்குடா அமெரிக்கால இருந்து வந்த?” என கிருஷ்ணாவையும் கடிய ஆரம்பித்தார்.
சுரேன், “தேங்க்ஸ் அண்ணா! என்னோட இன்வைட் ஏத்துக்கிட்டு இங்க வந்ததுக்கு!!!” என இனியனிடம் கரம் குலுக்க, “தம்பி மட்டும் இல்லன்னா இந்நேரம் நாங்க உங்களை எல்லாம் காணாம, என்ன செய்யுறதுன்னு தெரியாம தவிச்சுப்போயிருப்போம்!” என தெய்வா சொல்ல, அவரைக் கண்டு மெலிதாய் சிரித்தான் இனியன். அவன் கண்களும் சிரித்ததோ!?
லட்சுமி, “ஆமா சுரேன்! புது கட்டடத்துல தேடணும்ன்னு எங்களுக்கு தோணவே இல்ல, தம்பி தான் இந்த இடம் விட்டு எங்கயும் போயிருக்க மாட்டாங்கன்னு சொல்லி இங்க தேடி வந்துச்சு! சரியா, நீங்களும் இங்கேயே இருக்கீங்க!” என்று சொல்ல, இனியனுக்கு நன்றி உரைத்தான் சுரேன்.
இனியன் அவனது புன்னகை மாறாது, “தெய்வாம்மா! இவ்ளோ நேரமும் ‘ஒரே ஒரு புருஷனை காணோம், ஒரே ஒரு புருஷனை காணோம்’ன்னு சொல்லிட்டே இருந்தீங்களே தவிர, ஒருமுறை கூட உங்க பொண்ணை காணோம்ன்னு சொல்லவே இல்லையே!” என விஷமமாய் சிரிக்க, “ஹிஹி… புருஷனை காணோங்குற அதிர்ச்சில மறந்துட்டேன் தம்பி” என்ற தெய்வா, “ஆமா, எங்க என் புருஷனை காணோம்?” என அவசரமாய் பதற, அங்கே மீதமிருந்த இரு அறைகளில் ஒன்றை வலுக்கொண்டு திறந்தனர்.
உள்ளே கதவை உடைப்பதற்கான மார்க்கத்தை தேடிக்கொண்டிருந்த ராஜகோபாலும், ஜெயதேவும், கதவு தானாக திறக்கப்பட்டதும் மகிழ்ச்சியடைய, “என்னங்கஆஆஆஆ….” என்ற தெய்வா, “என் தாலிபாக்கியம் உங்களை காப்பாத்திடுச்சு” என பாச மழை பொழிந்ததில் சகஜமாகி போனார்.
ராஜகோபாலிடம், “நான் சொல்லல, என் பொண்டாட்டி வந்துடுவான்னு!?” என்ற ஜெயதேவுக்கு பெருமை தாளவில்லை.
கட்டுகள் அவிழ்த்துவிடப்பட்டதும், கணவரை முன்னும் பின்னும் சுற்றி வந்து சில முறை பார்த்த தெய்வா, “கடத்துனவன், ஒரு அடி கூடவா அடிக்கல?” என்று கேட்க, இனியனுக்கு தெய்வாவை கண்டு பெரும் சிரிப்பாய் இருந்தது.
சுரேன், “யாரு, எதுக்காக இப்படி செஞ்சாங்கன்னு தெரியல அண்ணா! உங்களால முடிஞ்சா கண்டுபிடிக்க முடியுமா?” என்று கேட்க, லட்சுமியும், “அந்த பிரகாஷ் மேல தான் சந்தேகம் தம்பி, கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்” என்றிட, தெய்வாவை ஒரு பார்வை பார்த்த இனியன், “ட்ரை பண்றேன்” என்றான் இன்முகமாக.
அவனது திறமைக்கும், தகுதிக்கும், ஆழ்ந்துணரும் சிந்தைக்கும் பற்பல பெரும் வழக்குகளையே அனாயசமாய் முடித்தவனுக்கு இது வெறும், ‘பெட்டி கேஸு’… அவ்வளவே! ‘நாரதர் கலகம்’ போல ஏதோ ஒரு நன்மைக்கே இது நடத்தப்பட்டிருப்பதாய் இனியனுக்கு தோன்றியது. எவ்வித பாதிப்பும் இல்லாத இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்றே எண்ணினான் இனியன்.
