(***கல்லூரி கால சம்பாஷனைகள் ‘ஹிந்தி’ மொழியில் தான் அமைந்திருக்கும் என்றாலும் மொழி புரிதலுக்காக இங்கே தமிழில் பதிவு செய்யப்படுகிறது***)
ஐந்து வருடங்களுக்கு முன்பு…!
மகாராஸ்டிராவில் ‘தேவா விலாஸ்’சில் இருந்து சத்தம் வீட்டின் வெளி கேட் வரை கேட்டுக்கொண்டிருந்தது.
நடு கூடத்தில் ஜெயதேவ் ஒரு திரும்பி நிற்க, ஆதித்யதேவ் மறுபுறம் திரும்பி நிற்க இருவருக்கும் இடையே நின்ற தெய்வானை வழக்கம் போல தனது ‘ரெப்ரீ’ வேலையை ஆரம்பித்திருந்தார்.
ஆதி, “ரெண்டு வருஷம் கழிச்சு, நான் படிச்ச காலேஜுக்கே என்னை திரும்பி படிக்க போ’ன்னு அனுப்புனா எப்படிம்மா?”
ஜெயதேவ் ‘நான் எடுத்தது தான் முடிவு’ என நின்றுவிட்டார். ஆதி தான் மூச்சு விடாமல் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்.
மகாராஷ்டிராவின் பெயர் பெற்ற ‘ஐபிஎம் யூனிவர்சிட்டி’யில் பொறியியல் பட்டபடிப்பை முதல் தரத்தோடு இரு வருடங்களுக்கு முன் முடித்திருந்த ஆதி, அதன்பின்னே தந்தையின் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தான்.
ஆனால், ஜெயதேவுக்கோ வெறும் பி.இ அத்தனை போதுமானதாய் இல்லை. மேற்கொண்டு எம்.பி.ஏ படிக்க சொல்லி அவர் சொல்ல, ‘எவ்வளோ படிச்சாலும், இந்த செராமிக்ஸ் பிசினஸ் தானே கடைசில பார்க்க வேண்டி இருக்கும்?’ என ஆதி யோசித்து, ‘இதோ அதோ’ என டேக்கா கொடுத்துக்கொண்டே நாட்களை கடத்திக்கொண்டிருந்தான்.
“அவன் போறானா இல்லையான்னு நான் கேட்கல! போய் தான் ஆகணும்ன்னு சொல்றேன்… சொல் பேச்சு கேட்குறதா இருந்தா வீட்ல இருக்க சொல்லு உன் மகன” என்றார் ஜெயதேவ்.
“ம்மா..?” என சிணுங்கிய ஆதி, “ம்மா, அங்க எனக்கு ஜூனியரா இருந்தவன் எல்லாம் இப்போ சீனியரா இருப்பான்ம்மா! யாருக்கு தெரியும், என்கூட கிளாஸ் மேட்டா கூட இருந்தாலும் இருப்பாங்க” என கெஞ்ச, தெய்வானை தான் எந்த பக்கம் பேசுவதென்ன புரியாது விழித்துக்கொண்டிருந்தார்.
“இதுக்கு தானே பி.இ முடிச்ச உடனே எம்.பி.ஏ பண்ணுன்னு சொன்னேன்? இவன் அண்ணனும் தான் பி.இ முடிச்சான், நான் சொன்னதை கேட்டு எம்.பி.ஏ முடிச்சுட்டு இப்போ பாரின்ல வேலைல இருக்கான்!” என மூத்த மகன் கிருஷ்ணனை பற்றி பெருமிதமாய் சொல்ல,
“இப்போ எம்.பி.ஏ படிச்சு என்னப்பா செய்ய போறேன்? உங்க தொழிலை தானே கவனிக்கணும் கடைசில? அதை தான் நான் இப்போவே பார்க்குறேனே?” என்றான் ஆதி.
அவன் சொல்வதை சரி தான் எனினும், “தொழிலுக்கும் படிப்புக்கும் என்ன தொடர்பு இருக்கு? என் புள்ள எம்.பி.ஏ ஹோல்டர்ன்னா, அதுலயும், ‘ஐபிஎம் யுனிவர்சிட்டி’ ப்ராடெக்ட்ன்னா, கேட்க எவ்ளோ நல்லா இருக்கும்?” என ஜெயதேவ் சொல்ல,
‘உனக்கு போய் புள்ளையா பொறந்தேன் பாரு!’ தந்தையை திட்டியவன், ‘உனக்கு கட்டிக்க வேற ஆளே கிடைக்கலையாம்மா!’ என ஆதி தெய்வானையிடம் மென்குரலில் முனகியது கூட அரைகுறையாய் அவர் காதை சென்றடைந்து விட்டது.
“என்னடா முனுமுனுக்குற?” என ஜெயதேவ் கர்ஜனையாய் கேட்டதும், “ப்பா, நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு தானே இருக்கேன்? இந்த ஒருமுறை நான் சொல்றதை நீங்க கேட்க கூடாதா?” என கெஞ்சல் குரலில் உள்ளுக்குள் அவரை சபித்துக்கொண்டே கேட்டான் ஆதி.
“ஹோ? துரை, எத்தனை தடவ நான் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுனாரு? நான் எது சொன்னாலும் அதுக்கு நேர்மாறா செஞ்சுட்டு வந்து என்கிட்ட பக்கம் பக்கமா திட்டு வாங்குறது தானே உன் வேலையே!” என அவன் குட்டை உடைக்க, ‘ஒரு வசனம் பேச முடியுதா இந்தாள்ட்ட’ என நொந்துக்கொண்டே குனிந்த தலையோடு அமர்ந்திருந்தான் ஆதி.
மதுதேவா தன் ஸ்கூல் யூனிபார்மில் அறையை விட்டு வந்தவள், கையில் லாப்டாப்பை எடுத்துக்கொண்டு வர, ‘இதோ வந்துட்டாளே, என் மானத்தை அமெரிக்காக்கு பார்சல் அனுப்ப!’ என முறைத்தான் ஆதி.
