“அவங்களோடதுல இருந்து கீ கீ னு சத்தம் வருது. என்னனு காட்ட சொன்னா, காட்டலை. அதனால தான்”, என்று ஆங்கிலத்தில் சொன்னார் அவர்.
அவளிடம் திரும்பியவன் “என்ன டி உள்ள வச்சிருக்க? அதை காட்டு அப்ப தான் விடுவாங்க”, என்று கேட்டான்.
“லூசா மச்சான் நீங்க? நம்ம பையை அவன் எதுக்கு பாக்கணும்? அதெல்லாம் முடியாது. நான் காட்ட மாட்டேன்”, என்றாள் அவள்.
“லூசு மானத்தை வாங்காத. குடு அதை”, என்றவன் பையை வாங்கி திறந்தான். அதுக்குள்ளே கத்தி அருவாமனை, தேங்கா துருவி, சிக்குவாங்கி எல்லாம் இருந்தது.
“எதுக்கு டி இதெல்லாம்?”
“வீட்ல இதெல்லாம் வேண்டாமா? அம்மா கொடுத்து விட்டாங்க”
இந்த பொருளை எல்லாம் பார்த்து, அந்த அதிகாரி ஒரு மாதிரி அவளை பார்த்தார்.
“இதெல்லாம் வீட்டுக்கு வாங்குன பொருள்”, என்று அவரை சமாதானம் செய்து விட்டு அவளையும் இழுத்து கொண்டு வருவதற்குள் இருவரும் நொந்து போனார்கள்.
ஆதியையும், பஞ்சுவையும் இரவு எட்டு மணிக்கு, அவர்கள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு அதே டாக்ஸியில் அவனுடைய வீட்டுக்கு ஓடியே விட்டான் சீனி.
வரும் போதே இட்லி பார்சல் வாங்கி வந்ததால், சாப்பிட்டு விட்டு படுத்து விட்டார்கள்.
இன்று, முன்னெச்சரிக்கையாக தரையிலே படுத்து விட்டான் ஆதி.
புது இடம் தூக்கம் வராததால், சீக்கிரமே எழுந்து விட்டாள் பஞ்சு. மெதுவாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
“எங்க பாத்ரூம் போவது?”, என்று தெரியாமல் கதவை திறந்தாள். பக்கத்தில் எல்லாம் வீடுகளாக தான் இருந்தது. அவள் கண்ணுக்கு எங்கேயுமே, காடு தெரியாததால் அவனை எழுப்ப சென்றாள். அங்கே நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.
“மச்சான் மச்சான் எந்திரிங்க”, என்று எழுப்பினாள்.
“என்ன?”, என்று கண்ணை திறந்து கேட்டான்.
“எனக்கு வெளிய போகணும்”, என்றாள் பஞ்சு.
“லூசா நீ, போணும்னா போ! என்னை எதுக்கு எழுப்புற?”, என்று கேட்டான்.
“எனக்கு வெளிய போகணும்”, என்று மறுபடியும் சொன்னாள்.
“வெளிய போகணும்னா, கதவு திறந்துட்டு போ, என்னை எதுக்கு எழுப்புற?”
“ஐயோ, மச்சான் எனக்கு அவசரம். இங்க காடே இல்லை. அப்ப எப்படி போக முடியும்? ஒரே வீடா இருக்கு”
“அட ச்சி பாத்ரூம் போகணுமா? அதோ அங்க இருக்கு பாரு. அந்த ரூம் குள்ள போ”, என்று சொன்னான்.
“இது என்ன வீட்டுக்குள்ள போக சொல்றாரு?”, என்று நினைத்து கொண்டு அதை திறந்தவள் திகைத்தாள்.
அது வெஸ்டர்ன் ஸ்டைலில் இருந்தது.
“மச்சான் இதுல எப்படி போறது?”, என்று அங்க இருந்தே கத்தினாள்.
