அத்தியாயம்….2
மணிமேகலையும், வசுந்தராவும் பழைய நினைவுகளில் பாதியும், நிகழ்வில் மீதியுமாய் நேரம் கடத்திக் கொண்டு இருந்தனர். விட்டால் இன்று முழுவதுமே கதை அளந்துக் கொண்டு தான் இருப்பர்.
ஆனால் கீழ் கட்டில் இருந்து கேட்ட, “ஏன்டி வெள்ளன வந்து உன் ஆத்தாவுளுக்கு ஒத்தாசை செய்யலாம்லே… நல்லா வாச்சீங்க ஆத்தாலும், மவளும்.” என்று கத்திய அப்பத்தாவின் கத்தலில்…
“இனி நான் இங்கு இருந்தா, அவங்க வால்யூம் இன்னும் தான் ஏறும். நீ வந்த வேலைய கவனி.” என்று சொல்லி விட்டு செல்ல பார்த்தவளின் கை பிடித்து தடுத்து நிறுத்திய வசுந்தரா…
“நான் மட்டும் இங்கு இருந்தா சந்தேகம் வரும்டி.” வசுந்தரா தயங்கித் தயங்கி அவர்கள் வீட்டின் முன் பகுதியில் அமைந்திருந்த தோட்டத்தில், ராஜபாளைய நாயின் கழுத்துப் பகுதியை தடவிய வாறே, மேல் நோக்கியே பார்வை இட்டுக் கொண்டு இருந்த மணிமேகலையின் பெரிய சித்தப்பா மகன் வாசுதேவனை, இவளும் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டு இவளிடம் சொன்னாள்.
“அதுக்கு…” என்று கேட்டுக் கொண்டே மணிமேகலை வாசுவை பார்க்கும் வேளை, சட்டென்று தன் பார்வையை மாற்றிக் கொண்ட வாசுவை கிண்டலாக பார்த்துக் கொண்டே,
“என்னை கூட நம்பலாம்டி. ஆனா உங்க மாதிரி ஆளுங்கல தான் நம்பவே கூடாது. உன் அம்மா உன்னை ஏன் திட்டம் பண்ணாங்கன்னு இப்போ தான் தெரியுதுடி.” என்று சொன்னவள்.
“ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம். அவன் வருவதை தெரிஞ்சி நீ இங்கு வர்றியா? இல்ல நீ வருவேன்னு அவன் வர்றானா?” என்று மணிமேகலை தன் நீண்ட நாள் சந்தேகத்தை கேட்டாள்.
“ஏய் உனக்கு தெரியாம நான் என்னடி செஞ்சி இருக்கேன். நான் அவங்க கிட்ட பேசுனதே இல்லேன்னு உனக்கு தெரியாதா?” என்று வசுந்தரா பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
“அது தான்டி எனக்கு சந்தேகமே. நான் சும்மா பாக்குறதை கூட உன் கிட்ட சொல்லிடுவேன். நீ சீரியசா வாசுவை பார்த்துட்டு இருந்து இருக்க. அதுவும் எனக்கு தெரியாம. அன்னிக்கு மட்டும் நான் உன்னை கவனிக்கலேன்னா நீ இன்ன வரைக்கும் என் கிட்ட சொல்லி இருப்பியா இல்லையான்னே எனக்கு தெரியல.” இதை மணிமேகலை கொஞ்சம் ஆதங்கமாய் தான் சொன்னாள்.
ஒரு வருடம் முன் இதே போல் மாடியில் தான், வசுந்தரா மணியை பார்க்க வந்த போது, எப்போதும் போல் பைனாகுலர் வழியாக இயற்கை கொடுத்த பேரழகை மணிமேகலை ரசித்துக் கொண்டு இருந்தாள்.
வசுந்தராவின் வருகை அறிந்துக் கொண்ட மணிமேகலை… “என்னடி விஷயம்?” என்று கேட்டாள்.
வசுந்தரா எப்போதும் காரணம் இல்லாமல் வரமாட்டாள். அதனால் என்ன விசயம்…? என்று கேட்டதற்க்கு,
“நேத்து கம்பியூட்டர் சையின்ஸ் நடத்துனது எனக்கு சுத்தமா புரியலடி.” என்று வசுந்தரா சொன்னதும், மணிமேகலை தன் பார்வையை அவள் பக்கம் திருப்பியவள்…. “கம்பியூட்டர் சையின்ஸா…?” என்று சந்தேகத்துடன் கேட்டாள். மணிமேகலை இப்படி சந்தேகத்துடன் கேட்பதற்க்கும் காரணம் இருக்கிறது.
