கிருஷ்ணன் நான் வெளியில சாப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
அங்கிருந்து லட்சுமியிடம் வந்தான் கார்த்திகேயன்.
“இன்னைக்கு என்ன சமையல்? என்று கேட்டான்.
“உனக்கு என்ன வேணாலும் கேளுப்பா. சமைச்சு தரேன்.” என்று லட்சுமி கேட்க அவன்
“ உங்க கையால எது சமைச்சு கொடுத்தாலும் எனக்கு பிடிக்கும்.” என்று கூற லட்சுமி நெகிழ்ந்தார் “சரிப்பா.”
“அக்காவுக்கும் மதிய சாப்பாடு கட்டும் பொழுது எனக்கும் சேர்த்து கட்டுங்க. .” என்று அவன் கூற
“சரிப்பா உனக்கும் தினமும் நானே சாப்பாடு கட்டி தரேன்.” என்று கூறிவிட்டு சமையல் வேலையில் இறங்கினார் லட்சுமி.
வெண்மதி அவருக்கு சிறிது நேரம் உதவி செய்துவிட்டு அலுவலகத்திற்கு தயாராக சென்றாள். தயாராகி வந்ததும்
“அம்மா நீங்களும் வந்து உட்காருங்க. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்று அவரையும் உட்காரவைத்து
கோவிந்தன், கார்த்திகேயன், வெண்மதி. லட்சுமி என்று நால்வரும் சேர்ந்து பேசி சிரித்தபடி சாப்பிட்டனர்.
கார்த்திகேயன், கோவிந்தன், வெண்மதி மூவருக்கும் மூன்று டிபன் பாக்ஸ் எடுத்து வந்து கொடுத்தார் லட்சுமி.
“இதுல இன்னைக்கு சாம்பார் சாதம், வெண்டைக்காய் பொரியல், கத்திரிக்காய் பொரியல் பேக் பண்ணியிருக்கேன். மிச்சம் வைக்காம சாப்பிட்டுட்டு வாங்க.” என்று கூறினார்.
வாங்கிக்கொண்டு மூவரும் சென்றனர். இதனை கவனித்த லலிதாவுக்கு கோபம் அதிகரித்தது. கார்த்திகேயனை அவரால் தடுக்கவும் முடியவில்லை.
தந்தையும் தம்பியும் சாப்பிட்ட விதத்தை கவனித்த கதிர்வேலன்
“அம்மா நான் வெளியில சாப்பிடுகிறேன். நீங்க கஷ்டப்பட வேண்டாம்.” என்று கூறிவிட்டு நழுவினான்.
அந்த வார விடுமுறையில்
“அம்மா அப்பா நாம இன்னைக்கு வெளியே போய் வீட்டுக்கு தேவையான மத்த எல்லா பொருளையும் வாங்கிட்டு வரலாம்.” என்று கூற
“சரிமா” என்று மூவரும் கிளம்பி சென்றனர். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் சோபா, டிவி என்று அனைத்தையும் வாங்கி லாரியில் ஏற்றி விட்டு வந்தனர். அனைத்தும் வீட்டிற்கு வர எல்லாவற்றையும் எடுத்து வைத்தனர். எல்லா வேலையையும் முடித்தபிறகு வெண்மதி அந்த சோபாவில் உட்கார்ந்தாள். “அம்மா அப்பா நாளைக்கு சாயந்திரம் நாம மூணு பேரும் கடலூர் பீச்சுக்கு போறோம்.”
“எதுக்கு மா நிறைய வேலை இருக்கு.” என்று ஆரம்பித்த லட்சுமியிடம்
“அதை எல்லாம் பாத்துக்கலாம். நாளைக்கு நாம பீச்சுக்கு போகலாம்.” என்று வெண்மதி கூற
கோவிந்தனும் “அவதான் ஆசைப்படுறா இல்ல. நாம போயிட்டு வரலாம்.” என்றார்.
ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சிக்கன் பிரியாணி செய்தார் லட்சுமி.
வாசனை வீடு முழுவதும் கமகமத்தது. கார்த்திகேயன் வாசனையை முகர்ந்து கொண்டே அந்த சமையலறைக்கு வந்தான்.
“வாப்பா கார்த்திக். சாப்பிடலாம்.” என்று அவனையும் அழைத்துக் கொண்டு நால்வரும் உட்கார்ந்து சாப்பிட்டனர். அப்பொழுது கார்த்திகேயன் லலிதா சமைத்து அவர்கள் பட்ட பாட்டினை கூறி சிரித்துக் கொண்டே சாப்பிட்டனர்.
லட்சுமி மட்டும்
“அப்படி எல்லாம் உங்க அம்மாவை பத்தி கிண்டல் பண்ணி பேசாதே.” என்று கூறினாலும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“சரி கார்த்திக். சாயந்தரம் கடலூர் பீச்சுக்கு போகலாம்னு இருக்கிறோம். நீயும் வரியா?” என்று கேட்டாள் வெண்மதி.