“இவ தொல்லை தாங்க முடியலை டா சாமி”, என்று நினைத்து கொண்டு எழுந்து வந்தவன், “இங்க வா”, என்று அழைத்து விட்டு பெட் ரூம்க்கு வெளியில் இருந்த, சாதாரண டாய்லெட்க்கு கூட்டி சென்று “இப்படி உக்காரு. கடைசியில் தண்ணி ஊத்திரு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
ஒரு வழியாக கஷ்ட பட்டு, அந்த வேலையை முடித்து விட்டு மறுபடியும் “மச்சான் மச்சான்”, என்று கத்தினாள்.
“ஏய் லூசு தயவு செஞ்சு மாமான்னாவது கூப்பிடு. தயவு செஞ்சு மச்சான் மச்சானு கூப்பிட்டு சாகடிக்காத. இப்ப என்ன வேணும்?”, என்று கேட்டான்.
“இல்லை குளிக்கணும் அதான்”
“பெட் ரூமில் இருந்த பாத்ரூம் காட்டியவன், அங்க சோப்பு எல்லாம் இருக்கு. அங்க போய் குளி”, என்றான்.
“சரி”, என்று சொல்லி விட்டு, போய் குளிக்க சென்றாள். “இங்க அடிச்சு துவைக்க கல்லே இல்லையே”, என்று நினைத்தவள் கண்களில் பட்டது, அந்த வெஸ்டர்ன் டாய்லெட்.
“ஒ, இங்க இது தான் கல்லு போல?”, என்று நினைத்தவள், அதிலே அடிச்சு துவைத்தாள். இவள் அடியில் அந்த பீங்கான், சில்லு சில்லாக நொறுங்கியது.
“என்ன கல்லு வச்சிருக்காங்க? பாக்க பள பளன்னு இருக்கு. ஆனா, ரெண்டு அடியில் உடைஞ்சிருச்சு. மச்சானை வேற வாங்க சொல்லணும்”, என்று நினைத்து துவைத்து குளித்து விட்டு வெளியே வந்தவள், “எங்க காய போடன்னு அவன் கிட்ட கேக்கலாமா?”, என்று எழுப்ப போனாள்.
பின் “சரி தூங்கட்டும்”, என்று நினைத்து கொண்டு, தான் கொண்டு வந்திருந்த கயிறை எடுத்து கொண்டு, ஹாலில் இரண்டு ஜன்னலில் கயிறை வைத்து கொடி கட்டி துணியை காய போட்டாள்.
“அடுத்து என்ன செய்ய?”, என்று தெரியாமல் அமைதியாக அங்கே அமர்ந்திருந்தாள்.
எட்டு மணிக்கு எழுந்த ஆதி, பாத்ரூம் சென்று அதை பார்த்து விட்டு திகைத்தான். அங்கே டாய்லெட் உடைந்து கிடந்தது. அதை விட கொடுமை, வெள்ளை கலர் டைல்ஸ் அவள் போட்டு குளித்த மஞ்சளில், மஞ்சளாக இருந்தது.
அதை பார்த்து அதிர்ந்து போனான் ஆதி “பாவி எப்படி ஆக்கி வச்சிருக்கா பாரு. வந்த முதல் நாளிலே கண்ணை கட்டுதே! கடவுளே”, என்று நினைத்து கொண்டு வெளியே வந்தவன் மறுபடியும் அதிர்ந்தான். அங்கே வீடு முழுவதும் கயிறை கட்டி, ஈர துணியை காய போட்டிருந்தாள் பஞ்சு.
வீரப்பாக, அவளை திட்ட போனவன் அங்கு அவள் சிந்தி இருந்த தண்ணீரில், வழுக்கி மல்லாக்க விழுந்தான். “ஆ அம்மா”, என்று அலறல் கேட்டு திரும்பி பார்த்தாள் பஞ்சு.
“ஐயையோ என்ன மச்சான் ஆச்சு? ச்சி என்ன மாமா ஆச்சு? எதுக்கு தரையில் உக்காந்துருக்கீங்க?”, என்று ஓடி வந்தாள் பஞ்சு.
