அவன் தோளில் கை போட்ட ஆதி, “டேய் சீனி, நீ அம்மாவை ஏய் ராட்சசின்னு வேணா கூப்பிடு. சந்தோசமா உன்கிட்ட சிரிச்சு பேசுவா. ஆனா, நீ அம்மா அம்மான்னு பாசத்தை பொழிஞ்ச, உன்னை அடி பிச்சிருவா. நீ வா நித்யா பாத்துக்குவா. அப்புறம், கவலை படாதே! நமக்கு கல்யாணம் ஆகி நம்ம பிள்ளைங்களை எல்லாம் பாக்குற வரைக்கும், அம்மாக்கு ஒன்னும் ஆகாது”, என்றான்.
“போடா ஆதி, நான் வாங்க போங்கன்னு தான் சொல்லுவேன்”
“சரி சொல்லிகோ. எனக்கு என்ன பிரச்சனை. நீ தான் அவ கிட்ட வாங்கி கட்டுவ. எங்க அப்பா ரொம்ப சீரியஸ் டைப் டா. அவர் சிரிக்கவே மாட்டாரு. அம்மாவையும், ரொம்ப சிரிக்க விட மாட்டார். அது மட்டும் இல்லாம தினமும் குடிச்சிட்டு வந்து அடிப்பாராம். ரொம்ப கொடுமை படுத்திருக்கார்.
அப்புறம், குடிச்சு குடிச்சு அவர் குடல் வெந்து படுத்த படுக்கை ஆகிட்டார். அதில் இருந்தே எங்க அம்மா சிரிச்சிட்டே சந்தோசமா ஜாலியா இருக்கணும்னு நினைச்சு, அப்படி இருக்கா. அவளுக்கு சிரிச்சா ரொம்ப பிடிக்கும். எங்க அப்பா அப்படி படுத்த படுக்கையில், கிடக்கும் போதே அவரை செமையா கலாய்ப்பா. ஏன்ன்னு கேட்டா, இத்தனை நாள் என்னை இவன் சிரிக்க வச்சானான்னு கேப்பா. அவரும் போய் சேந்துட்டாரு. இப்ப நீ அழுதேன்னா, அழாத டா எதுக்கு அழறனு கேக்க மாட்டா. இப்படி அழுறதுக்கு, நீ செத்துருன்னு சொல்லுவா. இன்னொரு தடவை அவ கிட்ட சோகமா பேசாத!”
“நம்ம நாட்டில் நிறைய பொண்ணுங்க நிலைமை, அப்படி தான் டா ஆதி இருக்கு. ஆமா இப்ப என்ன உடம்புக்கு? என்ன பிரச்சனை டா ஆதி? நேத்து நல்லா தான இருந்தாங்க?”
“சொன்னேன்ல மச்சான், அந்த ட்ரம்மை என் தலையில் கட்டி வைக்க ட்ரை பன்றானு, அது தான் பிரச்சனை. மேடம், அரை டப்பா சீனியை தின்னுட்டு, சுகரை கூட்டி வச்சிருக்கு”
“இது என்ன டா, புது விதமான பிளாக்மெயிலா இருக்கு? நீயும் தான் ஓத்துக்கோயேன் டா. அம்மா சொன்னா கேக்க வேண்டியது தான?”
“வேற வழி சரினு சொல்லிட்டு தான், கூட்டிட்டு வந்தேன் டா!”
“ஹ்ம்ம் சரி டா!”
“அதெல்லாம் சரி, நீ எதுக்கு இப்படி ஓடி வந்துருக்க?”, என்று கேட்டான் ஆதி.
“அம்மாக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்ன உடனே, உயிரை கையில் பிடிச்சிட்டு வந்தேன் டா. ஆனா, இங்க வந்தா நல்லா என்னை கலாய்க்குது”
சீனியின் அம்மா, அப்பா இரண்டு வருடம் முன்பு தான் ஒரு விபத்தில் இருந்தார்கள். அப்போது, அவனை மாற்றியது சகுந்தலா தான். அப்போதில் இருந்து சகுந்தலாவுக்கு ஒன்று என்றால், சீனி பதறி விடுவான்.
அவனை பற்றி தெரியும் ஆதலால், “அதை கேக்கல டா சீனி. இது என்ன புது விதமான ட்ரெண்ட்ல, சூ போட்டுட்டு வந்துருக்கியே, அதை சொன்னேன்”, என்று சொல்லி அவன் காலை பாத்தான்.
“என்ன சொல்றான்?”, என்ற படியே குனிந்து பார்த்த சீனி தலையில் அடித்து கொண்டான். ஒரு காலில் செருப்பும், ஒரு காலில் சூவும் போட்டிருந்தான் சீனி.
