“பெரியப்பா” என்று உள்நோக்கி அழைத்தாள்.
“என்ன அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்ல போறியா? அப்பாவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா, என்னையும் எங்க அம்மாவையும் இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்லுவாரு. அப்படி சொல்லிடுவாரே தவிர அதுக்கு பிறகு நாங்க இல்லாம அவர் ரொம்ப வருத்தப்படுவார். இந்த வயசான காலத்துல அவருக்கு அந்த கஷ்டத்தை கொடுக்கணும்னு நீ நினைக்கிறாயா? உனக்கு எப்பவுமே சப்போர்ட் பண்ற அவருக்கு இது தேவைதான்.” என்று பெரியப்பா மீது வெண்மதி வைத்திருக்கும் பாசத்தை பயன்படுத்திக் கொண்டான் கதிர்வேலன்.
“நான் எதுக்கு பெரியப்பா கிட்ட சொல்லணும்? நான் சொல்ல மாட்டேன். இதை நானே சமாளிச்சு நான் நினைச்ச மாதிரி எங்க அம்மாவை இந்த வீட்டில வாழ வைப்பேன்.” என்று பதில் கூறினாள் வெண்மதி. கதிர்வேலன் சொல்வது உண்மைதான் பெரியப்பா நிச்சயம் அப்படி செய்வார். வெண்மதிக்கு இந்த வீட்டில் தன் தாயை சம உரிமையோடு வாழ வைக்க வேண்டும் என்பது மட்டுமே ஆசை. லலிதாவின் குடும்பத்தை பிரிப்பது அவளது நோக்கம் கிடையாது.
அவள் மீண்டும் உள்நோக்கி “பெரியப்பா” என்று கூப்பிட்டுக் கொண்டே அவர் அறைக்குள் சென்றாள்.
வெண்மதி பெரியப்பாவின் அறைக்கு சென்று
“பெரியப்பா நான் ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்லணும். நீங்க கொஞ்சம் ஹாலுக்கு வர்றீங்களா?”
“என்னம்மா? என்ன விஷயம்?”
“இந்த வீட்ல இருக்கிற எல்லார்கிட்டயும் சொல்லணும். அதனாலதான் ஹாலுக்கு கூப்பிடுறேன். ப்ளீஸ் வாங்க.” என்று பணிவாகவே கூப்பிட்டாள்.” வெண்மதி.
அவரும் எழுந்து வெளியே வந்தார்.
அதேநேரம், கார்த்திகேயனும் கோவிந்தனும் வெண்மதியின் குரல் கேட்டு வெளியில் வந்தனர். அனைவரும் ஹாலில் கூடினர்.
“நான் எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதனால எல்லோரும் உட்காருங்க.” என்று வெண்மதி கூற அனைவரும் அவளை வினோதமாக பார்த்தபடி ஹாலில் இருந்த சோபாவிலும் நாற்காலியிலும் உட்கார்ந்தனர். வெண்மதி ஆரம்பித்தாள்.
“பெரியப்பா எனக்கு வேலை கிடைச்சிடுச்சு. கிடைச்சு ஒரு மாசம் ஆகுது. முதல் மாச சம்பளம் வாங்கிட்டேன்.” என்று கூறியதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகினர்.
“என்னம்மா சொல்லுற? ஒரு மாசம் ஆயிடுச்சா?” என்று கோவிந்தன் ஆச்சரியமாக கேட்டார்.
“ஆமாம்பா. ஒரு மாசம் ஆயிடுச்சு.”
“ஏன் எங்ககிட்ட எல்லாம் சொல்லவே இல்லை?” என்று லட்சுமி கேட்டார். “இப்பதான் என்னோட வேலை பர்மனென்ட் ஆச்சு. இதுக்கு முன்னாடி ரெண்டு வேலை எனக்கு கிடைக்கற மாதிரி வந்து கிடைக்காம போயிடுச்சு. அதனாலதான் இந்த தடவை வேலை பர்மனென்ட் ஆனதுக்கு அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன். இப்போ பர்மனென்ட் ஆனதால சொல்றேன்.” இதைக்கேட்டதும் மற்றவர்கள் அனைவரும் ஓரளவுக்கு அமைதி ஆயினர்.
“கங்கிராட்ஸ் அக்கா. இதை சொல்ல தான் கூப்பிட்டியா?” என்று கார்த்திகேயன் கேட்டான்.
அவள் “இதை மட்டும் சொல்றதுக்கு கூப்பிடல கார்த்திக். இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கு.” என்று பீடிகை போட்டாள்.
“என்ன விஷயம்? சொல்லு மா” என்று நிதானமாக கேட்டார் பெரியப்பா.
“இவ்வளவு நாள் வீட்டு செலவு எதுக்கும் நாங்க பணம் கொடுத்தது கிடையாது.” என்றாள் வெண்மதி
“அதெல்லாம் பரவாயில்லை வெண்மதி.” என்று பெரியப்பா பெருந்தன்மையாக கூறினார்.
