அத்தியாயம் 2
“என்ன ஆச்சு பஞ்சு? எதுக்கு இப்படி கத்துற?”, என்று கேட்டாள் பூங்கோதை.
“இங்க பாரு டி பூவு, நாட்டில் என்ன நடக்குன்னு?”
தலையணைக்கு உறை போட்டு கொண்டிருந்த பூங்கோதை “என்ன நடக்கு? நீயே சொல்லு”, என்றாள்.
“நம்ம முதலமைச்சர் அம்மாவை, உடம்பு சரி இல்லைன்னு ஹாஸ்பிட்டலில் வச்சிருக்காங்களாம் டி. நாளைக்கு அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும் டி பூவு”
“லூசு பஞ்சு, அது போன வருஷத்து பேப்பர். அவங்க செத்து ஒரு வருஷம் முடிய போகுது டி”
“ஐயையோ, என்ன பூவு சொல்ற? எனக்கு நீ சொல்லவே இல்லை”
“அப்ப நீ மலேரியா காச்சலில் படுத்திருந்த பஞ்சு. அதான் சொல்லலை”
“எவ்வளவு நல்ல அம்மா, ஒரு நாள் நம்ம பஞ்சாயத்து போர்டில் உள்ள டீவில பாத்தேன் டி. தமிழ்நாட்டையே கையில் வச்சிருந்தவங்க டி. அப்படியே, கம்பீரமா, இங்க இருக்குற அத்தனை ஆம்பளைங்க முன்னாடி வாழ்ந்து காட்டினவங்க. அவங்களோட வசனத்துக்கு நான் அடிமை டி பூவு”
“அது அடிமை இல்லை பஞ்சு, விசிறின்னு சொல்லணும்”
“என்ன எளவோ? போ பூவு, எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு”
“சரி அதை விடு, நீ காந்தி செத்துட்டாரான்னு கூட கேப்ப. அப்புறம், பஞ்சு, எனக்கு ஒரு சந்தேகம், உனக்கு எப்படி இந்த பேப்பர் கிடைச்சது?”
“அது நம்ம கோபாலு கடைல முறுக்கு வாங்கினேன் டி, அவன் தான் தந்தான்”
“அட பாவி, அவன் எப்ப டி உனக்கு தந்தான்? நம்ம ரெண்டு பேரும் நிறைய வாங்கி சாப்பிட்டு கடன் வைக்கிறோம்னு சொல்லி, அப்பா அந்த கோபால் கிட்ட நமக்கு எதுவும் கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டாரே. தேன் மிட்டாய் கூட கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான் டி பஞ்சு. நீ மட்டும் எப்படி முறுக்கு வாங்குன?”
“நம்ம பக்கத்து வீட்டு சிவா பக்கத்து ஊருல பத்தாப்பு படிக்கிறான்ல. அவனுக்கு தவளை வரைஞ்சிட்டு போகணுமாம். வரைஞ்சு தாக்கானு சொன்னான். பத்து ரூவா கொடு, அப்ப தான் வரைஞ்சு தருவேன்னு சொன்னேன். சரின்னு தந்தான். அப்புறம், அவனை தான் வாங்கிட்டு வர சொன்னேன்”
“வாங்கிட்டு வந்து நீயே தின்னுட்ட, எனக்கு தராம, அப்படி தான?”
“சரி சரி விடு பூவு, ஒன்னு சாப்டுட்டு இன்னொன்னு வச்சிருந்தேன். ஆனா, ருசி நல்லா இருந்துச்சா, உன்னை மறந்துட்டேன்”
“எப்படி சூரியன் மேற்குல உதிக்காதோ, அது மாதிரி உன்கிட்ட இருந்து பண்டத்தை வாங்க முடியாது. அப்புறம் பஞ்சு, உனக்கு வீட்ல நடக்குற விஷயம் தெரியுமா தெரியாதா?”
“என்ன விஷயம் பூவு?”
“ரெண்டு வாரம் முன்னாடி வந்தாங்களே, நம்ம அத்தை?”
“ஆமா, சகுந்தலா அத்தை தான? எதுக்கு கேக்குற?”
“அவங்க பையனுக்கு உன்னை கல்யாணம் கட்டி கொடுக்கலாமான்னு பேச்சு அடி படுது டி”, என்றாள் பூங்கோதை. அதை கேட்டு அமைதியாய் இருந்தாள் பஞ்சவர்ணம்.
“என்ன பஞ்சு அமைதியா இருக்க? என்ன யோசிக்கிற?”
