ஒரு மத்தியத்தர உணவு விடுதியில் உணவுக்கு ஆர்டர் சொல்லிவிட்டு காத்திருந்தான் கோகுல். என்ன முயன்றும் அன்று காலை நடந்த நிகழ்வுகளை அவனால் துளியும் ஜீரணிக்க இயலவில்லை. தான் ஒரு காட்சிபொம்மையாய் அங்கு நின்றதை நினைக்க நினைக்க மனம் ஆறாது நடந்து முடிந்ததையே அசைப்போட்டுக்கொண்டிருந்தான்.
தன்யாவின் விரல் பிடித்து திருமண அச்சாரத்தை அணிவிக்க போன ஆதி, திடீரென்ற அடியில் நிலைத்தடுமாறி கீழே சரிய, என்ன நடந்தது? என அவன் சுதாரிப்பதற்குள் அடுத்து அவன் மீது பாய வந்த சுரேன், “என் வாழ்க்கையை கெடுத்துட்டு, இப்போ என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுக்க வந்துட்டியா?” என சொன்னதில் அதிர்ந்து தான் போனான்.
தொழில் வட்டாரங்கள், நட்புகள், சுற்றத்தார் முன்னே தன் வீட்டுக்கு மாப்பிள்ளையாக வேண்டியவனை சுரேன் அடித்துவிட்டதில் செய்வதறியாது வெடவெடத்துப்போனார் ராஜகோபால். அதிலும் அவன் மேற்கொண்டு அடிக்கப்போக, அவனைத்தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாய் இருந்தது.
ஜெயதேவ் ஓடிச்சென்று அதிர்ந்துப்போய் அப்படியே அமர்ந்திருந்த ஆதியை கைக்கொடுத்து எழுப்ப, சுரேனை பார்த்துக்கொண்டே எழுந்து நின்றான் ஆதி.
“நீதான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சுருந்தா, நான் இந்த நிச்சயத்துக்கே ஒத்துருந்துருக்க மாட்டேன்! ரெண்டே நாள்ல எங்க குடும்பத்தையே ஏமாத்தி காரியத்தை சாதிக்க பார்த்தல்ல? நல்ல வேளை நான் வந்தேன்!” என சுரேன் பேசிக்கொண்டே போக, அவனை அடக்க லட்சுமியும் ராஜகோபாலும் வெகுவாய் முயன்றனர். தன்யாவுக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை!
“முதல்ல போடா இங்கிருந்து!!!” சுரேன் வாசலை நோக்கி கைக்காட்ட, “வாயை மூடு சுரேன்!” என லட்சுமியும், “எல்லார் முன்னாடியும் ஏன்டா அநாகரிகமா நடந்துக்குற?” என ராஜகோபாலும் கத்த, அதை எதையும் காதில் வாங்காதவன், அசையாமல் நின்ற ஆதியின் சட்டையை கொத்தாய் பிடித்து வெளியே இழுக்க,
“அண்ணாஆஆஆ…..” என வீடதிர அலறியிருந்தாள் தன்யா.
அவள் அலறலில் இழுப்பதை நிறுத்தினாலும், ஆதியின் மீதிருந்து சுரேன் கையை எடுக்காது இருக்க, அவன் கரத்தை பிரித்து விட ஜெயதேவும் ராஜகோபாலும் முயன்றுக்கொண்டிருக்க, “மரியாதையா அவர் மேல இருந்து கைய எடு!” என்றாள் தன்யா அதிகாரமாய்.
“இவன் யாருன்னு தெரியாம பேசாத தன்யா! இவன்தான்…” என சுரேன் ஆரம்பிக்க,
“முதல்ல கையை எடு” என்றாள் இன்னும் அலறலாய். தன்யாவின் சப்தத்தில் சுரேனின் கைகள் ஆதியின் உடையில் இருந்து தன்னால் தளர்ந்தது.
சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை பொதுவாய் பார்த்து கைக்கூப்பிய தன்யா, “எக்ஸ்ட்ரீம்லி சாரி போர் திஸ் ஜென்டில்மென்! எங்க அழைப்பை மதிச்சு இங்க வந்ததற்கு மெனி மெனி தேங்க்ஸ்! உங்களை இங்கிருந்து ‘கிளம்ப’ சொல்றதுக்கு சங்கடமா இருக்கு! பட் வேற வழி இல்லை!” என்று சொல்ல, அவள் நாசூக்காய் சொல்ல வருவதை புரிந்துக்கொண்டவர்களும் மௌனமாய் விடைப்பெற்றனர்.
ராஜகோபாலை நெருங்கிய வைத்தீஸ்வரன், “டேக் கேர்” என்றார் அழுத்தமாய்.
அனைவரும் விடைபெறும் வரை ஆதியை முறைத்துக்கொண்டே பொருத்து நின்ற சுரேன், “வெளில போடா ராஸ்கல்” என கத்த, மின்னல் வேகத்தில் தன் வலுக்கரத்தை சுரேனின் கன்னத்தில் இறக்கியிருந்தார் ராஜகோபால். அதில் அவன் கண்களில் இருந்த ‘கூலர்ஸ்’ தெரித்துப்போய் கீழே விழ, தன்னியல்பாய் சுரேனின் கரம் அவன் ஒருப்பக்க முகத்தை மறைத்திருந்தது.
“என்னடா பேசிட்டு இருக்க நீ?” என ராஜகோபால் திட்ட, “அவனை வெளில போக சொல்லுங்கப்பா” என்றான் சுரேன் மீண்டுமாய்.
[the_ad id=”6605″]
அவனின் அடத்தில் ராஜகோபாலின் கோபம் எல்லை கடக்க, மீண்டும் முழு ரௌத்திரத்துடன் அவனை அடிக்க போனவரை வேகமாய் வந்து தடுத்து நின்றான் ஆதி. ஆதியின் செயலுக்கு துணையாய் ஜெயதேவும் கோகுலும் சேர்ந்துக்கொண்டனர்.
“நீ விடு ஆதி என்னை! கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம வந்தவங்க எல்லார் முன்னாடியும் குடும்ப மானத்தையே வாங்கிட்டான்! என்ன கோவமா இருந்தாலும் பொறுமையா வாய்ல பேசுறதுக்கு என்ன? கை நீட்டனுமா? இவன் என்ன சின்ன பையனா?” ஆதங்கமாய் அவர் பேசிக்கொண்டே போக,
“பொறுமையா பேச முடியாதுப்பா! என் நிம்மதியை, வாழ்க்கையை கெடுத்தவன் இவன்! என் தங்கச்சி கையை பிடிச்சுக்கிட்டு நிக்குறதை என்னால பார்க்க முடியல!” என முகத்தில் இருந்த கரத்தை எடுக்காமலே சுரேன் கத்த,
மதுதேவாவுக்கு தன் அண்ணனை அடித்துவிட்டானே என்ற கோபம் அவனை பார்த்த மாத்திரத்தில் வந்தாலும், அவன் தான் ‘சுரேன்’ என அறிந்துக்கொண்டதில், ‘ஏன் இப்படி செய்தாய்?’ என்ற வருத்தமே அதிகமாய் போனது.
ராஜகோபாலின் மகன் என்ற காரணத்திற்க்காக ஜெயதேவ், லட்சுமி கூட பொறுமை காக்க, பெற்றவர்களே அமைதியாய் நிற்கும்போது, தான் என்ன செய்ய? என தெரியாது சுரேன் மீது கோவத்துடன் நின்றிருந்தான் கோகுல்.
இருப்பினும், “அப்டி என்னப்பா செஞ்சுட்டான் என்புள்ள?” என மனம் கேளாது தெய்வா கேட்க,
“என்ன செஞ்சான்னு தான் அவனுக்கே தெரியுமே! அதனால தானே என்னை பார்த்ததும் ஷாக் ஆகி ஒரு வார்த்தை கூட பேசாம நிக்குறான்!” என்றான் சுரேன்.