ஸ்கைப்பில் இணைப்பில் இருந்த கிருஷ்ணாவிடம், “ண்ணா, ஆதி காலேஜ் போக மாட்டேன்னு அடம் பிடிக்குறாங்க! அதான் அப்பா செம்ம டோஸ்” என கிளுக்கி சிரிக்க, கிருஷ்ணா சற்று சீரியசாய், “ஆதி, அப்பா உன் நல்லதுக்கு தானே டா சொல்றாங்க? ஐபிஎம் யுனிவர்சிட்டில சீட் கிடைக்குறதே பெருசு, நீ படிச்ச காலேஜ் பத்தி உனக்கு நான் சொல்லி தெரியணும்ன்னு இல்லை!” என்றவன்,
“என்ட்ரன்ஸ் எழுதுறப்போ கூட ஒன்னும் சொல்லலை நீ! இப்போ சீட் கிடைச்சு காலேஜே ஓபன் பண்ணிட்டாங்க! நீ என்னன்னா பத்து நாளா காலேஜ் போக முடியாதுன்னு அடம் பிடிச்சுட்டு இருக்க! இன்னைக்கு கிளம்பி போடா ஒழுங்கா” என்றான் பொறுப்பான அண்ணனாய்.
ஆதி, “ஸீட் கிடைக்காதுன்னு நினைச்சு தான் என்ட்ரன்ஸ் அட்டென்ட் பண்ணேன்! இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு தெரிஞ்சுருந்தா எக்ஸாம்க்கே போகாம இருந்துருப்பேன்” என நொடிக்க,
“பாருடி உன் புள்ள எப்டி பேசுறான்னு” என ஜெயதேவ் கொதித்தார் என்றால், “உனக்கு சீட் கிடைக்காம வேற யாருக்குடா கிடைக்கும்? யூ ஆர் அ டாப் ரேன்கர்!” என்றான் கிருஷ்ணா பெருமை பொங்க.
அதில் இன்னும் சிடுசிடுவென ஆன ஆதியின் முகம், “டாப் ரேன்கரா வந்து மட்டும் என்ன செஞ்சேன்? இல்ல இந்த எம்பிஏ முடிச்சு மட்டும் என்ன செய்யப்போறேன்? உன்னை மாறி வெள்ளைக்காரனுக்கு உழைச்சுப்போட எனக்கு விருப்பம் இல்லை!!!” என அவன் சொல்ல, அதற்குமேல் என்ன சொல்வதென கிருஷ்ணாவுக்கு தெரியவில்லை. தந்தைக்காக விருப்பம் இல்லாத ஒன்றை செய் என தம்பியை வற்ப்புறுத்த அவனுக்கும் மனம் வரவில்லை.
ஆதியே மீண்டும், “இப்போ என் பிரச்சனை காலேஜ் போறதில்லை! நான் படிச்ச அதே காலேஜுக்கே திரும்ப போறது தான்! உனக்காது புரியுதா என் சங்கடம்?” என கிருஷ்ணாவை பார்த்து கேட்க, ஸ்கைப்பில் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணன் என்ன செய்துவிட முடியும்? ஆதிக்காக பரிந்துக்கொண்டு இவன் தந்தையிடம் பேசப்போய், ‘நீ பாரின்ல இருந்தது போதும் வாடா’ன்னு அவர் சொல்லிவிட்டால்?!
மதுதேவா, “ப்பா, அண்ணா தான் போக விருப்பம் இல்லன்னு சொல்றாங்களே! பாவம்ப்பா!” என்றதும், “நீ சாப்பிட்டுட்டு ஸ்கூல் கிளம்பு மது! உனக்கு இதெல்லாம் புரியாது” என்ற ஜெயதேவ், தன் மனைவியிடம், “இங்க பாரு தெய்வா! இன்னும் பத்து நிமிஷத்துல அவன் காலேஜ் கிளம்பனும், இல்லன்னா ஒரேயடியா வீட்டை விட்டு போய்ட சொல்லு! என்ன?” என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் தலை மறைந்ததும், “என்னம்மா இந்தாளு லூசு மாறி பேசிட்டு இருக்காரு?” என ஆதி கத்த, “ஆமா, அதென்ன இன்னைக்கா நேத்தா? எப்பவும் இப்டிதானே!” என அசால்ட்டாய் சொன்னார் தெய்வானை.
“எனக்கு போகவே புடிக்கலம்மா அங்க! ‘ஜி ஜி’ ன்னு மரியாதையா பேசுனவன் எல்லாம், ‘என்னடா மாப்ள’ ன்னு தோள்ல கை போடுவான்!” என அவன் துயரத்தை பகிர, தெய்வானையோ, “பசங்களுக்கெல்லாம் தமிழ் தெரியுமாடா? ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வாயேன்” என சொல்ல, “ம்மாஆஆஆ” என பல்லைக்கடித்தான் ஆதி.
ஸ்கைப்பில் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணாவை முறைத்த ஆதி, “எல்லாம் இவனால வந்துது! உன்னை யாருடா அவர் சொல்றதுக்கெல்லாம் மண்டையாட்ட சொன்னது! நீயும் என்னை மாறி இருந்துருந்தா எனக்கிந்த நிலைமை வருமா?” என பொரிய,
‘நான் என்னடா பண்ணுவேன்?’ என அப்பாவியாய் பார்த்திருந்தான் கிருஷ்ணா.
[the_ad id=”6605″]
தெய்வா, “இப்ப எதுக்கு ‘தை தை’ன்னு குதிக்குற? உனக்கு காலேஜ் போக கூடாது, அதானே?” என்று கேட்க, “எனக்கு இதுக்கு மேல படிப்பே வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருக்கேன்” என திருத்தினான் ஆதி.
“அப்ப கவலைய விடு! கஷ்டப்பட்டு ஒரு வாரம் மட்டும் காலேஜ் போ” என தெய்வா சொல்ல, “அதுக்கு பிறகு அதுவே பழகிடும்ன்னு மொக்கை போட போறியா?” என்றான் ஆதி.
தெய்வா, “அதில்லடா லூசு! இந்த ஒரு வாரம் நீ காலேஜூக்கு போய் குடுக்குற குடைச்சல்ல காலேஜ்ல இருக்கவங்களே உன்னை ‘போயிட்டு வாடா’ன்னு துரத்தி விட்டுடனும்! எப்படி?” என்றார் கண்கள் மின்ன…
அவர் சொன்னதை சிறிது அசைப்போட்டவன், அதன் அர்த்தம் விளங்கவே, “யம்மோவ்!!!! செம்ம செம்ம செம்மமா!! போறேன், அலைப்பறையை கூட்டுறேன்! டி.சி-ய வாங்கிக்கிட்டு வந்துட்டே இருக்கேன்! வெற்றி எனக்கே!!! சாயங்காலம் நான் வரப்போ ‘பால் கொழுக்கட்டை’ செஞ்சு வை… வரட்டா!!!” என உற்சாகமாய் ஒரு நோட்டை தூக்கிக்கொண்டு ஏற்கனவே கொடுத்திருந்த கல்லூரி அடையாள அட்டையை கழுத்தில் ஸ்டைலாய் மாட்டியபடி தன் பைக்கை எடுக்க ஓடினான் ஆதி.