“இல்லை டி பூவு, அந்த மச்சானுக்கு மீசை இருக்குமான்னு யோசிக்கிறேன்?”
“இல்லைன்னா, என்ன செய்ய போற?”
“மீசை இல்லைன்னா நல்லாவே இருக்காது டி”
“ரொம்ப முக்கியமான கவலை பஞ்சு உனக்கு. சரி மணி பத்து ஆக போகுது, கிளம்புவோமா?”
“இரு பூவு, எதுத்த வீட்டு முனியம்மா, லைட் அணைக்கட்டும். இல்லைன்னா மாட்டிருவோம்”
“அய்யம்மாக்கு தண்ணி ஊத்தி முடிச்சிருப்பாங்க டி. பந்தி முடிஞ்சு டெக்ல படம் போட ஆரம்பிச்சிருவாங்க பஞ்சு”
“சரி வா போவோம், கதவை அடைச்சிரு”, என்று சொல்லி விட்டு திருட்டு தனமாக வெளியே போனாள் பஞ்சு. அவள் பின்னாடியே சென்றாள் பூங்கோதை.
முதலில் பூங்கோதை சுவர் ஏறி குதித்தாள்.
“ஏய் பஞ்சு சீக்கிரம் வாடி, படம் போட்டுருவாங்க”, என்றாள் பூங்கோதை.
“இரு டி பூவு. பாவாடை மாட்டிகிட்டு, அதெல்லாம், கொஞ்சம் நேரம் கழிச்சு தான் போடுவாங்க. நான் விசாரிச்சு வச்சிட்டேன். நாம அதுக்குள்ள போயிரலாம்”, என்று சொல்லி கொண்டே கீழே குதித்தாள் பஞ்சவர்ணம்.
அந்த ஊரில் அய்யம்மா என்ற பெண்ணுக்கு சடங்கு. அதனால், அங்கே பஞ்சாயத்து போர்டு முன்பு டிவி வைத்து டெக் மாட்டி படம் போடுவார்கள். அதற்கு வீட்டில் இவர்களை விட மாட்டார்கள். அதனால் தான், அக்காவும், தங்கையும் சுவர் ஏறி குதித்து சென்றார்கள்.
“போர்வை எடுத்துட்டியா பூவு? யாராவது பாத்து அப்பா கிட்ட சொல்லிட்டா, தோலை உரிச்சிருவாரு”
“ஹ்ம்ம் எடுத்து, நம்ம பரிமளா கிட்ட சாயங்காலம் கொடுத்து வச்சிட்டேன் டி பஞ்சு”, என்றாள் பூவு.
ஒரு வழியாக, படம் போடுவதற்குள் இருவரும் சென்று போர்வையை மூடி, முதல் வரிசையில் அமர்ந்தார்கள்.
மறுபடியும் படம் முடிந்த பிறகு, அதே போல் சுவர் ஏறி குதித்து வீட்டுக்கு சென்றார்கள் இருவரும்.
“ஏண்டி பூவு, எதுக்கு இந்த முதலிரவு காட்சியை மட்டும் முழுசும் போடாம நிப்பாட்டிறாங்க? உடனே விடிஞ்சு அவ குளிச்சிட்டு வர மாதிரி காட்டுறாங்க? அப்படி என்ன தான் நடக்கும்?”, என்று கேட்டாள் பஞ்சவர்ணம்.
“எங்களுக்கு மட்டும் தெரியுமா என்ன? எனக்கு முன்னாடி நீ தான கல்யாணம் கட்டிக்குவ. நீ வந்து எனக்கு சொல்லு, என்ன நடந்ததுன்னு? இப்ப தூங்க விடு டி”, என்றாள் பூவு.
அடுத்த நாள் காலை, இருவருக்கும் எழவே முடியவில்லை. “இப்ப ரெண்டு கழுதைகளும் எந்திக்கலனா தண்ணியை கோரி மூஞ்சில் ஊத்திருவேன்”, என்று கத்தி கொண்டிருந்தாள் பாரிஜாதம் அவர்களின் அம்மா.
“முதலில், இந்த அம்மா சங்கு ஊதுறதை நிப்பாட்ட, எதாவது செய்யணும் பூவு”, என்று சொல்லி கொண்டே எழுந்தாள் பஞ்சு.
பின் இருவரும் குளத்தில் போய் குளித்து விட்டு வந்து, காலை உணவு சாப்பிட்டார்கள்.
ஒன்பது மணி ஆகும் போது, அவர்களை அழைத்தார் மகாராஜன், அவர்களின் அப்பா.
