நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இரவு உணவை முடித்ததும் வெண்மதி
“நான் தோட்டத்தில கொஞ்ச நேரம் நடந்துட்டு வர்றேன்.” என்று தோட்டத்தை நோக்கி நடந்தாள்.
அப்பொழுது லட்சுமி “இருமா நானும் உன் கூட வரேன். ஏங்க நீங்களும் எங்க கூட நடக்க வரீங்களா” என்று கணவரையும் அழைத்தார் லட்சுமி.
“நடக்கலாமே.” என்று கோவிந்தன் கூற மூவரும் தோட்டத்திற்கு சென்றனர்.
அந்த இரவுப் பொழுதில் இதமான காற்று வீச மூவரும் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர். அப்போது லட்சுமி மற்ற இருவரையும் விட பொறுமையாக நடந்தார். இதனை கவனித்த கோவிந்தன் “என்ன லட்சுமி கால் வலிக்குதா? ரொம்ப பொறுமையா நடக்கிற?” என்று அக்கறையாக விசாரித்தார்.
அதற்கு லட்சுமி
“இல்லங்க காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் சும்மா ஒரே இடத்தில உட்கார்ந்துட்டு இருக்கறதுனால. கால் பிடிச்சுக்குது. அதான் நடக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொஞ்ச தூரம் நடந்ததுக்கப்புறம் சரியாயிடும்.”
இருவரது பேச்சையும் கேட்டு திரும்பிய வெண்மதி “அதனாலயா பிடிச்சுக்குது?”
“ஆமாம் வெண்மதி. அதனாலதான். வெண்மதி எனக்கு வீட்ல சும்மா இருக்க போரடிக்குது. அதான் ஏதாவது செய்யலாமா என்று யோசிக்கிறேன்.” தாயை கூர்ந்து கவனித்தாள் வெண்மதி.
“என்னம்மா சொல்றீங்க? நீங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம். உங்களை நான் ராணி மாதிரி வச்சுக்கணும்னு ஆசைப்படறேன்.” என்று ஆரம்பித்தாள் வெண்மதி .
“என்னமா சும்மா சும்மா இதையே சொல்லிக்கிட்டு. நான் உன்னை கேட்டனா? “
“என்னமா இப்படி சொல்றீங்க?”
“ஆமாம் வெண்மதி இப்படி சும்மா உட்கார்ந்துட்டு இருக்கிறது எனக்கு பிடிக்கல.”
“இல்லம்மா நீங்க கஷ்டப்படுவீங்கன்னு தான் சொன்னேன்.”
“எனக்கு எது கஷ்டம்னு நான்தானே தீர்மானிக்கணும். எனக்கு சும்மா இருக்கிறது தான் கஷ்டம். அக்கா அதிகாரத்தால என்னை அடக்கி என் நான் ஆசைப்படுவதை செய்ய விடல. நீ என்னை அன்பால அடக்கி நான் ஆசைப்படுவதை செய்ய விட மாட்டேன் என்கிறாய். ஆக மொத்தம் இரண்டு பேருமே என்னோட மனசை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க.” “என்னமா இப்படி சொல்றீங்க?” என்று சிறிது வருத்தம் காட்டி கேட்டாள் வெண்மதி.
மகளுக்கு சிறிது வருத்தமாக இருக்கும் என்று லட்சுமி நன்கு அறிவார். எனினும் தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற உறுதியில் அப்படி பேசினார்.
“ஆமாம் வெண்மதி. நான் ஏதாவது வேலை செய்யணும்னு நினைக்கிறேன். நம்ம ஊர்ல ப்ரீயா ஸ்வீட் ஸ்டால் தெரியுமா?”
“தெரியும்” என்று வெண்மதி கூற
லட்சுமி தொடர்ந்தார்.
“அந்த ஸ்வீட் ஸ்டால் ஓனர் கபிலன் தெரியுமா?” என்று மகளையும் கணவரையும் பார்த்தார்.
வெண்மதி “எனக்கு தெரியாதே. என்ன விஷயம்?” என்று நெற்றியை சுருக்கினாள் யோசனையாக.
கோவிந்தன் “எனக்கு தெரியும்.” என்று கூறிவிட்டு மனைவியை கவனித்தார்.
“அவர் நான் செஞ்ச ஸ்வீட்டை சாப்பிட்டுட்டு அவங்க கடைக்கு ஆர்டர் எடுத்து செஞ்சு தர முடியுமான்னு கேட்டு இருக்கார்.”
