மகள் கவலையுடன் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து, தன் முகபாவனையை மாற்றிக் கொண்டவர் தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டு, “நீ போ. நான் வர்றேன்.” என்று சைகை செய்தவர். தான் போக பார்க்கும் போது, தன் கை பிடித்து… “சாப்பிட்டியா…” என்று அதே சைகை மொழியில் கேட்க… தான் சொன்ன,
“இல்லை.” என்ற பதிலில் அவர் முகம் காட்டிய வேதனையில் “பசிக்கலேப்பா. காலையில் சத்துமாவு கஞ்சி குடிச்சது திம்முன்னு இருக்கு.” என் வயிற்றில் கை வைத்து சொல்லியும் கூட அவர் முகத்தில் தெளிவு பெறவில்லை.
‘இப்போதைக்கு அப்பாவின் முக வாடலை போக்க முடியாது. அவருக்கு தெரியும். அனைவருக்கும் நான் தான் பரிமாற வேண்டும். அதனால் எப்போதும் அனைவரும் சாப்பிட்ட பின் தான் நான் சாப்பிடுகிறேன் என்று. தெரிந்தவரிடம் இன்னும் எதை சொல்லி ஏமாற்றுவது.’
இங்கு இருந்து தான் சீக்கிரம் சென்றால், தான் அப்பாவும் சீக்கிரம் வருவார். குறைந்த பட்சம் அப்பத்தாவின் பேச்சில் இருந்து தானும் தப்பித்து, தன் தந்தையையும் தப்பிக்க வைக்கலாம் என்று நினைத்து சென்ற போதும்…
அப்பத்தா, “போனா போன இடம், வந்தா வந்த இடம். நீ அப்படியே உங்க ஆத்தாளே தான்.” என்று சொன்ன தெய்வநாயகியின் பேச்சில் எது உண்மையோ இல்லையோ…நீ அப்படியே ஆத்தா போல் இருக்கிறாய் என்றதில், தோற்றத்தில் வரலட்சுமியின் மறுபிம்பமாக தான் மணிமேகலை இருந்தாள்.
பதினைந்து வயது வரை கொஞ்சம் பூசியது போல் இருந்த மணிமேகலையின் உடல் வாகு. வயது ஏற ஏற மெலிந்து கோயில் சிற்பம் போல் வரிவடிவமாய் மாறியது. இளைத்ததாளோ இல்லை பதினைந்து வயதுக்கு பின், அவள் உயரத்தில் அசாதாரண வளர்ச்சி ஏற்பட்டதாளோ… கொஞ்சம் குள்ளமாக இருந்த அவளின் உயரம், இப்போது ஐந்தரையடி உயரத்திலும், மாநிறம் என்றாலும் கலையான முக அமைப்பிலும், பார்ப்பதற்க்கு மிக அழகாகவே காணப்பட்டாள்.
வேலை என்றால் தன் அம்மாவை போல் மிக சுறு சுறுப்பே… பேச்சிலும் தன் அன்னையை பின் பற்றியே வீட்டில் அமைதி காத்துக் கொண்டு இருக்கிறாள். இந்த சைட்டு மட்டும் தான், கொஞ்சம் மாறுப்பட்டு வளர்ந்து விட்டாள்.
தன் அப்பத்தாவின் திட்டை காதில் வாங்காது தன் அன்னை எடுத்து வைத்ததை, அனைவருக்கும் பறிமாறிக் கொண்டு இருந்தவளுக்கு, தன் தந்தை சாப்பிடும் தட்டும் அங்கு இருப்பதை பார்த்து இதில் பறிமாறலாமா, வேண்டாமா என்று யோசிக்கும் போது…
[the_ad id=”6605″]
“அதிலும் வை.” என்ற அப்பத்தாவின் ஆணையில், தன் தந்தையின் தட்டிலும் வைத்து விட்டு அனைவரையும் குழப்பத்துடன் பார்த்திருந்தாள்.
அவள் நினைவு தெரிந்து இது வரை இது போல் இவ்வீட்டில் நடந்து இல்லை. இது நல்லதிற்க்கா? கெட்டதிற்க்கா? தெரியாது குழம்பி போய் நின்றிருந்தாள்.
