நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வென்மதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கவிதாவின் தந்தை அருணாச்சலம் “வா மா வெண்மதி. இதோ நீ கேட்ட பணம்.” என்று ஒரு கற்றை பணத்தை எடுத்து கொடுத்தார்.
அதை வாங்கியவள் ஆச்சரியமாக அவரை பார்த்தாள்..
“ என்னப்பா? நான் ஐம்பதாயிரம் தான் கேட்டேன். நீங்க75,000 கொடுக்குறீங்க.”
“கவிதா நீ எடுத்து இருக்கிற முடிவை எனக்கு சொன்னா. உனக்கு ஐம்பதாயிரம் பத்துமோ பத்தாதோ. அதனால 25,000 அதிகமா கொடுத்து இருக்கேன் . அந்த வீட்ல நீ படுற கஷ்டம் எனக்கு தெரியும். உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னு நான் ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன். இப்போதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதனால மறுக்காம நீ இதை வாங்கிக்கோ. நான் என் மகள்களுக்காக பணம் சேர்த்து வச்சிருக்கேன்
நீயும் என்னோட பொண்ணு மாதிரி தான். என்னோட 2 மகள்களுக்காக நான் எவ்வளவோ செய்யறேன். உனக்காக இந்த செலவு கூட செய்ய மாட்டேனா?” என்று பெருந்தன்மையாக கூறினார்.
“ரொம்ப தேங்க்ஸ் அப்பா” என்று கண் கலங்கினாள் வெண்மதி.
“அப்புறம் கேஸ் கனெக்சன் வேணும்னு எழுதி வைத்து விட்டாயா வெண்மதி? என்று கவிதாவின் தாய் மாலினி கேட்டார்.
வெண்மதி “இனிமேதான் பண்ணனுமா.” என்று கூற
“என்னோட ஃப்ரெண்ட் கேஸ் கம்பெனியில் வேலை செய்கிறாள். நான் உனக்கு ரெண்டு நாளில் கேஸ் வரவைத்து கொடுக்கிறேன். இப்போதைக்கு நீங்க எலக்ட்ரிக் ஸ்டவ் யூஸ் பண்ணிக்கோங்க.” என்று அவர், அவர் பங்கிற்கு அவரால் முடிந்த உதவியை செய்தார். மனம் நெகிழ்ந்தது வெண்மதிக்கு.
கடவுள் சோதனைகளும் துன்பங்களும் கொடுத்தாலும் நல்ல மனிதர்களை கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாள்.
பணத்தை வாங்கிக்கொண்டு வீடு வந்தாள் வெண்மதி.
“ பணம் வாங்கிட்டு வந்துட்டேன். எப்போ முடியுமோ அப்போ திருப்பி கொடுக்கலாம். அதனால பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம மூணுபேரும் கடைக்கு போய் வீட்டுக்கு தேவையான பாத்திரம் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடலாம். அதுக்கு அப்புறம் மத்ததை வாங்கலாம.” என்றாள் வெண்மதி.
மூவரும் சென்று வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாவற்றையும் வாங்கினர். அந்த பெரிய சமையல் அறையின் ஒரு பாதியில் தங்களுடைய பாத்திரங்களை வைத்தனர்.
“இன்னிக்கு நாம வெளியில சாப்பிடலாம்.” என்று வெண்மதி அழைக்க மூவரும் சேர்ந்து முதன்முறையாக ஹோட்டலுக்கு சென்றனர்.
வெண்மதி அனைவருக்கும் முதலில் ஸ்வீட் ஆர்டர் செய்தாள். லட்சுமிக்கு நடப்பதெல்லாம் கனவா நினைவா என நம்பவே முடியாமல் இருந்தது. எனினும் அவர் மனதில் நெடுநாட்களாக இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது.
அவரை கட்டியிருந்த சங்கிலி அறுபட்டது போல ஒரு உணர்வு. அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
“அம்மாவுக்கு அல்வா பிடிக்கும். அதனால அல்வா அவங்களுக்கு ஆடர் பண்ணினேன். அப்பாவுக்கு பால்கோவா பிடிக்கும். அதனால உங்களுக்கு பால்கோவா ஆர்டர் பண்ணினேன்.” என்று இருவருக்கும் அல்வாவையும் பால்கோவாவையும் வாங்கி கொடுத்தாள் வெண்மதி.
முதன்முறையாக தன் விருப்பத்தினை மதித்து மகள் வாங்கி கொடுத்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டார் லட்சுமி. கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
இதனை புரிந்து கொண்ட வெண்மதி தாயை சீண்டினாள்.