“அப்படியா கண்டிப்பா வருகிறேன்.” என்று உற்சாகமாக கூறினான்.
நால்வரும் 4 மணி அளவில் கடலூருக்கு சென்றனர். அங்கு கடற்கரையில் கால் நனைத்தவாறு சிறிது நேரம் நடந்தனர்.
“இனிமே எல்லா வாரமும் நாம ஞாயிற்றுக்கிழமை இப்படி ஏதாவது ஒரு இடத்துக்க போயிட்டு வரலாம்.” என்று கார்த்திகேயன் கூறினான்.
.
இப்படி வார நாட்களில் வேலையும் வார விடுமுறையில் கோயில், பூங்கா, கடற்கரை என்று ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று வந்தனர். ஆனால் லட்சுமிக்கு தான் பொழுது போவது கடினமாக இருந்தது.
காலையிலேயே சமையலை முடித்தவருக்கு மாலை வரை என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார்.
ஒரு நாள் கோயிலில் பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்த லட்சுமியிடம் முல்லை
“லட்சுமி உங்க வீட்ல நடந்தது எல்லாத்தையும் நான் கேள்விப்பட்டேன். நீ எப்படி செலவை சமாளிக்கிற?”
“இப்போ செலவுக்கு பிரச்சனை இல்லை. கையில காசு இருக்கு. ஆனா இந்த காசு தீர்ந்ததுக்கு அப்புறம் என்ன செய்வது என்ற கவலை எனக்கும் இருக்கு. வீட்ல வேலை ரொம்ப கம்மியா ஆயிடுச்சு. வேலை செய்யாம சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கிறது எனக்கு பழக்கமில்லாத ஒரு விஷயம். அதான் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.”
“நான் உனக்கு ஒரு ஐடியா கொடுக்கட்டுமா?”
“சொல்லு முல்லை” என்று ஆர்வமாக கேட்டார் லட்சுமி.
“அன்னிக்கு சுந்தரி வீட்டுக்கு வந்து நீ சமைச்ச இல்ல.”
“ஆமாம்” என்று முல்லையை கவனித்தார்.
“அந்த பங்ஷனுக்கு ப்ரியா ஸ்வீட் ஸ்டால் ஓனர் கபிலன் வந்திருந்தார்.”
“ஓ அந்த கடை ஓனரா? அந்த கடை நம்ம ஊரிலேயே பெரிய கடை ஆச்சே. அவர் அந்த பங்ஷனுக்கு வந்து இருந்தாரா?”
“ஆமாம் வந்திருந்தார்.”
“நான் அவரை பார்க்கவே இல்லையே.” என்று ஆச்சரியமாக கேட்டார் லட்சுமி.
“ஆமா நீ கிச்சனிலேயே இருந்த. அப்புறம் எப்படி அவரை நீ பார்த்திருக்க முடியும்?”
“ஆமாம். சரிதான் சொல்லு.”
“அவர் நீ பண்ண சமையலை சாப்பிட்டுட்டு யார் சமைச்சான்னு கேட்டார். நீ தான் சமைச்சன்னு சொன்னேன். அதுக்கு அவர் நீ ஸ்வீட் செய்வியான்னு கேட்டார். நீதான் எல்லா ஸ்வீட்டும் நல்லா செய்வாயே. அதனால நான் அவர்கிட்ட செய்வாங்கன்னு சொன்னேன். அதுக்கு அவரு எங்க கடைக்கு ஸ்வீட் செஞ்சு தர முடியுமான்னு கேட்டாரு. நான் உன் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன். நீ என்ன சொல்ற?”
“ நான் ஏதோ 100 லட்டு 100 ஜாங்கிரி 100 மைசூர்பாக்கு பண்ணியிருப்பேன். அவ்வளவு பெரிய கடைக்கு ஆர்டர் எடுத்து பண்றதுனா சும்மாவா? அது என்னால முடியுமா?” என்று தயங்கியபடி கேட்டார் லட்சுமி.
“உன்னால கண்டிப்பா முடியும். இரண்டு ஆள் சேர்த்துக்கிட்டு பண்ணலாம். நீ முதல்ல கொஞ்சம் லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாக் பண்ணிக்கொடு. நான் அவர்கிட்ட கொடுத்து ஓகே வான்னு கேட்டு சொல்றேன்.”
“சரி முல்லை. நான் தேவையான பொருள் எல்லாத்தையும் வாங்கி ரெண்டு நாள்ல செஞ்சி கொடுக்கிறேன்.”.
“நான் இதை உங்க வீட்டுக்கு வந்து சொல்லி இருப்பேன். ஆனா அங்கதான் லலிதா இருப்பாளே. அதனாலதான் இங்க சொல்றேன். நீயும் அவகிட்ட பார்த்து நடந்துக்கோ.” என்று கூறிவிட்டு சென்றார் முல்லை.
சொன்னபடியே அன்று மாலை அந்த மூன்று ஸ்வீட் செய்வதற்கும் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார் லட்சுமி.