பார்த்துக்கொண்டிருந்த மதுதேவா, “எனக்குக்கூட ஸ்கூல் போக பிடிக்கவே இல்லம்மா” என வேண்டுமென்றே இழுக்க, “அடிக்கழுதை! ஒழுங்கா கிளம்பி ஸ்கூல் போற வழியை பாரு!” என அவள் காதை செல்லமாய் திருகிக்கொண்டே சொன்ன தெய்வா, “நீ என்னடா பராக்கு பார்த்துட்டு இருக்க? தூங்குற நேரம் தானே அங்க? ஒழுங்கா போய் தூங்கு போ!” என மூத்தவனையும் அதட்டிவிட்டு சின்ன மகன் வரவிற்க்காக காத்திருக்க தொடங்கினார்.
‘ஐபிஎம் யூனிவர்சிட்டி’ மகாராஷ்டிராவில் மிகவும் புகழ் பெற்ற அந்த கல்லூரியில் பயில்வது என்பதே பெருமையாய் கருதப்பட, பல மாநிலங்களை சேர்ந்த மாணவமாணவியர் கலந்த பழமொழி கலப்பின இடமாகவே இருந்தது அது.
இந்தியாவின் பல மொழிகளிலும் இனங்களிலும் ஒரு சர்வே எடுத்தால், குறைந்தபட்சம் ஒவ்வொன்றில் இருந்தும் ஒருவராவது அந்த கல்லூரியில் படிக்க கூடும் எனும்போது, நம் தென்னிந்திய ஆட்கள் சற்று கணிசமாகவே காணப்பட்டனர்.
காலை நேர வகுப்புகளுக்கான நேரம் நெருங்கியிருக்க, அநேகமான மாணாக்கர் வகுப்புகளில் தஞ்சம் அடைந்திருந்தனர். கல்லூரி பார்கிங்கில் தன் பைக்கை நிறுத்திவிட்டு கையில் இருந்த நோட்டை ஸ்டைலாய் தூக்கிப்போட்டு பிடித்தபடி உள்ளே சென்றுக்கொண்டிருந்தான் ஆதித்யதேவ்.
இரு வருடங்களுக்கு முன்பு உருண்டு, பிரண்டு, பாடி, களித்து, சண்டையிட்டு என அவன் உலவிய இடங்கள் எல்லாம் அவன் கண்முன்னே இருக்க, உதட்டில் தானாக ஒரு புன்னகை வந்து அமர்ந்துக்கொண்டது.
வகுப்புக்கு தாமதமாய் போவதையே தங்கள் கடமையென கருதும் சில குழுக்கள் இன்னமும் அங்கிருக்கும் கல்பெஞ்சுக்களில் அமர்ந்து கதையளந்துக்கொண்டிருப்பதை கண்டவன், சிரிப்புடன் நகர, அவன் சில அடிகள் எடுத்து வைத்ததுமே கூச்சலாய் ஒலித்தது அந்த இளசுகளின் கூக்குரல்… ‘சீனியர் ஜி…?’
அவர்கள் குரலில் ஆதியின் கால்கள் தன்னால் நிற்க, “பார்த்துட்டானுங்கடா” என உள்ளுக்குள் எண்ணிக்கொண்டான்.
மின்னல் வேகத்தில் அவனை சூழ்ந்த அக்குழு, பயங்கர ஆரவாரத்துடன், “சீனியர் ஜி! நீங்களா? மறுபடியும் நம்ம காலேஜுக்கா? என்ன விஷயம் ஜி?” இதே கேள்விகள் பல விதங்களில் எல்லோரிடம் இருந்தும் வெளிவர, “வெயிட் வெயிட்” என அவர்கள் உற்சாகத்துக்கு ஸ்பீட் ப்ரேக் போடப்பார்த்தான் ஆதி.
கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்கள் அவர்கள். ஆதி இறுதியாண்டு மாணவனாய் அங்கே இருந்தபோது பிரெஷர்ஸாய் உள்ளே நுழைந்தவர்களுக்கு கல்லூரிக்கே பிரபாலமாய் இருக்கும் ஆதி, ஒரு ‘ஹீரோ’ பிகர் போல இருக்க, ஆதியை சூழும் பட்டாளங்களில் இவர்களும் அடங்கியிருப்பர்.
(***மொழி புரிதலுக்காக ஹிந்தி உரையாடல் தமிழில் வழங்கப்படுகிறது)
“சீனியர்ஜி! உங்களை எதிர்ப்பார்க்கவே இல்ல! யூ க்நொவ் ஹவ் மச் வீ மிஸ்ட் யூ?”
“நீங்க போனதுக்கு அப்புறம் இன்னும் ஒரு தடவ கூட நம்ம ‘மியூசிக் ஃபீஸ்ட்’ல கப் அடிக்கல! அப்போ எல்லாம் நீங்க இருந்துருந்தா நல்லா இருக்கும்ன்னு நாங்க சொல்லுவோம், தெரியுமா?”
விட்டால் பேசிக்கொண்டே செல்வோம் என்ற ரீதியில் மாற்றி மாற்றி அவனை சுற்றி வளைக்க, அதில் தலைவன் போல இருந்த ஒருவன், “வெயிட் கைஸ்! சீனியர் ஜி எதுக்காக வந்துருக்காங்கன்னு முதல்ல கேப்போம்” என ஆதிக்கு பேச அவகாசம் வாங்கிக்கொடுத்தான்.
ஆதியும் கிடைத்த கேப்பில், “நான் இங்கதான் எம்.பி.ஏ ஜாயின் பண்ணிருக்கேன்” என குறுநகையுடன் சொல்ல, அவன் சொன்னது மாத்திரமே அவனுக்கு நினைவில் இருந்தது. அதன் பின்னரோ, அந்த குழுவே சேர்ந்து அவனை தோளில் தூக்கி சுற்றி சுழற்றி தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்த,
‘இன்னும் நல்லா கத்துங்கடா! அப்போதான் ஏதாவது ஒரு எச்.ஓ.டி, இல்லனா டிசிப்ளின் ஹெட் எல்லாம் இங்க வந்து பிரச்சனை ஆகும்!’ என குதூகலமாய் மனதில் நினைத்தான் ஆதி.
“இந்த வருஷ ‘மியூசிக் ஃபியஸ்ட்டா’ கப்பு நமக்கு தான்!!! ஹேய்ய்ய்ய்….” என ஒருவன் கத்த, “சீனியர்ஜி வந்துட்டதே நமக்கு ஜாலி தான்டா” என கத்தினான் ஒருவன்.