“என்னமா ஸ்வீட் அவ்ளோ காரமாவா இருக்கு? ஒருவேளை சக்கரைக்கு பதில் மிளகாய்பொடி போட்டுட்டாங்களா? இரு அவன நான் என்ன பண்றேன் பாரு.” என்று எழுந்திருக்க முயன்றவளை
“நிறுத்துடி உன்னோட டிராமா கொஞ்சம் ஓவரா இருக்கு.” என்று அவர் சிரித்து கொண்டே கூற
“கொஞ்சம் ஜாஸ்தியா ஆயிடுச்சு இல்லமா?” என்று வெண்மதி கேட்க “இல்லை ரொம்ப ஜாஸ்தியா ஆயிடுச்சு.” என்று கூறிவிட்டு மூவரும் சிரித்தனர்.
மூவர் மனதும் நிறைந்து இருந்தது. நெடுநாட்களுக்கு பிறகு மனப்பூர்வமாக சிரித்தனர்.
பிறகு “என்ன சாப்பிடலாம்” என்று கேட்டாள் வெண்மதி.
“கிச்சடி சாப்பிடலாமா?” என்று லட்சுமி கேட்க
“மகாராணி பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. யாரங்கே எங்களுக்கு 3 கிச்சடி எடுத்து வரவும்.” என்று வெண்மதி கூற
லட்சுமி “ரொம்ப ஓவரா போற. ஒழுங்கா ஆர்டர் பண்ணு.” என்று அதட்ட வெண்மதி சர்வரை கூப்பிட்டு 3 கிச்சடி எடுத்து வர சொன்னாள்.
வந்ததும் மூவரும் சாப்பிட்டு விட்டு வீடு வந்தனர்.
அன்று இரவு படுத்த கோவிந்தன் லட்சுமியிடம்
“என்னால செய்ய முடியாததை என் பொண்ணு செஞ்சிட்டா. எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கு.” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி கூறினார்.
லட்சுமி “எனக்கு நடப்பதை எல்லாம் நம்பவே முடியல. இதையெல்லாம் எப்படி நாம சமாளிக்க போறோம் என்று கொஞ்சம் பயம் இருந்தாலும் ஏதோ கூண்டுல இருந்து வெளியே பறக்கிற பறவை மாதிரி சுதந்திரமா சந்தோஷமா இருக்கு.” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
கோவிந்தன் அவரது கண்ணீரை துடைத்துவிட்டு தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.
“நீ கவலைப்படாதே லட்சுமி. நாம எல்லாத்தையும் சமாளிக்கலாம்.” என்று உறுதியோடு கூறினார்.
இதனை தாயிடம் ஏதோ கேட்க அந்த அறைக்கு வந்துகொண்டிருந்த வெண்மதி கேட்க நேர்ந்தது.
இந்த அருமையான நேரத்தில் இவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தன் அறைக்கு திரும்பினாள் வெண்மதி.
படுக்கையில் விழுந்த வெண்மதி தாய் கூறியதை நினைத்து பார்த்தாள்.
“ஏதோ கூண்டுல இருந்து வெளிய பறக்கிற பறவை மாதிரி சுதந்திரமா சந்தோஷமா இருக்கு.” என்று லட்சுமி கூறியது அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. வெண்மதியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
நெடுநாட்களுக்கு பிறகு அவள் அன்று நிம்மதியாக உறங்கினாள்.
அடுத்த நாள் அதிகாலை அவர்களுடைய சமையலறையில் பால் காய்ச்சி சுவாமி படத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்தனர். பூஜையை முடித்துவிட்டு மூவருக்கும் பால் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தனர்.
அப்போது அங்கு வந்த கார்த்திகேயன்
“என்ன அக்கா? என்னை பூஜைக்கு கூப்பிட மறந்துட்டீங்க.” என்று சிறிது சோகம் காட்டி கேட்டான்.
இதனைக் கேட்டு பதறிய லட்சுமி “அப்படி எல்லாம் இல்லை கார்த்திக். இந்த நேரத்துல நீ தூங்கிட்டு இருப்ப. அதனால தான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சேன்.”
“சரி பரவாயில்லை அந்த பாலையாவது குடுங்க.” என்று கேட்டு வாங்கி குடித்தான்.
அன்று லலிதாவே சமையல் செய்தார்.
கார்த்திகேயன் “என்னம்மா இன்னைக்கு என்ன சமையல்?” என்று ஆர்வமாக கேட்டபடி அமர்ந்தான்.
அதற்கு லலிதா “பொங்கல், சட்னி பண்ணியிருக்கேன்” என்று கூறியபடியே அவனுக்கு பரிமாறினார்.
ஒரு வாய் எடுத்து வைத்தான். அதற்கு பிறகு அவனால் சாப்பிட முடியவில்லை. அவன் முகம் போன போக்கைப் பார்த்து லலிதா
“என்னடா முகம் எதுக்கு அப்படி போகுது?” என்று அதட்டலாக கேட்டார்.
அதே நேரம்,
கிருஷ்ணன் வேலைக்கு கிளம்பி சாப்பிடுவதற்காக டைனிங் டேபிள் வந்து அமர்ந்தார்.