கமலக்கண்ணன் வந்ததும், தன் தட்டில் உணவு பறிமாறி இருப்பதை பார்த்து அவரும் குழப்பத்தோடே தன் அன்னையை பார்த்தார். “சாப்பிடு நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்.” என்று அவருக்கு தெரிந்த சைகை மொழியில் சொல்ல…
பாவம் தெய்வநாயகி எப்பொழுதாவது தான், இது போல் பேசுவார். அதனால் தன் மகனுக்கு புரியும் படி அவரால் சைகை செய்ய இயலாது போனது. தன் தந்தைக்கு அப்பத்தா சொன்னது புரியவில்லை என்பதை தன் தந்தையின் குழப்ப முகபாவனையில் புரிந்துக் கொண்ட மணிமேகலை தன் தந்தைக்கு புரியும் படி சொன்னாள்.
“ஆ…ஆ…” புரிந்தது என்பது போல் கமலக்கண்ணன் தலையாட்டியவருக்கு, மேலும் குழப்பமே… இது வரை இந்த வீட்டில் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று யாரும் இது வரை தன்னிடம் சொன்னது இல்லை. இது முதல் முறை என்பதால் என்ன, ஏது என்று தெரியாத குழப்பத்திலேயே அவரும் உண்டு முடித்தார்.
சாப்பிடும் அறையில் இவ்வளவு நடந்தும், எப்போதும் அனைவருடனும் உணவு உண்ணாத கணவர் உணவு உண்ண வந்த பிறகும், அந்த சமையல்கட்டில் இருந்து வெளிவராது எப்போதும் செய்வது போல் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய உணவை அடுத்து அடுத்து சமைத்துக் கொண்டு இருந்தார் வரலட்சுமி.
‘இவங்க இப்படி இருப்பதால் தான், எல்லோரும் தங்களை இளக்காரமாய் பாக்குறாங்க. இவங்களும் பேச மாட்டாங்க. நம்மையும் பேசாதே பேசாதேன்னு வாயை அடைத்து விடுவாங்க’, என்று எப்போதும் போல் மணிமேகலை மனதில் தான் முனு முனுத்துக் கொண்டு இருந்தாள்.
என்ன, ஏது என்ற குழப்பத்தை தீர்க்க தெய்வநாயகி… “வரா அந்த அடுப்பை அணைச்சிட்டு இங்க வா…” என்று முதல் முறையாக அவர் வாயில் இருந்து தன் அன்னையை சமையலறையில் இருந்து வெளியே வா என்று அழைத்திருந்தார்.
தன் முந்தியில் ஈர கையை துடைத்துக் கொண்டே அந்த இடத்துக்கு வந்த வரலட்சுமியின் முகத்தில் இவர்களுக்கு இருந்த குழப்பம் இல்லை போல். எப்போதும் இருப்பது போல் அமைதியாக அவர்கள் முன் வந்து நின்றார்.
