புதிதாய் மலர்ந்த காதல்
அத்தியாயம் 1
நைட் ஷிப்ட் முடிந்து காலையில் எட்டு மணிக்கு, வீட்டுக்கு வந்தான் ஆதித்யா. டெல்லியில் உள்ள மருத்துவ மனையில் டாக்டர் பதவியில் இருப்பவன் மற்றும் கேன்சர் ஸ்பெசலிஸ்ட். அங்கேயே அதற்கான ரிசர்ச்சும் செய்து கொண்டிருக்கிறான்.
தன்னுடைய வீட்டு அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தான். கதவை திறக்க தான் ஒரு ஆளையும் காண வில்லை.
“என்ன ஆச்சு இந்த அம்மாக்கு? எப்பவும் நான் எப்ப வருவேன்னு காத்துட்டு இருப்பா. இன்னைக்கு பெல் அடிச்சும் திறக்கலை?”, என்று நினைத்து கொண்டு மறுபடியும் அழுத்தினான்.
அப்போதும், திறக்கவில்லை என்றவுடன் பயம் தொற்றி கொண்டது.
“ஒரு வாரமா கல்யாணம் செஞ்சிக்க சொல்லி தொல்லை செஞ்சிட்டு இருந்தா. அந்த கோபத்தில் நேத்து நைட் கத்திட்டு போனேன். அதுக்கு பழி வாங்குறாளோ?”, என்று நினைத்து கொண்டு, தன்னுடைய பர்சில் இருந்த மற்றொரு சாவியை எடுத்து கதவை திறந்தான்.
“என்ன டா இது? இப்படி அமைதியா இருக்கு வீடு. கோபத்துல இருந்தா கூட, பாத்திரம் உடையும். இன்னைக்கு அந்த சத்தத்தையும் காணும்”, என்று நினைத்து கொண்டு அடி மேல் அடி எடுத்து வைத்து உள்ளே சென்றான் ஆதி.
எங்கேயும் அம்மாவை காணவில்லை என்பதால், அம்மாவின் அறைக்கு சென்றான். அங்கே அவன் அம்மா சகுந்தலா படுத்திருந்தாள். “அப்பாடி படுத்து தான் இருக்கா. ஆனா, ஏன் இந்த நேரத்தில் படுத்துருக்கா? ஐயோ, உடம்பு சரி இல்லையோ?”, என்று நினைத்து கொண்டு “அம்மா”, என்று அழைத்து கொண்டே அருகில் ஓடினான்.
மெதுவாக தலையை தூக்கி, அவனை பார்த்தாள். “அப்பாடி, ஒன்னும் ஆகலை. சகு மேடம் கோபத்தில் தான் இருக்காங்க”, என்று நினைத்து கொண்டு, “கதவை திறக்க கூட மாட்டியோ? வர வர உன் அட்டகாசம் அதிகமா ஆகிட்டு போகுது சகு”, என்று சொல்லி கொண்டே தன் அறைக்கு சென்று குளித்தான்.
குளித்து முடித்து வந்ததும், எப்போதும் சுடச்சுட சாப்பாடு தரும் சகுந்தலா, இன்று இன்னும் அதே இடத்தில் தான் படுத்திருந்தாள்.
“படுத்துறாளே!”, என்று நினைத்து கொண்டு, “சரி அவளுக்கும் சேத்து காபி போட்டுட்டு போய், சமாதான படுத்துவோம்”, என்று நினைத்து கொண்டு கிச்சனுக்கு சென்றான்.
மெதுவாக பூனை போல் தலையை மட்டும் நீட்டி, “அவன் என்ன செய்றான்?”, என்று பார்த்தாள் சகுந்தலா. அவன் கிச்சனில் நிற்பது தெரிந்து, படாரென்று ஓடி போய், மறுபடியும் அவள் படுத்திருந்த இடத்திலே போய் படுத்து விட்டாள்.
பிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து சூடு செய்தவன், சீனி டப்பாவை எடுத்தான். அடுத்த நொடி “ஐயையோ!”, என்று அலறி விட்டு, அதை எடுத்த இடத்திலே வைத்து விட்டு சகுந்தலா அறைக்கு சென்றான். அங்கு அதே போல் படுத்திருந்தாள் சகுந்தலா.
“ஏம்மா, இன்னைக்கு நீ என்ன செஞ்ச? என்ன செஞ்சு வச்சிருக்க? டப்பால இருந்த பாதி சீனி எங்க?”, என்று கேட்டான் ஆதி.
அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு, அந்த புறம் திரும்பி படுத்து கொண்டாள்.
“எம்மா, சொல்லு ஒழுங்கா! சீனி எங்க?”
“அந்த வெளங்காம போற, எடு பட்ட பயலை பத்தி, எதுக்கு என்கிட்ட கேக்குற?”, என்று கேட்டாள் சகுந்தலா.
தன் நண்பன் சீனியை தன் அம்மா புகழ்வதை பார்த்து தலையில் அடித்து விட்டு, “அவனை கேக்கலை. டப்பால இருந்த சீனி எங்க? அதை என்ன செஞ்ச?”, என்று கேட்டான் ஆதித்யா.
“இல்லை டா ஆதி. காபி போட்டேன்னா, இனிப்பு கம்மியா இருந்தது. இன்னும் கொஞ்சம் போட்டேன். அப்பவும் பத்தலையா? உடனே மறுபடியும் போட்டுட்டே இருந்தேன். அப்புறம் தான், இனிப்பா இருந்தது”, என்று பாவமாக சொன்னாள் சகுந்தலா.
“அட பாவி அம்மா, அப்ப அரை டப்பா சீனியை சாப்டுட்டியா? ஒழுங்கா ஹாஸ்பிட்டல் வா. உனக்கு ஏற்கனவே சுகர் இருக்கு. உன்னை எவன் சீனி சாப்பிட சொன்னான். கிளம்பு”, என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று சட்டையை போட்டு விட்டு வந்தான்.
சகுந்தலா அதே பொசிசனில் தான் படுத்திருந்தாள்.
“அம்மா படுத்தாத மா, கிளம்பு மா!”, என்று கெஞ்சினான்.
“நான் வரலை. நீ சத்தியம் பண்ணு, கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்னு. அப்ப தான் வருவேன்”
“அம்மா, இது உனக்கே ஓவரா தெரியலையா மா? உன் அண்ணன் பொண்ணை கல்யாணம் செஞ்சா தான் ஹாஸ்பிட்டலுக்கு வருவேன்னு சொல்லி மிரட்டுற? ப்ளீஸ் மா வா”, என்று கெஞ்சினான் ஆதித்யா.
“வர மாட்டேன், வர மாட்டேன். நீ என் அண்ணன் பொண்ணை கல்யாணம் செய்வேன்னு சத்தியம் பண்ணு. அப்ப தான், வருவேன்”, என்று கட்டிலில் சாய்ந்து படுத்து கொண்டு, அவனுடன் வாதாடி கொண்டிருந்தாள் சகுந்தலா.
“சுகர் கூடிரும் மா. இப்படியே விட்டா குறைக்கிறது கஷ்டம். நீ வா மா. சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காத, வா”
“அரை டப்பா சக்கரையை தின்னுருக்கேன், சுகர் கூடாம என்ன செய்யும்? வர மாட்டேன், நீ உன் வேலையை பாரு போடா”, என்று அடம் செய்தாள் சகுந்தலா.
“ஏன் மா இப்படி செய்ற?”
“நீ ஏன் டா இப்படி செய்ற?”
“என்ன விளையாடுறியா மா? நான் என்ன செஞ்சேன்?”
“என்ன செய்யலை? என் அண்ணன் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோன்னு சொல்றேன், ரொம்ப தான் முறுக்கிக்கிற”
“எம்மா அவ, பொண்ணு இல்லை மா, சின்டக்ஸ் டேங்க். சரியான தர்பூசணி, அவளை போய் கல்யாணம் செய்ய சொல்ற?”
