நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வீட்டுக்கு வந்த மகளையும் மகள் தோழியையும் பார்த்த லட்சுமி “என்னம்மா எப்படி இருக்கீங்க? எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிடுச்சா? நல்லா எழுதினீர்களா?” என்று ஆர்வமாக விசாரித்தார்.
“நல்லா எழுதி இருக்கிறோம் அம்மா.” என்று கவிதா உற்சாகமாக கூறவும் வெண்மதி அமைதியாக இருந்தாள்.
அவள் முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது. லட்சுமி
“என்ன மதி சோகமா இருக்க?” என்று கேட்க
கவிதா “காலேஜ் முடிஞ்சிடுச்சு இல்லையாம்மா? நாங்க எல்லோரும் பிரிஞ்சி போயிடுவோம். அதனால வெண்மதி கொஞ்சம் சோகமா இருக்கா. அவ்வளவுதான்.”
“அவ்வளவுதானா? இதுக்கு ஏன் இவ்வளவு சோகமா இருக்க மதி? கவிதா வீடு பக்கத்துல தானே இருக்கு. எப்ப பாக்கணும்னு தோணுதோ. அப்போ போய் பார்த்துட்டு வா.” என்று கூறி மகளுக்கு சமாதானம் கூறினார் லட்சுமி.
வெண்மதி “நீங்க சொல்றது கரெக்ட் தான் மா.” என்று கூறிவிட்டு செயற்கையாக புன்னகைத்தாள்.
இருவருக்கும் லட்சுமி “காபி, பஜ்ஜி, சட்னி செய்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
கவிதா “காபி சூப்பர். உங்க காபி எப்பவுமே தனி ருசிதான்.” என்று லட்சுமியை பாராட்டிவிட்டு பஜ்ஜியை எடுத்து சாப்பிட்டாள்.
வெண்மதி இயந்திரத்தனமாக இரண்டு பஜ்ஜியை எடுத்து சாப்பிட்டாள். “சரிமா நான் கிளம்பறேன்.” என்று லட்சுமியிடம் கூறிவிட்டு
வெண்மதி காது அருகே சென்று “உங்கம்மாவுக்கு ஏற்கனவே உன் மேல டவுட் வந்துடுச்சு. அதனால அவங்க முன்னாடி நார்மலா இரு.” என்று கூறிவிட்டு சென்றாள்.
அன்று இரவு தனியாக படுத்த வெண்மதி தூங்க முடியாமல் தவித்தாள். பால்கனியில் சிறிது நேரம் நடந்தாள். அப்பொழுது தண்ணீர் எடுத்துப் போக வந்த லட்சுமி அவளை கண்டார்.
“இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ற மதி?”
“ஒரு வாரமா கவிதா கூட தூங்கிட்டு இப்போ தனியா படுத்தா எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது.” என்று மாற்றி கூறினாள் வெண்மதி.
“அப்படியா? சரி. நான் உன்கூட இன்னைக்கு தூங்குகிறேன்.” என்று கூறியவர் தண்ணீரை எடுத்து அவரது அறையில் வைத்துவிட்டு வெண்மதி யோடு அவள் அறைக்கு சென்றார்.
“அம்மா நான் உங்க மடில படுத்துக்கட்டுமா?” என்று கேட்டாள் வெண்மதி.
அவரும் “படுத்துக்கோ மதி.” என்று கூற அவள் அவர் மடியில் படுத்துக் கொண்டாள்.
அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தாய்க்கு தெரியாமல் அதனை துடைத்துக்கொண்டாள். மனதில் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது. அப்படியே உறங்கி விட்டாள். அவளை படுக்கையில் தூங்க வைத்த லட்சுமி அவளை அணைத்தவாறே அவரும் பக்கத்தில் படுத்து உறங்கினார்.
அடுத்து வந்து ஒரு வாரத்தில் வெண்மதியை கவனித்த லட்சுமிக்கு சந்தேகமாக இருந்தது. அவள் முன்பு போல இல்லாமல் அமைதியாகவும் சோகமாகவும் இருப்பதுபோல தெரிந்தது. அவளிடம் ஒரு நாள் உட்கார்ந்துக் கொண்டு “உனக்கு ஏதாவது பிரச்சனையா மதி?” என்று கேட்டார்.
“ஒரு பிரச்சனையும் கிடையாது அம்மா. அப்புறம் ஏன் இப்படி சோகமா இருக்க?” என்று கேட்டார்.
“நான் நல்லாத்தான் இருக்கிறேன்.” என்று மழுப்பினாள் வெண்மதி.
அந்த வார கடைசியில் கவிதா வீட்டுக்கு வந்தாள்.
லட்சுமி கவிதாவிடம்
“மதி ஏன் சோகமா இருக்கா? உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று விசாரித்தார்.