ஆதி எதிர்ப்பார்த்ததை போலவே அவனது எச்.ஓ.டி-யே வேகவேகமாய் அவ்விடம் வந்திருந்தார்.
“வாட்ஸ் ஹேப்பெனிங் ஹியர்? டோன்ட் யூ பியுபில் ஹேவ் கிளாசஸ்?” என சத்தம் போட, தோளில் இருந்த ஆதியை மெதுவாய் இறக்கிவிட்டு அமைதியாய் நின்றனர்.
ஆதி, ‘ஐ…ஜாலி ஜாலி… வந்ததுமே மாட்டிட்டோம்’ என சந்தோசப்பட, புருவம் சுருக்கி அவனை பார்த்த எச்.ஓ.டி அடையாளம் கண்டுக்கொண்டபடி மெலிதாய் சிரித்து, “ஆதி? ரைட்?” என்றார் சிறு கீற்றாய் புன்னகித்து.
பதிலுக்கு குறுநகை செய்த அவனும், “யெஸ் சார்” என சொல்ல, அவர் மற்றவர்களை பார்த்து, “கோ டு யுவர் கிளாசஸ்” என்றார் கண்டிப்பு போல.
அவர்கள் நகர்ந்ததும், ஆதியை நெருங்கியவர், “நீ இங்க ஜாயின் பண்ணப்போறன்னு எனக்கு தெரியும்! பட் வொய் திஸ் டிலே?” என்றார் நேரிடையாய்.
‘லேட்டா வந்துட்டேன்னு வீட்டுக்கு அனுப்பிவிட்டுடுய்யா’ என உள்ளுக்குள் நினைத்த ஆதி, வெளியே, “ஆக்சுவலி ஐ’யம் நாட் இன்ட்ரெஸ்டட் சார்! அப்பாவோட கட்டாயத்துக்காக தான் வந்தேன்” என்றான் உண்மையை மறைக்காது.
அதைக்கேட்டு நகைத்தவர், “ஆர் யூ அ கிட்? ஸ்கூல் போக பிடிக்கலன்னு சொல்ற மாறி சொல்ற?” என்றவர் பெரிய ஹாஸ்யம் சொல்லிவிட்டதை போல இன்னும் பெரிதாய் நகைக்க,
‘ஷ்…ஷோ!!! நான் கொலை பண்ணுற மூட்ல இல்லையே இப்போ!?’ என சிரித்துக்கொண்டே முறைத்தான் ஆதி.
அவரே சிரித்து முடித்தவர், “கோல்ட் மெடலிஸ்ட்! எங்கே உன்னோட மெடல்?” என்றார் மீண்டும் சிரிப்பாய்.
ஆதியோ, ‘அது நாய் சங்கிலி பாரு, கழுத்துல மாட்டிக்கிட்டு வாக்கிங் வர! யோவ்… ஏன்ய்யா என் கடுப்பு தெரியாம குறுக்க வர!!’ என பொருமித்தள்ளினான்.
பின் அவரே, “முதல் நாள் காலேஜ்ன்னு ரொம்ப டென்ஸ்ட்டா இருக்கன்னு நினைக்குறேன்! ஆல் தி பெஸ்ட்! உன் டிபார்ட்மென்ட் அந்த சைட் இருக்கு!!!” என வழிவிட, “கோடான கோடி நன்றி தொப்பை சார்” என தமிழில் சிரித்தபடி சொல்லிக்கொண்டு அங்கிருந்து ஆதி செல்ல,
அவன் ஏதோ தன்னை புகழ்ந்துவிட்டதாய் நினைத்துக்கொண்ட ஹிந்திக்காரரும், “நாட்டி பாய்” என்ற பாராட்டோடு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
வகுப்பிற்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவன் ஓரிடம் சென்று அமர, அவன் பயந்தபடி அப்படி ஒன்றும் அவனது ஜூனியர்ஸ் அந்த வகுப்பை ஆக்கிரமித்திருக்கவில்லை. ஒன்று இரண்டை தவிர அத்தனையும் புதுமுகம். அதிலேயே மனம் சமன்ப்பட, அமைதியாய் வகுப்பை கவனிக்க ஆரம்பித்தான் ஆதி.
ஆனால், ஆதி அந்த கல்லூரிக்கு வந்துவிட்ட சேதி காட்டுத்தீ போல மாணவர்களிடையே பரவிக்கொண்டிருந்ததை அவன் அறிய வாய்ப்பில்லை.
ஆதித்யதேவ்!!! ஆறு வருடங்களுக்கு முன், அந்த கல்லூரியில் சேர்ந்தவன். நான்கு வருட பொறியியல் படிப்பில், அவனை போட்டியிட்டு வெல்வது கடினம் என சொல்லுமளவுக்கு படிப்பில் கெட்டிக்காரனாய் இருந்திருந்தும், அவன் அளவுக்கு குறும்பு செய்ய ஒருவரும் இல்லை என சில ஆசிரியர்கள் குறைப்படிக்கும்படி பெயர் வாங்கியிருந்தும், அவனை அதிகமாய் பலரும் அறிவது, அவனது ‘இசை’ கொண்டே…!
காலேஜ் வந்த புதிதில் ‘பிரெஷர்ஸ் பார்ட்டி’யில் பாட ஆரம்பித்தவனை ‘போதும்…போதும்’ என அவனே சொல்லும் அளவுக்கு எல்லா போட்டிகளிலும் பங்குபெறசெய்து வாட்டியெடுத்தனர். ஆனாலும் அவனது திறமையோ அல்லது அதிர்ஷ்டமோ, அவன் பங்குபெற்றாலே பரிசு கிடைத்துவிடும்.
‘இசைக்கு மயங்காத பெண்டிரும் உண்டோ?’ இசையில் அவன் மூழ்கும்போதெல்லாம், அவனிடம் மூழ்கி மூச்சு திணறி போயிருக்கின்றனர் பெண்கள். படிப்பு முடிந்து இந்த இரு ஆண்டுகளாய் தான் பெண்கள் வாசம் அவனிடம் சற்று குறைவாய் வீச, இதோ மறுபடியும் வந்துவிட்டது கல்லூரி வாழ்க்கை…!