சுரேனிடம், “திறப்புவிழா’க்கு கெஸ்ட்டா கூப்பிட்ட! நான் இப்படி பங்க்ஷன் டைமுக்கு முன்னாடியே யாரும் இல்லாம, ரெசார்ட் ஓபன் பண்ணிட்டேன்! சாரி” என்றான் இனியன்.
“அட இதுல என்ன அண்ணா இருக்கு? எங்களுக்காக தானே செஞ்சீங்க?” என்ற சுரேன் ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற ரீதியில் பேச, அங்கிருந்த அனைவரிடமும் விடைப்பெற்று சென்றான் இனியன் இளஞ்செழியன்.
(நாமும் ‘டாட்டா’ சொல்லுவோம்…)
அனைவரும் ரெசார்ட்டை விட்டு வெளியேற போக, லட்சுமி மட்டும் பதைபதைப்பாய், “ஏங்க, தன்யாவை காணோமேங்க?” என்றார் ராஜகோபாலிடம்.
“என்ன சொல்ற?” என அவர் பதற, “அவளையும் கடத்தினாங்களா?” என அதிர்ந்த சுரேன், “கண்டிப்பா இந்த ரூம்ல தான் இருக்கணும்” என்று சொல்லி மீதமிருந்த அறையை திறக்க, அவன் கணிப்பு போல அங்கே தான் இருந்தாள் தன்யா. ஆனால், மயங்கிய நிலையில்…
அருகே பிரியா(!?) அமர்ந்து, “ஏந்துரு தனு, ஏந்துரு” என கூவ, எல்லோரும் தன்யாவை நெருங்கி ‘என்ன ஆச்சு?’ என ஆராய்ந்தனர் என்றால், கோகுல் அவர்களை விட வேகமாய் ப்ரியாவை நெருங்கி, “யூ டூ டார்லிங்?” என அவளை அருகே இழுத்திருந்தான்.
கோகுல், “உன்னையும் விட்டுவைக்கலையா அந்த காட்டுக்குரங்குங்க?” என்றவன், “ஆர் யூ ஓகே பேபி?” என பரிவாய் விசாரிக்க, மயங்கி கிடக்கும் தன்யாவை சிறு பதட்டமாய் பார்த்துக்கொண்டே, “ம்ம்ம்… ம்ம்ம்…” என தலையாட்டினான்(ள்).
“நேத்து நைட்ல இருந்து உன்னை பார்க்காம எனக்கு கைக்கால் ஓடல தெரியுமா?” என்க, “எப்டி ஓடும்? அதான் கட்டி வச்சுருந்தாங்களே!!” என்றாள் பிரியா கடுப்பாய்.
“பாரேன்!!! என்னை கட்டி வச்சுருந்தாங்கன்னு கூட உனக்கு தெரிஞ்சுருக்கு?” என ஆச்சர்யம் காட்டிய கோகுல்,
“உன்னையும் கடத்திருக்காங்க, என்னையும் கடத்திருக்காங்க…
உன்னையும் கட்டி வச்சுருந்துருக்காங்க, என்னையும் கட்டி வச்சுருந்துருக்காங்க…
அப்போ இது லவ் தானே ஜெசி… ச்சை.. ப்ரியோ?” என வசனம் பேச, அங்கே தன்யா தன் மயக்கத்தில் இருந்து தெளிந்தாள்.