“என்ன சொல்வது?” என்று யோசித்த கவிதா
அதற்கு நீங்க தான் காரணம் அம்மா.”
“என்னது நான் காரணமா?”
“ஆமாம். என்ன சொல்ற கவி?” எனக்கு புரியல.”
“நீங்களும் அப்பாவும் வீட்டை விட்டு வெளிய அவகூட வர மாட்டேங்கிறீங்களே. அந்த கவலைதான்.” என்று மாற்றி கூறினாள் கவிதா. “என்னம்மா சொல்ற?”
“ஆமாம் அம்மா. வெண்மதி உங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு வேலை கிடைத்ததும் தனியா போய் சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படுகிறாள். ஆனா நீங்க ரெண்டு பேரும் ஒத்துக்க மாட்டேங்கிறீங்களே. அதுதான் அவளுடைய கவலை. நீங்க யோசிச்சு முடிவெடுங்க அம்மா.” என்று பேச்சை திசை திருப்பினாள் கவிதா.
“மதி இதுதான் சான்ஸ். இந்த சோக முகத்தை வச்சுகிட்டு உங்க கிட்ட இந்த வீட்டை விட்டு வெளியே போவதை பற்றி பேசு.” என மதி காதில் ரகசியமாக கூறினாள்.
“அப்புறம் ஒரு விஷயம் அம்மா. நாங்க குடும்பத்தோடு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு போகலாம்னு இருக்கிறோம். நீங்களும் மதியும் எங்க கூட வரணும். அம்மா எனக்காக வேண்டிக் கொண்டார்கள். நான் மதிக்க வேண்டிக்கிட்டேன். அதனால மதியும் வரணும்.”
“நான் வரமுடியாது கவிதா. மதியை கூட்டிக்கிட்டு போ. வேண்டுதல் இருக்கு என சொல்ற. அதனால போயிட்டு வாங்க.” என்று கூறினார் “சரிமா நாளைக்கு காலையில நான் வந்து கூட்டிகிட்டு போறேன்.” என்று கூறிவிட்டு சென்றாள்.
இதனை கேள்விப்பட்ட லலிதா “பிரண்டு கூட ஊரை சுத்த போறாளா இவள்?” என்று ஆரம்பித்தார்.
லலிதாவுக்கு கடவுள் மீது பயபக்தி அதிகம். இதை அறிந்து வைத்திருந்த லட்சுமி, “கவிதா இவளுக்காக வேண்டுதல் வச்சிருக்கா. நாம இப்போ போக வேண்டாம்னு சொன்னா தெய்வ குத்தம் ஆயிடும். அதனாலதான் நானே அவளை போயிட்டு வான்னு சொன்னேன்.” என்று லேசாக லலிதாவை மிரட்டினார் லட்சுமி.
இதனை கேட்ட லலிதா “ஓ அப்படியா சரி சரி. போகட்டும். நமக்கு எதுக்கு பொல்லாப்பு ? சாமி விஷயம்னு சொல்ற. தடுக்க வேண்டாம். போயிட்டு வரட்டும். ஜாக்கிரதையா இரு வெண்மதி.” என்று சம்பிரதாயமாக அவளிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
கோவிந்தனிடம் அனுமதி வாங்குவது லட்சுமிக்கு சுலபமாக இருந்தது. இதனை கூறிய பொழுது “அவ போயிட்டு வரட்டும். நாமதான் எங்கேயுமே அவளை கூட்டிக்கிட்டு போவது கிடையாது. அவளோட ஃபிரண்ட் கவிதாவாவது அவளை வெளியே கூட்டிகிட்டு போயிட்டு வரட்டும். இவ்வளவு நாளா கஷ்டப்பட்டு படிச்சாங்க. அதனால ஜாலியா வெளிய போய்ட்டு வரட்டும்.” என்று மனப்பூர்வமாக அனுமதி கொடுத்தார்.
அன்று இரவு மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் வெண்மதி
“அம்மா நான் இங்கே இல்லாத அந்த ஒரு வாரத்தில் நீங்க என்னை மிஸ் பண்ணிங்களா?”
“ஆமாம் மதி. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். அப்பாவும் உன்னை மிஸ் பண்ணினார்.”
“அப்புறம் நான் வேலைக்காக வெளியூர் போனா, என்னை மிஸ் பண்ணுவீங்கதானே?”
“ஆமாம் கண்டிப்பா மிஸ் பண்ணுவோம்.”
“அதனால்தான் என் கூடவே நீங்களும் வாங்கன்னு சொல்றேன்.”
”அப்பாவுக்கு இங்கே இருக்கிறது தான் மா பிடிக்கும்.” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே கோவிந்தன் அறைக்குள் நுழைந்தார்.
