“ம்ம்” என்றாள் கவிதா தலை குனிந்து சிரித்தபடி.
“அட வெட்கத்தைப் பாரு. உனக்கு வெட்கம் எல்லாம் பட தெரியும்னு எனக்கு இன்னிக்கு தாண்டி தெரியும். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே வெட்கப்படற.” என்று கிண்டலடித்தாள் வெண்மதி.
“இரு இரு என்னையா கிண்டல் பண்ற? எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும். அப்போ உன்னை நான் பாத்துக்குறேன்.”
“சரி சரி பார்த்துக்கோ. அதுக்கு முன்னாடி அவனுக்கு ஓகே சொல்லிடு.” என்றாள் வெண்மதி.
“சரி வெண்மதி. நான் சொல்லிடறேன். சரி வெயில் வந்துடுச்சு. வீட்டுக்கு போகலாமா?” என்றாள் கவிதா.
“வந்த வேலை முடிஞ்சிடுச்சுன்னு சொல்லு.”
“அப்படியும் வச்சுக்கலாம்.” என்று கண்ணை சிமிட்டி கூறினாள் கவிதா.
“உன்னை மாதிரி ஒரு பிரிண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். என்னோட வாழ்க்கையில நீ ஒரு முக்கியமான வரம் கவி.” என்று கண் கலங்கினாள் வெண்மதி.
“சரி சரி நீ ஓவரா ஃபீல் பண்ணாத. கிளம்பு போகலாம்.” என்று கூறி சூழ்நிலையை சாதாரணமாக மாற்றினாள் கவிதா.
நன்கு மழை பெய்து கொண்டிருந்தது. வெண்மதி வேலை முடிந்து பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு பேருந்தில் வந்து இறங்கினாள். இறங்கியவள் தன் கைப்பையில் இருந்த சிறு குடையை விரித்து நடந்து கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு பி.எம்.டபிள்யூ கார் வழிக்குக் கொண்டுவந்து அவளை தாண்டி அவளுக்கு சற்று முன்பு ஒரு துணி கடையை ஒட்டி நின்றது.
சாலையில் மழையினால் தேங்கியிருந்த தண்ணீர் வெண்மதி மீது அடித்தது. வெண்மதி அந்த தண்ணீரில் முழுதாக நனைந்தாள். காரோட்டி மீது கோபம் வரவும்
‘இந்த மழையில இவ்ளோ வேகமா கார் எந்த முட்டாள் ஓட்டுவது’ என்று நினைத்தவாறு ஓட்டுனர் இருக்கையை பார்த்தாள்.
அப்போது அங்கு விஜய் உட்கார்ந்திருந்தான். இவளை பார்த்ததும் அலட்சியமாக சிரித்தான்.
‘அப்போ அந்த முட்டாள் இவன்தானா! வேணும்னு தான் இப்படி பண்ணி இருக்கான் இன்னும் திருந்தவே இல்லை.’ என்று நினைத்தபடி நடந்தாள்.
அப்பொழுது அந்த காரிலிருந்து விஜய்யும், ஜீன்சும் டீ ஷர்ட்டும் ஆக ஒரு பெண்ணும் பெரிய குடையை பிடித்துக்கொண்டு இறங்கி அந்த துணிக்கடையின் முன்பு நின்றனர்.
விஜய்அந்தப் பெண்ணிடம்
“பிரியா இந்த ஊரிலேயே இந்த துணிக்கடை தான் பெருசு. நமக்கு தேவையானதை நாம இங்கே வாங்கலாம்.”
“ஓகே விஜய் உங்களுக்கு என்னென்ன வேணும்னு சொல்லுங்க. நான் உங்களுக்கும் சேர்த்தே வாங்கறேன். போகலாம் வாங்க.” என்றாள் அவனது கையை பிடித்துக்கொண்டு.
“நீ போ பிரியா. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. நான் முடிச்சுட்டு வந்துடறேன். அதுவரைக்கும் நீ உனக்கு செலக்ட் பண்ணு. நான் வந்ததுக்கு அப்புறம் எனக்கு செலக்ட் பண்ணிக்கலாம். ஓகேவா?” என்றான் அவள் கன்னத்தை தடவியபடி.