கண்களை திறந்ததும் எதிரே நின்றிருந்த பிரியாவை கண்டவள் பேயை கண்டதை போல அலற ஆரம்பிக்க, எங்கே மீண்டும் மயங்கி விழுந்துவிடுவாளோ என பதறிப்போன பிரியா, சட்டென்று தன் தலையில் இருந்த ‘விக்’கை கழட்டி வீசிவிட்டு, “நான் சும்மா சொன்னேன் தனும்மா! நான் உன் தேவா தான்… உன்னோட தேவா! ஆதித்ய தேவ்… என்னை நல்லா பாரு” என முடிந்தமட்டும் தன் ‘மேக்கப்’பை கலைக்க, பெண்குரல் நீங்க, கணீரென்று ஒலித்த அவன் குரலிலும், அலங்காரம் களைந்த அவன் தோற்றத்தையும் கண்டு தெளிந்தவள்,
“ஏன்டா இப்படி செஞ்ச?” என அழுகையோடு அலறிக்கொண்டு அவன் நெஞ்சம் புகுந்தாள். தன் நெஞ்சில் வந்து விழுந்தவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டவன்,
“நீதானே தனும்மா சொன்ன, ஒரு பொண்ணால தான் நான் சொல்றதை உணர முடியும்ன்னு! அதான் சும்மா ‘லேடி கெட்டப்’ போட்டு பார்த்தேன்!” என ஆறுதலாய் சொல்ல,
“அடப்பாவி பயலே!” என அதிர்ந்துப்போனார் ஜெயதேவ்.
மதுக்கூட, “என்ன ண்ணா இப்படி பண்ணிருக்க?” என ஆச்சர்யமாய் கேட்க, “என் தனுக்காக பண்ணேன்! அவளை வேற எப்படி அப்ரோச் பண்றது, கன்வின்ஸ் பண்றதுன்னு தெரியல எனக்கு” என்ற ஆதி, வாயை பிளந்தபடி நின்றிருந்த தன் இரட்டை சகோதரனை பார்த்து, “உன்னை வராதன்னு தானே சொன்னேன்?” என்றான் கோபம் போல்.
“உன் கல்யாணத்தை விட எதுவும் முக்கியம் இல்ல எனக்கு” என்றான் கிருஷ்ணா.
ஆதியின் அணைப்பில் இருந்து விலகாத தன்யா, “முதல்ல இந்த புடவையை கழட்டு, கன்றாவியா இருக்கு” என்றாள் முகம் சுளித்து.
அவள் அணைப்பும், பேச்சுமே சொன்னது, இனி அவள் ஆதியை விட்டு பிரியப்போவதில்லை என்று…!!!
என்னதான் கோபம் இருப்பினும், தங்கையின் விருப்பத்தின் முன்னே, அதற்கு குறுக்காய் நின்று, அவள் புன்னகையை வாடச்செய்ய, சுரேன் போன்ற ஒரு பாசக்காரனுக்கு மனம் வருமா என்ன?!
எல்லாரும் பிரச்சனை ஓய்ந்து, பிள்ளைகள் தெளிந்ததில் நிம்மதியாக, பத்து நிமிடங்களுக்கு முன்பு, அதிர்ச்சியில் ‘படாரென்ற’ சப்தத்துடன் நெஞ்சு வெடித்து, சுவரில் சாய்ந்து, வாய்க்குள் ரெண்டு குழவி போனது கூட தெரியாமல், உச்சகட்ட பேரதிர்ச்சியில், நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்றிருந்த கோகுலை ஒருவரும் கண்டுக்கொண்டப்பாடில்லை.
அவனுக்கு பேக்ரவுண்டில், ‘தில்லு…வாலே புச்சுடேனேக்யாஆஆஆ…. ஓஓஓஒ’ என அலறிக்கொண்டிருந்தது.
இந்த ‘கோர சம்பவம்’ நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்தது.
அந்த நினைவுகளுடனே அரங்கத்தை வெறித்துக்கொண்டு நின்றவனை, “அடேய், சோம்பேறி பயலே… இங்க என்னடா மசமசன்னு நின்னுக்கிட்டு, இருவது வருஷம் கழிச்சு ஊருக்கு வந்த ‘ஆட்டோக்ராப் சேரன்’ மாறி வேடிக்கை பார்த்துட்டு இருக்க? பிரண்ட் ரிசெப்ஷனுக்கு இப்படிதான் கடைசி நேரத்துல வந்து நிப்பியா?” ப்ரேக் பிடிக்காத ரயில்பெட்டி போல ‘ஹைஸ்பீடில்’ பேசிக்கொண்டே போனார் தெய்வா.