தெய்வநாயகி வரலட்சுமியையும், கமலக்கண்ணனையும் பொதுவாக பார்த்துக் கொண்டே… “மணிக்கு ஒரு இடம் வந்து இருக்கு. ரொம்ப நல்ல இடம். நாங்க அந்த இடத்தையே முடிச்சிடலாமுன்னு இருக்கோம்.” என்ற தன் அப்பாத்தாவின் பேச்சில் மணிமேகலை அதிர்ச்சியாகி அவர் முகத்தை பார்த்தாள் என்பதை விட வெறித்து நின்று விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
‘யார் பெண்ணின் திருமணத்தை யார் முடிவு செய்வது…?’ முதலில் மணிமேகலைக்கு இது தான் தோன்றியது. இந்த திருமணப்பேச்சில் தன் அன்னை தந்தையை நம்பிக் கொண்டு இருந்தால் அவ்வளவு தான்! தன் கழுத்தில் தாலி ஏறி, எப்போதும் போல், இது போல் ஒரு இழிவு வாழ்வு தான் வாழ வேண்டி இருக்கும் என்று அவள் நினைத்து முடிப்பதற்க்குள், தெய்வநாயகி வரலட்சமியிடம்… “நான் உன் கிட்ட சொல்வதை ஊ…” ஊமை என்று சொல்ல வந்தவர் என்ன நினைத்தாரோ… ஊ என்பதை, “உன் புருஷன் கிட்ட அவனுக்கு புரியராப்பல சொல்லு.” என்று தொடங்கியவர் பின்… “உன் பொண்ணை கேட்டது லேசு பாசான இடம் கிடையாது. நம்ம பக்கத்து ஊரில் ரைஸ் மில் வெச்சிட்டு இருக்காங்கல பரந்தாமன் குடும்பம். அந்த வூட்டு பையனுக்கு தான் உன் மவள கேக்குறது. நீ செஞ்சதிலேயே உருப்படியான விசயம் உன் பொண்ணை அழகா பெத்தது தான்.” என்ற அப்பத்தாவின் பேச்சில்…
“இது எப்போத்திலிருந்து?” என்பது போல் தான் தன் அதிர்ந்த தோற்றத்தை மாற்றிக் கொள்ளாது அப்பத்தாவை பார்த்திருந்தாள்.
பின் இருக்காதா? தன்னோடு பெரியவனுக்கு எல்லாம் சுத்தி போடும் இந்த அப்பத்தா, தன்னை ஒரு தடவை கூட சுத்தாதது மட்டும் இல்லாது, சிறுவயதில் தானே அப்பத்தா திருஷ்ட்டி கழிக்கும் போது…
“அப்பத்தா என்னையும் சுத்துங்க. நானும் தூ துப்புறேன்.” என்று அவர் கையில் இருக்கும் உப்பு மிளகாயை பார்த்து சொன்னதற்க்கு, இதே அப்பத்தா “உன்னை யார் கண் வைக்க போறாங்க.” என்று சொல்லிக் கொண்டே அங்கு அமர்ந்திருந்த இந்த இரு தீவட்டி தடியன்களுக்கு மட்டும் சுற்றி போட்டவர் கண்ணுக்கு, எப்போதிலிருந்து நான் அழகானவளாய் தெரிய ஆரம்பித்தேன், என்று மணிமேகலைக்கு நினைக்க தோன்றியது.
பின் தொடர்ந்து தன் அப்பத்தாவின் பேச்சை கேட்க ஆரம்பித்தவளின் மனதில், ‘எப்படி இவர்களை எதிர்த்து பேசுவது. முதல் முறை அவர்கள் ஒன்று சொல்லி. நான் வேண்டாம் என்று மறுப்பது. ஆனால் இதில் அவர்கள் சொன்னதற்க்கு நான் தலையாட்டினால், பின் என் தலை நான் ஆட்டாமலேயே அதுவே தன்னால் ஆட ஆரம்பித்து விடும். அவர்கள் சொல்வதை நடக்க விட கூடாது. எதிர்த்து பேசியே ஆகவேண்டும்’ என்று மனதில் நினைத்தாலுமே, தன்னால் அப்பத்தாவின் பேச்சையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.
அதுவும் அப்பத்தா சொன்ன… “மணி படிக்கும் காலேஜ் பக்கத்தில் தான், அந்த பெரிய வூட்டு மவன் அரிசி மண்டி வெச்சி இருக்கான். இவ காலேஜ் போகும் போது பார்த்து பிடிச்சி அவன் வூட்ல சொல்லி இருக்கான்.
அவங்களும் யார் வூட்டு பொண்ணுன்னு விசாரிச்சி இருக்காங்க. விசாரிச்சதில் நம்ம வூட்டு பொண்ணுன்னு தெரிஞ்சதுல அவ்வளவு சந்தோஷமா அவங்களுக்கு.” என்று பெருமையுடன் சொன்ன அப்பத்தா…
தொடர்ந்து “பின் இருக்காதா? நம்ம பரம்பரையில் பொண்ணு எடுக்கவும், பொண்ணு கொடுக்கவும் எப்போவும் போட்டி தானே நடக்கும்.” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் மணிமேகலையின் தந்தையை பார்த்து ஒரு பெரும் மூச்சு விட்ட வாறே…
“இவன் மட்டும் ஒழங்கா பிறந்து இருந்தா… நான் ஏன் அன்னக்காவடி வூட்ல இருந்து பொண்ண கூட்டிட்டு வரப்போறேன்.”