பொறியியல் படிப்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் இரண்டாம் வருட வகுப்பில் அமர்ந்திருந்தாள் அவள். விரிந்து கிடந்த கூந்தலில் காதோர சிறு கற்றைகளை மட்டும் எடுத்து கிளிப்பில் அடக்கியிருக்க, முன்நெற்றியில் ஒரு சிறு கற்றை முடி மட்டும் அவள் முக வடிவுக்கு ஏற்ப வளைந்து நின்றது. வாயில் வைத்து கடித்துக்கொண்டிருந்த பேனாவின் பின்பக்கத்தோடு, அச்சுழல் முடியை தன் ஆட்காட்டி விரலால் சுருட்டிக்கொண்டிருந்தாள் தன்யா.
கண்கள் இரண்டும் எதிரே இருந்த கிரீன் போர்டில் லயித்திருப்பதை போல தோன்றினாலும் உண்மையில் அவள் வெறித்துக்கொண்டிருந்தது போர்டின் மேலே பெரிதாய் இருந்த கடிகாரத்தை தான்!
[the_ad id=”6605″]
வினாடி முட்கள் மட்டும் வேகமாய் ஓட, நிமிட முட்கள் நடந்தேனும் போகக்கூடாதா? என அவள் மானசீகமாய் புலம்ப, அதை கேட்டுவிட்டதை போல, அந்த வகுப்புக்கான நேரம் முடிவடைந்ததை சொல்லி உரக்க ஒலித்தது பெல் சத்தம்.
உடனே ஒரு உற்சாகம் உள்ளுக்குள் இருந்து கிளம்பியது அவளுக்கு, ‘ஹப்பாடா’ என!!!
“ஓகே! வீ வில் மீட் இன் நெக்ஸ்ட் கிளாஸ்” என்ற ப்ரொபசர் விடைபெற்று சென்றதும், “செம்ம ரம்பம் இன்னைக்கு” என முன்னிருந்த மேசையில் தலை சாய்த்தாள் தன்யா.
தன்யாவுக்கு சிறு வயதில் இருந்து ‘தான் ஒரு கூண்டுக்கிளி’ என்ற எண்ணம் எப்படியோ வந்திருந்தது. அதில் இருந்து மீண்டு வெளியுலகை ரசிக்க வேண்டும் என அவள் விருப்பப்பட, ஒரே செல்ல மகள் விருப்பத்திற்காக ராஜகோபால் அவளை மகாராஷ்டிரா வரை அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த கல்லூரியின் பெருமையை அவரும் அறிவாரே! சுரேன் மூலம் இந்த கல்லூரி பற்றி அறிந்தவள், அதில் தான் சேர வேண்டும் என அடம் பிடிக்க, ‘என்ட்ரன்ஸ் எழுது’ என அசட்டையாய் சொல்லியிருந்தார் ராஜகோபால். ஆனால், அவரே எதிர்ப்பாராத ஒன்று, தன்யா அதில் தேர்வானது தான்!!!
வருடம் ஒருமுறை விடுமுறைக்கு மட்டுமே சென்னை செல்ல முடியும் அவளால். மற்ற விடுமுறைக்கு அவளை தனியே அலைய விடாமல், ராஜகோபாலே மனைவி மகனுடன் வந்து சென்றுக்கொண்டிருந்தார்.
வந்த புதிதில் புது இடத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும் திணறிய தன்யா, இந்த ஒரு வருட பழக்கத்தில் அத்தனையும் வழமைப்படுத்திக்கொண்டாள். மொழி ஒரு தடையல்ல அவளுக்கு. பள்ளியில் படிக்கும்போதே ‘ஹிந்தி’ இரண்டாம் மொழியாக இருந்ததால் அங்கே அனைவரிடமும் சகஜமாய் பேச முடிந்தது.
மேசை மீது கவிழ்ந்து கிடந்தவளை, “செம்மயா பசிக்குது… வா” என இழுத்தாள் தீப்தி. வட இந்திய பெண்ணுக்கே உரிய தோற்றம்.
“யெஸ்! எனக்கும் பசிக்குது!!” என நவ்யா சிணுங்க, அந்த கேரளத்து பைங்கிளிக்கு எதிர்ப்பதமாய், “இப்போ வரியா இல்லையா நீ?” என் பொரிந்தாள் ஆந்திர சிகப்புமிளகாய், அம்ருதா.
‘நாங்க நாலு பேர்; எங்களுக்கு பயம்ன்னா என்னனே தெரியாது’ என காக்க காக்க பிஜிஎம் போடுமளவுக்கு ஒன்றாக ஒட்டி திரியும் நான்கு மாநில கூட்டணி அது!!!
சோம்பலாய் எழுந்த தன்யா, “போலாம் போலாம்” என நெட்டி முறித்தபடி நகர்ந்தாள். வகுப்பை விட்டு வெளியே வந்ததுமே, அங்கிருந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன், “விஷயம் தெரியுமா? நம்ம சீனியர்ஸ் அடிக்கடி அவங்களோட ஒரு சீனியரை பத்தி ஓவரா சொல்லுவாங்களே!? அந்த சூப்பர் சீனியர் இன்னைக்கு மறுபடி காலேஜ் வந்தாராம்” என சொல்ல, அதை கேட்டுக்கொண்டே நகர்ந்த ‘காக்க காக்க’ க்ரூப் தங்களுக்குள், “யார் அந்த நியூ என்ட்ரி?” என தங்களுக்குள்ளாக கேட்டுக்கொண்டே கேண்டீனை நோக்கி சென்றனர்.
கேண்டீனில் சென்று ஆளுக்கு வேண்டிய உணவை வாங்கிக்கொண்டு மேசை தேடி அமர, சற்று தூரத்தில் இருந்து “தீப்தி…” என்ற பெண் குரல் கேட்டது.
“சீனியர் குரங்கு கூப்பிடுதே” என திட்டிக்கொண்டே தீப்தி எழுந்து செல்ல, “இது போன வருஷம் நம்மளை எவ்வளோ ‘ராகிங்’ பண்ணுச்சு! சீனியர்ன்னு அதுக்கு ரொம்ப திமிர்… இப்போ நம்மளும் சீனியர் தான்!! இப்ப என்ன செஞ்சுடும் அது?” என அம்ருதா அந்த சீனியர் பெண்ணை முறைத்துக்கொண்டே சொல்ல,
“சும்மா இரேன்! நீ முறைக்குறதை அவ பார்த்தா அதுக்கும் சேர்த்து ஏதாவது செய்ய சொல்லுவா” என பம்மினாள் நவ்யா.
தன்யா ‘யாருக்கு வந்ததோ?’ என உணவை உள்ளே தள்ளிக்கொண்டிருக்க, அம்ருதாவிற்கு கோவம் அடங்கவில்லை போலும். முறைத்தபடியே இருந்தாள்.