[the_ad id=”6605″]
மணிமேகலை அனைத்து பாடத்திலும் முன்நிலையில் தான் இருப்பாள். இது வரும் இது வராது என்று எல்லாம் இல்லை. ஆனால் வசுந்தரா அப்படி இல்லை.
ஒரு சில பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பாள். ஒரு சில பாடத்தில் கொஞ்சம் என்ன ரொம்பவே மணிமேகலை அவளை தேத்த கஷ்டப்பட வேண்டி இருக்கும்.
வசுந்தராவுக்கு வரும் பாடத்தில் சேர்த்தி தான் இந்த கம்பியூட்டர் சையின்ஸ். அந்த சப்ஜெக்ட்டில் மட்டும் வகுப்பில் இவளுக்கு அடுத்து வசுந்தரா தான் நல்ல மதிப்பெண் எடுப்பாள்.
அதுவும் அவர்கள் பயிலும் கல்லூரியில், கம்பியூட்டர் சார் புரியாதவற்க்கும் புரியும் படி எடுக்கக் கூடியவர். அதனால் தான் அந்த சப்ஜெக்டா, என்று கேட்டாள். சப்ஜெக்டை மாத்தி சொல்கிறாளோ என்ற சந்தேகத்துடன் கேட்டாள்.
“அதே சப்ஜெக்ட் தான்டி.” என்று எப்போது இல்லாது வசுந்தரா எரிந்து விழுந்தாள்.
சரி அவள் அம்மா இங்கு போக திட்டி இருப்பாங்க போல. அது தான் அந்த கோபத்தை தன்னிடம் காண்பிக்கிறாள் என்று நினைத்து, எதுவும் சொல்லாது அவள் முன் தன் கையை நீட்டினாள்.
“என்னடி என்ன வேணும்…?” என்று வசுந்தரா கேட்டாள்.
அப்போது தான் மணிமேகலை, வசு கையில் எதுவும் எடுத்து வராததை பார்த்து, “இல்ல புக் வாங்க தான் கை நீட்டினேன்.” என்று மணிமேகலை சொன்னதும், வசுந்தரா தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.
“அவசரத்துல எடுத்துட்டு வரலடி.” என்று ஏதோ பெரிய குற்றம் செய்தவள் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.
“இது என்னடி பெரிய விசயமா…? நானும் நீயும் ஒரே க்ரூப் தானே… இரு நான் போய் எடுத்துட்டு வர்றேன்.”
சொன்னது போல் தன் அறையில் இருந்து அவள் சொன்ன பாடப்புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தவள்…
“என்னைக்கு நடத்துனது புரியலடி…?” என்ற மணியின் கேள்விக்கு,
“ஆ…ஆ.” என்று திணறிய பின், “நேத்து… நேத்து நடத்துனது தான் புரியல.” என்று சொன்னவளை, மணிமேகலை திரும்பவும் சந்தேகத்துடன் பார்த்தாள்.
“எனக்கு நீ நடந்துக்குறது தான்டி புரியல.” என்று சொன்னாலுமே… வசு சந்தேகம் என்று சொன்ன பகுதியை, மணிமேகலை நிறுத்தி நிதானமாக புத்தகத்தை பார்த்து சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.
அதற்க்கு வசுவிடம் இருந்து… “ம்.” என்ற பதிலே தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. இவள் நாம் சொல்வதை கவனிக்கிறாளா…?இல்லையா…? என்ற சந்தேகத்தில் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
பார்த்தவள் கண்ணுக்கு தெரிந்தது தாங்கள் மொட்ட மாடியில் அமர்ந்து இருந்தாலும், தோட்டத்தை பார்க்க ஏதுவாய் மாடியில் கைப்பிடிக்கு பதிலாக, கம்பிவளையத்தை பொறுத்தி தன் தாத்தா கட்டியதற்க்கு, இன்று தான் அதன் உண்மையான பலன் இருப்பது போல், வசுந்தரா அமர்ந்த வாக்கிலே அந்த கம்பி வழியாக தன் சகோதரன் வாசுவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
வாசுவும் இன்று போல் அன்றும் ராஜபாளையத்தின் கழுத்தை நீவி விட்ட வாறே வசுவை பார்த்துக் கொண்டு இருந்தான். இதனை பார்த்த மணி வசுவின் தலையை தட்டி… “உனக்கு கம்பியூட்டரில் சந்தேகம் இல்லடி. கெமிஸ்ட்ரியில் தான் சந்தேகம்.” என்று சொன்னவளிடம், மாட்டிக் கொண்டது போல் முழி முழித்த வசுந்தரா…
“அது..அது..அது தான்டி.” என்று திக்கி திணறிக் கொண்டு இருந்தவளிடம்… “என்னடி அது இதுன்னு. இது எத்தனை நாளா நடக்குது…? முதல்ல நீ ப்ரப்போஸ் செஞ்சியா இல்ல அவனா…?”என்று மணிமேகலை கேட்டாள்.