இந்த வார்த்தைக்கு மட்டும் சங்கரலிங்கம் தெய்வநாயகியின் நாயகன்… “என்ன பேச்சோ அது மட்டும் பேசு.” என்று சொன்னார்.
சங்கரலிங்கம் எப்போதும் வள வள என்று பேசிக் கொண்டு இருக்க மாட்டார். வீட்டு விஷயம் பெண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் தலையிட்டால் வீண் குழப்பங்கள் தான் ஏற்ப்படும். அதே போல் வெளிவிஷயத்தில் ஆண்கள் முடிவு செய்தால் அதை பெண்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இது தான் அவர் கொள்கை. அந்த கொள்கையில் இது போல் மனைவியோ, மருமகள்களோ தேவையில்லாது பேசினால், இன்று சொன்னது போல் ஒரு வார்த்தையில் பேசினது போதும் என்று சொல்வார்.
கேட்டால் பிரச்சனை இல்லை. கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் அந்த சூழ்நிலையை இது வரை யாரும் அவருக்கு கொடுத்தது கிடையாது.
[the_ad id=”6605″]
தன் கணவனின் குணம் அறிந்த தெய்வநாயகி… “பரந்தாமன் குடும்பம் அவங்க மவன் ஆசப்பட்டது நம்ம வூட்டு பொண்ணுன்னு தெரிஞ்சதும், நம்ம அய்யன் கிட்ட(சங்கரலிங்கம் தான் அய்யன்) பேசி இருக்காங்க. நம்ம அய்யனுக்கும் விசாரிச்சதில் பையன பத்தி ஒரு குறையும் சொல்லாத அளவுக்கு இருக்கு.” என்று சொன்ன தெய்வநாயகிக்கு தொண்டை வரண்டு போய் விட்டது போல் பக்கத்தில் இருக்கும் சொம்பை கூட எடுக்காது எப்போதும் போல்,
“அத எடு.” என்று தன் மருமகளை ஏய்த்து விட்டு, தன் தொண்டை தாகத்தை தணித்த பின் ஆசுவாசமாய் மீதி பேச்சை தொடர்ந்தார்.
“நான் தான் உங்க அய்யன் கிட்ட அந்த வூட்லயும் இரண்டு பொண்ணுங்க இருக்கு. நம்ம இரண்டு பசங்களுக்கு அந்த பொண்ணுங்களையே எடுக்கலாம் என்று சொன்னேன். உங்க அய்யனும் சரி பாக்கலாமுன்னு சொல்லிட்,டு பரந்தாமன் கிட்ட சொல்லி இருக்கார். அவருக்கு ரொம்ப பிடிச்சி போய் கையோட எல்லாருடைய ஜாதகத்தையும், கொடுத்து விட்டார். அத நேத்து தான் நம்ம ஜோசியர் கிட்ட காமிச்சேன்.” என்று சொல்லி விட்டு கொஞ்சம் நிறுத்துயவர்…
தன் சின்ன பேரன் வசீகரனை பார்த்து… “இவனுக்கு மாமனார் இல்லாத இடமா தான் கட்டனுமாம்.” என்று சொன்னதும், வசீகரன்… “அப்படி மாமனார் இருக்கும் இடம் கட்டுனா என்ன ஆகுமாம் அப்பத்தா…?”
அந்த வீட்டில் பேரன்களுக்கு மட்டுமே பேசும் உரிமையும், தன்னை கேள்வி கேட்கும் உரிமையும் கொடுத்து இருக்கும் தெயநாயகி தன் பேரன் கேட்ட கேள்விக்கு, “கட்டுனா உன் மாமியாரை மூலையில் உட்கார வெச்சுடுமாம்.” என்று பதில் சொன்னவர்.