திரும்பி வந்த தீப்தி தொங்கிப்போன முகத்தோடு அவர்களுடன் அமர்ந்துக்கொள்ள, “என்னடி சொல்லுச்சு அது?” என்றாள் அம்ருதா.
“ஹும்! எவனிங் போறப்போ அவளை வந்து மீட் பண்ணனுமாம்!!”
நவ்யா, “எதுக்காம்”
“ம்ம்! மேடம் இனிமே பிசி ஆகிடுவாங்கலாம்… அதனால அவங்க அசைன்மன்ட் வாங்கிட்டு போய் நான் எழுதிட்டு வந்து தரணுமாம்!”
அம்ருதா, “வாட் தி…..!!! ஏன் அவ வேலையை கூட செய்ய முடியாத அளவுக்கு அவளுக்கு அப்படி என்ன வேலை?”
தீப்தி, “யாரோ ஒரு சீனியர் வந்துருக்கானாம்! இனி அவனோட சிங்கிங் ப்ராக்டிஸ் பண்ணணுமாம்!”
அம்ருதா, “இதை அவளே சொன்னாளா?”
தீப்தி, “இல்ல… அவ கூட இருக்க பிசாசுங்க இப்டி சொல்லிதான் அவளை கிண்டல் பண்ணுச்சுங்க” என்று சொல்ல, “நான் போய் என்னனு கேக்குறேன்” என பொங்கிய மிளகாயை அடக்கி உட்கார வைப்பதற்குள் ‘ஐயோ’ என்றானது மூவருக்கும்.
அதுவரை பொறுமையாய் இருந்த தன்யா, “நீயும் தானே தீப்தி நல்லா பாடுவ? சோ, இனி அந்த சீனியர் கிட்ட ‘நானும் ப்ராக்டிஸ் பண்ண போறேன், நானும் பிசி தான்’னு சொல்லிடு!” என்றாள் கூலாய்.
பதறிப்போன தீப்தி, “நான் நல்லா பாடுவேனா?” என கேட்க, அதே டோனில், “அதானே! இவளா நல்லா பாடுவா?” என கேட்டாள் நவ்யா.
தீப்தி அவளை முறைக்க, ‘ஹிஹி’ என நவ்யா சிரிக்க, தன்யாவோ, “நீ சொல்றியா? இல்ல நான் சொல்லவா?” என எழுந்திருந்தாள்.
தீப்தி பதட்டமாய், “ஹே ஹே… நீ எதுவும் சொல்லிடாத! நானே பாத்துக்குறேன்” என்றுவிட்டாள்.
உணவு முடிந்ததும் கேண்டீனை விட்டு வெளியே வந்தவர்கள், வழக்கமாய் அமரும் மரத்தடி கல்பெஞ்சை தேடிப்போய் அமர்ந்துக்கொண்டு கதை பேச, அம்ருதா மட்டும் யோசனையாகவே இருந்தாள்.
அதைக்கண்ட நவ்யா, “என்ன அம்மு யோசனை?” என கேட்கவும், “நம்மளும் இந்த காலேஜ்ல சீனியர்ன்னு ஃபார்ம் ஆகணும்” என்றாள் சீரியசாய்.
தீப்தி, “அதுக்கு?”
“அதுக்கு நம்மளும் ‘கெத்’தா மாறப்போறோம்”
நவ்யா, “அதான் எப்படி?”
“போன வாரம் புதுசா வந்து சேர்ந்த ஜூனியர்ஸ ரேகிங் பண்ணப்போறோம்” என அம்ருதா சொல்ல, தன்யா, “வாவ்வ்வ்வ்” என்றிட, அவளைத்தவிர மீதி இருவரும், ‘ஐயையோ’ என்றனர்.
நவ்யா, “அதெல்லாம் நமக்கு வராது! வேண்டாம்”
தீப்தி, “நம்ம சீனியர்ஸ் யாராது பார்த்துட்டா, நம்மளை வச்சு செஞ்சுடுவாங்க… வேண்டாம்”
இருவரை கண்டும் சலித்த அம்ருதா, “நீ என்னடி சொல்ற?” என தன்யா பக்கம் வர, அவளோ ஒரு படி மேலே போய், “அந்த மஞ்ச குர்தி ஓகேவா பாரு?” என ஆளையே தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
“பர்பெக்ட்” என குதூகலித்த அம்ருதா, அடுத்து பேசும் முன், “ஹே எல்லோ குர்தி!!! ஹேய்… யூ ஒன்லி… கம் ஹியர்” என அழைத்திருந்தாள் தன்யா.
அந்த மஞ்சள் குர்தி அணிந்த பெண்ணும் பவ்வியமாய் இவர்களிடம் வர, நவ்யா, “பாக்க மலையாளி போல உண்டு, வேற யாராது செலேக்ட் பண்ணுங்களேன்” என்றாள் மெல்லிய குரலில் கெஞ்சலாய்.
அவளை ஒரு சுடு பார்வை பார்த்த தன்யா, “என்ன, ஊர் பற்றா? தொலைச்சுடுவேன்” என மிரட்டிவிட்டு, வந்து நின்ற பெண்ணிடம், “என்ன பேரு? எந்த ஊரு? எந்த டிபார்ட்மென்ட்?” என அடிப்படை விவரங்களை அதட்டலாய் கேட்க, அந்த பெண்ணும் ‘சீனியர்’ என்ற பயத்தில் கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்ல,
அடுத்து, “இந்த பார்முலா சொல்லு” என படிப்புக்கு தாவிவிட்டாள் தன்யா.
[the_ad id=”6605″]
அந்த பெண்ணோ, “வந்து ஒன் வீக் தான் ஆச்சு தீதி! இன்னும் எதுவும் படிக்கல” என தயங்கி தயங்கி சொல்ல, “தீதி நஹி! சீனியர் போலோ” என்றாள் தன்யா கெத்தாக.
அந்த பெண்ணும் உடனே, “ஒகே சீனியர், நாளைக்கு படிச்சுட்டு வந்து உங்ககிட்ட சொல்றேன்!” என சரணடைய, “இப்ப பதில் சொல்லாததுக்கு பனிஷ்மென்ட் குடுத்தாகனுமே” என்றாள் அம்ருதா.
அந்த பெண் மிரண்ட பார்வை பார்க்க, “போதும் விட்டுடுங்க” என்றாள் நவ்யா. அவளை ஓரக்கண்ணால் முறைத்தாலும், அந்த பெண்ணிடம், “சரி… நீ பாக்க ரொம்ப பாவமா இருக்குறதால உனக்கு சின்ன பனிஷ்மென்ட் தான்! இங்கிருந்து உன்னோட கிளாஸ் ரூம் வரைக்கும் ‘நொண்டி’க்கிட்டே போற! என்ன?” என தன்யா சொல்ல, “ஆஆஆ” என அதிர்ந்து போனாள் அவள்.