தன்யா, “என்ன சொல்ற சுரேன்? ஆதியை உனக்கு முன்னாடியே தெரியுமா?” அவள் அப்படி கேட்டதும் தான் தாமதம், “தெரியுமாவா? என்னை அடிச்சு, என் கண்ணை வீணாக்கி… என்னை இந்த நிலைமைல நிக்க வச்ச **** இவன் தான்” என்றவன் முகம் மறைத்திருந்த தன் கரத்தை விலக்க, முதல்முறையாய் அவன் முகத்தை பார்த்தவர்கள் சற்றே விலகி நின்ற கருவிழியையும் தாண்டி, அவன் புருவத்தின் மீது ஒரு சுண்டுவிரல் அளவுக்கு விகாரமாய் வளர்ந்து நின்ற சதையை கண்டு முகம் சுளிக்க,
“என்ன முகத்தை திருப்புறீங்க? என்னை நல்லா பாருங்க” என ஆத்திரத்துடன் சொல்லிக்கொண்டே ஜெயதேவ் தெய்வாவின் அருகே சென்றான் சுரேன்.
மதுதேவா, இருநாட்களாய் ஹாலில் இருந்த புகைப்படத்தில் சுரேனின் புன்னகையை மட்டுமே எத்தனை முறை ரசித்து பார்த்திருப்பாள் என கணக்கே இல்லை. கண்கள் சிரிக்கும் அவனது வசீகர புன்னகை அவள் மனக்கண்ணில் நீங்கா ஓவியம் போல நிலைத்திருக்க, அவன் புன்னகையை நேரில் காண காத்திருந்தவள், இந்த அதிர்ச்சியை அவள் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
அவன் முகத்தை கண்ட பிறகு, மற்றவரின் சீற்ற நரம்புகள் தீங்கங்குகளில் தெளித்த நீர்த்துளி போல சட்டென அடங்கித்தான் போயின.
“ஏன் யாரும் பேச மாட்டேங்குறீங்க? எம்புள்ள என்ன செஞ்சான்னு கேட்டீங்களே? இப்ப கேளுங்க உங்க பையன்க்கிட்ட! எதுக்குடா இப்படி செஞ்சன்னு?” என சுரேன், தெய்வா, ஜெயதேவை பார்த்து சப்தமிட, கோகுலுக்கு சட்டென உணர்வு வந்ததை போல எதையோ சொல்ல ‘நா’ பரபரக்க, அதை உணர்ந்தவன் போல அவன் கரத்தை அழுத்திப்பிடித்து ‘மறுப்பாக’ தலையசைத்தான் ஆதி.
கோகுலின் கண்கள், “ஏன்டா?” என கெஞ்ச, மீண்டும் அதே மறுப்பு ஆதியிடம் இருந்து.
தெய்வா, “உனக்கு எப்படிப்பா இப்படி ஆச்சு? என் பையன் என்ன செஞ்சான்னு சொல்ற?” இன்னமும் அவருக்கு ஆதி மீது குற்றம் இருக்கும் என எண்ண முடியவில்லை.
சுரேன், “இவ்வளோ நடந்தும் வாயை திறக்காம நிக்குறானே உங்க பையன்! அவன்கிட்டயே கேட்கலாம்ல?” என சொல்ல, “சுரேன்…!! கொஞ்சம் மரியாதை குடு! அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை” என அறிவுறுத்த, சுரேனின் கையருகே இருந்த பூச்சாடி சிதறிப்போய் கீழே விழுந்தது அவனது ஆத்திரத்தால்.
“நான் இவனால என் வாழ்க்கையே போச்சுன்னு சொல்லிட்டு இருக்கேன்! அது தெரிஞ்சும் இவனை இன்னமும் ‘மாப்பிள்ளை’ன்னு எப்படிம்மா சொல்றீங்க?” என லட்சுமியை சுரேன் முறைத்துக்கொண்டு நிற்க, சிலையென நின்ற ஆதியை உலுக்கினார் ஜெயதேவ்.
“வாயை திறந்து பேசேன்டா! என்னதான் நடந்துச்சு? உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல தானே?”
சுரேன், “ஓ! இல்லன்னு வேற சொல்லுவானா இவன்? இவன் ‘யூஜி’ படிச்சப்போ கோயம்புத்தூருக்கு வரலன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்!?” என்றான் சவால் போல.