“ரெண்டு பேரும் இங்க வாங்க”,
“என்ன பா?”, என்று அவர் அருகில் சென்றாள் பூங்கோதை. கூடவே பஞ்சும் போய் நின்றாள்.
“நேத்து ரெண்டு பேரும் திருட்டு தனமா படம் பாக்க போயிருக்கீங்க? இன்னைக்கு கம்பியை காய வச்சி காலில் இழுத்துருக்கணும். ஆனா, இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன், அதனால விடுறேன்”
“எந்த எடுபட்ட பய, போட்டு கொடுத்தான்னு தெரியலையே டி பூவு”
“ஆமா பஞ்சு, ஆனா அமைதியா இரு. அப்பாரு முறைக்கிறாரு”
“என்ன சந்தோசங்க?”, என்று கேட்டு கொண்டே வந்தாள் பாரிஜாதம்.
“எல்லாம் நல்ல விசயம் தான் பாரிஜாதம். பஞ்சு, அன்னைக்கு வந்தாளே உங்க அத்தை. அவ மகன் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டானாம். நம்ம நாட்டாமை ஐயா வீட்டுக்கு போன் செஞ்சா. வர வெள்ளி கிழமை நாள் நல்லா இருக்குன்னு அன்னைக்கே கல்யாணம் வச்சிக்கலாம்னு சொன்னேன். அவுக எல்லாரும் நாளான்னைக்கு கிளம்பி வராக. நீயும், பூவும் அம்மா கூட போய், புது துணி எல்லாம் வாங்கிட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
அதிர்ச்சியில் சிலை போல் நின்றாள் பஞ்சு. அவளை அசைத்தாள் பூவு.
“என்ன பஞ்சு, அப்பாரு இப்படி சொல்லிட்டு போறாரு? நாலு நாளில் கல்யாணமாம்”, என்று கேட்டாள் பூங்கோதை.
உடனே அழுதாள் பஞ்சு. “அக்கா அழாதே. இப்ப எதுக்கு அழுற?”, என்று புரியாமல் கேட்டாள் பூவு.
“இல்லை பூவு, நான் என்னோட குஞ்சத்தை நம்ம ராணி அக்கா கல்யாணத்துக்கு கொடுத்துட்டேன் டி. கல்யாணம் முடிஞ்சு தருவான்னு பாத்தா, அவ அவளோட புருஷன் கூட போய்ட்டா. இப்ப என் கல்யாணத்துக்கு என் தலைல எதை டி கட்டுவேன்?”
“அட ச்சி இதுக்கு தான் அழுறயா? நான் கூட என்னவோன்னு நினைச்சுட்டேன். நாளைக்கே சந்தைல புதுசு வாங்கிறலாம். அதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு அக்காவையும் வர சொல்லணும்”
“ஆமா டி, பூவு”, என்று சொன்ன பஞ்சு “ஐ எனக்கு கல்யாணம்! கல்யாணம்!”, என்று குதித்து கொண்டு உள்ளே போனாள்.
பிளைட்டில் அமர்ந்த ஆதி, “போன உடனே பொண்ணோட அப்பா கிட்ட தனியா பேசணும்”, என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தான்.
“என்ன ஆதி யோசிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டான் சீனி.
“இல்லை டா சீனி. போன உடனே, பொண்ணோட அப்பா, அதான் என் மாமா அவர் கிட்ட பொண்ணை பிடிக்கலைன்னு சொல்ல போறேன். அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன்”, என்றான்.
“அவரை உனக்கு தெரியுமா டா?”
“இல்லை டா, சின்ன வயசில் பாத்தது தான். இப்ப மறந்துட்டு. ஆனாலும் தனியா சிக்குவார்ல”
“ஹ்ம்ம் பாத்து டா. அம்மாக்கு தெரிஞ்சிர போகுது”
“அதெல்லாம் தெரியாது, பாத்துக்கலாம்”
ஒரு வழியாக, தூத்துக்குடி ஏர்போர்ட்டில் இறங்கி, கார் பிடித்து, கடைசியில் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்கள் மூவரும்.
ஊரைப் பார்த்ததும் “சரியான பட்டிக்காடு டா. ஒரு பெட்டி கடையை தவிர வேற எதுவுமே இல்லை”, என்றான் சீனி.
“ஹ்ம்ம்”, என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தான். மூவரும் அந்த வீட்டின் உள்ளே சென்றார்கள். இவர்கள் மூவரையும் அங்கு இருந்த ஆட்கள் வர வேற்றார்கள்.