“ஹ்ம்ம் புதையல் தேடிட்டு இருக்கேன். ஆளையும் மூஞ்சியையும் பாரு. என்ன டி, பண்ணி வச்சிருக்க வீட்டை? எதுக்கு இங்க காய போட்டிருக்க?”
“கொடி தேடி பாத்தேன் மாமா. காணுமா, அதான் நானே கட்டி போட்டுட்டேன்”
“ஆ”, என்று இடுப்பை பிடித்து கொண்டே எழுந்தவன், “லூசு நடு வீட்லயா காய போடுவ? மொட்டை மாடில அம்மா கொடி கட்டிருப்பாங்க, அங்க போடு சரியா?”
“சரி மாமா”
“அது சரி, என்ன பாத்ரூமை அப்படி செஞ்சு வச்சிருக்க? எல்லாம் உடைச்சு போட்டு வச்சிருக்க?”
“நானே சொல்லணும்னு நினைச்சேன் மாமா. என்ன கல்லு வாங்கி வச்சிருக்கீங்க? உங்க துணி, அங்க துவைக்காம கிடந்தது. சரி துவைப்போம்னு எடுத்தேன். அழுக்கா இருந்தது, அடிச்சி துவைக்க அதில் அடிக்கேன், நாளே அடியில் உடைஞ்சிட்டு. இனி நல்ல கல்லா வாங்கி வைங்க மாமா”
“அட லூசு, அது கல்லு கிடையாது. அதுல உக்காந்து தான் பாத்ரூம் போகணும்”
“அதுலயா? ஆள் உக்காரும் நாற்காலி மாதிரி இருக்கு. அதுல உக்காந்தா எப்படி மாமா வரும்? போங்க மாமா”
“மெண்டல், அது வயசானவங்களுக்கு முட்டி வலி இருக்கும்ல. அவங்களுக்காக கண்டு பிடிச்சது”
“சரி வயசானவங்களுக்கு தான? அது உங்களுக்கு எதுக்கு? உங்களுக்கு என்ன முட்டி வலியா இருக்கு?”
“இவ கேள்விக்கு நம்மளால பதில் சொல்ல முடியாது டா சாமி. ஆமா, அது என்ன ஒரே மஞ்சளா இருக்கு, என்ன செஞ்சு வச்ச?”
“மஞ்ச தேச்சு குளிச்சேன் மாமா”
“நான் வரதுக்குள்ளே, அந்த பாத்ரூம்ல உள்ள மஞ்சள் எல்லாம் போயிருக்கணும் சொல்லிட்டேன்”, என்று சொல்லி விட்டு சகுந்தலா ரூம்க்கு சென்று விட்டான்.
“இதுக்கெல்லாம், இந்த மாமா கோப படுது. படிச்சவங்களே, இப்படி தான் இருப்பாங்க போல”, என்று புலம்பி கொண்டே அதை கழுவ போனாள். அது போவேனா என்று அடம் பிடித்தது.
“இது என்ன போக மாட்டிக்கு? என்ன வீடு கட்டிருக்காங்க?”, என்று நினைத்து கொண்டே கழுவினாள்.
அவள் கழுவி முடித்து வந்த பின்னரும், அவன் குளித்து முடித்து வர வில்லை. “சரி மாமாக்கு பசிக்கும், எதாவது செய்வோம்”, என்று நினைத்து கொண்டு “இங்க அடுப்படி எங்க இருக்கு?”, என்று தனக்குள் கேட்டு கொண்டே கிட்சன் உள்ளே சென்றாள்.
“என்ன இது, இங்க அடுப்பை காணும். விறகை காணும். ஒரு வேளை அத்தை அங்க கிளம்பி வரும் போது காலி ஆகியிருக்கும் போல? சரி நாம வெளிய போய் விறகை எடுத்துட்டு வருவோம்”, என்று நகர போனவள் கண்ணில் பட்டது அந்த சிவப்பு கலர் சிலிண்டர்.