“ஓ இதுதானா விஷயம்.” என்று வெண்மதி கேட்க
லட்சுமி “ஆமாம் நான் இந்த ஆர்டர் எடுத்து பண்ணனும்னு நினைக்கிறேன்.” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
“ அதான் முடிவு பண்ணிட்டீங்களே. அப்புறம் என்ன? பண்ணுங்க அம்மா. ஆனா ஒரு கண்டிஷன் வேலைக்கு ஆள் போட்டு பண்ணுங்க. நீங்க உங்க உடம்பை கஷ்டப்படுத்திக்காதீங்க. அப்புறம் இன்னொரு கண்டிஷன். அதுல வர்ற பணத்தை நீங்களே செலவு பண்ணிக்கோங்க. அதுல இருந்து பத்து பைசா கூட நாங்க ரெண்டு பேரும் வாங்க மாட்டோம்.” என்று உறுதியாக கூறினாள் வெண்மதி.
இதனை கேட்ட கோவிந்தனும் “வீட்டு செலவு வழக்கம்போல எப்பவுமே என்னோடது தான். அதில வெண்மதி நீயும் சரி லட்சுமி நீயும் சரி தலையிட கூடாது.” என்றார்.
“என்னோட சம்பளத்துல 15,000 நான் ஒவ்வொரு மாதமும் பெரியம்மா கிட்ட கொடுத்திடுவேன். மீதம் இருக்கிற பத்தாயிரத்தில் நாம வாரம் ஒருமுறை வெளியே சுத்தற அந்த செலவு போக மத்த பணத்தை நான் அப்படியே சேர்த்து 100000 ஆனதும் கவிதா கல்யாணத்திற்கு நகை எடுத்து கொடுக்கலாம்னு இருக்கேன். அதனால அந்த செலவும் நான் தான் பண்ணுவேன். இதுக்கு எல்லாம் ஓகேனா நீங்க இந்த ஆர்டரை எடுத்து பண்ணுங்க. இது உங்க சந்தோஷத்திற்காக மட்டும்தான். வீட்டு வருமானத்துக்காக இல்ல. அப்படி அதுல உங்களுக்கு பணம் கிடைச்சாலும் அதை நீங்களே செலவு பண்ணிக்கோங்க.” என்று மகள் கூற லட்சுமிக்கு அது ஒருவகையில் வசதியாகவும் இருந்தது. அவர் அந்த பணத்தை வெண்மதியின் திருமணத்திற்கு சேர்க்கலாம் என்று திட்டமிட்டார்.
அடுத்த நாளே கபிலன் கொடுத்திருந்த விசிட்டிங் கார்டை எடுத்த லட்சுமி அவர் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.
“நான் லட்சுமி பேசுறேன் சார். நான் உங்க ஆர்டரை எடுத்து பண்றதா முடிவு பண்ணிட்டேன். வீட்டிலேயும் பேசிட்டேன்.”
“ரொம்ப சந்தோஷமா. வாரத்துக்கு ஒரு தடவை எனக்கு ஆயிரம் லட்டு, ஆயிரம் ஜாங்கிரி, ஆயிரம் மைசூர்பாகு தேவைப்படும். நீங்க உங்க அக்கவுண்ட் நம்பர் கொடுத்தா, நான் உங்களுக்கு பணத்தை அனுப்பிடுவேன். இல்ல நீங்க நேர்ல வந்து கூட வாங்கிட்டு போகலாம்.” “அட்வான்ஸ் நீங்க எனக்கு அனுப்பிடுங்க சார். நான் வேலையை ஆரம்பித்து விடுகிறேன்.” என்று சுறுசுறுப்பாக வேலையில் இறங்கினார்.
ஸ்வீட் செய்வதற்கு தேவையான பாத்திரங்களை முதலில் வாங்கினார். பிறகு இரண்டு வேலையாட்களை வேலையில் சேர்த்துக் கொண்டார். அந்த பெரிய சமையலறையில் ஒரு பாதியில் இவர் வாங்கி இருந்த பாத்திரங்களை அவரிடம் வேலை செய்த இரு வேலையாட்கள் மூலமாக அடுக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த லலிதா “இது என்ன வீடா சத்திரமா? கண்டவனும் கிச்சன் வரைக்கும் வர்ரானுங்க. ஏதோ திறந்த வீட்டில நாய் நுழைகிற மாதிரி.” என்று வேண்டுமென்றே அந்த இரண்டு பையன்களையும் திட்டினார். இதனை கேட்ட அந்த பையன்களுக்கு கோபம் வந்தது.