“சும்மா நிறுத்துங்க ஆன்ட்டி! ‘சேர்’ போடுறதுல இருந்து தோரணம் கட்டுற வரைக்கும் இங்கேயே பலியா கிடந்து வேலை செஞ்சுருக்கேன், ஒரு அரைமணி நேரம் குளிச்சுட்டு வரேன்னு போனதுக்கு இத்தனை பேச்சு ஆவாது!” என கோகுல் பொரிய, “சரி, சரி… ரொம்ப பேசாத” என்ற தெய்வா, “அந்த போட்டோக்ராபர் தம்பிக்கு ஏதோ ஹெல்ப் வேணுமாம்! என்னனு கேட்டு பண்ணு” என விருந்தினரை உபசரிக்க ஓடிவிட்டார்.
மேடையில் ஆதி தன்யாவுடன் அத்தனை நெருக்கமாய் அன்னியோன்யமாய் நிற்க, பார்க்கும் கண்கள் எல்லாம் நொடியேனும் அவர்கள் பொருத்தம் கண்டு பொறாமை கொள்ளாமல் இல்லை.
ஆதியை பார்த்துக்கொண்டே மேடை அருகே சென்ற கோகுலுக்கு,
‘நான் இதை சொல்லியே ஆகணும்… நீ அவ்ளோ அழகு… இதுவரைக்கும் யாரும்….
‘உனக்கு ஒன்னும் தோணலையா பிரியா… என்னை பார்த்ததும் ஜில்லுன்னு காத்தடிச்சு மனசு பறக்குறமாறி…
‘உன்னைத்தேடி கண்டுபிடிக்கவே எனக்கு 27 வருஷமாச்சு… இதுக்கு மேல ஒருநிமிஷம்கூட….
‘நான் உன்னை விரும்பல, உன்மேல ஆசைப்படல… நீ அழகா இருக்கன்னு…
‘உன்னை பார்த்ததும் தோணுச்சு, நீதான் என் வாழ்க்கைன்னு! நீ இல்லாம இனி ஒரு நிமிஷம் கூட என்னால வாழ முடியாதுன்னு தோனுச்சு!”
பிரியாவை பெண்ணென்று நினைத்து அதுவரை கோகுல் அள்ளி வீசியிருந்த காதல் வசனங்கள் எல்லாம் அவன் காதுக்குள் ரீங்காரம் போல சுற்றி சுற்றி வர, “ஐயோ! போயும் போயும் இவன்கிட்டயா அந்த வழி வழிஞ்ஜோம்?” என ஆயிரத்தி பத்தாவது முறையாக அவன் வருந்தும்போது, “சார், நல்லா தூக்கி புடிங்க சார்” என போட்டோக்ராபர் லைட்டை அவன் கரத்தில் திணித்திருந்தார்.
திருமணம், ஜெயதேவ் ராஜகோபாலின் கிராமத்தில் மண்மணம் மாறாது நடந்து முடிந்திருக்க, உடனே, மகாராஷ்டிரா கிளம்பியவர்கள் அங்கே பிரம்மாண்டமாய் ஒரு வரவேற்ப்பு நிகழ்வு ஏற்ப்பாடு செய்தனர்.
அதை முடித்த கையோடு சென்னை வந்தவர்கள் ராஜகோபாலின் தொழில்முறை உறவுகளுக்காக மீண்டுமொரு ‘வரவேற்ப்பை’ வைக்க, இரவு விருந்தில், தன்னோடு வந்திருந்த தன் தோழிகளுக்கு ‘என்ன வேண்டும்?’ என கேட்டு கேட்டு பரிமாறிக்கொண்டிருந்தாள் மதுதேவா.
இந்த ஒரு மாதத்தில் மொத்தமாய் சுரேனை தவிர்த்திருந்தாள் மதுதேவா. அவள் நிராகரிப்பில் அவன் தான் திண்டாடிப்போனான்.
அவளை ‘வேண்டாம்’ என்று சொல்ல என்ன என்ன காரணங்களை அடுக்கினானோ, அது அத்தனையும் இப்போது அவன் நினைவில் கூட இல்லை.