“எவ்வளவு பெரிய டப்பாவா இருக்கு? இதை எப்படி திறக்கணும்? இதுக்குள்ளே எதை போட்டு வச்சிருப்பாங்க?”, என்று நினைத்து கொண்டே அதை திருக்கி விட்டாள்.
“ச்சி, இது என்ன நாத்தம் இப்படி அடிக்கு? உள்ள வச்சிருக்க பொருள் அழுகிட்டு போல? அப்புறமா, கழுவி வைக்கணும்”, என்று சொல்லி கொண்டே வெளியே விறகு தேட சென்றாள்.
குளித்து முடித்து வெளியே வந்த ஆதி, கேஸ் வாடை தாங்க முடியாமல் கிச்சனுக்கு சென்றான். “யாரு இதை திறந்தா?”, என்று நினைத்து கொண்டே அதை அடைத்து விட்டு, ஜன்னல் கதவை எல்லாம் திறந்து வைத்து விட்டு, அவளை தேடினான்.
“இவளுக்கு முதலில் கேஸ் பத்தி சொல்லி கொடுக்கணும். அவ தான் திறந்து வச்சிருப்பா. இப்ப பத்த வச்சிருந்தா எல்லாம் வெடிச்சிருக்கும். எல்லாத்துக்கும் காரணம், இந்த அம்மா தான். இவளை என் தலைல கட்டி வச்சிட்டு, அங்க நிம்மதியா இருக்கா பாரு”, என்று பல்லை கடித்தான்.
“எங்க போய்ட்டா?”, என்று நினைத்து கொண்டே, பாத்ரூம் சரி செய்யும் ஆளுக்கு, போன் செய்து வர சொன்னான். அப்பவும், அவள் வந்த பாடு இல்லை.
“ஐயையோ, எங்கயாவது போய் மாட்டி கிட்டாளோ?”, என்று நினைத்து கதவை திறந்தான். அங்கே கை முழுவதும், சில வேப்பங்குச்சிகளை அள்ளி கொண்டு வந்தாள் பஞ்சு.
“இவளை”, என்று பல்லை கடித்தவன், “இது எங்க டி கிடைச்சது? இதை எதுக்கு எடுத்துட்டு வர?”, என்று கேட்டான்.
“என்ன ஊரு மாமா இது? உங்களுக்கு காப்பி தண்ணி கொடுக்கலாம்னு, விறகு தேட போனா ஒரு மரத்தையும் காணும். கொஞ்ச தூரம் தள்ளி, இந்த மரம் மட்டும் தான் இருந்தது. பக்கத்தில் வெட்டி போட்டுருந்தாங்களா? அதான், எடுத்துட்டு வந்தேன். வழி விடுங்க மாமா, போய் சமைக்கணும்”
“உன்னை கொன்னுருவேன் டி, ஒழுங்கா போய் இதை எங்க எடுத்தியோ, அங்கேயே வச்சிட்டு வந்துரு”, என்று சொல்லி விட்டு கதவை அடைத்து விட்டான்.
“மறுபடியும் அவ்வளவு தூரம் கொண்டு போகணுமா?”, என்று நினைத்து கொண்டே நடந்தாள் பஞ்சு.
“இந்த கூமுட்டை இன்னும் என்ன வேலை எல்லாம் செய்ய போகுதோ? முருகா நீ தான் காப்பாத்தணும்”, என்று நினைத்து கொண்டான் ஆதி.
விறகை போட்டு விட்டு வந்த பஞ்சு, கதவை தள்ளி தள்ளி பார்த்தாள். அது திறக்கவில்லை என்றதும் நங்கு நங்கு என்று தட்டினாள்.
அவள் தட்டலில் அலறி அடித்து கொண்டு, கதவை திறந்தான் ஆதி.
“லூசு, பெல் அடிக்க வேண்டியது தான?”
“பெல் னா மணி தான? அது எங்கன இருக்கு மாமா?”