“இப்ப தான் டா ஷிப்ட்க்கு வந்தேன். டிரஸ் மாத்தும் போது தான் அட்டண்டர் சொன்னானா! லூசு மாதிரி வந்துருக்கேன்”
“லூசு மாதிரி இல்லை, நீ லூசே தான் டா சீனி”
உள்ளே போன சகுந்தலாவுக்கு, ஊசி போட்டு விட்டு வெளியே அழைத்து வந்தாள் நித்யா.
“அங்க பாரு மா நித்யா, எப்படி காட்டான் மாதிரி ஒரு காலில் செருப்பும், ஒரு காலில் சூவும் போட்டுட்டு வந்து நிக்குது பாரு பக்கி”, என்றாள் சகுந்தலா.
வாயை பொத்தி சிரித்தாள் நித்யா. “ஆதி சார், அம்மாக்கு ஊசி போட்டுட்டேன். இனி அப்படி ஆகாம பாத்துக்கோங்க. எப்பவும் வாங்கி கொடுக்குற மாத்திரையை கொடுங்க. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் நித்யா.
“உங்களுக்கு சரி ஆகிருச்சா மா? எதுக்கு மா சீனியை எடுத்து சாப்பிடீங்க? உங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க என்ன ஆவோம்?”, என்று புலம்பினான் சீனி.
“நான் சொன்னேன்ல ஆதி, இவன் பேசியே சாகடிப்பான்னு. உனக்கு எல்லாம் உன்னை விட அதிகமா பேசுற பொண்டாட்டி தான் டா வருவா. சரி அதை விடு. நீ என்ன செய்ற? ரெண்டு நாள் கழிச்சு, தூத்துக்குடி போற மாதிரி மூணு பேருக்கும் பிளைட்ல டிக்கட் போடு. ஊருக்கு போகணும்”, என்றாள் சகுந்தலா.
“எதுக்கு மா டிக்கட்?”
“ஹ்ம்ம் ஊறுகாய் போட! எவன் டா இவன்? நம்ம ஆதி கல்யாணம் பண்ண சத்தியம் செஞ்சிட்டான். சூட்டோட சூடா போய், கல்யாணம் செஞ்சு வச்சிரலாம்”
“என்ன மா, பக்கத்துக்கு கடைல சூடா சம்சா சாப்பிட போற மாதிரியே சொல்றீங்க?”
“உனக்கு சீனினு பேர் வச்சதுக்கு, வாத்து மடையன்னு வச்சிருக்கலாம் டா”
“நீ சும்மா இரு சீனி. டிக்கட் எல்லாம் போட வேண்டாம்”, என்று இடையில் புகுந்து சொன்னான் ஆதி.
“எதுக்கு டா அப்படி சொல்ற?”, என்று கேட்டாள் சகுந்தலா.
“எதுக்கு நாம ஊருக்கு போகணும்?”
“நீ சத்தியம் செஞ்சியே டா ஆதி”
“சத்தியமா? நானா? எப்ப செஞ்சேன்? டேய் சீனி இந்த அம்மா என்ன சொல்றா? உனக்கு எதாவது புரியுதா? வீட்டுக்கு போனேன் டா, மயங்கி கிடந்தா. இங்க தூக்கிட்டு வந்தேன். இங்க வந்து சத்தியம் கல்யாணம்னு புலம்புறா!”, என்றான் ஆதி.
“உலக நடிப்பு டா சாமி”, என்று நினைத்து கொண்டு அமைதியாய் நின்றான் சீனி.
“நீ இப்படி எல்லாம் பிலிம் காட்டுவனு தெரியும் ராஜா, அதுக்கு தான், நீ என்கிட்ட பேசுனதை எல்லாம் இந்த போனில் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்”, என்றாள் சகுந்தலா.
“அம்மா உன்னையும் மிஞ்சிட்டாங்க டா”, என்று ஆதி காதில் சொன்னான் சீனி.
“என்னமோ எவிடென்ஸ் வச்சிருக்கிற மாதிரி சீன் போடுற? இதை வச்சு நீ என்ன செய்ய முடியும் மா?”, என்று கேட்டான் ஆதி.
“என்ன செய்ய முடியுமா? இப்பவே இந்த வீடியோவை, என்னோட பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் எல்லாத்துலயும் போட்டு, உன் மானத்தை வாங்கலை நான் சகுந்தலா இல்லை டா”
“அட பாவி அம்மா, என் வேலைக்கு உலை வச்சிராத! இப்ப என்ன மூணு பேருக்கும் ரெண்டு நாள் கழிச்சு டிக்கட் போடணும், அப்படி தான? போட்டுரு டா சீனி. நீ இப்ப வா”, என்று முன்னே நடந்தான் ஆதி.