“இங்கிருந்து அவ்ளோ தூரமும் நொண்டிக்கிட்டேவா?” அவள் மிரண்டபடி கேட்க, “ஏன், போக மாட்டியா?” என அம்ருதா அதட்டியதில், “ஓகே சீனியர் ஓகே சீனியர்” என சொன்ன அப்பெண் அங்கிருந்து நொண்டிக்கொண்டே போவதை பார்த்த தன்யாவும் அம்ருதாவும் சந்தோசமாய் குலுங்கி சிரித்தபடி ‘ஹைஃபை’ கொடுத்துக்கொள்ள, “திஸ் ஸ் நாட் ஃபேர்” என முறுக்கிக்கொண்டாள் நவ்யா.
அதை கண்டுக்கொள்ளாமல் அடுத்த ரவுண்டுக்கு தயாரானனர் தன்யாவும் அம்ருதாவும். தீப்தி கூட கொஞ்சம் ஆர்வமாய் அடுத்து யாரை தேர்ந்தெடுப்பது என நோட்டமிட, தன்யா சற்று தள்ளி நடந்து சென்றுக்கொண்டிருந்த ஒருவனை சுட்டிக்காட்டி, “ஹலோ! ஹே!!! ரெட் ஷர்ட், இதர் தேக்கோ!” என்றாள் சத்தமாய்.
அந்த சிகப்பு சட்டையும் சந்தேகத்துடன் திரும்பி, “நானா?” என்பது போல புருவம் சுருக்கி தலையாட்ட, அவனுக்கு தமிழ் தெரியும் என்பதை அறியாத தன்யா, “உன்னத்தான்டா… வாடா” என்றாள் கையசைத்து காட்டி!
ஒரு கையில் சிற்றுண்டியும், மறுக்கையில் நோட்டும் என நடந்து வந்தவன், அவர்கள் முன் நின்று கொஞ்சம் கடுகடுத்த முகத்துடன், “கியா?” என்றான்.
அவன் நடந்து வந்து நின்ற தினுசிலும், ‘என்ன?’ என்று கேட்ட தோரணையிலும் கொஞ்சம் கிலி கொண்டாலும், “காலேஜுக்கு புதுசா?” என்றாள் தன்யா ஹிந்தியில்.
அவன், ‘ம்ம்ம்’ என தலையாட்ட, “புதுசுன்னா சீனியருக்கு சல்யூட் பண்ண மாட்டியா?” என்றாள் தன்யா அதட்டல் போல.
அம்ருதாவிற்கு எதுவோ சரியில்லை என மணியடித்தது போலும் ‘கப்சிப்’பென வாயே திறக்கவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தவன், “யாருக்கு?” என தமிழில் கேட்க, “ஓ! நீ தமிழா?” என்றாள் வியப்பாய்.
அவன் மறுபடியும், ‘ம்ம்ம்’ என தலையசைக்க, “சரி, சீனியருக்கு ஒரு சல்யூட் வை” என்றாள் மீண்டும்.
அவனோ தன் இருகைகளையும் சுட்டிக்காட்டி உதடு பிதுக்க, அவன் ஒரு கையில் இருந்த நோட்டை வாங்கி தன் அருகே வீசியவள், மறுக்கையில் இருந்த ‘பாவ் பாஜியை’ தன் கையில் எடுத்துக்கொண்டு, “இப்போ சல்யூட் பண்ணு” என்றாள்.
அவள் செய்கையில் சிறிதாய் புருவம் உயர்த்தியவன், தன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்தி நின்றான், ‘முடியாது’ என சொல்வதை போல.
அவளோ அவன் கொண்டு வந்திருந்த ‘பாவ் பாஜியை’ கடித்தபடி, “நீ சல்யூட் பண்ணலன்னா இங்கிருந்து போக முடியாது!” என்றாள் அலட்டலாய்.
இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கண்ட சிலர் ஏதோ தங்களுக்குள் முனுமுனுத்துக்கொள்வதை கண்ட அம்ருதா, தன்யாவிற்கு சிக்னல் கொடுக்க முயற்சிக்க, எல்லாம் வீணே!!!
அவள் சொல்ல சொல்ல அவன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்க, “என் முகத்துல என்ன படமா ஓடுது? சல்யூட் பண்ணு மேன்” என்றாள் ஏவலாய்.
அவள் உண்டுக்கொண்டிருந்த ‘பாவ் பாஜி’ அவள் முகத்தில் கொஞ்சமாய் கோலம் போட்டுவைக்க, அவன் முகத்தில் சிரிப்பின் சாயல் தென்ப்பட்டது. அதைக்கண்டுக்கொண்ட தன்யா, முதல் பொத்தானை போடாமல் விட்டிருந்த இடைவெளியில், நெஞ்சின் மத்தியில் தொங்கிக்கொண்டிருந்த அவன் கூலர்ஸில் தன் முகம் பார்த்துவிட்டு, கோவத்துடன், “சீனியரை பார்த்தே சிரிக்குரியா?” என்றவள், அருகே கிடந்த அவன் நோட்டை எடுத்து கடைசி பக்கத்தை கிழித்து அதை ‘டிஷூ பேப்பரென’ உபயோகித்தாள்.
மெலிதான உதடு பிதுக்கலைத்தாண்டி அவன் எந்த பாவமும் காட்டாது இருக்க, அதில் மேலும் தன்யா கடுப்பாகி, “பேர் என்னடா?” என்றாள் மரியாதையின்றி.
இம்முறை அவன் முகம் கண்டிப்பை காட்டவே அதில் சிறு திருப்தியுற்றவள், அந்த நோட்டின் முதல் பக்கத்தை திறந்து அசட்டையாய் பார்வை செலுத்தி, “ஆ..தி..த்..ய..தே…வ்” என பொறுமையாய் உச்சரித்தாள் அவன் பெயரை.
பின் அவளே, “நைஸ் நேம்” என சொல்லி, “எந்த டிபார்ட்மென்ட்?” அவனிடம் கேட்க, அதற்கும் அவன் மௌனமே விடையாய் வர, மீண்டும் நோட்டை பார்த்தவள், “என்ன பேரை தவிர ஒண்ணுமே எழுதல?” என்றாள் அவனிடமே!
