நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவன் முகத்தில் பயம் தெரிந்தது.
நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு முத்து
“நான் சொல்லிட்டா என்னை விட்டு விடுவீங்களா அக்கா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
“கண்டிப்பா உன்னை விட்டு விடுவேன்.” என்று அவள் உறுதியாக கூற
அவன் “சரி நான் சொல்றேன்.” என்றான்.
“ஏன் நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு வரல?”
“எங்க ரெண்டு பேரையும் கொஞ்ச நாள் முன்னாடி ஒருத்தர் வந்து பார்த்தார். அவர் லட்சுமி அக்கா கிட்ட வேலை செய்ய கூடாதுன்னு சொன்னாரு. அப்படி நீங்க செய்யாம இருந்தீங்கன்னா அவர் எங்களுக்கு தினமும் காசு தர்றதா சொன்னாரு. சும்மாவே காசு வரும்போது நாங்க ஏன் வேலை செய்யணும்னு நாங்களும் சரின்னு சொல்லிட்டோம். அவ்வளவுதான் அக்கா எனக்கு தெரியும்.”
“சரி. எனக்கு இன்னொரு விஷயம் தெரியணும். உன் கூட ரெண்டு பசங்க பேசிட்டு இருந்தாங்க இல்லையா. அவங்க கிட்ட என்ன பேசிட்டு இருந்த?” அவன் விழித்தான்.
“உண்மையை சொல்றியா இல்ல நான் போலீசுக்கு கால் பண்ணட்டுமா?” என்று கைபேசியை எடுத்தாள்.
“வேண்டாம். வேண்டாம். நானே சொல்றேன். இவங்க ரெண்டு பேரையும் வேலைக்கு போகவிடாம செய்ய சொன்னாரு. அதே ஆளு. அப்படி செஞ்சா தான் இன்னைக்கு எங்களுக்கு கிடைக்கவேண்டிய காசு கிடைக்கும். அதான் இவர்கள் இரண்டு பேருக்கும் இதைவிட அதிகமான சம்பளத்துல வேற வேலை வாங்கி தருவதா சொல்லி இன்னைக்கு உங்க வீட்டுக்கு வேலைக்கு போக விடாம பண்ணிட்டோம். அதான் அந்த பசங்க எந்த வேலை என்ன சம்பளம்னு விசாரிச்சுட்டு இருந்தாங்க. அப்பதான் நீங்க வந்தீங்க. நீங்க ஆபீஸ் விட்டு தினமும் லேட்டா தான் வருவீங்க. இன்னிக்கு திடீர்னு உங்களை பார்த்ததும் நீங்க ஏதாவது கேட்க போறீங்கன்னு ஓடிட்டாங்க. நான் மட்டும் உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன் அக்கா எங்க மேல கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்காதீங்க. எங்களுக்கு இந்த வேலையும் வேண்டாம். அந்த ஆளு கொடுக்கிற காசும் வேண்டாம். எங்கள நிம்மதியா விட்டாலே போதும்.” என்று கையெடுத்து கும்பிட்டான்.
“சரி சரி நான் உன்னை விட்டுடறேன். இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடு.” என்று தன் செல்போனில் இருந்த கதிர்வேலனின் புகைப்படத்தை காட்டி
“உனக்கு பணம் கொடுக்கிறதா சொன்னது இவரா?” என்று கேட்டாள்.
அவன் “இல்லை” என்று கூறவும் வெண்மதிக்கு ஏமாற்றமாக இருந்தது.
அவள் மீண்டும்
“நல்லா பாத்து சொல்லு முத்து.” என்று கேட்க அவன் யோசித்தான்.
“என் கிட்ட பேசினது இவர் கிடையாது. ஆனால் எனக்கு பணம் கொடுத்தவர் இந்த அண்ணா கிட்ட ஒருநாள் பேசிட்டு இருந்ததை நான் பார்த்தேன்.” என்று அவன் கூற.
அப்போ இதற்கு பின்னால் இருப்பவன் கதிர்வேலன் தான் என்று அவளுக்கு உறுதியாக தெரிந்து விட்டது.
“அக்கா எனக்கு தெரிஞ்சது எல்லாமே நான் சொல்லிட்டேன். எங்க மேல போலீஸ் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்காதீங்க. இனிமே இந்த மாதிரி தப்பு தண்டாவுக்கு நான் போகமாட்டேன். இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க.” என்று கெஞ்சினான். “சரி இனிமே இப்படி பண்ணாத. உன் மேல நான் எந்த கம்ப்ளைன்ட்டும் கொடுக்க மாட்டேன். இனிமேலாவது உருப்படுற வழியை பாரு.” என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள்.