“மது… உன்கிட்ட” சுரேன் பேச நெருங்கும்போதே அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தாள் அவள்.
அவனும் கொஞ்சமும் சளைக்காது, மீண்டும் மீண்டும் அவளை நோக்கியே படையெடுக்க, தோழிகள் கூட, “பாவம்டி! நின்னு என்னனு தான் கேளேன்!” என்று இரக்கப்பட்டனர்.
ஆனால் இறங்க வேண்டியவளோ, “எதுக்குடி? நான் போய் பேசுனா அவரோட சொத்தையெல்லாம் எனக்கு எழுதி வச்சுடுவாரு! நான் வேற இவர் குடுக்குற காசுல தானே உயிர் வாழனும்!” என்றாள். தோழிகளுக்கு அவள் பேச்சு புரியாவிடினும், சற்று அருகே நின்றிருந்த சுரேனுக்கு அவள் பேச்சின் பொருள் நன்றாய் உரைத்தது.
‘அவன் கொடுக்கும் பணத்தில் தான் அவள் வாழ வேண்டும் என்பது இல்லை!’ என்பதை குத்தலாக நினைவுப்படுத்திவிட்டு சென்றிருந்தாள்.
சுரேனுக்கு அன்று அவன் பேசிவிட்டது அதிகப்படி தான் என்பதை எப்போதோ உணர்ந்திருந்தான். மதுவை இழக்கக்கூடாது என்ற திண்ணமான முடிவுக்கு வந்துவிட்டவன், அடுத்து கொஞ்சமும் நிற்காது விறுவிறுவென சென்று ஜெயதேவின் முன்னே நின்றான்.
சுரேன் வேகமாய் செல்வதை பார்த்திருந்த மதுவும், அவன் பின்னோடு ஓட, ஜெயதேவிடம் சுற்றி வளைக்காமல், எந்தவித முகாந்திரமும் இல்லாமல், “எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் செஞ்சு குடுப்பீங்களா அங்கிள்?” என கேட்டிருந்தான் சுரேன்.
அருகே இருந்த ராஜகோபால், லட்சுமிக்கே இது பெருத்த அதிர்ச்சியாய் போனது.
மது, சுரேனுக்கு மனைவியாய் அமைந்தால் அவர்களை விட மகிழ்ந்து போக கூடியவர் எவரும் இல்லை எனினும், மகனது இந்த இடம், பொருள், ஏவலற்ற பேச்சு அவர்களை அதிர்ந்துப்போக செய்தது.
“என்ன சுரேன் பேசுற?” லட்சுமி அதட்ட, “சொல்லுங்க அங்கிள்… எனக்கு உங்க பொண்ணை குடுப்பீங்களா?” என மீண்டுமாய் கேட்டான் சுரேன்.
ராஜகோபால் தம்பதி அளவுக்கு ஜெயதேவ் தம்பதியிடம் எந்தவித திகைப்பும் இல்லை.
சுரேனை நிதானமாய் பார்த்த ஜெயதேவ், “இப்படி திடீர்ன்னு கேட்டா நான் என்ன நினைக்கிறது?” என்று கேட்க, “எனக்கு மதுவை ரொம்ப பிடிச்சுருக்கு அங்கிள்! எனக்கு அவ வேணும்! உங்க பையனால எனக்கு இப்படி ஆனதுக்கு பிராயசித்தமாவோ, பரிகாரமாவோ நினைச்சு அவளை நீங்க எனக்கு கட்டித்தரக்கூடாது! என்னை முழுசா நம்பி, என்மேல அபிப்பிராயம் இருந்தா மட்டும் சரி’ன்னு சொல்லுங்க” என்றான் உறுதியாய்.