“நீ அவளை சின்ன வயசில் பாத்தது டா, இப்ப என்னமா இருக்கா தெரியுமா? நீ பாத்தேன்னா, அப்படியே மயங்கி விழுந்துருவ”
“ஆமா, ஆமா, மயங்கி விழுந்துட்டாலும். உங்க அண்ணனுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லிட்டு, அந்த ஆளை பாக்க தான மா ஊருக்கு போன? அங்க போய் உன்னை எவன், என் கல்யாணத்தை பத்தி பேச சொன்னது?”
“அண்ணனுக்கு முடியலை டா! சீக்கிரம் அவளை கரையேத்தணும்னு நினைக்கிறாரு அதான்”
“அவளை கரை ஏத்த முடியாது. நாடு தான் கடத்தணும். உன்னை ஊருக்கு அனுப்புனதே தப்பா போச்சு மா. கூடவே நானும் வந்துருக்கணும். அப்படி வந்திருந்தா, உன்னை இப்படி பிரைன் வாஷ் பண்ணிருக்க மாட்டாங்க”
“நீ வந்துருந்தா, கல்யாணத்தையே முடிச்சிட்டு, அவளையும் கையோட கூட்டிட்டு வந்துருப்பேன் டா ஆதி”
“எதுக்கு மா, எனக்கு பொங்கல் வைக்க நினைக்கிற? என்னை விட்டுரு”
“முடியாது டா, எனக்கு அவ தான் மருமக, நான் பிக்ஸ் பண்ணிட்டேன்”
“அது நீ பிக்ஸ் பண்ண கூடாது மா. நான் தான் பண்ணனும்”
“என்னங்க, உங்க பையன் பேசுறதை கேட்டீங்களா? அவன் கல்யாணத்தை கூட, நானா முடிவு செய்ய கூடாதாம். நீங்க உயிரோட இருந்திருந்தா, இவன் என்னை இப்படி எல்லாம் பேசுவானா?”, என்று தலைக்கு மேலே பார்த்து பேசி விட்டு, அவனை அடிக்கண்ணால் பார்த்தாள் சகுந்தலா.
“ஹலோ மம்மி, இந்த சீன் உனக்கு செட்டே ஆகல! அப்பா இப்ப உயிரோட இருந்திருந்தா, அவரை நீ பேசியே மண்டை ஆட்ட வச்சிருப்ப. அவரே, உன் தொல்லை தாங்க முடியாம தான் போய் சேந்துட்டார். இங்க பாரு சகு, இப்படி எல்லாம் காமெடி பண்ணி, என்னை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க முடியாது. ஒழுங்கா எந்திச்சு ஹாஸ்பிட்டலுக்கு வா”
“இப்ப முடிவா, என்ன தான் டா சொல்ற?”
“முடியாதுன்னு சொல்றேன்”
“அவங்களுக்கு நான் வாக்கு கொடுத்துட்டேன் டா”
“உன் வாக்கை கொண்டு போய் குப்பையில் போடு. சொந்தத்துக்குள்ள கல்யாணம் செய்ய கூடாது மா”
“அவங்க சொந்த அண்ணன் இல்லை டா. பெரியப்பா மகன் தான்”
“எந்த பக்கம் பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்காத மா. இப்ப நீ ஹாஸ்பிட்டலுக்கு வர”
“வர முடியாது”
“அப்ப சரி, நீ இரு. நான் போய் என் பிரண்டை அனுப்புறேன்”
“எதுக்கு நீயும் டாக்டர் தான? நீயே வைத்தியம் பாக்காம, எதுக்கு அந்த வெங்காயம் சீனியை அனுப்புற?”
“அவன் தான் மா, ஜெனரல் ஸ்பெசலிஸ்ட்”
“நீ அவனை அனுப்பு, அந்த கரண்டி வாயனை ஓட ஓட அடிக்கிறேன்”, என்று மிரட்டினாள் சகுந்தலா.