தன்யா, “ஆமா, பர்ஸ்ட் இயர் தானே நீ?”
அதற்குள் தூரத்தில் இருந்து “சீனியர்ஜி? என்ன ஆச்சு?” என கேட்டுக்கொண்டே ஒருவன் வருவதை கண்ட அம்ருதா, “ஏய், நம்ம சீனியர் டி! எழுந்துரி” என உசுப்பிவிட, நால்வரும் படக்கென எழுந்து நின்றனர் வந்தவனை பார்த்து.
வந்தவோ தன்யாவை பார்த்துக்கொண்டே நின்ற ஆதியிடம், “என்ன சீனியர்ஜி? எனி ப்ராப்ளம்?” என பவ்வியமாய் கேட்க, “சீ…னி…ய…ரா…????” வாயை பிளந்தனர் நால்வரும்.
தன்யாவோ, ‘உன்னை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையேடா’ என பாவத்தில் எச்சில் கூட்டி விழுங்க, அதை வெகுவாய் ரசித்தவன், அரும்பிய புன்னகையோடு, “பர்ஸ்ட் இயர் தான்! பட்… எம்.பி.ஏ பர்ஸ்ட் இயர்” என அழுத்தமாய் நிறுத்தி சொன்னதும்,
‘ஆமா, அதை இப்போ சொல்லு! இவ்ளோ நேரம் கோமாலயா இருந்த?’ என அவனை வசவுப்பாடிக்கொண்டிருந்தாள் மனதில்.
வந்தவனிடம், “நத்திங் ஜூனியர், நீங்க போங்க!” என அனுப்பி வைத்தவன், “எந்த டிபார்ட்மென்ட்?” என்றான் இடுப்பில் கைவைத்து, சற்று சாய்ந்தபடி அவளை பார்த்து.
[the_ad id=”6605″]
தன்யாவை முந்திக்கொண்டு மற்ற மூவரும் பதில் சொல்ல, ‘ப்ச்’ என சலிப்போடு அவர்களை பார்த்து முறைத்த ஆதி, ‘உஷ்’ என்றான் உதட்டின் மேல் கைவைத்து.
அதில் மூவரும் வாயை மூடிக்கொள்ள, அவனையே மிரண்டபடி பார்த்துக்கொண்டிருந்த தன்யாவிடம், “எந்த இயர்?” என்றான் ஆதி.
“செ…செகன்ட்..இயர்”
“ம்ம்ம்? செகன்ட் இயர் வந்துட்டா காலேஜே நம்ம கண்ட்ரோலுக்கு வந்துருச்சுன்னு நினைப்போ?” என அவன் நக்கலாய் கேட்க, அதில் சற்று கடுப்பானாலும், “இல்ல… அது… சும்மா” என இழுத்தாள் தன்யா.
“ம்ம்ம்…!! நான் யாருன்னு தெரியுதா இப்போ?”
“ம்ம்!! சீனியர்!” என அவள் சொன்னதும், “கேட்கல?” என்றான் ஆதி!
“சீனியர்!!!” என சத்தமாய் சொல்ல, “சீனியர் இல்ல! சூப்பர் சீனியர்! எங்க சொல்லு” என்றான்.
வெளிப்படையாய் கடுப்பை கொட்ட முடியாது, பல்லைக்கடித்துக்கொண்டு, “சூப்..பர்… சீனியர்” என்றாள் தன்யா எங்கோ பார்த்து.
“ம்ம்… சீனியரை பார்த்தா சல்யூட் பண்ணணும்ன்னு தெரியாதா?” அவள் கேட்டதை போலவே, சிரிப்பை விழுங்கிக்கொண்டு தீவிரமான பாவனையில் அவன் கேட்க முயன்றாலும் அவன் சிரிப்பதை கண்கள் காட்டிக்கொடுக்க, அதை கண்டவளுக்கு உதடு துடித்தது.
தலை குனிந்து அவள் நிற்க, “உன்னைத்தான்! சல்யூட் பண்ணணும்ன்னு தெரியாதா?” என்றான் இம்முறை அதட்டலாய்.
அவன் அதட்டியதும் அந்த குரலில் சட்டென நிமிர்ந்தவள், உடனே விறைப்பாய் ஒரு சல்யூட் வைக்க, அதை திருப்தியாய் பார்த்தவன், “இனி தினமும் என்னை வந்து பார்த்து சல்யூட் அடிச்சுட்டு தான் நீ ஹாஸ்டலுக்கு போகணும்! என்ன?” என்றான் உத்தரவு போல.
‘புரிந்தது’ என்பதை போல அவள் தலையை உருட்டவே, உடன் பயந்தபடி நின்ற மூவரை பார்த்து, “இவ சல்யூட் பண்ண வரப்போ கூட தொத்திக்கிட்டு வர வேலை எல்லாம் இருக்க கூடாது… புரிஞ்சுதா?” என்றான்.
உடனே, மூவர் தலையும் முன்னூத்தி அறுவது டிகிரியில் சுழன்று சம்மதம் சொல்ல, பொதுவாய், “போங்க” என அங்கிருந்து செல்ல, அனுமதி கொடுத்தான் ஆதி.
நால்வரும் அங்கிருந்து செல்லவே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்ற தன்யாவை கண்டவன், “ஓய், உன் பேர் என்ன?” என்றான் சத்தமாய்.
சட்டென திரும்பியவள், “தன்யா…” என மெல்லிய குரலில் சொல்ல, “கேட்கல” என்பதை போல முன்னே சற்று குனிந்து காதை பிடித்து காட்டினான் ஆதி.
அவள் சத்தமாய், “தன்யா ராஜகோபால்” என சொல்லவே, “ராஜகோபால் எல்லாம் வேணாம்! தன்யா போதும்” என்ற ஆதி,
“நீ என்ன பண்ற? நாளைக்கு இதே நேரம், இதே இடம்… சுட சுட பாவ் பாஜியோட வந்து எனக்காக வெயிட் பண்ற? ஓகே வா?” என்றதும்,
அவள் மிரண்டு போய் பதில் சொல்லாமல் இருக்கவே, “ஓ…கே வா?” அழுத்தமாய் கேட்டான் ஆதி.
அந்த குரலில் உடனே, “ஓகே” என தன்யா தலையாட்ட, “போய்கோ” என்றான் ஆதி.
விட்டால் போதுமென ஓடுபவளைக்கண்டு புன்னகை விரிய, மௌனமாய் சிரித்தபடி அவள் பெயரை உச்சரித்துப்பார்த்தான்.
“த…ன்…யா…! ம்ம்ம்… நல்லா தான் இருக்கு!!!”