“நான் வரல. தேவையில்லாத செலவு. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க.” என்று ஒதுங்க நினைத்தார் லட்சுமி.
“அம்மா வரலைன்னா நானும் வரல.” என்று கூறினாள் வெண்மதி. “என்ன லட்சுமி நீ வரலைன்னா வெண்மதி வரமாட்டா. அவ வரலனா கார்த்திகேயன் வரமாட்டான். இல்லடா?” என்று எடுத்துக் கொடுத்தார் லலிதா.
அவனும் “ஆமாம் அக்கா வரலனா நான் வரமாட்டேன்.” என்றான் உறுதியான குரலில்.
“எல்லாரும் சேர்ந்து போகலாம்ன்னு தானே கூப்பிடுறேன்.”
“சரி அக்கா. உங்க இஷ்டம். நான் கிளம்பி வரேன்.” என்று கூற அனைவரும் உற்சாகமாக கிளம்பி சென்று படம் பார்த்துவிட்டு பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்கு சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு வெளியிலேயே சாப்பிட்டுவிட்டு வீடு திரும்ப இரவு 10 மணி ஆனது.
நடப்பவை எல்லாம் கனவா? நிஜமா? என்று சந்தேகமாக கூட இருந்தது வெண்மதிக்கு. அவ்வளவு ஆனந்தமாக அன்றைய பொழுது கழிந்தது. “நாளைக்கு நாம எல்லாரும் நம்ம நிலத்தை சுத்தி பார்த்துட்டு வரலாம்.” என்று கதிர்வேலன் கூறினான். அடுத்த நாள் எல்லோருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு அவர்களது சொந்த நிலத்துக்கு சென்றனர். அங்கு ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் மூன்று போர்வைகளை விரித்து அதில் அனைவரும் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
அன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், வெயில் தெரியவில்லை. நன்றாகவே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்
அப்போது
லலிதா “என்னமா இந்த வாரமும் உன்னால ப்ராஜெக்ட் ப்ளான் போட முடியலையா? அத நெனச்சு உனக்கு கவலையா இல்ல ?” என்று கேட்க வெண்மதி ஆச்சரியமாக லலிதாவை பார்த்தாள்.
இதுவரை எப்பொழுதுமே லலிதா வெண்மதியின் படிப்பைப் பற்றி அக்கறை கொண்டது கிடையாது. என்று ஏன் திடீரென்று இப்படி கேட்கிறார் என்று அவளுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. எனினும் அதனை மறைத்துக்கொண்டு “பிராஜக்ட் பிளான் நான் காலேஜில் முடிச்சிட்டேன் பெரியம்மா.” என்று விபரம் கூறினாள்.
இதை கேட்ட பெரியம்மாவின் முகத்தில் அதிர்ச்சி கோடுகளை கவனித்தாள் வெண்மதி. ‘இதுக்கு ஏன் பெரியம்மா இப்படி அதிர்ச்சியாகிறார்’ பெரியம்மா, கதிர்வேலன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை கவனித்தாள் வெண்மதி.
வெண்மதி “அப்பா நாளையிலிருந்து நீங்க என்னை கவிதா வீட்டில விட்டுடுங்க.”
“என்ன கவிதா வீட்டுக்கு போறியா? தினமும் எதுக்கு?” என்று மூக்கை நுழைத்தார் பெரியம்மா.
“ நாளையிலிருந்து நான் பக்கத்துல இருக்கிற கம்பெனிக்கு போய் ப்ராஜெக்ட் செய்யணும். அந்த கம்பெனிக்கு கவிதா வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாண்ட்ல பஸ் புடிச்சு போகணும். அதுக்கு தான் சொன்னேன்.”
“எந்த கம்பெனி?”
“சிஸ் டெக் சாஃப்ட்வேர் கம்பெனி.”
“ஓ அந்த கம்பெனியா? அது இங்கிருந்து ரொம்ப தூரம் ஆச்சே! எப்படி தினமும் போயிட்டு வருவ?”
“இங்கே இருந்து கொஞ்சம் தூரம் தான். ரெண்டு பஸ் புடிச்சு போகணும். காலையில் ஆறரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பனும். பெரியம்மா.”