”என்னம்மா சொன்னீங்க? நாங்க இங்க சம்பளத்துக்கு வேலை செய்ய வந்திருக்கிறோம் தான். அதுக்காக நீங்க கண்ட படி பேசினா அதையெல்லாம் நாங்க பொறுத்துக் போக மாட்டோம்.” என்று லலிதாவிடம் கோபமாக பேசினர்.
இதனை கவனித்த லட்சுமி பதறியபடி வந்து
“தம்பி தம்பி. கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் பேசுறேன்” என்று கூறியவர்
லலிதாவிடம் திரும்பி “அக்கா நான் ஸ்வீட் செஞ்சு தர்றதா ஆடர் எடுத்திருக்கேன். அதுக்காக பாத்திரம் வாங்கி வேலைக்கு ஆள் போட்டு எல்லாத்தையும் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன். இவங்க ரெண்டு பேரை நான் வேலைக்கு சேர்த்திருக்கிறேன்.”
“இங்க பாரு இதெல்லாம் சுத்தமா சரி இல்ல. இவங்க எல்லாம் கிச்சன் வரைக்கும் வருவது எனக்கு சுத்தமா பிடிக்கல. இந்த கிச்சன்ல நீ இதெல்லாம் செய்யக்கூடாது.”
“இல்லை. நான் எங்க போர்ஷன்ல தான் பண்றேன். உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்.”
“என்ன தொந்தரவு பண்ணமாட்ட? இவ்வளவு பெரிய பாத்திரத்தை நகர்த்தினா, எவ்வளவு சத்தமா இருக்கு? அப்புறம் நீ இன்னும் ஸ்வீட் எல்லாம் பண்ணும்போது கிச்சன்ல வேலை செய்யற இந்த கலாவுக்கு தொந்தரவா இருக்கும்.” என்று லலிதா புதிதாக சமையல் வேலைக்கு சேர்த்து இருந்த கலாவை காட்டி பேசினார்.
இதனை கேட்ட கலா
“இதுல எனக்கு என்னமா தொந்தரவு இருக்கப்போவது? அவங்க அவங்க இடத்துல சமைக்கிறாங்க. நான் உங்க இடத்துல சமைக்கிறேன். எனக்கு இதுல எந்த தொந்தரவும் கிடையாது.” என்று கலா தன்மையாக கூற
இதனை கேட்ட லலிதா “நீ கொஞ்சம் வாய மூடிட்டு போறியா?” என்று வார்த்தைகளை பற்களால் கடித்தபடி கலாவுக்கு மட்டும் கேட்கும் வகையில் கூறினார் லலிதா.
லலிதாவின் கோபத்தை கண்டு பயந்த கலா திரும்பி தன்னுடைய வேலையில் இறங்கினாள்.
லட்சுமிக்கு தான் வருத்தமாக இருந்தது. இவ்வளவு பொருளையும் வாங்கி வைத்துவிட்டு இப்போது முடியாது என்றால் எப்படி என்று யோசித்தபடி அங்கு உட்கார்ந்தார்.
அப்பொழுது அந்த வேலை ஆட்கள்
“ என்னமா? எங்களுக்கு வேலை இருக்குதா இல்லையா? இந்த அம்மா ஏன் இப்படி பேசுது? கொஞ்சம் கூட அட்ஜஸ்ட் பண்ணி போகாது போல இருக்கு. இங்கே எப்படி இந்த வேலை செய்யப் போறீங்க?” என்று அந்த இரு பையன்களும் கேட்டனர்.
“நீங்க இப்போ வீட்டுக்கு போங்க. நாளைக்கு நான் உங்களுக்கு போன் பண்ணா வாங்க.” என்று கூறிவிட்டு அந்த இருவரையும் அனுப்பினார். மாலை வீடு திரும்பிய கணவன் மகள் இருவரிடமும் நடந்ததை விவரித்தார் . அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் இதனை கேட்டான். கேட்டவன்
“அம்மா ஏன் இப்படி பண்றாங்க நான் போய் அம்மாவை கேட்கிறேன்.” என்று உள் நோக்கி “அம்மா” என்று அழைத்தான்.
அதற்கு லட்சுமி “வேண்டாம்பா. வேண்டாம். நீ கொஞ்சம் அமைதியா இரு. நாம யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடுக்கலாம்.” என்று லட்சுமி அவனை தடுத்தார்.
நால்வரும் யோசித்தனர்.
அப்பொழுது கோவிந்தன் “எனக்கு ஒரு ஐடியா தோணுது.”
“என்ன சித்தப்பா சொல்லுங்க.” என்று கார்த்திகேயன் கேட்க வெண்மதியும் லட்சுமியும் அவரை ஆர்வமாக பார்த்தனர்.