“இந்தா இருக்கு பாரு. யார் வீட்டுக்கு போனாலும், இதை தான் அமுக்கணும்”, என்று சொல்லி கொடுத்து விட்டு உள்ளே வந்தான். அவன் காதில் மணி சத்தம் அலறியது. அங்கே பெல் அடித்து பார்த்து விளையாடி கொண்டிருந்தாள் பஞ்சு.
“ஐ இந்த விளையாட்டு நல்லா இருக்கு மாமா”, என்று சிரித்து கொண்டே மறுபடியும் அமுக்கினாள்.
“லூசு உள்ள வாடி”, என்று அவள் கையை பிடித்து இழுத்து விட்டு கதவை காலால் எத்தினான்.
“அவன் இழுப்பான்”, என்று எதிர்பார்க்காத பஞ்சு “கீழே விழுந்து விடுவோமோ?”, என்று நினைத்து அவன் சட்டையை கொத்தாக பிடித்தாள்.
சரியாக அவள் காய போட்டிருந்த துணியில் இருந்து விழுந்த தண்ணீரில், காலை வைத்தவள் அப்படியே கீழே சரிந்தாள், அவனையும் இழுத்து கொண்டு.
“இப்படி இழுப்பாள்”, என்று தெரியாமல் அவள் மேலேயே விழுந்தான் ஆதி.
கீழே அவள் தலை படும் முன், அவன் கைகள் தன்னால் அவள் தலையை தாங்கியது.
“லூசு இப்படியா இழுப்ப?”, என்று கேட்டு கொண்டே எழ நினைத்த ஆதியால் நகர முடிய வில்லை. ஏன் என்றால், அவள் அவனை கட்டி பிடித்திருந்தாள்.
அதிர்ச்சியாக அவளை பார்த்தவன், “விடு டி, விடு டி” என்று விலக பார்த்தான். அவள் விடவே இல்லை.
என்ன வென்று அவளை பார்த்தான். “படத்தில் இப்படி விழுந்தா கட்டி பிடிச்சிக்குவாங்க மாமா”, என்று வெள்ளந்தியாக சொன்னாள் பஞ்சு.
அவள் சொன்னதில், அவனுக்கு சிரிப்பு வந்தது. “லூசு அதெல்லாம் படத்துல தான், அப்படி காட்டுவாங்க. நீ இன்னும் கொஞ்ச நேரம் இப்படி பிடிச்சிருந்தா, வேற மாதிரி தான் எதாவது நடக்கும், விடு”, என்று சொல்லி கொண்டே எழுந்தான் ஆதி.
அவனுடனே எழுந்து நின்றவள், “பசிக்குது மாமா, என்ன செய்ய? எப்படி செய்யனு தெரியலையே”, என்றாள்.
“இங்க வா”, என்றவன் கிச்சனுக்கு அழைத்து சென்று எப்படி அடுப்பை பற்ற வைக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து விட்டு, அவனே உப்புமாவை கிண்டினான்.
அதை சாப்பிட்டு விட்டு டிவி பார்த்து கொண்டிருந்தான். “மதியம் என்ன சமைக்கணும் மாமா? காய் எதுவுமே இல்லையே”, என்று கேட்டு கொண்டே வந்தாள் பஞ்சு.
“சரி வா, மார்க்கெட் போய்ட்டு எதாவது வாங்கிட்டு வருவோம். இரு பணம் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.
உள்ளே பை எடுக்க சென்றாள் பஞ்ச வர்ணம்.
பணம் எடுத்து கொண்டு வந்தவன், “அதுக்குள்ளே எங்க போனா? ஏய் சீக்கிரம் வா”, என்று கத்தினான்.
பை எடுத்து கொண்டு வந்தவள், “என் பேரு ஒன்னும் ஏய் இல்லை. எதுக்கு அப்படியே கூப்பிடுறீங்க?”, என்று கேட்டாள்.
காதல் மலரும்….