தன் சித்தப்பா மகன் வாசுதேவன் தன்னோடு எட்டு வயது பெரியவன் என்றாலும், அவள் மனதில் வாசுவை நினைக்கும் போது, ஒருமையில் தான் நினைத்துக் கொள்வாள்.
வசுவிடம் இது வரை தன் அண்ணன்களை பற்றிய பேச்சி எழுந்தது இல்லை. இப்போது வாசுவை பற்றி வசுவிடம் பேசும் சூழ்நிலையில் எப்போதும் மனதில் நினைப்பதையே கேட்டாள்.
“ஏய் என்னடி உன்னோட எட்டு வயசு பெரியவரை மரியாதை இல்லாம அவன்னு சொல்ற…?” தாலி கட்டிய மனைவி போல் வசு, வாசுவுக்கு பரிந்துக் கொண்டு பேசினாள்.
“ஏன்டி நான் என் அப்பத்தாவையே, சமயத்துக்கு கிழவின்னு உன் கிட்டயே சொல்லி இருக்கேன். அப்போ இந்த மரியாதை கிளாஸ் எடுக்காது இப்போ என்னடி புதுசா…” என்று கேட்டவள்..
[the_ad id=”6605″]
“அத விடு. நான் கேட்டதுக்கு பதில் சொல். அவன் தன் விருப்பத்தை சொன்னானா…இல்ல நீயா…?” என்று கேட்டவளுக்கு, அதிர்ச்சி தகும் வகையாய், “நாங்க இது வரை பேசினதே கிடையாதுடி.” என்று வசு சொன்னதும்,
“ஓ அப்போ நீயும் சைட்டிங் தானா…? அப்போ சரி.” என்று மணிமேகலை மிகக் கூலாக சொன்னாள்.
“ஏய் நீ நினைப்பது போல இது சைட்டிங் இல்ல. அதுக்கும் மேல.” என்று வசு தன் பேச்சை இழுத்து நிறுத்துனாள்.
“அதுக்கும் மேலேன்னா. இது புனிதமான காதலுன்னு சொல்ல வர்றியா?” என்று மணிமேகலை நக்கலாக கேட்டாள்.
அதற்க்கு வசு… “ஆம்.” என்ற தலையாட்டலில், மணிமேகலையின் முகத்தில் சிந்தனையின் சாயல் தெரிந்தது.
“என்ன மணி உனக்கு பிடிக்கலையா…?” என்று சோகத்துடன் கேட்ட வசுவின் கன்னம் பற்றிய மணிமேகலை…
“எனக்கு பிடிக்கலேன்னு இல்லடி. அவனுக்கு உன்னை பிடிச்சி இருக்கனும்.” வாசுவை அவன் என்ற சொன்னதில் வசு முறைத்து பார்த்தாள்.
“நான் என்னை மாத்திக்க மாட்டேன். எப்போவும் நான் அவன் என்று தான் சொல்லுவேன்.” என்று திட்ட வட்டமாக சொன்னவள்…
பின் “அவனுக்கு உன்னை பிடிச்சி இருக்கான்னு தெளிவு படுத்திக்க வசு. ஏன்னா என் வீடு அது மாதிரி.”
மணிமேகலை அன்று சொன்ன அந்த தெளிவை, வசு இன்று வரை தெளியவைக்காது. இது போல் பார்த்துக் கொண்டு மட்டும் தான் இருக்கிறாள்.
ஏனோ மணிமேகலைக்கு இது நல்லவிதமாக தெரியவில்லை. மற்ற வீடு போல் ஒரே வீட்டில் வளந்த சித்தப்பா மகன்களை பற்றி அவளுக்கு அந்த அளவுக்கு தெரியாது.
பெரிய சித்தப்பா மகன் வாசுதேவன் ஆகட்டும். சின்ன சித்தப்பா மகன் வசீகரன் ஆகட்டும். இருவரை பற்றியும் ஒன்றும் தெரியாது. இன்னும் கேட்டால் அனைவரும் ஒற்றை வாரிசோடு தான் நிறுத்திக் கொண்டனர்.
ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் இது வரை சகஜமான பேச்சு என்பது அவ்வீட்டில் இருந்தது இல்லை. இவர்களையாவது மணிமேகலை தன் அன்னை கொடுத்து விட்ட காபி, பணியாரம் கொடுக்கும் போது அவர்கள் முகத்தை பார்த்து இருக்கிறாள்.
அவள் அத்தை சங்கரி பெற்ற ஒரே ரத்தினமான வீரேந்திரனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை. அனைவரையும் ஓர பார்வை பார்க்கும் மணிமேகலை, இவனை மட்டும் ஓர் பார்வை கூட பார்த்தது கிடையாது.
அதுவும் பார்ப்பதற்க்கு அவ்வளவு அழகாக தான் இருப்பானாம். இந்த ஊரிலே அவன் தான் ஆண் அழகனாம். மாநிறத்தில் ஆறடி உயரத்திலும், கிராமத்துக்கே உரிய உடல் உழைப்பில் முறுக்கேறிய புஜமாய் கலையாக இருப்பான் என்று வசுந்தரா சொல்வாள்.
அதுவும் “நீ பார்க்கும் அந்த செங்கோடையன், அப்புறம் அந்த டீ மாஸ்ட்டர் இவங்களோட உன் அத்தை மகன் நல்லா இருப்பான்டி. பக்கத்துலேயே உறவு முறையில் சூப்பரா முறை பையனை முறைக்காம, இப்படி வெளியில் வந்தது போனதை எல்லாம் பார்த்துட்டு இருக்கியேடி” என்று சொன்னவளுக்கு பதில் ஏதும் சொல்லது அமைதியாகி விடுவாள்.
அனைத்தும் தன் தோழியிடம் பகிர்ந்த மணிமேகலை. தன் பன்னிரெண்டாம் வயதில் பட்ட அந்த ரணத்தை தன் உற்ற தோழியான வசுவிடம் கூட இது வரை சொன்னது இல்லை. சொன்னால் அந்த ரணம் ஆறிவிடும். ஆறக்கூடாது… என் ரணம் ஆறக்கூடாது என்று தான், திரும்ப திரும்ப அந்த நாளை நினைவில் கொண்டு வந்து ரணத்தை கீறி இன்னும் ரணப்படுத்திக் கொண்டு இருப்பாள்.
அதனால் வீரேந்திரனை நிமிர்ந்து கூட பாராது கடந்து விடுவாள். அதாவது சொந்தம் என்று தான் பெயர். இவர்கள் இப்படி என்று அவளால் சொல்ல முடியாது. அதற்க்கு காரணம் அவர்களை பற்றி அவள் நினையாது இருப்பது கூட காரணமாய் இருக்கலாம்.
இதை வசுவிடம் சொன்னால்… “அவள் அது அப்படி இல்ல. உங்க அண்ணன்கள் படித்ததும் சென்னையில். இப்போ வேலையில் இருப்பதும் சென்னையில்லே… அது தான் அவங்கள பத்தி உனக்கு தெரியல.” என்று வசுந்தரா மணிமேகலையை சமாதானம் செய்வாள்.
“என்னை நீ சமாளிக்க வேண்டாம்டி… இந்த வீட்டில் இருக்குறவங்களை சமாளிக்கனும். அதுக்கு அவன் உன் மேல உண்மையான காதலில் தான் பார்க்கிறானா…? என்று பேசி தெளிவு படுத்திக்க. நான் அவ்வளவு தான் சொல்லுவேன்.”
அவள் வாசுவை பார்க்க இங்கு வரும் போது எல்லாம் மணிமேகலை இது தான் சொல்வாள். “பேசுறேன். பேசுறேன்.” என்று சொல்லும் வசுந்தரா இன்று வரை பேசியது கிடையாது.
இன்றும் அதே போல் அவர்கள் பார்வை பறிமாற்றத்தை பார்த்தவள்… “நீங்க எப்படியாவது ஒழிங்க. நான் கீழே போறேன்.” என்று சொல்லிக் கொண்டு கீழே இறங்கியவளின் பின் வசுவும் அவளுடன் இறங்கி வந்தவள்…
“நான் வர்றேன். நான் வர்றேன்.” என்று வசுந்தரா சத்தமாக சொன்னாள்.