“ஓகே டியர். பாத்து போங்க. மழை அதிகமா இருக்கு. சீக்கிரம் வந்துடுங்க.” என்ற பிரியா கடையினுள் நுழைந்தாள்.
விஜய் வெண்மதியை நோக்கி வந்தான்.
இவனை கவனித்த வெண்மதியின் ஒரு மனது ‘இந்த மழையில இவன் வேற வந்து தொல்லை பண்ணப் போறானா’ என்று சலித்துக் கொண்டது.
இன்னொரு மனம் ‘வரட்டும் நல்லா நோஸ்கட் கொடுத்து அனுப்பலாம்.’ என்று ஒரு முடிவுடன் இருந்தாள். இது தெரியாமல் எலி பொறியை தேடிவரும் எலியைப் போல் வந்து மாட்டினான் விஜய்.
“என்ன என்னோட முன்னாள் காதலி. எப்படி இருக்க?” என்று எகத்தாளமாக விசாரித்தான் விஜய்.
“உன்னை மாதிரி துரோகி கிட்ட இருந்து தப்பிச்சு நிம்மதியா சந்தோஷமா இருக்கேன்.” என்று முகத்தை மலர்ச்சியாக வைத்தபடி கூறினாள் வெண்மதி.
“இன்னும் உன்னோட திமிர் அடங்கலையா?” என்று ஆத்திரத்துடன் கேட்டான். “என்னோட தன்னம்பிக்கை உனக்கு திமிரா தெரிஞ்சா, நான் திமிர் பிடித்தவள் ஆகவே இருந்துட்டு போறேன்.” என்றாள் அவள் அவன் கண்களை பார்த்து. அப்போதுதான் அவன் கண்கள் மழையில் நனைந்து உடம்போடு ஒட்டியிருந்த உடையோடு நின்று கொண்டிருந்த அவளை பார்வையாலேயே சூறையாடுவதை கவனித்தாள்.
அவன் மீதான வெறுப்பு அதிகரித்தது. அவன் முன்பு நிற்கப் பிடிக்காமல் திரும்பி நடக்க முயன்றாள்.
“என்ன எங்க ஓட பார்க்கிற?” என்று எகத்தாளமாக கேட்க
அவள் நின்று திரும்பினாள்.
“நான் எதுக்கு ஓடணும்? இது என்னோட ஊர். இங்க இருக்கிற எல்லாரையும் எனக்கு நல்லா தெரியும். தினமும் நான் இதே வழியா தான் வீட்டுக்கு போவேன். ஒரு குரல் கொடுத்தால் போதும் உன்னை இங்கேயே அடிச்சு போட்டுடுவாங்க. ஜாக்கிரதை.” என்றால் மிரட்டலாக.
அது உண்மைதான் அந்த தெருவில் இருந்தவர்களை வெண்மதி குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும். இவளுக்கு ஏதாவது பிரச்சினை என்று அவர்களுக்கு தெரிந்தால் அதற்கு காரணமானவர்களை அவர்கள் சும்மா விட்டுவிட மாட்டார்கள்.
அதனைக் கேட்ட விஜய் அவளை முறைத்தான். பின்பு அலட்சியமாக பார்த்து
“ ஹ்ம். 80 ரூபாய் டிக்கெட் வாங்கி அந்த கவர்மெண்ட் பஸ்ஸில் டிராவல் பண்ணி இந்த கொட்டுற மழையில நனைந்து வரும்போதே உனக்கு இவ்வளவு திமிரா?
ஆனாலும் உன்னைப் பார்த்தா எனக்கும் பாவமா தான் இருக்கு. உன்னோட நிலைமை இன்னும் மாறவே இல்ல. பாவம் அப்படியே தான் இருக்க.
என்..” என்று ஆரம்பித்து நிறுத்தி, திருத்திக்கொண்டு
“இந்த காரை பார்த்தியா? இது எவ்வளவு விலை தெரியுமா? 2 கோடி. இந்த இரண்டு கோடி வண்டியில நானும் பிரியாவும்
மட்டும் ஜம்முனு டிராவல் பண்ணி வந்தோம்.