“ஏம்மா, அவனுக்கு பிடிக்காத விசயத்தை செய்ய சொல்றீங்க?”, என்று கேட்டான் சீனி.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் அருகில் வந்த சகுந்தலா, “எங்க அண்ணனுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு டா”, என்றாள்
“இது எதுக்கு சொல்றீங்க?”
“புரியலையா? ஆதிக்கு ஒரு பொண்ணு. இன்னொரு பொண்ணு, உனக்கு பேசலாமான்னு யோசிக்கிறேன்”
“ஐயையோ வேண்டாம் மா, வேண்டாம் என்னை ஆள விடுங்க”
“அது. இனி வாயை திறந்த, அவனுக்கு முன்னாடி உனக்கு கல்யாணத்தை முடிச்சு வச்சிருவேன். மீதி டப்பா சீனி அப்படியே இருக்கு. சீனி. ஜாக்கிரதை! வீட்டுக்கு வரும் போது, ஜாங்கிரி வாங்கிட்டு வா டா, பை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“ஆதிக்கு பாத்த பொண்ணே டரம்னா, அவளுக்கு தங்கச்சி எப்படி இருப்பாளோ?”, என்று நினைத்து கொண்டு தன் வேலையை பாக்க சென்றான் சீனி.
காரில் போகும் போது, அமைதியாய் வந்தான் ஆதி.
“ஆதி கோபமா இருக்கியா?”, என்று கேட்டாள் சகுந்தலா.
“ஆமா இப்ப என்ன? சமாதான படுத்த போறியா மா?”
“நான் ஏன் சமாதான படுத்தணும்? வெட்டி வேலை எல்லாம் நான் செய்ய மாட்டேன். நீ கோபமாவே இரு டா. ஆனா, நீ கோபமா இருக்கேனு என்கிட்ட சொல்றதுக்கு, அடிக்கடி என்னை பார்த்து திரும்பாத! எனக்கு சிரிப்பா வருது”
“சும்மா இரு மா, என் வாழ்க்கையோட விளையாடுரல்ல? போ, உன் கூட சண்டை”
“ஏன் ஆதி, அந்த பொண்ணு எட்டாம் கிளாஸ் கூட தாண்டலை. அதனால உனக்கு பிடிக்கலையா?”
“என்னது எட்டாம் கிளாசே தாண்டலையா? என்ன மா சொல்ற? நான் ரிசர்ச் ஸ்காலர் மா. எனக்கு எட்டாம் கிளாஸ் கூட முடிக்காதவ பொண்டாட்டியா? என்னை பாத்தா உனக்கு பாவமா இல்லையா?”
“ஹ்ம்ம் உன்னை பாத்து பாவமா இல்லை டா. வீட்டுக்கு ஒருத்தர் படிக்கலைன்னா தப்பில்லை. அப்புறம் அவளை கல்யாணம் பண்ணி குடும்பம் தான நடத்த போற? பள்ளிக்கூடமா நடத்த போற?”
“ஹ்ம்ம் நீ முடிவு பண்ணிட்ட! இனி மாத்தவா முடியும்? அவ எப்படி இருப்பான்னு சொல்லு. அதையாவது கேட்டுக்குறேன்”
“முடி அருக்கானி சடை மாதிரி இருக்கும் டா. படிக்காதவன் படத்தில் தனுஷ் பொண்ணு பாக்க போவான்ல அவளை மாதிரி. பல்லு கொஞ்சம் வெளிய தள்ளிட்டு இருக்கும். மித்த படி அழகு தான் டா ஆதி”
“நீ அம்மா இல்லை மா, என் வாழ்க்கையை கெடுக்க வந்த சகுனி. பாரு மா என்னை? எப்படி ஹீரோ மாதிரி இருக்கேன்? எனக்கு போய் எப்படிம்மா, உனக்கு இப்படி பொண்ணு பாக்க மனசு வந்தது?”
“சும்மா சும்மா என்னை புகழாத ஆதி. எனக்கு பசிக்குது, அதோ அந்த ஹோட்டலில் இட்லி, பூரி வாங்கிட்டு வா”
“ஹ்ம்ம், என் தலையில் இடியை தூக்கி போட்டுட்டு, உனக்கு சாப்பாடு முக்கியம் தான்”, என்று சொல்லி கொண்டே காரை நிறுத்தி விட்டு இறங்கினான். “அப்புறம், வடையை மறந்துராத டா ஆதி. வடை முக்கியம்”, என்றாள் சகுந்தலா.
எல்லாத்தையும் வாங்கி கொண்டு வந்தவன், “இந்தா கொட்டிக்கோ”, என்று அவள் கையில் கொடுத்தான்.
வீட்டுக்கு போனவுடன், சகுந்தலாவுடன் சாப்பிட்டு விட்டு, அவனுடைய அறைக்குள் சென்று படுத்து விட்டான்.