“ஏய், செல்ல குட்டி.. நீ ஏன் மா இப்படி பண்ற? பாரு கால் எல்லாம் வீங்கிருக்கு. வா மா ப்ளீஸ். எனக்கு உன்னை விட்டா யாரு மா இருக்கா?”, என்று அழுவது போல பேசி விட்டு சகுந்தலா முகத்தை பார்த்தான் ஆதி.
“நீயும் பாசமா சீன் போடாத டா, என் ஆக்டிங்கை விட உன் ஆக்டிங் கேவலமா இருக்கு”
“மொக்கை போடாம, ஹாஸ்பிட்டலுக்கு வா மா”
“முடியாது, டா. ஏற்கனவே உன்னை பெத்துட்டு நான் வயித்தில் நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கேன். உன்னை ஒரு பொண்ணு கையில் பிடிச்சு கொடுத்தா தான், எனக்கு நிம்மதி”
“என்னது நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கியா? இந்த டயலாக் பொண்ணை பெத்தவங்க தான் மா சொல்லணும். நீ எதுக்கு சொல்ற?”
“இதை மட்டும் வக்கணையா பேசு, போடா. தினமும் எனக்கு பக்கு பக்குனு இருக்கு. அடிக்கடி பாரின் போறேன்னு சொல்லிட்டு போற. அங்க இருந்து எவளை கூட்டிட்டு வருவியோன்னு பயமா இருக்கு. ஒரு வேளை, இப்பவே அங்க உனக்கு பிள்ளைங்க இருக்கோ என்னவோ?”
“அட பாவி அம்மா? உலகத்துல எல்லா அம்மாவும், என் பிள்ளை தங்கம் வைரம். அவன் எந்த பொண்ணையும் ஏறெடுத்து கூட பாக்க மாட்டான்னு சொல்லுவாங்க. ஆனா, நீ என்னை பத்தி எவ்வளவு உயர்வா சொல்ற? நீயல்லவோ புதுமை பெண்? இல்லை, இல்லை புதுமை தாய்”
அவனை ஒரு பார்வை பார்த்த சகுந்தலா, “இவன் வழிக்கு வர மாட்டான்”, என்று நினைத்து கொண்டு “ஆ! மயக்கம் வருதே”, என்று அடுத்த சீனை போட்டாள்.
நிஜமாவே பதறி அவள் அருகே போன ஆதி, “அம்மா அம்மா, என்ன மா செய்யுது?”, என்று கண் கலங்கினான்.
“மயக்கமா வருது டா”
“இதுக்கு தான் சொன்னேன், சீக்கிரம் போவோம்னு. வா போகலாம்”
“ஆனா, நீ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டிக்கியே?”
“இப்ப என்ன கல்யாணம் தான பண்ணனும்? எந்த பரங்கி காயை வேணும்னாலும், என் தலையில் கட்டி வை. ஆனா, ஹாஸ்பிட்டலுக்கு வா”
“அப்ப, சத்தியம் பண்ணு டா!”
“எந்த நேரத்தில், எதை கேக்குற மா?”, என்று அலுத்து கொண்டாலும் “சத்தியமா, நீ சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன். இது சத்தியம்”, என்று சொல்லி விட்டு, அவள் கையை பிடித்து எழுப்பினான் ஆதி.
துள்ளி குதித்து எழுந்த சகுந்தலா, “அது தான் சத்தியம் பண்ணிட்டியே! மெதுவாவே ஹாஸ்பிட்டல் போகலாம் டா. அப்புறம், வரும் போது பிரியாணி வாங்கி தா என்ன? சந்தோசத்தை செலிப்ரேட் பண்ணனும்”, என்று நடந்தாள் சகுந்தலா.
“ஆ”, என்று வாயை பிளந்தான் ஆதி.
“வர வர நீ பண்றது சரியே இல்லை மா”
“சரி சரி பேசுனது போதும். நிஜமாவே மயக்கம் வருது டா, ஹாஸ்பிட்டல் போகலாம். ஆனா, அந்த சீனி கிட்ட மட்டும் கூட்டிட்டு போகாத டா! பேசியே கொன்னுருவான்”
“சரி மா வா”, என்று அழைத்து கொண்டு போனான் ஆதி.
காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த ஆதி, அங்கே இருந்த டாக்டர் நித்யாவிடம் சகுந்தலாவை அழைத்து சென்றான்.
“என்ன ஆச்சு டாக்டர் அம்மாவுக்கு?”, என்று கேட்டாள் நித்யா.
“சுகர் கூடிருக்கு, வேற என்ன? நீங்க பாருங்க டாக்டர், நான் வெளியே இருக்கேன்”, என்றான் ஆதி.
அப்போது புயல் போல, அந்த அறைக்குள் நுழைந்தான் சீனி என்ற சீனிவாசன்.
“ஐயோ வந்துருச்சு, அடுத்த இம்சை. தயவு செஞ்சு ரெண்டு தடியன்களையும், வெளிய துரத்திரு மா நித்யா”, என்றாள் சகுந்தலா.
“ஐயையோ என்ன மா ஆச்சு, உங்களுக்கு? நான் படிச்சு படிச்சு இவன் கிட்ட சொன்னேன். அம்மாவை நல்லா பாத்துக்கோ பாத்துக்கோன்னு, கேட்டானா? பாத்தீங்களா இப்படி ஆகிட்டு. வாங்க மா, நான் உங்களுக்கு ஊசி போடுறேன்”, என்று கத்தி கொண்டு அலப்பறையோட உள்ளே வந்தான் சீனி.
“ஓவரா பாசத்தை பிழியாத டா சீனி. நம்ம ரெண்டு பேரையும் தான் அவ வெளிய போக சொல்லிட்டு இருக்கா”, என்றான் ஆதி.
“நீ சும்மா இரு ஆதி. உனக்கு ஒன்னும் தெரியாது. அம்மா பச்சை மண்ணு. அங்க ஆதி டாக்டர் அம்மாவை கூட்டிட்டு வந்துருக்காருன்னு சொன்ன உடனே, பதறி அடிச்சு ஓடி வந்தேன். அம்மா வாங்க மா, நான் உங்களுக்கு டிரீட்மென்ட் பாக்குறேன். இந்த நித்யா ஒழுங்காவே பாக்க மாட்டா”, என்றான் சீனி. நித்யா அவனை முறைத்தாள்.
சீனி அருகில் வந்தாள் சகுந்தலா. “என்ன இந்த அம்மா இவன் கிட்ட காட்ட மாட்டேன்னு சொல்லிட்டு, இப்ப அவனை நோக்கி வருதே!”, என்று பார்த்தான் ஆதி.
சீனி அருகில் வந்த சகுந்தலா, “உலகத்தில் எங்க எங்கயோ சுனாமி வருது, அது உன்னை ஏண்டா தூக்கலை. பதறி அடிச்சிட்டு வந்தியே, எங்கயாவது முட்டி மோதிருக்க கூடாது. வந்துட்டான் வாய் பேச. ஆளையும் மூஞ்சியையும் பாரு. கரண்டி வாயன். இப்ப ரெண்டு கேனையனும் வெளிய போகல, உங்க ரெண்டு பேர் மேலயும் நானே ஊசியை எடுத்து சொருகிருவேன் போடா. நீ வா மா நித்யா”, என்று சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தாள்.
“என்ன டா ஆதி, அம்மா இப்படி சொல்றாங்க?”, என்று கேட்டான் சீனி.
“என்ன நொப்பிடி சொல்றாங்க? ஆள பாரு. அது ஏற்கனவே நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் செய்ய மாட்டிக்கோம்னு கடுப்புல இருக்கு. இதுல நீ வேற, அது காதில் ரத்தம் வர மாதிரியே கத்துற?”
“நான் பாசமா தான டா விசாரிச்சேன். பயந்துட்டேன் டா! அம்மாக்கு எதோ ஆகிறும்னு”