ஆனா நீ, கூட்டம் தாங்காம ஒரு பக்கமா சாஞ்சிகிட்டே
வந்த அந்த பஸ்ல நெருக்கித் தள்ற கூட்டத்துக்கு நடுவுல கஷ்டப்பட்டு டிராவல் பண்ணி வந்து இருக்க.
அப்படி ஒரு ஊரையே கூட்டிகிட்டு வந்த அந்த பஸ்ஸின் விலையைவிட நாங்க ரெண்டு பேர் மட்டும் டிராவல் பண்ணி வந்த காரின் விலை அதிகம். அது தெரியுமா உனக்கு ?
எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். என்னை பாத்தியா எப்படி கெத்தா இருக்கேன்னு. யூ ஆர் அன் லக்கி” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான் .
“80 ரூபாவாக இருந்தாலும் அது என்னோட சொந்த சம்பாத்தியம். அந்த சம்பாத்தியத்தில் வாங்கின டிக்கெட்டில் டிராவல் பண்ணும் பொழுது அந்த பஸ்சை என்னோட பஸ்னு தைரியமா சொல்லுவேன். அந்த உரிமை எனக்கு அந்த பஸ் மேல இருக்கு.
இப்போ நீ ‘என்’ அப்படின்னு ஆரம்பிச்சி தட்டுத்தடுமாறி சொல்ல முடியாம தயங்கி இந்த காரை என்று சொல்லும்போதே தெரியலையா உனக்கு அந்த கார் மேல எந்த உரிமையும் கிடையாதுனு.
நீ என்னைப் பத்தி பேச வந்துட்ட. அப்புறம் என்ன சொன்ன? நீ அதிர்ஷ்டசாலியா? எனக்கு தெரிஞ்சு இந்த உலகத்திலேயே துரதிர்ஷ்டசாலி நீதான். யாருக்கும் எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லாம அதை நினைச்சி கொஞ்சம்கூட வருத்தப்படாம, வெட்கமே இல்லாம, ஊரை சுத்திக்கிட்டு இருக்கிற நீ அதிர்ஷ்டசாலி எனக்கு பிடிச்ச வேலையை செஞ்சுகிட்டு எனக்கு பிடிச்ச மாதிரி எனக்கு பிடிச்சவங்களோட வாழ்ந்துட்டு இருக்கிற நான் அன் லக்கியா?
செம காமெடி” என்று வாய்விட்டு சிரித்தாள்.
அப்புறம் இன்னும் ஒன்னு. நீ கெத்தா இருக்கிறதா சொன்னியே. அது தான் பெரிய காமெடி. இப்படி என்கிட்ட இருக்கிற எந்த நல்ல விஷயமும் இல்லாத நீ ஒரு டம்மி பீசு. கெத்துக்கும் உனக்கும் சுத்தமா சம்பந்தமே கிடையாது. அப்படி எல்லாம் நினைச்சுக்கிட்டு சுத்திகிட்டு இருக்காதே.” என்று அவன் மூக்கை அவள் உடைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அங்கு அந்த பிரியா வந்தாள்.
“விஜய் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ரோட்ல ஒரு பொண்ணு போகக்கூடாது உடனே அவகிட்ட கடலை போடணும். ஏன்தான் இப்படி இருக்கியோ. வா போகலாம்.” என்று கூறியபடி அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
இதனைக்கேட்ட வெண்மதி சிரிக்க அவன் பிரியாவை முறைதான்.
அப்பொழுது பிரியா “என்ன முறைக்கிற? இரு அப்பா கிட்ட சொல்றேன்.” என்று மிரட்டியபடி அவன் கையை உதறிவிட்டு காரை நோக்கி நடந்தாள்
“இல்ல பிரியா உன்னை பப்ளிக்ல வாங்க போங்கன்னு பேச சொன்னேன்ல. வா போன்னு நீ பேசினதால அப்படி பாத்தேன். இதை எல்லாம் உங்க அப்பாகிட்ட சொல்லணுமா?” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சி கொண்டிருந்தான் விஜய்.
அவனைப் பார்த்த வெண்மதி சிரித்தாள்.
“நல்ல என்டர்டெயின்மென்ட் தான்.” என்று நினைத்தபடி திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள்.
செல்வாவின் பேச்சை கேட்டு விஜய் வெண்மதியை கைவிட்டுவிட்டு பிரியாவை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டு அவர்களது நிச்சயதார்த்தமும் முடிந்திருந்தது.