தெய்வா, “ஒருவேளை நாங்க குடுக்க மாட்டோம்ன்னு சொல்லிட்டா?” என்று கேட்க, சில நொடிகள் நிதானித்து, மதுவை ஒரு ஆழ் பார்வை பார்த்த சுரேன், “மதுவை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று சொல்ல,
“அடேங்கப்பா! என் மருமவனுக்கு திடீர்ன்னு இத்தனை வீரம் எங்கிருந்து வந்துச்சாம்?” என ஆச்சர்யமாய் கேட்டு, தெய்வா சிரிக்க, “எல்லாம் உன் பொண்ணுக்கிட்ட இருந்து வந்துருக்கும்” என ஜெயதேவும் சேர்ந்து சிரிக்க, ‘என்னடா நடக்குது?’ என திகைத்துப்போய் சுரேன் மதுவை பார்த்தால், அவளோ அங்கே வெட்கமும் சிரிப்பும் போட்டிப்போட கன்னச்சிவப்புடன் நின்றிருந்தாள்.
“மது, வாட்ஸ் ஹேப்பெனிங்?” சுரேன் மெல்லமாய் கேட்க, “அவளை எதுக்கு மாப்பிள்ளை கேட்குறீங்க! எங்கக்கிட்ட கேளுங்க” என்றார் ஜெயதேவ்.
“மாலதீவுக்கு பிளைட் ஏறுறதுக்கு முன்னாடியே உங்க காதல் சமாச்சாரம் எல்லாம் எங்களுக்கு தெரியும்! நீங்க சரின்னு சொல்ற வரைக்கும் ராஜாக்கிட்டயோ உங்கக்கிட்டயோ இதைப்பத்தி பேசக்கூடாதுன்னு என் பொண்ணோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்… அதான் நீங்க எப்போ வாயை திறந்து ஒகே சொல்லுவீங்கன்னு மதுவுக்கு மேல ஆர்வமா நாங்க காத்திருந்தோம்” என்ற ஜெயதேவ்,
“என்ன ராஜா? என் பொண்ணை மருமகளாக்கிக்க சம்மதமா? சீதனமெல்லாம் ரொம்ப கேட்டுடாதப்பா, ஏதோ எங்களால முடிஞ்சதை செய்யுறோம்” என்றார் பாவம் போல, விளையாட்டாய்.
எதிர்ப்பாராத மகிழ்ச்சியில் லட்சுமிக்கு கண்கள் குளம் கட்டிட, ராஜகோபால், “என்னடா நீ இப்படியெல்லாம் பேசுற?” என ஆனந்த மிகுதியில் ஜெயதேவின் தோள் அணைத்தார்.
ஜெயதேவ், “இப்பவரைக்கும் மாப்பிள்ளை வீடா இருந்தோம்… இனிமே பொண்ணு வீடுள்ள? கொஞ்சம் தழைஞ்சு தானே போகணும்” என்றார் மீண்டும் கிண்டலாய். ‘டேய்…’ என நண்பர்கள் இருவரும் உரிமையாய் விளையாடிக்கொள்ள, சுரேனுக்கு அவன் காதல் இத்தனை எளிதாய் திருமணத்தில் கனியப்போவதை எண்ணி உள்ளம் மகிழ்ச்சி கூத்தாடியது.
“சீக்கிரமே நமக்கு கல்யாணம்” என்றான் மதுவிடம் கிசுகிசுப்பாய்.
“அது எவ்வளோ சீக்கிரம் நடக்கப்போகுதுங்குறது உங்க கைல தான் இருக்கு” என மதுவும் கிசுகிசுப்பாய் பீடிகை போட,
“என்ன சொல்ற?” என்றான் அவன்.
“உங்க கண்ணுல மாட்டிக்கிட்டே சுத்துறீங்களே, இந்த கண்ணாடி… இதை எப்போ கழட்டி வீசிட்டு இயல்பா இருக்கீங்களோ, அதுக்கு அடுத்த நாளே கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்றவள், “இதான் என் முடிவு” என உறுதியுடன் சொல்லிவிட்டு நகர,
“மது… மது… ப்ளீஸ்” என கத்திக்கொண்டு சென்றவனை அவள் கண்ணெடுத்தும் பாரவில்லை.
மதுவின் பிடிவாதம் தான் அவன் அறிந்தது ஆயிற்றே! இனி கண்ணாடியை கழட்டி வீசுவதை தவிற அவனுக்கு வேறு வழியிருப்பதாய் தெரியவில்லை.
கட்டிளம் காளையும் தலைகுனிந்து செல்லும், காதலின் முன்னே…!!!