தன்யா குழப்பமாய், “ஆனா, ஆதி மகாராஷ்டிரால தான் படிச்சாங்க அண்ணா!” ஒருவேளை சுரேன் தவறாய் குற்றம் சாட்டுகிறானோ என்ற எண்ணத்தில் அவள் சொல்ல,
“நடந்தது ‘நேஷனல் ஸ்போர்ட்ஸ் மீட்’. எல்லா ஸ்டேட்ல இருந்தும் ஆளுங்க வந்துருந்தாங்க” என பொறுமையை இழுத்துப்பிடித்து விளக்கினான் சுரேன்.
சங்கடமான சூழலில் சிக்கிக்கொண்டு எல்லோரும் தவிக்க, அவர்களை வெறுப்புடன் பார்த்த சுரேன், “வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தேன்! வெளில மீண்டு வரதுக்கே எத்….தனை வருஷம் ஆச்சு! என் முகத்தை நான் கண்ணாடில பார்க்குறதையே விட்டுட்டேனே! எனக்கு பொண்ணு குடுக்குறேன்னு போட்டிப்போட்டுக்கிட்டு இருந்தவங்கல்லாம் என் முகத்தை பார்த்து, ‘ச்சீ’ன்னு சொல்லிட்டு போனாங்க! இதோ இதே இடத்துல தான் நடந்துச்சு!!!” என்றான் ஹாலில் தரையிலேயே மடிந்து அமர்ந்து.
“என்னடா கண்ணா?” மகன் தவிப்பதை காண சகிக்காது லட்சுமி ஓடிப்போய் அவனை மடித்தாங்க, ஆதியை கைகாட்டிய சுரேன், “என்னை இவ்வளோ கஷ்டப்பட வச்சவன் இவன்தான்னு நான் சொல்றேன்! ‘ஏன்டா இப்படி செஞ்ச?’ன்னு அவனை ஒரு வார்த்தை யாரும் கேட்கல! இன்னமும் என்னைத்தானே சமாளிக்க பார்க்குறீங்க?” என்றான் கலங்கிப்போய்.
[the_ad id=”6605″]
தன்யா முற்றிலுமாய் சோர்ந்துப்போனாள். ஆதியின் மீது தனிப்பட்ட கோபமிருந்தாலும், எப்படி அவனை விட்டுத்தர இயலும்? அதிலும் உற்ற தோழன் போன்ற அண்ணனின் இத்தனை ஆண்டு வருத்தத்துக்கு ஆதிதான் காரணம் எனும்போது, அவன்மீது அதிகரிக்க வேண்டிய அவளது கோவம், ஏனோ வழிமாறி ‘அது நீயாய் இல்லாமலிருந்திருக்க கூடாதா?’ என்ற ‘ஆதங்க’ பாதையில் சென்றது.
கோகுல், ‘ம்ச்! டேய்!’ என்றான் ஆதியிடம். அவனை வெறுமையாய் ஒரு பார்வை பார்த்த ஆதி, மீண்டும் சிலையென நின்றான்.
மடிந்து அமர்ந்து கண்ணீர் சிந்த புலம்பிக்கொண்டிருந்த சுரேன், “எத்தனை அவமானம், கேலிப்பார்வை… நல்லா பழகுனவனே பரிதாபமா வந்து பேசும்போது அப்படியே எங்கயாவது யாருமில்லாத இடத்துக்கு போயிடலாமான்னு இருக்கும் ம்மா! தன்யா மட்டும் அன்னைக்கு எனக்கு ஆதரவா பேசி இருக்கலன்னா நான் இதுல இருந்து எப்போ மீண்டுருப்பேன்னே எனக்கு தெரியாது!” என சொல்ல,
தன்யாவை அப்படி பேச வைத்ததே ஆதி தான் என்பதை சுரேன் அறிந்திருக்க வாய்ப்பில்லை!
கண்களை அழுந்த துடைத்தவன், திடமான ஒரு மூச்சோடு நிமிர்ந்து ஆதியை பார்த்து, “அன்னைக்கு கிரிக்கெட்ல என்னை தோற்க்கடிக்கனும்ன்னு நீ இப்படி செஞ்ச! நீ நினைச்ச மாதிரியே நான் அதுல தோத்துப்போய்ட்டேன்… ஆனா வாழ்க்கைல?! கண்டிப்பா உன்னை நான் ஜெயிக்க விட மாட்டேன்! என் தங்கச்சியை நீ கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறது என்னைக்கும் நடக்காது!” என்றான் ஆவேசம் பொங்க.