கதிர்வேலன் மீது கோபம் பொங்க வீட்டிற்கு வேகமாக வந்தாள்.
வெண்மதியை பார்த்த லட்சுமி கவலையாக வெண்மதியிடம் வந்தார்.
“எப்படித்தான் நான் ஸ்வீட் செஞ்சு கொடுக்க போறேன்னு தெரியல. எத்தனை பேரை வேலைக்கு வச்சாலும் யாரும் வர மாட்டேங்குறாங்க. என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல. யோசிச்சி யோசிச்சி தலை வலிக்குது.” என்று தலையை பிடித்துக்கொண்டு கூறினார்.
“அம்மா நீங்க கவலைப்படாதீங்க. இதுக்கு நான் ஒரு வழி பண்றேன். எவ்வளவோ சமாளிச்சு இருக்கிறோம். இதையும் சமாளிப்போம். இதுக்கெல்லாம் தளர்ந்து போகாதீங்க.” என்று தாய்க்கு தைரியம் கூறியவள் உள்ளே சென்று கதிர்வேலனை தேடினாள். அவன் அறையில் இல்லை. தன்னுடைய கைப்பேசியை எடுத்து கதிர்வேலனின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். அவன் முதலில் எடுக்கவில்லை. இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப கூப்பிட்டாள். அதற்குப் பிறகு அவன் எடுத்தான்.
எடுத்தவன் “என்ன வேணும் உனக்கு? எதுக்கு சும்மா சும்மா போன் பண்ணி தொல்லை பண்ணிட்டு இருக்க? ஒரு தடவை போன் எடுக்கலைன்னா ஒன்னு பிசியா இருக்காங்க அப்படி இல்லைன்னா ஃபோனை எடுக்க பிடிக்கலன்னு கூட தெரியாதா உனக்கு? கொஞ்சம் கூட அறிவே கிடையாதா?” என்று எரிந்து விழுந்தான்.
“ஆமாம் ஆமாம் எனக்கு உன்ன மாதிரி மத்தவங்க குடியை கெடுக்கிற அறிவு கிடையாது தான்.” என்று கோபமாக கூறினாள்.
கதிர்வேலன் “என்ன வாய் ரொம்ப நீளுது?” என்றான்.
“அதுக்குள்ள இப்படி கேட்டா எப்படி? இன்னும் நான் பேசவே ஆரம்பிக்கல.” என்றாள் அலட்சியமாக.
“நீ என்கிட்ட என்ன பேச வேண்டி இருக்கு?” என்றான் கோபமாக.
“முத்து, சேகர் இவங்க ரெண்டு பேரை பத்தியும் பேசணும்.” என்றாள்.
ஒரு சிறிய அமைதிக்கு பிறகு
“ஓ தெரிஞ்சு போச்சா? சரி. இப்போ என்ன அதுக்கு?” என்றான்.
“நான் உன்கிட்ட பேசணும். எங்க இருக்கேன்னு சொல்லு. நான் வர்றேன்.”
“நான் இங்கே பக்கத்துலே இருக்கிற பார்க்கல இருக்கிறேன். வந்துரு.” என்று அவள் பதிலை எதிர் பார்க்காமலேயே தொடர்பைத் துண்டித்தான்.
அவள் லட்சுமியிடம்
“அம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்.
லட்சுமி “என்னம்மா இப்பதான் வந்த. அதுக்குள்ள எங்க போற?” என்று கேட்டது காற்றோடு கரைந்தது.
ஏனெனில் வெண்மதி புயல் வேகத்தில் டிவிஎஸ் 50 யில் சென்று கொண்டிருந்தாள்.
அந்த பூங்காவில் கதிர்வேலன் வெண்மதி இருவரும் எதிரெதிரே நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.
கதிர்வேலன் “என்ன சிஐடி வேலை பண்ணி கண்டுபிடிச்சிட்ட போல இருக்கு. ஆனா ஒரு விஷயம் ஒத்துக்க வேண்டியதுதான். நீ கொஞ்சம் அறிவாளி தான்.”
“ ஆமாம் உன்ன மாதிரி அண்ணன் இருந்தா நான் சிஐடி வேலையெல்லாம் பண்ணி தானே ஆகணும்.”
“சரி சரி. இப்ப என்கிட்ட என்ன பேசணும் உனக்கு? சீக்கிரம் சொல்லு . எனக்கு நிறைய வேலை இருக்கு.”