மணிமேகலைக்கு இது யாருக்கானது என்று தெரிந்ததால், ஒன்றும் சொல்லாது ஒரு சிரிப்புடனே அங்கு சாப்பிடும் அறைக்கு சென்றாள். அங்கு எப்போதும் போல் சித்தப்பாக்கள், சித்திமார்கள், அப்பத்தா சாப்பிட ஏதுவாக அமர்ந்து இருந்தனர். இன்றைக்கு கூடுதலாய் அத்தை சங்கரியும், அவர் பக்கத்தில் அவர் மகன் வீரேந்திரனும் அமர்ந்து இருப்பதை பார்த்துக் கொண்டே சமையல்கட்டுக்குள் சென்றவளின் கையில், வரலட்சுமி ஒரு தட்டில் தான் ஊத்தின ஆப்பத்தையும், மறுகையில் தேங்காய் பாலும் கொடுத்த வாறே…
“கொஞ்சம் வெல்லனவே வந்து இருக்கலாம்.” என்று சொன்ன அன்னைக்கு எந்த பதிலும் சொல்லாது, தன் இரு கையிலும் இருக்கும் பொருளை கீழே விழாது ஜாக்கிரதையாக சாப்பிடும் டேபிளில் வைத்து விட்டு, திரும்பவும் அன்னை ஏதாவது கொடுப்பார்கள் என்று சமையல்கட்டை நோக்கி மணிமேகலை நகர பார்த்தாள்.
அப்போது அப்பத்தா மணிமேகலையிடம் “இதெல்லாம் உன் ஆத்தா பார்த்துப்பா… நீ முதல்ல உன் அப்பனை வரச்சொல்.” என்று சொன்னவரை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே தன் பெற்றோர் அறை நோக்கி சென்றாள்.
அவள் அவ்வாறு தயங்கித் தயங்கி செல்வதற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவோ தன் தந்தையை பார்த்து விட்டு போனால், அன்று ஏதாவது ஒரு தடை வருகிறது என்று அவள் நினைவு தெரிந்த நாள் தொட்டு தன் அப்பத்தா சொல்ல கேட்டு இருக்கிறாள்.
அதனால் தானோ என்னவோ, தன் தந்தையும் வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு தான் சாப்பிடும் அறைக்கே வருவார். அவர் இந்த நேரம் தான் சாப்பிடுவது என்பது எல்லாம் கிடையாது. அவரின் குறைத்தொட்டு சின்ன வயதில் இருந்தே படிக்க பள்ளிக்கு அனுப்பாது வீட்டிலே இருந்ததாளோ?
இல்லை அவருக்கு அடுத்து பிறந்த குழந்தைகளை முதலில் பள்ளிக்கு அனுப்பும் பொருட்டு அவர்களுக்கு முதலில் குளிப்பாட்டி சோறு ஊட்டி என்று அவர்களுக்கு நேரத்துக்கு பார்த்ததினாளோ…
[the_ad id=”6605″]
கமலக்கண்ணன் அனைவரும் சென்ற பின் தான் பத்து மணிக்கு மேல் காலை உணவை உட்கொள்வார். இன்று ஏன் அப்பத்தா அப்பாவை அழைக்கிறார். அதுவும் அத்தையோடு அத்தை பையனும் வந்து இருக்காங்க. ஏதாவது முக்கியமான விஷயமா…? என்று யோசனையுடன் அறைக்கு வந்தவள் அங்கு அப்பா எப்போதும் போலவே தன் கை மூலமே தன் கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தார்.
தான் வந்ததின் ஓசை கேட்க முடியாததால், அவர் அப்படியே படுத்து கொண்டு தான் இருந்தார். மணிமேகலை கண் மூடிக் கொண்டு இருந்த அவர் கை மீது அவள் கை வைத்ததும் பதட்டத்துடன், தன் கை எடுத்து யார் என்று பார்த்தார்.
தன் எதிரில் மகள் இருக்கவும், அவர் பதட்டம் மறைந்தோட ஒரு புன்னகையுடன்… தன் கை அசைவில்… “என்னம்மா?” என்று கேட்டார்.
சிறுவயது முதலே தன் தந்தையின் மொழியை மணிமேகலையும் அறிந்திருந்தாள். அதனால், அவர் மொழியிலேயே… “அப்பத்தா உங்களை கூப்பிடுறாங்கப்பா.” அவரை போலவே மணிமேகலை கை சைகையில் சொன்னாள்.
திரும்பவும் அப்பாவின் முகத்தில் பதட்டத்தோடு, குழப்பமும் காணப்பட, மணிமேகலையின் மனமோ… ‘அப்பா இன்னும் கொஞ்ச நாள் தான். அப்புறம் உங்க முகத்தில் இந்த பதட்டமோ… குழப்பமோ இருக்காது.’ என்று நினைத்தவளாய் அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.