தான் விட்ட பேச்சை தொடரும் விதமாய், “அதான் அந்த இரண்டாம் பெண்ணோட ஜாதகத்தை நம் வீராவோட ஜாதகத்தோடு பார்த்ததில், பத்துக்கு ஒன்பது பொருத்தம் அப்படியே பொருந்தி இருக்கு. இவங்களுக்கு கல்யாணம் செஞ்சி வெச்சா அமோகமா இருப்பாங்கன்னு அந்த ஜோசியர்காரர் சொன்னார்.”
முதலில் பயத்தோடு தன் அப்பாத்தாவின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த மணிமேகலை அவர் சொன்ன விஷயத்தில், முதலில் குழம்பி, பின் அதிர்ந்து, இறுதியில் அருவெறுத்து போய் விட்டாள். பின் இருக்காதா? மாமனும், மச்சானும் ஒரே வீட்டில் பெண் எடுப்பாங்களா?
‘காசு பணம் இருந்தா போதும், முறை எல்லாம் பாக்க தேவையில்லை. இதே என்னை ஆசைப்பட்டு கேட்டான்னு சொல்றாங்களே… அந்த பையன் சாதாரண வீட்டு பையனா இருந்தா. நிலைமை இப்படியா இருக்கும். தன் அன்னையிடம்… “கண்டவங்க வந்து பொண்ணு கேட்கும் நிலையில் வளத்து வெச்சி இருக்க உன் பொண்ணை.” என்று இந்த தெய்வநாயகி திட்டி இருக்க மாட்டாங்க?
பெரிய இடம் என்றதும் பொண்ணை கொடுக்குறதோட பொண்ணையும் எடுப்பாங்க. அதுவும் ஒரு பையனுக்கு ஜாதகம் செட்டாகலேன்னா முறை கூட பார்க்காது இன்னொரு பேரனுக்கு முடிப்பாங்க. யப்பா… என்ன ஜென்மங்க?’ என்று திட்டிக் கொண்டு இருந்தாலும் ஒர பார்வையில் வாசுவையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
முதலில் தான் வாய் திறந்து தான் ஆகவேண்டும் என்று நினைத்திருதவளுக்கு, இந்த கல்யாண பேச்சு தனக்கு உண்டானது மட்டும் இல்லை. இதில் வாசுவும் இருக்கான் என்று தெரிந்ததும். பேச்சு முதலில் அங்கு இருந்து வரட்டும். இப்போ தெரிஞ்சிடும் இவன் வசுவை எந்த நோக்கத்தில் பார்வையிடுறான் என்று மணிமேகலை ஒரு பார்வையாளராய் மட்டும் பார்த்திருந்தாள்.
ஆனால் அவள் நினைத்ததிற்க்கு எதிர் பதமாய் வீராவிடம் இருந்து, “என்ன அம்மத்தா இந்த வீட்டில் சம்மந்தம் செஞ்சா அந்த வீட்டு பெண் எனக்கு என்ன முறையாகும்.” மணிமேகலை நினைத்ததையே தான் அவனும் சொன்னான்.
பரவாயில்ல இந்த கந்து வட்டிக்காரனுக்கும், முறை எல்லாம் தெரிஞ்சி இருக்கு. என்று நினைத்தாலும் நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை. பேச்சு மட்டுமே காதில் வாங்கி கொண்டாள்.
தெய்வநாயகி “என்ன வீரா இப்படி சொல்ற. அந்த இரண்டாம் பொண்ணு அவ்வளவு அழகா இருக்கா. அவங்கல உனக்கு தர்றேன்னு சொல்லும் போது உனக்கு என்ன?” என்று பேரனிடம் நியாயம் கேட்ட தெய்வநாயகி, “என்ன சங்கரி அமைதியா இருக்க. உன் மவன் கிட்ட நீயாவது சொல்ல கூடாதா…” தன் மகளை தன்னோடு கூட்டு சேர்க்க முயன்றார்.