வெண்மதி “அப்படி நீங்க நினைக்கிறது உங்க பெருந்தன்மை. ஆனா எங்களுக்கும் கடமை இருக்கு. முன்னாடி அப்பா மட்டும்தான் சம்பாதிச்சுட்டு இருந்தாங்க. அதனால நாங்க வீட்டு செலவு எதுவும் செய்ய முடியல. இப்போ நானும் சம்பாதிக்கிறேன். அதனால வீட்டு செலவை எல்லாத்தையும் நாம பாதியா பிரித்து ஒரு பாதியை நீங்க பண்ணுங்க. ஒரு பாதியை நாங்க பண்றோம். இதுதான் நியாயமா இருக்கும்.”
“எதுக்குமா உனக்கே 15000 தான் சம்பளம் வருது. அதை நீ சேர்த்து வச்சுக்கோ. உன்னோட கல்யாணத்துக்கு நகை வாங்கி வச்சுக்கோ.” என்று பெரியப்பா கூற
“அதெல்லாம் பரவாயில்லை பெரியப்பா. அடுத்த மாதத்திலிருந்து எனக்கு 25 ஆயிரம் சம்பளம் வரும். இந்த மாசம் ட்ரெய்னிங் பீரியட் அதனால 15,000 மட்டும்தான். அப்போ அந்த 10 ஆயிரத்தை நாங்க மத்ததுக்கு யூஸ் பண்ணிக்கிறோம். ப்ளீஸ் பெரியப்பா. நீங்க இத வாங்கிக்கோங்க அப்பதான் எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.
அப்புறம், அம்மாவுக்கு வயசாயிடுச்சு. முன்ன மாதிரி சமையல் வேலை எல்லாத்தையும் அவங்க ஒருத்தங்க மட்டும் பண்ண கஷ்டப்படுறாங்க. நைட் ஆனா கால் வலிக்குதுன்னு சொல்றாங்க.”
“மதி என்ன சொல்ற?” என்று அதட்டலாக கேட்டார் இலட்சுமி.
“அம்மா நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.” என்றாள் வெண்மதி.
லட்சுமி அமைதியானார்.
கணவன் முன்பு எதையும் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் லலிதா. கதிர்வேலனுக்கும் அதே நிலைதான். வெண்மதிக்கு தேவையும் அதுவேதான்.
“இந்த வீட்ல சோமு, செல்வி அக்கா ரெண்டு பேரு வேலை செய்றாங்க. ஒருத்தரோட சம்பளம், கரண்ட் பில், தண்ணி வரி, வீட்டுவரி இது எல்லாத்துக்கும் சேர்த்து பத்தாயிரம் கொடுக்கிறோம்.”
“இது மட்டும் தானா? வீட்டில் நா 50,000 ரூபாய்க்கு சோபா வாங்கிப் போட்டிருக்கேன். 60 இன்ச் டிவி வாங்கிப் போட்டிருக்கேன். டபுள் டோர் பிரிட்ஜ் , கேஸ் ஸ்டவ், வாஷிங் மெஷின் இதுக்கெல்லாம்?” என்று லலிதா கேட்க
கோவிந்தன் “லலிதா என்ன பேசற?” என்று அதட்டினார்.
இதனை எதிர்பார்த்திருந்த வெண்மதி
“பெரியப்பா, பெரியம்மா சொல்றது கரெக்ட்டு தான். இது எல்லாத்தையும் நீங்கதான் வாங்கினீங்க. அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அதுக்கு ப்ளீஸ் நீங்க சம்பாதிக்கணும். தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க. இந்த வீட்டை ரெண்டா பிரிக்கணும்.
கிச்சன், ஹால், ரூம், தோட்டம் என எல்லாத்தையும் நாம ரெண்டா பிரிக்கணும்.” என்று வெண்மதி கூற
அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்.
லட்சுமி “வெண்மதி என்ன பேசற? புரிஞ்சுதா பேசறியா?” என்று மகளை அடக்க முயன்றார்.
வெண்மதி தெளிவாக “அம்மா. நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. இவ்வளவு நாள் நீங்க சொல்றதை நான் கேட்டுட்டு இருந்தேன். இன்னிக்கு ஒரு நாள் நான் சொல்றதை நீங்க கேளுங்க.
பெரியம்மா சொன்னத நீங்க கேட்டீங்க தானே? அவங்க சொல்றது நியாயம் தான். அவங்க இப்படி சொன்னதுக்கு அப்புறம் நாம எப்படி அவங்க பொருளை யூஸ் பண்ண முடியும்?” என்று கேட்க
கிருஷ்ணனுக்கும் வெண்மதியின் பேச்சில் இருக்கும் நியாயம் புரிந்தது. அதுவும் இல்லாமல் இந்த வீட்டில் லலிதா லட்சுமியை நடத்தும் விதத்தை அவர் சிலமுறை பார்த்திருக்கிறார். ஆனால் தன்னைத் தேடி எந்த புகாரும் வராததால் அவர் அமைதியாக இருந்தார்.