“காலையில் ஆறரை மணிக்கெல்லாம் எப்படி கிளம்புவ? நீ தினமும் எழுந்திருக்கிறதே ஆறரை மணிக்கு தான். ரெண்டு பஸ் பிடிச்சு போகணும்னு வேற சொல்ற. உன்னால முடியாது. பாவம் லட்சுமி. உனக்காக காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து சமையல் செஞ்சு கொடுக்கணும். எதுக்காக இப்படி அப்பா அம்மாவை கஷ்டப்படுத்துற?” என்று வெண்மதி ஏதோ தவறு செய்வது போல அவள் மீது குற்றம் சாட்டினார் பெரியம்மா.
இதைக்கேட்ட கோவிந்தன் “எனக்கு எந்த கஷ்டமும் இல்லை அண்ணி. நான் எப்படியும் ஏழு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவேன். அரைமணி நேரம் முன்னாடி தானே பிரச்சனை இல்லை .”
“சரி நீங்க எல்லாம் பேசிக்கிட்டு இருங்க. நான் கொஞ்ச நேரம் அங்க நடந்துட்டு வர்றேன்.” என்று எழுந்து சென்றுவிட்டார் கோவிந்தன்.
அங்கு லலிதா, லட்சுமி, வெண்மதி மூன்று பேர் மட்டுமே இருந்தனர்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பினார் லலிதா
“ஆமாம் அக்கா. எனக்கும் பிரச்சனை இல்ல. அவளுக்கு நான் எலுமிச்சை சாதம் தயிர் சாதம் புளி சாதம் என ஏதாவது செஞ்சி கொடுத்திடுவேன்.” “கல்யாண வயசு பொண்ணு. நல்லா சாப்பிடணும். இப்படி ஏனோதானோன்னு சாப்பிட்டா, ரொம்ப ஒல்லியா ஆயிடுவ.”
“நான் கரெக்டான வெயிட் ல தான் இருக்கேன் பெரியம்மா.” என்றாள் வெண்மதி.
“அவ்வளவு தூரம் தனியாவா போயிட்டு வருவ?”
“இல்லை பெரியம்மா. என் கூட தினமும் கவிதா வருவா. நாங்க ஒரு 15 பேர் சேர்ந்து போயிட்டு வருவோம்.”
“அதுல ஆம்பள பசங்க கூட இருக்காங்களா? என்று கேட்டவளை கூர்ந்து பார்த்தபடியே
“இருப்பாங்க. அதனால என்ன பெரியம்மா? ஆம்பளை பொம்பளை வித்தியாசம் பார்த்து பழகுவது கிடையாது. நாங்க எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ்.”
“ஆம்பளை பொம்பளை வித்தியாசம் பார்த்து பழக மாட்டீங்களா? கலிகாலம் டா இது. அந்த காலத்துல நாங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பையனை கூட நிமிர்ந்து பார்த்ததே கிடையாது. இப்போ என்னடான்னா வயசு பொண்ணு இந்த மாதிரி பேசுற. போற போக்க பார்த்தா எவனையாவது லவ் பண்றேன்னு இழுத்துக்கிட்டு ஓடிப் போய் விடுவ போல இருக்கு.” என்று வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார் லலிதா.
இதைக் கேட்ட லட்சுமிக்கு வருத்தமாக இருந்தது.
வெண்மதி கோபத்தின் உச்சியில் இருந்தாள் “ஒருநாளும் நீங்க நினைக்கிற மாதிரி நான் பண்ண மாட்டேன்.”
“என்ன பண்ண மாட்ட? யாரையும் லவ் பண்ண மாட்டியா ?”
“பண்ண மாட்டேன்.”
“இப்படித்தான் பக்கத்துவீட்டு சரளா தங்கச்சி பொண்ணு சொல்லிக்கிட்டு இருந்தா. அப்புறம்,காலேஜில் யாரையோ லவ் பண்ணிட்டு ஓடிப் போயிட்டா.”
“நான் அப்படி பண்ண மாட்டேன்.”
“கேட்க எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா உன்னோட வயசை நம்ப முடியாது. ஒருவேளை லவ் பண்ணினா என்ன செய்வா?”
“அப்படியே நான் யாரையாவது லவ் பண்ணா உங்க எல்லார்கிட்டயும் சொல்லி சம்மதம் வாங்கி தான் கல்யாணம் பண்ணிக்குவேன். எங்க அம்மா அப்பாவுக்கு பிடிக்கலைன்னா கண்டிப்பா அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்னால நீங்க தலை குனியர மாதிரி நடந்துக்க மாட்டேன். இது சத்தியம். போதுமா?” என்று கூறி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள் வெண்மதி.