“நான் இதுல சொல்றதுக்கு எதுவும் இல்ல ஆத்தா. அவனுக்கு பிடிக்கலேன்னா விட்டுடலாம்.” என்ற சங்கரி அத்தையின் பேச்சில், மணிமேகலை ‘பார்றா… இந்த வீட்டிலும், மத்தவங்க சொல்லுக்கும் மரியாதை கொடுக்கிறவங்க இருக்காங்க’ என்று நினைத்துக் கொண்டாள்.
தன் மகளின் பேச்சை ஏற்றுக் கொள்ள மனம் வராது தெய்வநாயகி மீண்டும் ஏதோ சொல்ல தொடங்கியவரின் பேச்சை, “பெத்தவங்களுக்கு விருப்பம் இல்லேன்னா விட்டுடனும் தெய்வா.” என்று சொன்ன சங்கரலிங்கத்தின் பேச்சு தனக்கும் பொருந்துமா என்று நினைத்த மணிமேகலை, பார்க்கலாம் என்று நினைத்து வாசு வாய் திறக்க காத்துக் கொண்டு இருந்தாள்.
மனமே இல்லாத தெய்வநாயகி “சரி அப்போ வாசு, மணியோட கல்யாணத்தையாவது முடிச்சிடலாம்“ என்று தன் அப்பத்தா சொல்ல சொல்ல அவர் முகத்தை கூட பாராது, வாசு ஏதாவது சொல்வான் என்று அவன் முகத்தையே ஒரு எதிர்பார்ப்போடு மணிமேகலை பார்த்திருக்க…
“பரந்தாமன் பெண் இந்த வீட்டுக்கு மருமகளா ஆகமுடியாது அம்மத்தா.” என்று திரும்பவும் வாசுவுக்கு பதிலாய் வீரா தான் வாய் திறந்தான்.
[the_ad id=”6605″]
இப்போது வாசுவை பார்ப்பதற்க்கு பதிலாய் தன் அத்தை மகனை முதன் முதலாய் தலை நிமிர்த்தி அவனை நேர்க் கொண்டு பார்த்தாள். ஆனால் வீரா எப்போதும் போல் தன் நோக்கமே மட்டுமே தன்னோட குறி என்பது போல்,
“ஏன்?” என்று கேட்ட தன் அம்மாத்தாவின் மீதே பார்வையை செலுத்தியவாறு… “ஏன்னா அந்த பெண் என் சேக்காளி ஒருத்தனை விரும்புறா” என்ற வீராவின் பதிலில்…
“என்ன காதலிக்கிறாளா? அந்த பரந்தாமனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா சொத்த கத்திரிக்காய நம்ம கிட்ட தள்ள பார்ப்பான்?” என்ற தெய்வநாயகியின் ஆவேசமான பேச்சில் ..
முகம் சுழித்த வீரா… “என்ன அம்மத்தா பேச்சு இது? பொண்ணுங்க ஒண்ணும் கத்திரிக்கா இல்ல. அந்த பெண் விரும்புறது அவங்க அப்பாக்கு தெரியாம கூட இருக்கலாம். அதுவும் இல்லாம நீங்க தான் பெண் கேட்டீங்க. இது போல் மத்த பெண்ணை தப்பா பேசாதீங்க.” என்ற வீராவின் பேச்சில் அனைவரும் அமைதி காத்தாலும், அவர் அவர் எண்ணத்திற்க்கு ஏற்ப அவர் அவர் நினைத்துக் கொண்டனர்.
நம் மணிமேகலையோ… ‘அட பாருடா! பெண்களை பத்தி தப்பா பேச கூடாதாம். இவன் கண்ணுக்கு நானும் என் அம்மாவும் பொண்ணுங்களா தெரியலையா?’ என்று எப்போதும் போல் அவர்கள் பேச்சில் தன் நினைவுக்கு போவது வருவதுமாய் இருந்தவளின் காதில் அப்பத்தா சொன்ன,
“சரி நம்ம மணியோட கல்யாணத்தையாவது பண்ணலாம்.” என்று அவர் சொன்ன பேச்சுக்கு பதிலாய் மணிமேகலையிடம், “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்ற அவளின் பதிலில் அனைவரும் அவளின் முகத்தையே அதிர்ச்சியுடன் பார்த்தனர்.