இப்பொழுது வெண்மதி இப்படி பேசியது அவருக்கு சரி என்றே பட்டது இன்னும் எத்தனை நாள் தான் லட்சுமி லலிதாவின் அதிகாரத்தில் இருப்பாள்? மகள் தலையெடுத்து தாயை நன்கு வாழ வைக்க விரும்புகிறாள். இதில் எந்த தப்பும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.
எனவே “வெண்மதி உன்னோட இஷ்டம் படி செய். உனக்கு பண உதவி ஏதாவது வேணும்னாலும் என்னை கேளு.” என்று வெண்மதியை புரிந்துகொண்டு பேசினார் அவர்.
இதனைக்கேட்ட வெண்மதி மனதில் இருந்த சஞ்சலம் யாவும் தீர்ந்தது. இந்த வீட்டில் அவர் எடுத்த முடிவை யாரும் எதிர் கேள்வி கேட்டது கிடையாது. இனி அவள் நினைத்தது இந்து வீட்டில் நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
மகள் பேசியதை கேட்ட லட்சுமி இந்த வீட்டில் ஏதோ பெரிய பிரச்சினை வரப்போகிறது என்று பயந்து மகளை அடக்க முயன்றார். ஆனால் கிருஷ்ணன் “சரி” என்று கூறியது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குப் பிறகும் எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியானார்.
கோவிந்தனுக்கு ஆச்சரியம்தான். எனினும் மகள் பேசியதில் இருந்த நியாயம் புரிய அவர் மகள் பேசட்டும் என்று விட்டுவிட்டு அமைதியாக இருந்தார். அவர் இப்படியாவது தன் மகளும் மனைவியும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கட்டும் என்று நினைத்தார்.
லலிதாவுக்கும் கதிர்வேலனக்கும் ஆத்திரமும் பொறாமையும் பொங்கியது. எனினும் கிருஷ்ணன் முன்பு காட்டிக் கொள்ள முடியாமல் பொறுத்து கொண்டிருந்தனர்.
கார்த்திகேயன் “அக்கா சூப்பர் அக்கா. நீங்க எடுத்து இருக்கிற முடிவுதான் கரெக்ட். ஆல் தி பெஸ்ட்.” என்று மனப்பூர்வமாக வாழ்த்துக் கூறினாஎ.
“சரி மா வேற ஏதாவது சொல்லனுமா?” என்று கிருஷ்ணன் கேட்டார்.
“இல்லை பெரியப்பா. நீங்க இந்த பெரிய விஷயத்துக்கு ஒத்துக்கொண்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்ன புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா.” என்று மனமார நன்றி கூறினாள் வெண்மதி.
சபை கலைந்தது. எல்லோரும் எழுந்து அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.
லட்சுமிக்கு என்ன சொல்வது என்றே சிறிது நேரம் புரியவில்லை. கோவிந்தன் மகளிடம் வந்து
“உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மா. இவ்ளோ பெரிய விஷயத்தை எவ்வளவு பக்குவமா செஞ்சி முடிச்சிருக்க. நீ நல்லா வருவ மா. என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கு.” என்று மனமார பாராட்டினார்.
வெண்மதி லட்சுமியிடம் வந்து “என்னமா எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க? நான் செஞ்சது தப்பா?”
“தப்பு எதுவும் இல்லமா. ஆனா சமைக்கிறது எனக்கு எப்பவுமே கஷ்டமான வேலை கிடையாது. சும்மா இருக்கிறதுதான் எனக்கு கஷ்டமா இருக்கும். அதை மட்டும் என்ன செய்ய விட்டிருக்கலாம்.” என்று கூறினார்.
“நீங்க எங்க மூணு பேருக்கு மட்டும் சமைச்சா போதும்.”
“சரிமா இப்போ வீட்டை ரெண்டா பிரித்தால் கேஸ் ஸ்டவ், பாத்திரம் இதையெல்லாம் எப்படி வாங்குவது? அதுக்கு நிறைய செலவு ஆகுமே.” என்று லட்சுமி கேட்க
கோவிந்தன் “நான் என்னோட பிரண்டு கிட்ட பணம் வாங்கிட்டு வரேன்.” என்று சட்டையை எடுத்து அணிந்து கொண்டே சொன்னார்.
“இல்லப்பா. நான் ஏற்கனவே கவிதா கிட்ட பணம் கேட்டு இருக்கேன். அவங்க அப்பா கிட்ட நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்.” என்று கூறிவிட்டு டிவிஎஸ் ஃபிப்டி எடுத்துக்கொண்டு கவிதா வீட்டுக்கு சென்றாள் வெண்மதி.