“எதுக்காக எங்களை இப்படி தொந்தரவு பண்ற?”
“அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே. இந்த வீட்டுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லைன்னு எனக்கு ஒரு சைன் பண்ணி கொடுத்துடு. அதுக்கப்புறம் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.” என்று கால்மேல் கால் போட்டுக்கொண்டு அந்த நாற்காலியில் சாய்ந்தபடி கூறினான்.
“அதான் நானும் சொல்லிட்டேனே. அந்த மாதிரி எப்பவும் சைன் போட்டு தர மாட்டேன்னு.”
“அதையும் பார்க்கலாம். சரி நானும் உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு நெனச்சிட்டு இருந்தேன். உங்க அம்மாவை நீ என்னமோ ராணி மாதிரி வாழ வைக்க போறேன்னு சொன்ன. ஆனா அவங்க கஷ்டப்பட்டு ஸ்வீட் செஞ்சு சம்பாதிச்சு எடுத்துட்டு வர்ற பணத்தில்தான் அவங்களை நீ ராணி மாதிரி வாழ வைக்கப் போறேன்னு சொன்னியா? செம காமெடி.” என்று கைதட்டி சிரித்தான்.
“ காசு பணம் நிறைய சேர்த்து வச்சுக்கிட்டு நம்மள சுத்தி இருக்கிறவங்களை
கஷ்டப்படுத்தி கிட்டு, அதிகாரம் பண்ணிக்கிட்டு வாழறது தான் ராணி வாழ்க்கைன்னு நினச்சிட்டு இருக்கியா?
அப்படி நீ நினைச்சா அந்த மாதிரி ராணி வாழ்க்கை எனக்கும் வேண்டாம் எங்க அம்மாவுக்கும் வேண்டாம்.
நான் சொன்ன ராணி வாழ்க்கை எது தெரியுமா?
நம்மள சுத்தி நல்ல மனுஷங்களை சேர்த்து வச்சுக்கிட்டு அவங்களை நம்ம அன்பாலும் பாசத்தாலும் ஆள வேண்டும். நாம வாழற வீட்ல சின்ன விஷயத்திலிருந்து பெரிய விஷயம் வரைக்கும் நம்ம அபிப்பிராயத்தை கேட்டு தான் முடிவு எடுக்கணும்.
நாம ஆசைப்படுற விஷயத்தை செய்வதற்கான சுதந்திரம் நமக்கு இருக்கணும். இப்போ இது எல்லாமே எங்க அப்பா, அம்மா, ஏன் எனக்கும் இருக்கு. நாங்கள் மூன்று பேரும் ராஜ வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கிறோம்.” என்று கூறிவிட்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு நிமிர்ந்து கம்பீரமாக
உட்கார்ந்தாள்.
“நான் கேட்ட சைன் போட்டு தராம நீ எப்படி நிம்மதியா வாழ்ந்துடறன்னு பார்க்கிறேன். இன்னும் நீ எத்தனை பேரை கூட்டிட்டு வந்தாலும் நான் அவங்களை உங்க கிட்ட வேலை செய்ய விடமாட்டேன். என்கிட்ட பணபலம் இருக்கு. அது இருக்கிற வரைக்கும் எனக்கு எந்த கவலையும் இல்லை. பணத்தை தூக்கி எறிஞ்சா எது வேணாலும் நடக்கும்.”
“நீ தப்பு கணக்கு போடுற. பணத்தையும் தாண்டி மனுஷங்களை மதிக்கிறவங்க இன்னும் இருக்காங்க. நீ அதை கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்குவ. உன்கிட்ட பணம் இருந்தா அந்த பணத்தை நல்ல வழியில் செலவு பண்ணு. அப்படி இல்லையா இல்லாதவங்களுக்கு தானமாக கொடு. அதை விட்டுட்டு மத்தவங்க குடியை கெடுக்க யூஸ் பண்ணாத.
அப்புறம் உன்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு நினைச்சேன். இவ்வளவு நாள் நான் பெரியப்பா கிட்ட உன்னை பத்தி எதுவும் சொல்லல. ஆனால் இனிமேலும் நான் அப்படியே இருப்பேன்னு நினைக்காதே. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. லிமிட்டை தாண்டி நீ போனா, நானும் போக வேண்டி இருக்கும் . இதைச் சொல்லத்தான் வந்தேன்.” என்று மிரட்டலாக கூறிவிட்டு எழுந்து அமர்த்தலாக நடந்தாள்.