அவன் பேசிமுடித்த மறுநொடி, வேகமாய் மறுமொழி பேச வந்த ஜெயதேவை அமட்டி, “தப்பு தான்! நான் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்ல மாட்டேன்! தெரிஞ்சே, உன்னை காயப்படுத்தனும்ன்னு தான் செஞ்சேன்! ஆனா, அதனால ‘லைப்லாங்’ நீ ‘அஃப்பெக்ட்’ ஆவன்னு நான் சத்தியமா நினைக்கல!” நேரிடையாய் சுரேனிடம் பேசிய ஆதி, அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்து,
“இத்தனை வருஷமா கேட்க நினைச்சது! இப்போ மனசார உன்கிட்ட கேட்குறேன்! என்னை மன்னிச்சுடு! ப்ளீஸ்!!!” என்றுவிட்டு,
“என் மன்னிப்பு உன்னோட வலியையோ, குறையையோ கொஞ்சமும் போக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்! ஆனா, ‘மன்னிப்பை’ தவிர, உன்னை ஆறுதல்ப்படுத்த வேற என்ன செய்ய முடியும்ன்னு எனக்கு தெரியல!” என்றான் ஆதி.
ஆதியை தீர்க்கமாய் பார்த்த சுரேன், “நான் கேட்குறதை நீ செஞ்சாலே போதும்! அது எனக்கு சந்தோசத்தை குடுக்கும்” என சொல்ல, அவன் என்ன சொல்லுவான்’ என தெரிந்தும், “சொல்லு.. நான் செய்றேன்” என்றான் ஆதி!
சுரேன், “இந்த நிமிஷம் என் வீட்டை விட்டு வெளில போ! உன் முகத்தை இனி என் வாழ்க்கைல நான் திரும்ப பார்க்கக்கூடாது!!” என்றான் வெகுதிடமாய்.
ராஜகோபால், “சுரேன்? என்ன பேசுற?”
லட்சுமி, “உன் தங்கச்சி வாழ்க்கைடா இது!” என சொல்ல, சுரேனின் பார்வை ஆதியின் முகத்தை விட்டு அகலவில்லை.
சுரேனின் வலி நிறைந்த விழிகளை கண்ட ஆதி முடிவுடன், “உன் விருப்பம் சுரேன்!” என்றவன், எழுந்து, “போலாம்! வாங்க” என்றான் பொதுவாய்.
சொன்னவன் திரும்பியும் பாராது வெளிநோக்கி நடக்க, கோகுல் அவனை பின்த்தொடர, ஜெயதேவும் லட்சுமியும் கலங்கிய நெஞ்சோடும், விழிகளோடும் ராஜகோபால், லட்சுமியை பார்த்துக்கொண்டு ஆதியின் பின்னே செல்ல,
“அவன் சின்ன பையன்டா, ஏதோ விவரம் இல்லாம பேசிட்டான்!” என சமாதானம் சொன்னபடி அவர்கள் பின்னோடு ஓடினார் ராஜகோபால்.
கணவரை பின்பற்றி லட்சுமியும் செல்ல, தன்யாவின் பார்வையும் கால்களும் தன்னைப்போல ஆதியை தொடர்ந்தது.
ஹாலில் அமர்ந்திருந்த சுரேன், இறுதியாய் கசிந்த இருதுளி கண்ணீரை முகத்தோடு அழுந்த துடைத்துவிட்டு விழிகளை திறக்க, அவன் முன்னே ஈரம் தோய்ந்த முகத்துடன், நிற்காது வழிந்த கண்ணீருடன், மடிந்து அமர்ந்திருந்தாள் மதுதேவா.
தன்னியல்பாய் சுரேனின் கரங்கள் அவன் கண்களை மறைத்துக்கொள்ள, அவன் கரத்தை மெல்ல விலக்கிவிட்ட மது, அவன் விழிகளையே இமைக்காது நோக்கினாள்.