“இதுல உன் மாமா யாரு டா ஆதி?”, என்று கேட்டான் சீனி.
“எனக்கும் தெரியலை டா சீனி. இரு அந்த தாத்தா கிட்ட கேக்குறேன்”, என்று சொல்லி விட்டு, அங்கு நரைத்த தலையுடன் இருந்த தாத்தாவை நெருங்கினான்.
“வாங்க மாப்பிளை, என்ன வேணும்?”, என்று கேட்டார் அவர்.
“எனக்கு பொண்ணோட அப்பாவை பாக்கணும்”, என்று அவர் காதில் சொன்னான்.
“மாப்பிள்ளைக்கு எப்பவும் தமாசு தான்”, என்று சிரித்தார் அவர்.
“நான் இப்ப என்ன தமாசு பண்ணேன்?”, என்று நினைத்து கொண்டு அவரை பார்த்தான்.
“என்ன அண்ணன்? உங்க மருமகன் என்ன சொல்றான்?”, என்ற படியே அங்கு வந்த சகுந்தலா, ஆதியை ஒரு பார்வை பார்த்தாள்.
“பாரு தங்கச்சி, உன்ற மகனுக்கு என்னை தெரியலையாம். பொண்ணோட அப்பாவை பாக்கணும்னு என்கிட்டயே சொல்றாரு”
“அவன் இப்படி தான் சிரிப்பு காட்டுவான். நீங்க உள்ளே போங்க அண்ணன்”, என்று சகுந்தலா சொன்னவுடன் அவர் உள்ளே போய் விட்டார்.
“உன் குடும்பமே லூசா மா? எதுக்கு அந்த தாத்தா இப்படி சிரிச்சிட்டு போறார்?”
“அவர் சிரிக்கிறது இருக்கட்டும். நீ அவர் கிட்ட எதுக்கு பொண்ணோட அப்பாவை பாக்கணும்னு கேட்ட?”
“அது அது சும்மா கேட்டேன்”
“நீ எதுக்கு கேட்டன்னு தெரியும் டா. இப்ப நீ இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு முயற்சி செஞ்சன்னு வை பாதி டப்பா சீனி முழு டப்பாவும் காலி ஆகிரும்”, என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.
“சரி ஒன்னும் செய்ய மாட்டேன். ஆனா, நீ பதிலை சொல்லிட்டு போமா. எதுக்கு அந்த தாத்தா சிரிச்சார்?”
“பின்ன லூசு மாதிரி அவர் கிட்டயே, அவரை பாக்கணும்னு சொன்னா சிரிக்காம என்ன டா செய்வார்?”
“என்னது, அவர் தான் அப்பாவா?”
“ஆமா டா, அண்ணனுக்கு ரொம்ப நாள் கழிச்சு தான் கல்யாணம் ஆனது. அப்புறம், அவருக்கு நாலு பொண்ணுங்க. ரெண்டு பேருக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டார். மூத்தவ வனிதாவை, பக்கத்து ஊரில் பிரஸ் வச்சிருக்கிற கணேசன் கல்யாணம் செஞ்சிருக்காரு. ரெண்டாவது பொண்ணு கவிதாவை இந்த ஊரிலே இருக்குற பரமசிவன் காதல் கல்யாணம் செஞ்சிக்கிட்டான். அதுக்கு பிறகு தான் பஞ்சவர்ணமும், பூங்கோதையும்”
“போதும் உன் அண்ணனோட குடும்ப வரலாறு. போ உள்ளே”, என்று எரிச்சலுடன் சொன்னான் ஆதி.
“சொன்னது நினைவு இருக்கட்டும்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் சகுந்தலா.
“டேய் என்ன டா, இப்படி மெதுவா நடந்து வர? சீக்கிரம் பொண்ணோட அப்பாவை பத்தி விசாரிச்சு சீக்கிரம் பேசு டா”, என்றான் சீனி.
அமைதியாய் நின்றான் ஆதி. “நான் கேட்டுட்டே இருக்கேன். நீ அமைதியா இருக்க? எங்க டா அந்த ஆளு?”
“டேய் சீனி, அப்ப பாத்தோம்ல ஒரு தாத்தா, அவர் தான் என்னோட மாமாவாம் டா. குடும்பம் பெருசு அதனால சீக்கிரம் நரைச்சிட்டாம். அது மட்டும் இல்லாம, அவருக்கு நாலு பொண்ணுங்களாம்”