“அப்பா உங்க போன் அடிக்கிற சத்தம் கேட்குது. நீங்க போய் பாருங்க.” என்று அங்கிருந்த அவரை எழுப்ப முயன்றான் கார்த்திகேயன்.
அதற்கு அவர் “எனக்கு கேட்கலையே.”
“எனக்கு கேட்குது நீங்க போய் பாருங்க.”
“இல்லடா பசிக்குது. நான் சாப்பிட்டு விட்டு போறேன்.”என்று அங்கேயே உட்கார்ந்திருந்தார்.
“அப்பா நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். கேளுங்க.” என்று கார்த்திகேயன் திரும்பவும் கூறினான்.
சாப்பாட்டில் தான் வில்லங்கம் என்று நினைத்தபடி ‘வேண்டாம்’ என்று கையை ஆட்டி சைகை காட்டினான்.
அவருக்கு அது புரியவில்லை.
“என்னடா சொல்ற?” என்று அவர் கேட்க
.
லலிதா இப்பொழுது கார்த்திகேயனை பார்த்தார்.
“ஒன்னும் இல்லை. நல்லா சாப்பிடுங்கன்னு சொன்னேன்.”
‘உங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும்’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டான்.
லலிதா அவருக்கு பரிமாறினார்.
ஒரு வாய் எடுத்து வைத்தார். அவருக்கு தொண்டையை அடைத்தது. அதை அவரால் முழுங்க கூட முடியவில்லை. அப்படியே அவரது வாயில் ஒட்டிக் கொண்டது.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த லலிதா
“நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் சமைச்சிருக்கேன். எப்படி இருக்கு?” என்று ஆர்வமாக கேட்டார்.
கிருஷ்ணன் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தார்.
அவர் நிலையை புரிந்துக் கொண்ட கார்த்திகேயன்
“ரொம்ப சூப்பரா இருக்கு.” என்று வாயார பொய் கூறினான்.
“அப்படியா? அப்ப இன்னும் இரண்டு கரண்டி சாப்பிடுங்க.” என்று இரண்டு கரண்டி மேலும் இரண்டு தட்டிலும் வைத்தார்.
அவ்வளவுதான் இருவரும் பொங்கி எழுந்து விட்டனர்.
“அம்மா வேணா விட்டுடுங்க. இல்லன்னா கொலை கேஸில் உள்ள போயிடுவீங்க.”
கிருஷ்ணன் அந்த தட்டினை லலிதாவின் பக்கம் திருப்பினார்.
“நீ சாப்பிட்டு பாரு.” என்று கூற அவர் எடுத்து வாயில் வைத்தார்.
லலிதா ஒரு வாய் எடுத்து வைத்தார். அவரால் சாப்பிடவே முடியவில்லை எழுந்து சென்று துப்பிவிட்டு வாயை கொப்பளித்து விட்டு வந்தார்.
“அம்மா எதுக்குமா இந்த விஷப்பரீட்சை?”
“என்னடா சொன்ன விஷமா”?
“இல்லை இல்லை கடையில வாங்குற விஷம் இதை விட கொஞ்சம் டேஸ்டா இருக்கும்னு நினைக்கிறேன்.”
“இது நீங்க பண்ணினது ஆச்சே.”
“டேய்” இன்று முறைத்தார் லலிதா.
“சரி வேலைக்காரர்களுக்கு கொடுக்கலாம்.” என்று லலிதா கூற அவன்
“அய்யய்யோ ஏன்மா அவங்களை காலி பண்ண முடிவு பண்ணிட்டீங்களா? பிழைச்சு போகட்டும். விட்டுடுங்க.
அம்மா இந்த வேலையெல்லாம் நீங்க தயவு செஞ்சு செய்யாதீங்க. நான் இன்னிக்கி சாயந்திரம் யாரையாவது சமையல் வேலைக்கு கூட்டிட்டு வரேன். அது வரைக்கும் நீங்க எப்பவும் போல டிவியில் வரும் சீரியலை எல்லாத்தையும் பாத்துட்டு என்ஜாய் பண்ணிட்டு இருங்க.” என்று கூற லலிதா “என்னடா வேலை எதுவும் செய்யாம டிவி பாத்துட்டு இருக்கேன்னு குத்தி காட்டுகிறாயா?” என்று கோபமாக கேட்க
கார்த்திகேயன் “ஏன்மா உங்களுக்கு வேற யார் மேலயோ இருக்கிற கோபத்தை என்மேல காட்டுறங்க. நான் அப்படி நெனச்சு சொல்லல. ரொம்ப முக்கியமான விஷயம். மதியான சாப்பாடு எதுவும் எனக்கு தயவுசெஞ்சு பேக் பண்ணிடாதீங்க.” என்று போகும்பொழுது உஷாராக கூறிவிட்டு சென்றான்.