அவள் பார்வையில் எதையோ உணர்த்த முயல்கிறால் என அவனுக்கு புரிந்தது. ஆனால், அது என்ன என்பது தான் அவனது புத்திக்கு எட்டவில்லை.
தன்னை பார்ப்பவளின் பார்வையில் இரக்கம், பரிதாபம், ஏளனம் என இதுவரை அவன் கடந்து வந்த பார்வைகள் எதுவுமின்றி புதியதாய் ஒரு பரிமாணத்தை காண, விக்கித்துப்போனான் சுரேன்.
அவன் முகத்தில் இருந்து விலக்கிய அவன் கரத்தை, விடாது பிடித்திருந்த மது, அக்கரத்தில் அவனது ‘கூலர்சை’ வைத்தாள். அவள் பார்வை மட்டும் அவனை விட்டு துளியும் அகலவில்லை. கண்களில் இருந்து வடிந்துக்கொண்டிருந்த நீரும் வற்றவில்லை.
“இந்த இரண்டு நாளா உங்களை பார்க்கனும்ன்னு ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணேன்! அது ஏன்னு தெரியல! இப்போ உங்களை பார்த்ததுக்கு பிறகு, உங்களை விட்டுட்டு போக மனசே இல்ல எனக்கு! அதுவும் ஏன்னு தெரியல!” என்ற மது,
“உங்களுக்கு என் அண்ணன் மேல கோவம் இருக்குன்னு புரியுது! ஆனா, அது என் மனசுக்கு புரியல!
[the_ad id=”6605″]
நான் உங்கக்கூடவே இருக்குறது’ நடக்காதுன்னு என் புத்தி சொல்லுது! ஆனா, அதையும் என் மனசு புரிஞ்சுக்க மாட்டேங்குது!!”
“உங்களை பார்த்ததும் இப்படி எல்லாம் பேசுவேன்னு நான் கற்பனைல கூட நினைக்கல, ஆனா, நடக்குதே!!” என மது பேச, திகைத்துப்போய் பேச வந்த சுரேனை தடுத்து,
“உங்கமேல இரக்கமோ, பரிதாபமோ கொஞ்சம்கூட வரலை எனக்கு! அண்ட் நான் சின்ன பொண்ணும் இல்ல!” என்றாள் அவனை பேச விடாது!
“நான் எதையும் யோசிச்சோ, திட்டம் போட்டோ பேசல! மனசுல தோணினதை எல்லாம் அப்படியே கொட்டிட்டேன்! நீங்க என்னைப்பத்தி என்ன நினைக்குறீங்கன்னு கூட எனக்கு கவலை இல்லை! அட்லீஸ்ட் நான் சொல்ல வரது உங்களுக்கு புரிஞ்சுதான்னு கூட எனக்கு தெரியல! என் மனசுல இருக்குறதை கொட்டிட்டேங்குற நிம்மதில நான் இப்ப இங்கிருந்து கிளம்புறேன்!” என்றவள் சட்டென எழுந்து வேகமாய் சென்றுவிட்டாள்.
அவள் சென்றுவிட்ட பிறகும், அப்படியே அமர்ந்திருந்த சுரேன், ‘இப்ப அவ என்ன பேசிட்டு போறா? என்னை ‘லவ்’ பண்றேன்னு சொன்னாளா? இல்ல, நான் தப்பா புரிஞ்சுக்குறேனா?’ என குழம்பிய குட்டையாய் சமைந்துப்போயிருந்தான்.
“மது… மதூ….!!!!” தன் தோள்களில் படிந்த கரத்தின் அழுத்தத்தில் தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் மதுதேவா.
அவள் அருகே அயர்வுடன் நின்றிருந்தான் கோகுல்.
“என்ன அண்ணா?”
“எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலைல உட்காந்து நடந்ததையே நினைச்சுட்டு இருந்தா எப்டிம்மா? நீயாவது அப்பா அம்மாவை சாப்பிட வை!” என பார்சலை கொடுக்க, அரை மனதுடன் அதை வாங்கிக்கொண்டு நகர்ந்தாள் மது.