மதியம் சகுந்தலா எழுப்பவும் தான் எழுந்தான். “சாப்பிட தான் எழுப்புறா!”, என்று நினைத்து கொண்டு, “எனக்கு வேண்டாம் மா. நீ சாப்பிடு. தூக்கம் வருது”, என்றான் ஆதி.
“உன்னை எவன் சாப்பிட கூப்பிட்டான்? சாப்பாடு நான் செய்யவே இல்லை டா. எனக்கு உடம்பு சரி இல்லைல. ஒழுங்கா போய் கடைல வாங்கிட்டு வா. பசிக்குது”, என்று சொன்னாள் சகுந்தலா.
“வர வர உன் தொல்லை தாங்க முடியலை மா”, என்ற படியே எழுந்து சட்டையை போட்டான். “நல்ல லெக் பீசா வாங்கிட்டு வா டா. பிரியாணி சாப்பிட்டு ஒரு வாரம் ஆகிட்டு”, என்றாள் சகுந்தலா.
“உன்னை பாத்தா, எவனும் உடம்பு சரி இல்லாதவன்னு சொல்ல மாட்டான். உன் தொல்லையே தாங்க முடியலை, இதுல இன்னொரு தொல்லை வேற வீட்டுக்கு வர போகுது. என் நிலைமை என்ன ஆக போகுதோ?”
“டேய் ஆதி, அதுக்குள்ளே கல்யாண கனவு காண ஆரம்பிச்சிட்டியா?”
“அம்மான்னு கூட பாக்க மாட்டேன். கல்யாண கனவாம். பீரங்கி எல்லாம் கனவில் வராது. போ மா”, என்று சொல்லி விட்டு கடைக்கு சென்றான்.
பின் மதியமும், நன்கு உறங்கி எழுந்து நைட் ஷிப்ட்டுக்கு கிளம்பி சென்றான். அங்கே வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தான் சீனி.
“அம்மா, எப்படி இருக்காங்க டா ஆதி?”, என்று விசாரித்தான் சீனி.
“அவளுக்கு என்ன? நல்ல கொட்டிக்கிட்டு டிவி பாத்துட்டு இருக்கா?”
“சரி டா. அப்புறம் ஆதி, கல்யாணம் எல்லாம் நடக்க போகுது. இன்னும் ஒரே ஜாலி தான் போ”
“நண்பன்னு கூட பாக்க மாட்டேன். வாயில் கெட்ட கெட்ட வார்த்தையா வந்துரும். நீ அவளை பாத்துருக்கியா டா? சின்ன வயசிலே எப்படி குண்டா இருப்பா தெரியுமா? ஆதி மச்சான்னு சொல்லிட்டு ஓடி வந்து என்னை இடிப்பா பாரு, நான் கீழ விழுந்து கிடப்பேன். அப்படியே, தண்ணி லாரி மோதின எபெக்ட் வரும் டா. அப்பவே அப்படின்னா இப்ப எப்படியோ? அது கூட பரவாயில்லை டா. அருக்கானி மாதிரி இருப்பாளாம் டா. அப்புறம் பல்லு வேற தெத்து பல்லாம். பாத்தியா டா என் நிலைமையை?”, என்று தலையில் கை வைத்தான் ஆதி.
“மச்சானா? அப்படி தான் உன்னை கூப்பிடுவாளா? கலக்குற போ. அப்புறம், டிக்கட் போட்டுட்டேன் டா. நான் அம்மாக்கிட்ட கேட்டேன், ரிட்டர்ன் டிக்கட் போடணுமான்னு. வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சரி சரி நீ கல்யாண கனவு காணு. நான் வீட்டை பார்த்து போறேன்”
“இப்ப நீ இந்த இடத்தை விட்டு போகலை, இங்க ஒரு கொலை விழும்”, என்றான் ஆதி.
சீனி போன பிறகு, “இப்ப அவ என்ன செய்றாளோ? எப்படி குண்டா இருக்க போறாளோ? பேரை பாரு பஞ்சவர்ணமாம். எதுக்கு டா ஆதி, உன் வாழ்க்கையில் சனி இப்படி தாய கட்டை உருட்டி விளையாடுறான்?”, என்று நினைத்து கொண்டே வேலையை பார்த்தான்.
அதே நேரம், அங்கே பஞ்சவர்ணம் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து காலை நீட்டி கொண்டு, ஒரு துண்டு பேப்பரை தப்பு தப்பாக படித்து கொண்டிருந்தாள்.
“ஒழுங்கா தான் படியேன் டி பஞ்சு”, என்று அவளை திட்டி கொண்டிருந்தாள் பூங்கோதை, பஞ்சுவின் தங்கை.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, மறுபடியும் தப்பு தப்பாக படித்து கொண்டிருந்த பஞ்சு, அடுத்த நொடி “ஐயையோ”, என்று அலறினாள்.
காதல் மலரும்….