இரவு வீடு திரும்பினர். வீட்டுக்குள் நுழைந்ததும் அன்றிரவு படுக்கையில் படுத்த வெண்மதி கடந்த இரண்டு வாரங்களாக லலிதா தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை நினைத்து பார்த்தாள்.
வெண்மதியின் படிப்பைப் பற்றி லலிதாவுக்கு எப்பொழுதுமே அக்கறை இருந்தது கிடையாது என்றாலும் அவளுடைய படிப்பை லலிதா கெடுக்க நினைத்ததும் கிடையாது.
“நல்ல மார்க் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர வேண்டும் என்று வெண்மதி விருப்பம் தெரிவித்தபோது “பொம்பள பிள்ளைக்கு இந்த பெரிய படிப்பு எல்லாம் எதுக்கு?” என்று பொறாமையில் ஆரம்பிக்க தான் செய்தார். ஆனால் பெரியப்பா “படிக்கட்டும். அவளோட படிப்பு அவளோட இஷ்டம்.” என்று கூறி அவள் படிக்க வழிவகுத்தார்.
“அதுவும் நல்லதுதான். அவ கல்யாணத்துக்கு தேவையான காசு பணத்தை அவளே சம்பாதிச்சகட்டும். அப்புறம் இந்த வீட்ல இருக்கறதுனால அந்த செலவும் நம்ம தலையில் விழுந்திட போகுது.” என்று ஒருமுறை லலிதாவின் அண்ணன் லலிதாவிடம் கூறுவதை வெண்மதி கேட்க நேர்ந்தது.
அன்றிலிருந்து லலிதா வெண்மதியின் படிப்பினை கெடுக்க எந்த முயற்சியும் மேற்கொண்டது கிடையாது. ஆனால் இப்பொழுது வெண்மதிக்கு லலிதா வேண்டுமென்றே தன்னை ப்ராஜெக்ட் பிளான் செய்யவிடாமல் தடுக்க நினைத்தார்களோ என்று சந்தேகமாக இருந்தது. எனினும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து கிளம்பி 6:15 மணிக்கெல்லாம் தயாரானாள் வெண்மதி. “என்னம்மா ரெடி ஆயிட்டியா ? இந்தாம்மா மதி. இந்த டிபன் பாக்ஸ்ல எலுமிச்சை சாதம் இருக்கு. மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடு. புதுசா ஒரு கம்பெனிக்கு போற. ரொம்ப ஜாக்கிரதையா இருந்து உன்னோட வேலையை முடிச்சிட்டு நல்ல பெயர் எடுத்துட்டு வா.”
“கண்டிப்பா நான் என்னோட வேலையை சக்சஸ் ஃபுல்லா முடிச்சி நல்ல மார்க் ஸ்கோர் பண்ணிடறேன் அம்மா.”
இந்த ஊரைத் தவிர எங்கேயும் தனியாக போய் பழக்கம் கிடையாது உனக்கு. தனியா எங்கேயும் போகாதே. உன்னோட பிரெண்ட்ஸ் எங்க இருக்கிறார்களோ அங்கேயே இரு. வெளிஉலகம் தெரியாமலே இவ்வளவு நாள் வளர்ந்துவிட்ட. பாத்து பத்திரமா இருமா.” என்று அக்கறையும் சிறிது கவலையும் கலந்த குரலில் கூறினார் லட்சுமி .
அம்மா “நீங்க கவலைப்படாம இருங்க. நான் பத்திரமா இருப்பேன்.” என்று அவருக்கு தைரியம் கூறினாள் வெண்மதி. அப்போது அங்கு வந்த கோவிந்தன் “என்னமா கிளம்பலாமா மதி?” என்றார்.
“ஆம் கிளம்பலாம் அப்பா,”
“தேவையான எல்லாத்தையும் எடுத்துக் கொண்டாயா?”
“நான் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டேன் அப்பா.”
“சரிமா பாத்து நடந்துக்கோ.”
“சரிப்பா என்று கூறிவிட்டு அவருடன் டிவிஎஸ் 50 வண்டியில் ஏறி கவிதா வீட்டுக்கு சென்றார்கள்.