அடுத்த நாள் அதிகாலை எழுந்து வழக்கம்போல வீட்டு சமையல் வேலைகளை முடித்துவிட்டு டிபன் பாக்ஸில் சாப்பாடு கட்டி வெண்மதி, கார்த்திகேயன், கோவிந்தன் மூவருக்கும் கொடுத்து அவர்களை வேலைக்கு அனுப்பிவிட்டு ஸ்வீட் செய்ய அமர்ந்தார்.
லட்டுக்கு தேவையான பூந்தி தயார் செய்து பின்பு நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை அதனுடன் கலந்து மிதமான சூட்டில் லட்டு பிடித்தார்.
பிடித்து முடித்ததும் இனிப்பு சரியாக இருக்கிறதா என்று சுவைத்துப் பார்த்தார். லட்டு நன்றாகவே வந்தது.
பின்பு ஜாங்கிரி, மைசூர் பாகு என்று மூன்றையும் செய்து மூன்று தனித்தனி டிபன் பாக்சில் போட்டு எடுத்துச் சென்று முல்லையை அழைத்துக்கொண்டு அந்த பிரியா ஸ்வீட் ஸ்டால் சென்றார்.
அங்கு அந்த பெரியவர் ஆர்வமாக வரவேற்றார்.
“ வாங்கம்மா வாங்க. உங்கள தான் எதிர் பார்த்திட்டு இருக்கேன். ஸ்வீட் அதுக்குள்ள பண்ணி எடுத்துட்டு வந்துட்டீங்களா?”
“ஆமாம் சார் மூணுமே பண்ணி எடுத்துட்டு வந்திருக்கேன். நீங்க சாப்ட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.” என்று மூன்று டிபன் பாக்சையும் திறந்து அவர் முன்பு வைத்தார்.
முதலில் ஒரு லட்டு எடுத்து, அது தொட்டவுடன் உடையாமல் இருக்கிறதா என்று பார்த்தார்.
லட்சுமி அதனை நன்றாக பிடித்திருந்ததால், தொட்டவுடன் உடையவில்லை. அதே சமயம் மென்மையாகவும் இருந்தது. பெரியவர் அந்த லட்டை சுவைத்து பார்த்தார். நெய் மணம் கமழ லட்டு மிருதுவாகவும் சுவையாகவும் இருந்தது. அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் தேவைக்கு ஏற்றார்போல நெய் பதமாக சேர்த்திருந்தார். அவர் சுவைத்த பொழுது அவர் வாயில் வந்த முந்திரிப் பருப்பும் திராட்சையும் நெயில் வறுபட்ட லட்டின் சுவையை கூட்டியது. அதை ரசித்தபடியே அவர் அந்த லட்டை சாப்பிட்டார். மீண்டும் ஒரு லட்டை எடுத்து சாப்பிட தூண்டிய சுவை அது .
பின் மைசூர் பாகை சுவைத்தார். மைசூர் பாகு வாயில் வைத்தவுடன் கரைந்தது. மிருதுவாகவும் சுவையாகவும் இருந்தது. கடைசியாக ஜாங்கிரி எடுத்து பார்த்தார். பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதனை லட்சுமி ஒரு பூவைப்போல சுற்றி சுற்றி பிழிந்திருந்தார. அதையும் சுவைத்துப் பார்த்த அவருக்கு திருப்தியாக இருந்தது. பெரியவரின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்ட லட்சுமி மகிழ்ந்தார்.
எனினும் அவர் வாயால் அவர் கூற போவதை கேட்க ஆர்வமாக காத்திருந்தார் அவர்.
லட்சுமியை பார்த்து “3 ஸ்வீட்டும் அருமையா இருக்கு. எனக்கு திருப்தியா இருக்கு. நீங்க எனக்கு ஸ்வீட் செஞ்சு தர முடியுமா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் லட்சுமி பூரித்துப் போனார்.
ஆனால் வீட்டில் கணவனும் மகளும் என்ன சொல்வார்களோ என்று தயங்கினார்.
“என்னமா யோசிக்கிறீங்க? பணம் அதிகமா வேணுமா?” என்று அவரது முக மாற்றத்தை பார்த்தபடி கேட்டார் அந்த பெரியவர்.
“இல்லை சார். எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க. நான் இந்த ஒரு வாரத்தில் உங்களுக்கு கால் பண்ணி பேசுறேன். வீட்ல கேட்கணும் கேட்டுட்டு நானே உங்களுக்கு கால் பண்றேன்.” என்று கூறினார் லட்சுமி. “சரி மா நீங்க வீட்ல பேசிட்டு எனக்கு போன் பண்ணி சொல்லுங்க.” என்று கூறியபடி அவரது மேஜை மீது இருந்த கார்டை எடுத்துக் கொடுத்தார்.
“இது என்னோட விசிட்டிங் கார்ட். இதுல என்னோட நம்பர் இருக்கு. நீங்க எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணலாம். உங்ககிட்ட இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பேன்.” என்று புன்னகைத்தார்.