அவரிடமே பேச்சை திரும்பவும் ஆரம்பித்தாள் வெண்மதி
“அப்பா எனக்கு வேலை கிடைத்ததும் என்கூட நீங்களும் சென்னைக்கு வாங்க.”
“இல்லம்மா நான் வரமுடியாது. எங்க அப்பாவோட ஆசை நான் இங்கதான் இருக்கணும். அதுவும் இல்லாம உனக்கு கிடைக்க வேண்டிய சொத்து இது. நான் உன் கூட இந்த வீட்டை விட்டு வந்துட்டா, இந்த வீடு நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் கிடைக்காம போயிடும்.”
“சரி அப்போ நாம ஒண்ணு செய்யலாம்.”
“என்னம்மா சொல்லு .”
“அம்மா என்கூட வரட்டும். நானும் அம்மாவும் ஒரு ஆறு மாசம் சென்னையில் இருக்கிறோம். நீங்களாவது காலையில வெளியே போயிட்டு நைட்டு தான் வீட்டுக்கு வரீங்க. நான் கூட ஸ்கூல், காலேஜ் என காலையில போயிட்டு சாயங்காலம் தான் வருவேன். அம்மா அப்படி கிடையாது நாள்முழுதும் பெரியம்மாவுடன் இருக்கிறார்கள். அவர்கள் சொன்ன வேலையை செய்துகொண்டு அவர்கள் பேச்சினை கேட்டுக்கொண்டு பொழுதை கழிக்கிறார்கள்.
பெரியம்மாவின் குத்தலான பேச்சுகளில் இருந்து அம்மாவை காப்பாத்தி சந்தோஷமா வச்சுக்கணும்னு ஆசை.” என்று வெளிப்படையாக வெகுநாட்களாக அவள் மனதில் இருந்த ஆதங்கத்தை கூறினாள் வெண்மதி.
இதனை கேட்ட லட்சுமி ‘தனக்காக எவ்வளவு தூரம் யோசிக்கிறாள்’ என்று அவளுடைய பாசத்தை கண்டு மகிழ்ந்தார்.
“சரிமா நீ சொன்னதும் கரெக்ட் தான். நீ அம்மாவை கூட்டிக்கிட்டு போ.” என்றார் கோவிந்தன்.
“நான் இவ கூட போறதால பிரச்சனை வராதா?” என்று கேட்டார் லட்சுமி. “பிரச்சனை எதுவும் வராது. நான் தான் இங்கேயே இருக்கிறேனே. ஆறு மாத காலம் தானே. நான் சமாளிச்சுக்கறேன். மதி நீயும் இந்தப்பக்கம் வேலை வாங்கிட்டு இந்த வீட்டுக்கு திரும்ப வர்ற வழியை பாரு.”
“ஆனா இதை நாம எப்படி அக்கா கிட்ட சொல்றது? அக்காவுக்கு பிடிக்காதே.”
“இப்போதைக்கு நாம இதை சொல்ல வேண்டாம். காலம் நேரம் கூடி வரும் பொழுது சொல்லிக்கலாம் .” என்றார் கோவிந்தன்.
“சரி அப்படி சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே போய்விட்டு திரும்ப வந்தோம் என்றால் அக்கா திரும்பவும் இப்படித்தானே நடத்துவாங்க.” என்றார் லட்சுமி.
“அம்மா அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். அவங்க சொல்ற குறை என்ன? இந்த வீட்டை பார்த்துக்க நாம எந்த செலவும் பண்ணாம இங்கே தங்கி இருக்கிறோம். அதுதானே. நான் நல்ல வேலை வாங்கி கொண்டு இந்த பக்கம் வந்தா வீட்டு செலவினை இரண்டாக பிரித்து பாதியை நாம் பார்த்துக் கொள்ளலாம். அதுக்கு அப்புறம் பெரியம்மா நம்மை எதுவும் சொல்ல முடியாது அதுக்கப்புறம் நீயும் இப்போ மாதிரி எப்பவும் சமையல் பண்ணிக்கிட்டு இருக்க கூடாது. நீயும் இந்த வீட்டுக்கு ஒரு எஜமானி ஆயிடுவ.”
“என்னால சும்மா ஒரு வேலையும் செய்யாம உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது. என்னால முடிஞ்ச வேலையை நான் எப்போதுமே செஞ்சுக்கிட்டு தான் இருப்பேன்.”
“சரி சரி அது உங்க இஷ்டம். ஆனா எங்களுக்கு உங்க கையால தான் சாப்பாடு. எங்க அம்மா மாதிரி இந்த உலகத்துல யாராலயும் டேஸ்டியா சமைக்க முடியாது.” என்று பெருமையாக கூறினாள் வெண்மதி.
இவள் பேசப்பேச தாய் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை பார்த்து இவளும் மகிழ்ந்தாள்.