ஆனால் செல்வா ஆசை காட்டியது போல எதுவும் நடக்கவில்லை. பிரியாவின் தந்தை சொன்னபடி விஜய்க்கு எந்த சாஃப்ட்வேர் கம்பெனியும் இதுவரை வைத்து கொடுக்கவும் இல்லை. இனிமேலும் வைத்துக் கொடுக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. அவனை அந்த வீட்டில் ஒரு எடு பிடியை போலவே நடத்தினார். பிரியா நல்ல மனநிலையில் இருக்கும்போது நன்றாக பேசுவாள். கோபம் வந்தால் இவனை மரியாதை இல்லாமல் பேசுவாள் . ஆனாலும் பிரியாவின் தந்தையை எதிர்த்து அவனால் பிரியாவை விடுத்து வேறு ஒரு வாழ்க்கையை எண்ணியும் பார்க்க முடியாது. ஏனெனில் ப்ரியாவின் தந்தையின் பணபலமும் ஆள்பலமும் அப்படி.
ஒரு முறை விஜய், செல்வாவிடம்
“டேய் செல்வா உன் பேச்சைக் கேட்டு வெண்மதியை விட்டுட்டு பிரியாவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கொண்டது தப்பா போச்சு. பிரியாவுடைய அப்பா என்னை அவர்கிட்ட வேலை செய்ற மற்ற வேலைக்காரர்களை போல நடத்தறார். கொஞ்சம்கூட மரியாதையா நடத்த மாட்டேங்கிறார். பிரியாவும் அப்படிதான் நடத்தறா. நண்பனுக்கு நல்ல வழி காட்டணும். நீ எனக்கு கெட்ட வழி காட்டிட்ட.” என்று அவனிடம் கோபமாக சண்டை போட்டான் விஜய்.
இதைக்கேட்ட செல்வா “நான் உனக்கு நல்லது நினைச்சு தான் பண்ணேன். ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலை. அப்படியே நான் சொன்னாலும் உனக்கு எங்கடா போச்சு புத்தி?” என்று பதிலுக்கு கத்தினான்.
உண்மையில் அவன் சுயநலமாக தான் அப்படி பேசினான். ஏனென்றால் கதிர்வேலன் பணம் கொடுத்து அப்படி பேச வைத்தான். எனினும் விஜய்யிடம் பொய் கூறினான்.
“உன் பேச்சைக் கேட்டு புத்தி கேட்டு போய் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன் பாரு என்ன சொல்லணும். எல்லாம் என்னோட பேராசை. வெண்மதிக்கு நான் செஞ்ச துரோகம் தான் இப்படி கஷ்டப் படுறேன். இனிமேலும் உன் பிரெண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை இனிமேல் என் முகத்திலேயே முழிக்காதே.” என்று செல்வாவின் நட்பினை முறித்துருந்தான் விஜய்.
இவர்களது சண்டை வளர்ந்து பெரியவர்களுக்கும், விஜய்யின் காதல் விவகாரமும் அவன் செல்வாவின் மூளைச்சலவையை கேட்டு வெண்மதிக்கு செய்த துரோகமும் தெரியவந்து விஜய், செல்வா இருவர்களின் பெற்றோர்களும் அவர்களை மதிப்பது கிடையாது. சொந்த வீட்டிலேயே அன்னியர்கள் போல வாழ்ந்து வந்தனர்.
பட்டப்படிப்பை முடிக்காமல் வேலையும் கிடைக்காமல் எல்லோரிடமும் பேச்சு வாங்கிக் கொண்டிருந்தான் செல்வா.
விஜய், வேறு வழியின்றி பிரியாவின் சொல்பேச்சு கேட்டு கூண்டுக்குள் வாழும் பறவை போல வாழ்ந்து கொண்டிருந்தான்.
சுதந்திரமாக நினைத்த மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கும் வெண்மதியை பார்த்து அவனுக்குபொறாமையாகவும் இப்படிப்பட்ட பெண்ணை விட்டு விட்டோமே என்று வருத்தமாகவும் இருந்தது. எனினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வயித்தெரிச்சலில் அப்படி பேசினான்.